Thursday, February 28, 2013


பொன்மொழி: 1

வெற்றி என்பதன் அர்த்தம் தோல்வியின்மை அல்ல. வெற்றி என்பது இறுதி இலக்கை அடைந்து கொள்வதாகும். அதாவது போரை வெல்வது, ஒவ்வொரு சமர்களையுமல்ல.

- எட்வின் சி. ப்ளிஸ்

பொன்மொழி: 2

எவ்வாறு எமது உள்ளத்தீயை அணையாமல் வைத்திருப்பது? இதற்கு குறைந்தது இரண்டு விடயங்கள் தேவைப்படும். ஒன்று : எம்மிடமுள்ள நல்ல குணங்கள், நாம் செய்த நல்ல விடயங்களை மெச்சிக்கொள்ளுதல். மற்றது : செயல்களை நிறைவேற்றி முடிக்கும் மனத்திடம்.


என்னுடைய வாழ்க்கையில் என்ன நல்ல விடயங்கள் உள்ளன?
நான் என்ன செய்ய வேண்டும்?
இவை ஒவ்வொரு நாளும் கேட்கப்பட வேண்டிய முக்கியமான கேள்விகளாகும்.

- நதானியல் பிராண்டன்

பொன்மொழி: 3

ஒருவன் தவறுகளைச் செய்ததனால் தயங்கித் தயங்கி தாழ்ந்து போகிறான். மற்றவனோ தவறுகளையே படிக்கட்டுகளாக்கி உயர்கிறான்.
- கென்றி சி. லிங்க்

பொன்மொழி: 4

உன்னுடைய அனுமதி இன்றி எவரும் உன்னை இழிவு படுத்த முடியாது.

- எலனொர் றூஸ்வெல்ற்

பொன்மொழி: 5

புதியனவற்றைப் பற்றிய பயம் மாற்றங்கள் ஏற்படுவதை தாமதப்படுத்துகிறது.

- பிலிப் குறொஸ்பி

பொன்மொழி: 6

மகிழ்ச்சியினை எம்மில் காண்பது சுலபமானதல்ல. அத்துடன் அதனை வேறெங்காவது காண்பதும் சாத்தியமில்லை.
- அக்னஸ் றெப்லையர்

பொன்மொழி: 7

எமது எல்லைகளை தெரிந்துகொண்டவுடன் எம்மில் ஆர்வம் காட்டுவதை குறைத்துக் கொள்கிறார்கள்.

- எமர்சன்

பொன்மொழி: 8

ஒரு சிறிய செயலின் மூலம் ஒரு எளிய மனதை மகிழ்ச்சிப்படுத்துவது ஆயிரம் பேர் கூடும் ஒரு பிரார்த்தனையிலும் விட மேலானது.
- ஸாடி

பொன்மொழி: 9

கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைப் புகட்டும். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதங்களே. பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் இல்லாமல் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஒரு போதும் அறிய முடியாது.

- நெப்போலியன் ஹில்

பொன்மொழி: 10

சோம்பேறிகள் என்று எவருமில்லை. சோம்பேறிகள் போல் தோன்றுபவர்கள் தங்களுக்கு மிகவும் பொருத்தமான வேலையைப் பெற்றுக்கொள்ளாத துரதிஸ்டசாலிகள்.
- நெப்போலியன் ஹில்

பொன்மொழி: 11

புறச்சூழல் எம்மை துன்பத்துக்குள்ளாக்குவதாக புலம்புகிறோம். உண்மையில் அது எமது தீர்மானம் மட்டுமே. அதிலிருந்து விடுபடக்கூடிய சக்தி எம்மிடம் உண்டு.
- மார்கஸ் அரேலியஸ்

பொன்மொழி: 12

மனமகிழ்வுடனும் முழு ஈடுபாட்டுடனும் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவம்.


- பேர்ள் எஸ். பக்

பொன்மொழி: 13

பள்ளியில் பாடத்தை கற்றுக்கொண்டபின் பரீட்சை எழுதுகிறோம். ஆனால் வாழ்க்கையிலோ பரீட்சையின் பின்தான் பாடம் படிக்கிறோம்.

- யாரோ

பொன்மொழி: 14

மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்.

 சாள்ஸ் பேட்

பொன்மொழி: 15

நெருக்கடி மிக்க வேளைதான் அதிகூடிய அனுபவத்தையும் அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம்.
- தலாய் லாமா.

பொன்மொழி: 16

வெறும் கடமையுணர்வின் மூலமோ குறிக்கோளின் மூலமோ பெறுமதியான எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை. மாறாக மனிதர்களிலும் கொண்ட இலட்சியத்திலும் உள்ள விசுவாசத்தினாலும் அர்ப்பணிப்பினாலுமேயாகும்.
- அல்பேட் ஐன்ஸ்டீன்.

பொன்மொழி: 17

மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது.


- இயன்லா வன்சான்ற்.

பொன்மொழி: 18

வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதிசயமும் மர்மமும் நிறைந்தது என்பதை கடிகாரமும் நாட்காட்டியும் எமது கண்ணில் இருந்து மறைத்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது.


- எச். ஜி. வெல்ஸ்

பொன்மொழி: 19

மோசமான விமரிசனங்கள் எவ்வித அர்த்தத்தையும் கொண்டிருப்பதில்லை. அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி செய்வதோ அல்ல, அன்றி இழிவுபடுத்துவதே. 


- பார்பரா ஷெர்

பொன்மொழி: 20

நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு உதவி செய்ய முடியாது.

டக்ளஸ் ஹட்

நீதிக் கதைகள் - முல்லாவின் கதைகள் (Mulla Stories)


முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுபெயர். இதில் முல்லா என்பது அறிஞர் - கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். இவர் துருக்கி நாட்டைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் ஆவார். துருக்கியிலுள்ள எஸ்கி ஷஹர் என்பது அவருடைய பிறந்த ஊர் எனக் கூறப்படுகின்றது. அந்த ஊரில் முல்லாவின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் மக்கள் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

முல்லா நஸ்ருத்தீன் சிறந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாகக் கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் சான்றாகும். இவருடைய கதைகள்யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதாக இருந்தது. 

நீதிக் கதைகள் - தெனாலி ராமன் கதைகள் (Thenali Raman Stories)


தெனாலிராமன் என்று தமிழ் நகைச்சுவை உலகில் பிரபலமான கார்லபதி தெனாலி ராமகிருஷ்ணா கி.பி.1509 முதல் 1529 வரை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அவையை அலங்கரித்த அஷ்டதிக் கஜங்களில் ஒருவர். இவர் விகடகவி, குமார பாரதி என்ற பட்டங்கள் பெற்றவர். இவருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல கதைகளாக வழங்கப்படுகின்றன. 

ஆன்மீக கட்டுரைகள் (Religion Articles)

மதங்களின் சாரத்தையும், ஆன்மீக நெறிகளையும் விளக்கும் பயனுள்ள கட்டுரைகள். 

மந்திரங்கள் (Mantra's)


மனதின் திரம் மந்திரம் எனப்படும். இவை அர்த்தமுள்ள அல்லது அர்த்தமற்ற வார்த்தைகளின் தொகுப்பாகும். இவை ஒவ்வொன்றும் ஒரு கடவுளிடமோ அல்லது தேவதையிடமோ தொடர்பு கொண்டது. மனிதனுக்கு உள்ள ஆறாம் அறிவைக் கொண்டு அடுத்த நிலையை அறிந்து உணர்வதில் - ஒரு சீரான சப்த அதிர்வுகளுக்கு பெரும் பங்கு உண்டு. இவைகள் தேவதை வசிய சக்தியை உடையவை. 

இவை வேத சாத்திரங்களிடமிருந்தும், முனிவர்கள், மகான்கள் மற்றும் சாதுக்களிடமிருந்தும் பெறப்பட்டவை. 

ஸ்ரீமத் பகவத்கீதை (Sri Math Bagavat Gita)





பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் குருட்சேத்திர தர்ம யுத்தம் நடக்கும் போது ஸ்ரீ பகவான் கண்ணனின் திருவாயினால் மலர்ந்தது பகவத்கீதை. 

அர்ஜூனன் எதிர் அணியில் உள்ள தனது உற்றார், உறவினர்களைக் கண்டு போர்புரிய மாட்டேன் என தனது காண்டீபத்தினை கீழே எரிந்தான். எப்போது அவனது மனக்கலக்கத்தினை போக்கும் பொருட்டு கண்ணன் கீதையை அவனுக்கு உபதேசித்தார். 

கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு யோகத்தினைக் குறிக்கும். யோகம் என்பதற்கு அடைதல் எனப் பொருள். இதில் கடவுளை அடையும் 18 முறைகள் சொல்லப்பட்டுள்ளது. 

இதற்கு ஸ்ரீசங்கரர், ஸ்ரீ ராமனுஜர், ஸ்ரீ மத்வர் போன்ற சமயாச்சார்யார்கள் வியாக்கியாணம் எழுதியுள்ளனர். 


பொதுஅறிவுக் கட்டுரைகள் - மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்


1. சிறந்த வழி

நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி - ஸ்ரீ அன்னை 

2. பெருந்தன்மையே முதல் படி

1)  இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.
2)  நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.
3)  இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.
4)  தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.
- சீனப் பழமொழி 

3. பயப்படாதீர்கள்

நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!
தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!
- நெப்பொலியன் ஹில் 

4. மூன்று ஆயுதம் நம்மிடம்

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
- கன்ஃப்யூஷியன் 

5. துணிவே துணை

ஜூலியஸ் சீசர் போல ரோமப்பேரரசராக உயர வேண்டுமா? அல்லது உங்களுக்குள்ளேயே சிறைப்பட்ட ஒரு பறவையாக வாழ வேண்டுமா? என்பது உங்களின் துணிச்சலைப் பொறுத்தே அமையும். இந்த இரண்டு முடிவுகளும், வெற்றிகளும் உங்களுக்குள்ளேயேதான் இருக்கிறது. எதைத் தேர்வு செய்து தன்முனைப்புடன் உங்களை நீங்களே வழி நடத்திச் செல்கிறீர்களோ, அது போலவே - நீங்கள் எண்ணியது போலவே - உருவாகி விடுவீர்கள். துணிச்சலுடன் உயர்ந்த இலட்சியங்களை அடைய எப்பொழுதும் முன்னோக்கியே செல்லுங்கள்.
-ஸர் டி.ப்ரௌன் 

6. வெற்றிக்கு முதல்படி எது?

மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.
- டாக்டர் ஜான்சன்
( உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்தவர் சாமுவேல் ஜான்சன் 33 ஆண்டுகள் கடின உழைப்பில் வெளிவந்தது. ஆனால் இவர் இறந்து 13 ஆண்டுகள் கழித்தே முதல் பதிப்பு வெளியானது ) 

7. அன்பின் நோக்கம்

உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு, உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்
- ஸ்ரீ அன்னை 

8. விதைத்ததைத்தான் அறுவடை செய்கிறோம்

ஒவ்வொரு மனிதனும் விதக்கிறாள். ஒருவன் வாய்ச் சொற்களால் விதக்கிறான். இன்னொருவன் செயல்களால் விதைக்கிறான்.

எல்லா மனிதர்களும் தாங்கள் விதைத்த பண்பு விதைகளுக்கு ஏற்ப கோதுமைப் பயிராகவோ அல்லது களைச் செடியாகவோ வளர்கிறார்கள்.

எதைப்பற்றியும் சிந்திக்காமல் விதைத்தவனுக்கு எந்தச் செயல் நிறைவேற்றமும் ஏற்படவில்லை.

செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு அதைத் தேடி உண்மையாக உழைத்தவனே 'வெற்றி' என்னும் நற்கனிகளைப் பெற்றவனாவன்.

பெரும்பாலான மக்கள் வயதான பிறகே தங்களின் வளர்ச்சியின்மை குறித்து அழுது புலம்புகின்றனர்.

நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எதை விதைத்தீர்களோ அதைத்தான் அறுவடை செய்கிறீர்கள்.

நல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் உங்களுக்கு வெற்றி என்னும் அறுவடை சிறப்பாக இருக்கும்.
- பார்பர் 

9. அஞ்சா நெஞ்சம் வேண்டும்

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
- சுபாஷ் சந்திரபோஸ் 

10. நல்ல எண்ணெய் எது?

மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தில் கொடுமையான துன்பம் தருகிற கதை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொறு மனிதனும் 'துணிவு' என்ற எண்ணெயை தன்னுடைய சக்கரத்திற்கும், மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும் போட வேண்டும் அப்போது தான் எல்லாச் சக்கரங்களும் இணைந்து முன்னேறும்.
- அய்டா 

11. ஓய்வு எடுங்கள் 

'திடும்' எனப் பொங்கிச் செயலாற்றும் கடல் நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன. மனிதனும் இதுபோல், வாழ்க்கைப் போர்க்களமாக இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு ஓய்வுடன் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும்போது கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
- டப்ஃபீல்டு 

12. எளிமைதான் முன்னேற்றம்

எளிமையாக இருங்கள். எளிமைதான் உன்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில் தான் அடங்கி இருக்கிறது. நல்லவற்றிற்கு உடனே நம் மனதைத் திறக்கவும், கெட்டதற்கு உடனடியாகவும் நம் மனக்கதவை மூடக்கூடிய சக்தியும், எளிமையாக வாழும்போதுதான் கிடைக்கும். எளிமையாக வாழத்தான் நமக்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அது இருந்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம்.
- ஜே.ஆர்.லோவெல் 

13. அன்பை அனுப்புங்கள் 

அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள். அதைப் பயன்படுத்துங்கள். மாமிசம் சாப்பிடாத பழக்கம் உங்கள் அன்பிலிருந்து மலர்ந்திருந்தால் அது ஓர் அற்புதமான விஷயம். அகிம்சை, அன்பின் காரணமாக மலர்ந்தபோது பரம தர்மமாகிறது. மத நூல்களைப் படித்து ஒரு சம்பிரதாயத்தை ஏற்று மலர்ந்ததென்றால், அது ஒரு தர்மமல்ல! ஒருவருடைய தோளில் நீங்கள் கைவைத்தால், உங்களது இதயத்தின் அன்பு முழுவதையும் உங்கள் கையின் மூலம் அவருக்கு அனுப்புங்கள். உங்களது முழு உயிரையும் முழு இதயத்தையும் அந்தக் கையில் இணையச் செய்து போகவிடுங்கள். அந்தக் கை மாயமாக வேலை செய்வதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.

ஒருவரது கண்களைச் சந்திக்கும்போது உங்கள் கண்களில் உங்கள் இதயம் முழுவதையும் கொட்டி விடுங்கள்.
கண்கள் மந்திரம் மாயம் அடைந்து ஒருவருடைய இதயத்தை அசைத்து விடுவதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.
உங்கள் அன்பு விழிப்படைவது மட்டுமல்ல, மற்றவரது அன்பு விழிப்படைவதற்கும் வழி வகுப்பதாகி விடலாம்.
சரியான முறையில் அன்பு செலுத்தும் மனிதன் ஒருவன் பிறந்தால் இலட்சக்கணக்கான மனிதர்களின் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்கத்   துவங்கிவிடும்!.
- ஓஷோ ரஜனீஷ் 

14. சூரிய ஒளி போல

யாருடன் பழகினாலும் அந்தஸ்து பார்க்காமல் ஒரே மாதிரியான அணுகுமுரையுடன் உள்ளன்பு குறையாமல் பழகுங்கள்.
- ரீடர்ஸ் டைஜஸ்ட் 

15. வாய்மை வெல்லும் 

தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு 
மனித சக்தியும் நிற்க முடியாது! (எனவே, சோதனையான நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்).
- ஸ்ரீ அன்னை 

16. பிரார்த்தனை செய்யலாமா?

இறைவன் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால், பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும் இணைக்கிறது
- மாட்டிகாஸ் பெரீன் 

17. நல்ல எண்ணமே சிறந்தது

நாம் நமது எண்ணங்களின் மீது கவனம் வைக்க வேண்டும் கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான திருடர்கள்.
- ஸ்ரீ அன்னை 

18. எல்லா உயிர்களையும் நேசியுங்கள்

அன்பு நிறைந்த ஒருவர், மனிதர் படும் துன்பங்களைக் காட்டிலும், விலங்குகள் படும் துன்பத்தைச் சகித்துக் கொள்ளமாட்டார்.
- ரோமெயின் ரோலந்து

( தெரு நாய்களுக்கு உணவளித்து உங்களைச் சுற்றி எப்போதும் அன்பான அதிர்வுகளையே பாதுகாப்பாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் ஆத்மாவாக எளிதில் உயர்வீர்கள்) 

19. இயற்கை நமது நன்பன்

மனிதன் சில சமயங்களில் தான் தேடாதவற்றைக் கூடக் கண்டுபிடித்து விடுகிறான்
 - அலெக்ஸாண்டர் ஃப்ளெயிங்

( தியானம் செய்யும் பழக்கத்தால் இந்த சக்தி நமக்குக் கிடைக்கிறது)


20. சிந்தனைக்கு

நாம் அறிந்துள்ளவைகளுக்கு அப்பால் ஒரு அறியும் சக்தி நம்முள் உள்ளது. நமது சிந்தனைகளை விட நாம் உயர்ந்தவர்கள்.
- ஸ்ரீ அன்னை

( எனவே, இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து நேர்வழியில் வாழ்வோம்) 

21. அன்பை வெளிப்படுத்துங்கள்

அன்பு விஸ்வமயமானது. நித்தியமானது. அது, என்றும் தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது. அது ஒரு தெய்வ சக்தியாகும். அதன் புறவெளிப்பாட்டின் அடையாளங்கள் எல்லாம் அதன் கருவிகளைச் சார்ந்தவை. அன்பு எங்கும் வியாபித்திருக்கிறது. அதன் இயக்கம் தாவரங்களிலும் காணப்படுகிறது. விலங்குகளிடத்திலும் அது செயல்படுகிறது. கற்களிலும் அதைக் காண முடியும்.
- ஸ்ரீ அன்னை 

22. வாழ்வின் வெற்றி

வாழ்வின் வெற்றி என்பது ஒரு மனிதன் பின்பற்றும் சத்தியத்தைப் பொறுத்தது.
- ஸ்ரீ அன்னை 

23. தரமே தங்கக்குணம்

முதல் விதியாக இலட்சியத்தில் உறுதியில்லாமல் இருக்கலாம். ஆனால், இலட்சிய உறுதி வேண்டுமெனில் முதல் தரமான மூன்று அம்சங்கள் தேவை. அஞ்சாமை, துணிவு, விடாமுயற்சி எனும் இந்த மூன்றும் இருந்தால் முதல் விதி நம்மிடம் இருந்து இலட்சியத்தை வெற்றிபெறச் செய்யும்.
- ஸ்ரீ அன்னை 

24. எது உயிர் மூச்சு?

நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும் சூரிய ஒளி, ஊதா ஒளி மற்றும் உயிர்களின் வளர்ச்சியைப் போல் முக்கியமானதாகும்.
- நார்மன் வின்சென்ட்டில் 

25. அன்பின் சக்தி

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும். அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
 - புனித பைபிள் கொரிந்தியர் 1:13 

26. அன்பு மயமாக இருங்கள்

அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது. புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார்
- ஓஷோ ரஜனீஷ் 

27. மனஉரம் வேண்டும்

கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில் எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடுவான். அவனைத் தனியாகப் போரிடச் சொன்னால் கண்டிப்பாகத் தோற்றுவிடுவான். ஒவ்வொறு தனிமனிதனும் குறிக்கோளை அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும்.
- ஜார்ஜ் எலியட் 

28. யோசனை கூறும் தகுதி

யார் யார் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் நமக்கு அறியும் ஆலோசனைகளையும் புகட்ட உரிமை உள்ளவர்களே.
- ஜார்ஜ் எலியட் 

29. உறுதி

மனிதன் எதை உறுதியாக நினைக்கிறானோ அதுவாகவே அவன் மாறிவிடுவான்.
- புனித பைபிள்


30. உதவி கிடைக்க

நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.
- ஸ்ரீ அன்னை

காந்தியடிகள் பொன்மொழிகள்


பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது. பெருக்கத்தான் முடியும்.

கடமையை முன்னிட்டு செய்த செயலுக்கு வெகுமதியை எதிர்பார்க்கக் கூடாது.

தவறுகளை ஒப்புக் கொள்ள மறுப்பதை விட பெரிய அவமானம் எதுவுமில்லை.

தியாகம் செய்துவிட்டு வருந்துபவன் தியாகி அல்ல.

பாமர மக்களுக்குத் தேவையானது உணவு ஒன்று மட்டுமே.

மிருகங்களைப் போல் நடந்து கொள்கிறவன் சுதந்திர மனிதனாக இருக்க முடியாது.

கண் பார்வையற்றவன் குருடன் அல்ல. தன் குற்றம் குறையை உணராமல் எவன் இருக்கிறானோ அவனே சரியான குருடன்.

மற்றவர்களை கெட்டவர்கள் என்று சொல்வதன் மூலம் நாம் நல்லவர்களாகி விட முடியாது.

உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற முடியாது.

சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று.

செல்வம், குடும்பம், உடம் முதலியவற்றில் உள்ள பாசத்தை நாம் உதறித் தள்ளி விடும்போது நம் இதயங்களில் உள்ள அச்சத்திற்கு இடமில்லாமல் போய்விடுகிறது.

மயக்கம் உண்டாகும் போது அறிவு பயன்படாது. நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் காப்பாற்ற முடியும்.

சுதந்திரமாக வாழ்வது மனிதனின் உரிமை. அதுபோலவே மற்றவர்களைச் சார்ந்து வாழ்வது அவன் கடமை.

எல்லாக் கலைகளையும் விட வாழ்வுக்கலை ஒன்றே பெரிது.

நல்ல நண்பனை விரும்பினால் நல்ல நண்பனாய் இரு.

தீமை வேறு, தீமை செய்பவன் வேறு என்ற பாகுபாட்டை ஒரு போதும் மறக்கக் கூடாது.

பெண்களே ஆசைகளுக்கும், ஆண்களுக்கும் அடிமையாய் இருக்க மறந்து விடுங்கள்.

கடவுள் விண்ணிலுமில்லை, மண்ணிலுமில்லை. உள்ளத்தில்தான் இருக்கிறான். அவனை மக்களுக்குச் செய்யும் சேவை மூலம் அறிய விரும்புகிறேன்.

ஜனநாயகத்தில் வலிமையற்றவருக்கும், வலிமை மிக்கவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்.

உயர்ந்த எண்ணங்களைய உடையவர் ஒருநாளும் தனித்தவராகார்.

எப்போதும் உண்மையை மறைக்காது சொல்லக்கூடிய மனத்திடம் வேண்டும்.

மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசானே என்பது உறுதியான நம்பிக்கை.

கோபமோ, குரோதமோ இல்லாமல் துன்பத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வது உதயசூரியனுக்கு ஒப்பாகும்.

பயத்தினால் பீடிக்கப்பட்ட மனிதன் கடவுளை ஒருநாளும் அறிய முடியாது.

Wednesday, February 27, 2013

கணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..


கணவன் மனைவிக்கிடையே, திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடும் என்பது பொதுவான கருத்து. இதற்கு காரணம், சரியான, பரஸ்பர புரிதல் இல்லாமையே.

கீழே தரப்பட்டிருக்கும் கருத்துக்கள், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இருவரும் கடைபிடிக்க வேண்டிய பொதுவான ஆலோசனைகள். இங்கு தரப்பட்டிருக்கும் ஆலோசனைகளில் சில, குழந்தைத்தனமானதாகவும் நகைச்சுவையாகவும் தோன்றலாம்.. ஆனாலும் தம்பதிகளுக்குள் கவுரவம் பார்க்காது, கடைபிடிப்பதில் தவறில்லையே..

 1.       எழும்போதே ஒருவருக்கொருவர் புன்னகையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். குட்மார்னிங் சொல்லிக்கொள்வதில் தவறில்லை.

2.       வாரத்திற்கொருமுறை குடும்பத்தோடு வெளியில் சென்று வரலாம்.

3.       மனைவிக்கு / கணவனுக்கு வேண்டியவர்களிடம் தன்மையாக நடந்துகொள்ளுங்கள.

4. அவ்வப்போது சின்னச் சின்ன பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து ஆச்சர்யப்படுத்துங்கள்.

5.       எப்போதும் செய்தித்தாள் அல்லது டிவி பார்த்துக்கொண்டே இருக்காமல், கூடுமானவரை ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேச முயலுங்கள்.

6.       சமையல் முதல் அனைத்து வேலைகளிலும் ஒருவருக்கொருவர் உதவ முற்படுங்கள்.

7.       சாப்பிடும் தருணங்களில் டிவி பார்க்காமல் பேசிக்கொண்டே சமையலை ருசித்து சாப்பிடுங்கள். அது எதிர் தரப்பினரை திருப்தியடையச் செய்யும்.

8.       தொடுதல் மிக முக்கியம். தனிமையான தருணங்களில் இடைவெளிகளைக் குறைத்துக்கொள்ளுங்கள். தலைகோதிவிடுவது, மடியில் தலை வைத்துப்படுப்பது, கை கோர்த்துக்கொள்வது போன்ற தொடுதல்கள் நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும்.

9.       எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்ற எதிர்காலக் கனவுகள் பற்றி ஒருவருக்கொருவர் பேசுங்கள்.

10.    இருவருக்கும் பிடித்த, பொதுவான பாடல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கேளுங்கள். அது யதார்த்த சூழலில் கேட்கப்படும்போது மனதுக்குள் புன்னகை உண்டாக்கும்.

11.    பின்கூட்டி அணையுங்கள். இது உடல் சார்ந்தது மட்டுமின்றி மனரீதியாகவும் நெருக்கத்தினை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

12.    நகைச்சுவையான தருணங்களில் ஒருவருக்கொருவர் விஷயத்தைப் பகிர்ந்து சிரியுங்கள்.

13.    I love you அல்லது I miss you போன்ற க்ரீட்டிங் கார்டுகளை அவ்வப்போது பரிமாறிக்கொள்ளுங்கள்.

14.    ஒருவரின் தேவைகள் என்னவேன்று மற்றொருவர் கேட்கும் முன்பே, அதனைப் புரிந்துகொண்டு நிறைவேற்றுங்கள்.

15.    வாதம் செய்யும்போதோ, அறிவுரை கூறும்போதோ, ஒருவர் சொல்வதை மற்றொருவர் அசட்டை செய்யாது கவனிக்க வேண்டும்.

16.    தனக்குப் பிடித்த விஷயங்களை இன்னொருவர் செய்யும்போது மனம் விட்டுப் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள்.

17.    ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும்போது மற்றொருவரின் பார்வையிலும் இருந்து பார்த்து நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், தன் வாதம் தான் கடைசியாக இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள்.

18.    வெளியிலிருப்பின், அழைபேசி மூலம் அவ்வப்போது பேசி அக்கறையை வெளிக்காட்டுங்கள்.

19.    தங்கள் விருப்பங்களை மற்றொருவர் உடனே நிறைவேற்ற வேண்டும் என்று அவசரப்படுத்தாதீர்கள். பொறுமை அவசியம். அதே போன்று நீ இப்படித் தான் இருக்க வேண்டுமென தன்னுடைய விருப்பங்களை அடுத்தவர் மேல் திணிக்கவும் கூடாது.

20.    ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுங்கள். சுய விருப்பு வெறுப்புக்களை தெரிந்துவைத்துக்கொள்வது மிக முக்கியம்.

21.    எந்த சூழ்நிலையிலும் அவரவர்க்குரிய சுய மரியாதையை கெடுக்கும் வண்ணம் நடக்கக் கூடாது.

22.    நண்பர்கள் உறவினர்கள் போன்ற வெளியாட்கள் வீட்டுக்கு வரும்போது அவர்கள் முன் ஒருவருக்கொருவர் குறை கூறிக்கொள்ளக் கூடாது.

23.    உறவினர்கள் இருப்பின், மறைமுகமான, காதல் ஜாடைகளில் பேசிக்கொள்ளுங்கள்.

24.    பிறந்த நாள், காதலர் தினம் போன்ற நாட்களை மறந்துவிடாமல் ஒருவருடன் ஒருவர் ஒன்றாக நேரத்தை செலவழியுங்கள்.

25.    தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், தன் மேலுள்ள குறைகளையோ அல்லது தவறுகளையோ ஒத்துக்கொண்டு மனமார மன்னிப்பு கேட்கப் பழகுங்கள்.

26.    கணவனோ மனைவியோ தம்மிடம் தவறினை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கும்போது அவரைக் குத்திக்காட்டாமல் மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டு சகஜநிலைக்குத் திரும்புங்கள்.

27.    முத்தம் என்பது காமம் சார்ந்ததில்லை. அது காதலை வெளிப்படுத்தும் ஊடகமே.. தினமும் ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொள்ளுங்கள்.

28.    தான் என்ன செய்தால் மற்றொருவர் மகிழ்ச்சியாக இருப்பார் என்பதை அறியமுடியவில்லையெனில், “நான் என்ன செய்தால் உனக்கு சந்தோசமாக இருக்கும்“என வெளிப்படையாக அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

29.    எப்போதும் பாசிடிவ்வாக யோசியுங்கள்.

30.    வீட்டில், குழந்தைகளிடமும் தன்மையாக இனிமையாகப் பேசுங்கள், பழகுங்கள்.

31.    ஏதேனும் சந்தர்ப்பங்களில் பலவீனமாக உணர்ந்தீர்களானால் அதை தாராளமாக தன் துணையிடம் தெரிவித்து அவருடைய உதவியை ஈகோ பார்க்காமல் ஏற்றுக்கொள்ளலாம்.

32.    வேண்டாவெறுப்பாக இருக்காமல், வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் உண்மையான அக்கறையைக் காட்டுங்கள்.

33.    உங்கள் வாழ்வின் கடந்த கால அனுபவங்களை, அதாவது உங்கள் இருவருக்குள் நடந்த ஸ்வாரஸ்யமான காதல் சம்பவங்களை அவ்வப்போது நினைவுபடுத்தி ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுங்கள்.

34.    மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதியாகவும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துவைத்திருக்க வேண்டும். உடல் சார்ந்த நேரங்களில் கூட, காமத்தை விட காதல் ப்ரதானமாக இருக்க வேண்டும்..

35.    சாதாரணமாக கை கோர்க்கும் பிடியில் கூட உனக்காக நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

36.    ஏதாவதொரு பொதுவான விஷயத்தை தேர்ந்தெடுத்து அதை சேர்ந்து ரசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக இசை, மழை, பௌர்ணமி நிலவு, கவிதைகள், புத்தகங்கள் போன்றவைகள்.

37.    தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறும்போது, உதாரணமாக தலைவலி என்று சொன்னால் “எனக்கு அதுக்கு மேல வலிக்குது“ என்று பதிலளிக்காதீர்கள். உண்மையான அக்கறையுடன் பணிவிடை செய்யுங்கள்.

38.    என்னதான் ஒருவருக்கொருவர் அதிகமாக காதலித்தாலும் அதை வெளிக்காட்டப் பழகுங்கள். மனதிற்குள் வைத்து ஒளிக்கும் காதல் ப்ரயோஜனப்படாது.

விட்டுக்கொடுப்பதும், புரிந்துகொள்வதும் அந்நியோன்யத்தை வலுப்படுத்தும். ஒருவருக்கொருவர் அவமானமோ வெட்கமோ பார்க்காமல் வெளிப்படையாக இருத்தல், ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்கவும், மன்னிக்கவும், பாரபட்சம் பார்க்காமல் அனைத்து விஷயங்களையும் ஒளிவுமறைவின்றி பகிர்தல் போன்றவைகள் கணவன் மனைவி உறவினை மேலும் வலுப்படுத்தும்.

Tuesday, February 26, 2013

திருக்குறள்


தெரிந்த திருக்குறள் பற்றி தெரியாத அரிய தகவல் ..!

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்..

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெஎழுத்து-னி
திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்-ளீ,ங
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானப்பிரகாசர்.
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப்
திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்

திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கணவன் மனைவியிடம் எதிர்பார்க்கும் அந்த 32 விடயங்கள் என்ன‌..!


இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி பிரச்சினை அதிகரித்து வருகின்றது இறுதியில் குடும்ப பிளவு கூட ஏற்படுகின்றது. இதற்கு காரணம் கணவன் மனைவி புரிந்துணர்வு இன்மையாகும் . ஒரு கணவன் தான் மனைவியிடம் பின்வருவனவற்றை எதிர்பார்த்து நிற்கின்றான்

1* எப்போதும் சிரித்த முகம்.
2* மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
3* காலையில் முன் எழுந்திருத்தல்.
4* பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல்.
5* நேரம் பாராது உபசரித்தல்.
6* கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7* எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8* அதிகாரம் பண்ணக் கூடாது.
9* குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10* கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11* கணவனை சந்தேகப்படக் கூடாது.
12* குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13* பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14* வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15* கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16* இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17* அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18* குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19* கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20* கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21* தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22* எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.
23* தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24* தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25* அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26* குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27* சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28* கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29* பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30* உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31* தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32* உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ் எதிர் பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மனைவி பின்பற்றும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. மனைவியின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தானாகவே நிறைவேறும்

இயற்கையோடு இணைந்து வாழ்வோம்


இயற்கை:

இயற்கை இயற்கையாகவே இருக்கிறது.
இயற்கையில் தான் எல்லாமே இருக்கிறது.
இயற்கையாகவே அதில் எல்லாம் இருக்கிறது.
இயற்கையாகவே அது பரிணமித்தது.
இது தான் மெய்ஞானமும்,விஞ்ஞானமும் கண்ட ஒரே ஒரு உண்மை.

அந்த இயற்கையின் பகுதிகள் தான் இந்த அண்ட சராசங்கள்,பஞ்ச பூதங்கள், அதில் ஒன்றான இந்த பூமி,தாவரங்கள்,அனைத்து கோடி ஜீவராசிகள், இறுதியாக தோன்றிய மனிதர்கள்.

இந்த இயற்கையில் எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்த தான் இருக்கின்றன,அதன் விளைவாக எல்லாம் எப்போதும் ஒரு ஒழுங்கமைபோடு இயங்கி வருகின்றன,

இந்த ஒழுங்கமைப்பில் மாற்றம் வரும்போது தான் துன்பங்கள் ஏற்படுகின்றன.

இயற்கையின் ஒழுங்கமைப்பில் ஏற்படும் மாற்றம் தான் எல்லா துன்பங்களுக்கும் காரணம்,இதை உணராத ஒரே ஒரு இயற்கையின் வினோதமான பிராணி தான் மனிதன்.

இந்த 21 ம் நூற்றாண்டில் மனிதன் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு முழுமையாக இயற்கைக்கு எதிராகவும்,மாறாகவும் வாழ்ந்து வருகிறான்.அதன் விளைவாக இனிமேலும் இந்த பூமி இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற அவலமான ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளான்.

இயற்கையின் ஒரு சிறு பகுதி தான், தான் என்ற உண்மையை உணராததன் காரணத்தால் தான் இயற்கைக்கு தன்னால் இயன்ற அளவிலான தீங்குகளை இழைத்தும்,தானும் துன்பப்பட்டு,இயற்கையில் உள்ள எல்லாவற்றையும் துன்பத்தில் ஆழ்த்தும் கொடிய செயல்களை மனிதன் செய்து வருகிறான்.

இதன் விளைவாக தான், பூமியை காப்பாற்ற பல போராட்டங்களும்,நடவடிக்கைகளும் தேவைபடுகின்ற ஒரு அவல நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

இதில் என்ன வெட்க கேடான விஷயம் என்றால் "உலகில் தான் வாழும் வீட்டையே(பூமி) அழித்து வாழ்கிற ஒரே ஒரு அதிசய பிராணி மனிதன்" மட்டும் தான். இதில் வியப்பிலும் வியப்பு என்ன என்றால் இந்த மனித பிறவிக்கு மட்டும் தான் பகுத்து அறிய கூடிய ஆறாவது அறிவு உள்ளது என்பது தான்.

“WHAT A STRANGE CREATURE MAN IS THAT HE FOULS HIS OWN NEST” –RICHARD M.NIXON

மனிதன் இயற்கையை ஒட்டி வாழ்ந்து வந்தால் நோய் நொடிகள், பிரச்சினைகள் இல்லாத ஆரோக்கிய ஆனந்த வாழ்க்கையை நிச்சயமாக வாழ முடியும். ஆனால் நாம் இயற்கைக்கு முரண்பட்டு எத்தனையோ காரியங்களைச் செய்கிறோம். அன்றாட வாழ்வில் இரசனையற்ற, அழகற்ற, செயற்கையான துன்பம் விளைவிக்கின்ற செயல்களை மட்டுமே செய்து வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். வாழ்வின் அர்த்தம் புரியாமலும், வாழ்வின் நோக்கம் தெரியாமலும், செயற்கையான பொருள்களின் துணையோடு வாழ்வதையே இன்பம், மகிழ்ச்சி என்ற தவறான புரிதலுடன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

“THE REALITY IS THAT IN THE MUCH OF THE INDUSTRIALIZED SOCIETIES, WE ARE COMPLETELY ADDICTED TO OUR COMFORTS, WE ARE A SOCIETY OF ADDICTS” – JULIA BUTTERFLY HILL

எப்போதுமே நமது மனம் ஒரு வித வெறுமையுடன் இருப்பதற்கும், பூரண மகிழ்ச்சி கிடைக்காமல் அல்லல் படுவதற்கும், என்ன கிடைத்தாலும், எப்படி வாழ்ந்தாலும் மன நிறைவு இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இயற்கையை விட்டு விலகி செயற்கையாக வாழ்வதே ஆகும்.

நம்முடைய ஒவ்வொரு எண்ணங்களும்,செயல்களும்,நோக்கங்களும்,பழக்க வழக்கங்களும் இயற்கைக்கு எதிரானதாக / மாறானதாக அமைந்துள்ளது.அதுதான் எல்லா பிரச்சினைகளுக்கு ஆணிவேர். இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வளர்ச்சியில் மரபு வழியாக வந்த ஒரு இணைப்பு. இதனை மறந்து/அறியாது இயற்கையை விட்டு விலகி நகர மய சூழலில் செயற்கையான பொருட்களுடன் நம் வாழ்வை அமைத்து கொண்டதே, இயற்கையில் இருந்து அந்நியப்பட்டு போனதற்கு காரணம்.

இயற்கை வாழ்க்கை முறை

இயற்கை எப்படி நிலம், நீர்,,வாயு, நெருப்பு.ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களால் ஆனதோ அது போன்றே நம் உடலும் பஞ்ச பூதங்களால் ஆனது...
"அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே"
இயற்கை எவ்வளவு பவித்திரமானதோ அதே போன்றே இயற்கையிலே பிறந்து இயற்கையுடன் வளர்ந்து இயற்கையிலே கலந்து போகும் நம் தேகமும் அந்த அளவு பவித்திரமானது.இதை அறிந்த நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ கற்றுக்கொண்டார்கள். அதனாலே நம் முன்னோர்களால் நோய்நொடி இல்லாமல் வாழமுடிந்தது. அந்த இயற்கையோடு இனிமையாக வாழும் கலைகளை வாழ்க்கை முறைகளாக வகுத்து வைத்தார்கள்.

நாம் பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு நமது முன்னோர்கள் சொல்லி வைத்த நல்ல விஷயங்களை எல்லாம் ஒன்றொன்றாக தொலைத்து கொண்டிருக்கிறோம்.

உலகில் உள்ள லட்சோப லட்ச உயிர்களும் இயற்கையையே ஆதாரமாகக்கொண்டு வாழ்கின்றன. அவைகள் எந்த வித மருத்துவ முறைகளோ, மருத்துவ மனைகளோ, மருந்துகளோ, மருத்துவர்களோ இல்லாமல் நோயின்றி வாழ்கின்றன. ஆனால் மனிதன் மட்டுமே உடலுக்கு தேவையானவற்றை உண்ணாமல் வாய்க்கு ருசியானவைகளை சாப்பிட்டு, உடலுழைப்பு இல்லாமல், அருந்த வேண்டியதை அருந்தாமல், கழிக்க வேண்டியதை சரிவர கழிக்காமல், உடல் நலத்தை கெடுத்துக்கொண்டு தானும் அவதிப்பட்டு அடுத்தவரையும் அவதிக்கு உள்ளாக்கி இயற்கைக்கு எதிராக நோய்நொடியுடன் காலம் கழிக்கிறான். இயற்கை வாழ்க்கை முறையை விடுத்து மற்ற மருத்துவ முறைகளை பின் பற்றுவதால் நாட்டில் நாளுக்கு நாள் நோய்கள் அதிகமாகின்றன. ஒரு நோயை குணபடுத்த மருந்து உண்டால் பல புது நோய்கள் வருகின்றன.எனவே இது பொருத்தமான தீர்வாக இருக்க முடியாது.

குறைந்த பட்ச தேவைகள்,சுகங்கள் கூட இன்றைய நிலையில் மனிதனுக்கு எட்டா கனியாகிவிட்டது.நம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களே இந்த கஷ்டத்திற்க்கெல்லாம் மூல காரணம், இவையெல்லாம் இயற்கைக்கும், இயற்கை தர்மத்திற்கும் எதிராக செயல்பட்டதால் இயற்க்கை நமக்கு விதித்த தண்டனைகள். இந்த தண்டனையிலிருந்து வெளிப்பட இயற்கை வாழ்க்கை முறையை நம்பி சரணடைவதே வழியாகும். நல்ல வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

நோய்கள், நோயாளிகள் அதிகமாக இருக்கும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் மக்கள் இந்த உண்மையை அறிந்து கொண்டு இப்போது யோகாசனங்கள், பிராணாயாமம், தியானம் செய்வது, பச்சை காய்கறிகளை உண்பது, முளைக்கட்டிய பயறுகள் உண்பது, தண்ணீர் அதிகமாக குடிப்பது, புலால் உண்பதை நிறுத்துவது என்று பல இயற்கை முறைகளை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள்.

அவர்கள் எப்படி இதை அறிந்து கொண்டார்கள் என்றால்,புற வாழ்க்கை தேவையின் உச்சத்தை அவர்கள் தொட்டு கையை சுட்டு கொண்டார்கள்.
நாம் என்ன வென்றால் “இருப்பதை விட்டு விட்டு பறக்க ஆசைபடதே”
என்பதற்கு இணங்க நம்முடைய மூதாதையர்கள் கொடுத்த உன்னத அறிவை விட்டு விட்டு தவறான பாதையில் பயணித்து எல்லா துன்பங்களையும் வலிய வரவழைத்து கொள்கிறோம்.

இதை தான் நமது தேச பிதா தீர்க்க தரிசனமாக சொல்லி வைத்தார் அன்றே.

“GOD FORBID THAT INDIA SHOULD EVER TAKE TO INDUSTRIALISM AFTER THE MANNER OF WEST ,IT WOULD STRIP THE WORLD BARE LIKE LOCUSTS” - MOHANDAS GANDHI

நோய்கள் எத்தனை? எந்த உறுப்பில் வந்திருக்கிறது? எத்தனை நாளாக இருக்கிறது என்பது இங்கு பிரச்னை அல்ல.

“எரிவதை பிடிங்கினால் கொதிப்பது தானாக அடங்கும்”.

அதனால் எறிவது என்ன என்று உணர்ந்து வாழும் வாழ்க்கை முறையை மாற்றிகொண்டால் இனிமையாக வாழலாம். எந்த நோயாக இருந்தாலும் இந்த முறையில் பரிபூரண குணம் அடையலாம்.

"நோய் நாடி நோய்முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்"

அதற்கு முதலில் தேவை நம்முடைய மன மாற்றம் தான். நாம் மனம் மாறினாலே இவற்றிற்கெல்லாம் தீர்வு இயற்கை வாழ்க்கை முறையிலேயே இருக்கிறது, இயற்கையாக ஆரோக்கியத்தை கொடுக்கும் இயற்கை வாழ்க்கை முறையை விட்டு எல்லா பிரச்னைக்கும் மருந்துகளையும் வைத்தியர்களையும் தேடி அலைகிறோம்.

நாமிழந்த நம் முன்னோர்களின் உணவு பழக்கவழக்கங்களை மறுபடியும் கொண்டு வர முடியாமலிருக்கிறோம்,முயலாமலிருக்கிறோம்.இனியாவது விழித்துக்கொண்டு நம் பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே, நம் வீட்டிலேயே இருக்கிறது என்று அறிந்து கொண்டு மாற்றதை நோக்கி பயணிப்போம்.
"மாற்றம் ஒன்று மட்டுமே மாற்றமற்றதது"

எனவே இயற்கையோடு இணைந்து வாழ்வோம் இனிமையாக.

ஏன் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும்? என்பதையும்,எப்படி இயற்கை வாழ்க்கை முறைக்கு மாறலாம்? என்பதையும் அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

புவி வெப்பமயமாதல் or உலக வெப்பமயமாதல்


முன்னுரை

உலகம் முழுவதும் கடந்த வாரம் "உலக ஓசோன் தினம்" என்ற ஒன்றை செப்டம்பர் 16 இல் கொண்டாடினோம்,எதற்காக வென்றால் நம் முன் தற்போதுஇருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் இந்த புவி வெப்பமயமாதல் அல்லதுஉலக வெப்பமயமாதல் என்பது தான். இந்த புவி வெப்பமயமாதல் மனிதர்கள், விலங்குகள் மற்றும் உணவு ஆதாரமான விவசாயத்தின் மீதும் ஏற்படுத்தி இருக்கும் பதிப்புகள் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது.இதில் மிகவும் முக்கியமான ஒன்று என்ன வென்றால் இது மக்கள் தொகையில் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்புகள் மிகவும் விபரீதமாக இருக்கிறது.

இந்த உண்மைகளை பற்றி அவ்வப்போது விவாதங்கள் நடந்த வண்ணம் உள்ளன,இதில் துரதிஷ்டவசமாக இதற்கான காரணம் நாம் இல்லை என்று வாதிட்டாலும்,காரணங்களை ஒத்துகொள்ள மறுத்தாலும், உலக வெப்பமயமாதலின் விளைவுகள் உண்மை என்றும், இந்த பாதிப்பு என்பது உலகளாவியது என்றும்,அளவிட கூடிய பெரிய பாதிப்பு என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.உண்மையில் இதற்கான காரணங்கள் நாமும்,நம்முடைய போட்டி மனபான்மை கொண்ட வளர்ச்சியும்அன்றி வேறு இல்லை என்பதும் உறுதிபடுத்தபட்டுள்ளன. இதற்கான விளைவுகள் எந்த சந்தேகமும் இன்றி கடுமையானதாக தான் இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.

புவி வெப்பமயமாதல் என்றால் என்ன?

புவிவெப்பமயமாதல் என்பது பூமியினுடைய சுற்றுப்புற பகுதிகளிலும், கடல் பகுதிகளிலும் ஏற்பட்டிருக்கும் வெப்பநிலை உயர்வை குறிக்கிறது.இது கடந்த 20 ஆம் நூற்றாண்டின் பாதியில் இருந்து இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு விளைவு.குறிப்பிட்டு சொல்ல கூடிய வகையில் பூமியின் வெப்ப நிலை 1oC to 4oC ஆக உயரும் என்று கணக்கிடபட்டுள்ளது.உலக சராசரி வெப்பநிலை உயர்வு 2100 ஆம் ஆண்டில் 4°C (7.2°F) ஆக இருக்கும் என்று விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர்.

புவி வெப்பமயமாதல் காரணம் என்ன:

முற்காலத்தில் நாம் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை உட்கொள்ளவும்,நாம் உட்கொள்ளும் ஆக்சிஜனை கொடுக்கவும் ஏராளமான தாவரங்களும், மரங்களும் இருந்தன,ஒரு இயற்கை சமநிலை இருந்தது,ஆனால் தற்கால தவறான மனித செயல்பாடுகளால் இயற்கையை பாதிகின்ற“பசுமை கூடக வாயுக்கள்” அல்லது “பசுமைக் குடில் வாயுக்கள்”என்று சொல்லபடுகின்ற வாயுக்களின் அதிகரிப்பால் இந்த பூமியின் வெப்பநிலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த வாயுக்கள் சூரியனில் இருந்து வரும் வெப்ப கதிர்வீச்சுக்களை எந்த தடையும் இன்றி உட்செலுத்தியும்,பூமி வெளியே எதிரொலிக்கும் வெப்பத்தை வெளிவிடாமல் செய்வதால் இந்த விளைவு ஏற்படுகிறது.

பசுமை கூடக வாயுக்கள் எவை:

• கார்பன்டைஆக்ஸைடு (CO2),மீத்தேன் (CH4), நைட்ரஸ் ஆக்ஸைடு (N2O), ஹைட்ரோஃபுளோரோ கார்பன் (HFCs),பெர்ஃபுளோரோ கார்பன் (PFCs),சல்பர் ஹெக்சா ஃபுளோரைடு(SF6)

பசுமை கூடக வாயுக்கள் எங்கிருந்து தோன்றுகின்றன?

மக்கள் தொகை பெருக்கத்தினாலும், அதன் மூலமாக மனிதர்களின் அதிகரித்து வரும் மின் பயன்பாடு,அதன் விளைவாக எரிக்கப்படும் நிலகரி மற்றும் எரிபொருள்களினால் வெளியேற்றப்படும் வாயுக்களாலும்,மனிதர்களின் அதிகரித்து வரும் வாகன பயன்பாடுகளும்,அதன் விளைவாக வெளியேற்றப்படும் வாயுக்களாலும்,இயற்கையாக மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மூலமாக வெளிப்படும் மீதேன் என்னும் வாயுவினாலும், காடுகள் அழிக்கபடுவதாலும்,செயற்கை உரங்களின் பயன் பாடுகளாலும்,அதிகமான பிளாஸ்டிக் மற்றும் மின்னணு கழிவுகளாலும் இந்த பசுமை கூடக வாயுக்கள் அதிகமாக தோன்றுகின்றன.

புவி வெப்பமயமாதலின் விளைவுகள்:

வரலாறு காணாத முறையில் அதிகரித்து வரும் வெப்பநிலை, உயர்ந்து வரும் கடல் மட்டம், வட துருவத்தில் குறைந்து வரும் பனியின் அளவு ஆகியவற்றின் மூலம் தெளிவான பின் விளைவுகள் தெரிய துவங்கிவிட்டன.
உலகளாவிய விளைவுகளில் சில :

•     கென்ய மலைபகுதிகளில் உள்ள மிகபெரிய பனிமலையில் அதன் எடையில் 92% குறைந்து விட்டது.

•      கடல் மட்டம் 10 முதல் 25 சென்டிமீட்டர் வரை அதிகரித்துள்ளது.

•     ஆர்டிக் பகுதிகளில் பனியின் தடிமன் 40% குறைந்துள்ளது.

•     ஒரு ஆய்வறிக்கை இன்னும் 100 ஆண்டுகளில் 300 கோடி மனிதர்கள் இடம்பெயர்வதர்கான சாத்தியகூறுகள்90% உள்ளதாக சொல்கிறது.உணவு பொருள்களின் தட்டுப்பாடும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

•     விஞ்ஞானிகள் இப்போது திட்டவட்டமான ஆதாரங்களை சேகரித்துள்ளனர்,அதன்படி, இனி வரும் காலங்களில் வழக்கத்திற்கு மாறான கடுமையான புயல்களும் அதன் விளைவாக கடுமையான சூறாவளி காற்றும் இருக்கும் என்றும்,இதன் விளைவுகளை 1981 ஆம் ஆண்டு முதல் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களால் உறுதிசெய்துள்ளதாகவும் கூறுகின்றனர்.

•      நேர்முகமாகவோ ,மறைமுகமாகவோ ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சம் மனிதர்கள் இந்த விளைவினால் உயிரழந்து வருவதாகவும் மற்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது.

•      இன்னொரு ஆய்வறிக்கை 2050 ஆம் ஆண்டிற்குள் 10 லட்சத்திருக்கும் அதிகமான உயிரினங்கள் இந்த பூமியில் இருந்து அழிந்திருக்கும் என்றும் கூறுகிறது.

•      இந்த விளைவுகள்மோசமானால், WWF ன் ஆய்வறிக்கை படி, 2100 ஆம் ஆண்டிற்குள் கடலில் உள்ள பவளபாறைகள் முற்றிலுமாக அழியக்கூடும்,அப்படி நேர்ந்தால் இது கடல் வாழ் உயிரினங்களுக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்.

இந்தியாவில் உணரப்பட்ட விளைவுகள்:

•      இந்தியாவில் இமயமலையில் தோன்றும் கங்கை நதியின் ஆதாரமான பணிபாறைகளின் அளவு 40 மீட்டர் என்ற அளவில் ஒவ்வொரு வருடமும் குறைந்து வரைகிறது.இது கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இருந்த அளவை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.இதில் உள்ள சில பனிபாறைகள் 2030 ஆம் ஆண்டிற்குள் முழுவதுமாக மறையக்கூடும்என்றும் இதனால் மிக பெரிய குடிநீர் பஞ்சத்தை ஆசிய நாடுகள் சந்திக்க கூடும் என்றும் ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

•      இதே போன்று ஒரிசாவில் “சடவய” என்ற கடலோர பகுதியில் முன்பு 7கிராமங்கள் இருந்த பகுதி இப்போது2 கிராமங்களை மட்டுமே கொண்ட பகுதியாக காட்சி அளிக்கிறது,இதில் 5 கிராமங்கள் கடல் நீரில் மூழ்கி விட்டன.மேலும் ஒரிசாவின் கடலோர பகுதியில் புயல்களுக்கும் அதன் விளைவான கடுமையான சூறாவளிக்கு மட்டும் 3௦௦௦௦ மனிதர்கள் இறந்துள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.கடல் நீரின் அளவு சில பகுதிகளில் 1.5 முதல் 2.5கிலோமீட்டர் என்ற அளவில் நில பகுதியில் உட்புகுந்துள்ளது.

இவை எல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே, உண்மையான பதிப்புகள் முழுமையாக இன்னும் உணரப்படவில்லை,அவை எந்த சந்தேகத்திற்கும் இடம் இன்றி மிகவும் கடுமையானதாக தான் இருக்கும்.

தீர்வுகள்:

மனிதர்களும், மனிதர்களின் செயல்களும் தான் உலக வெப்பமயமாதலின் முழு காரணம் என்பது தெளிவு,இதற்கான முழு தீர்வுகள்,அரசியல்,பொருளாதார மற்றும் சமுதாய அமைப்புகளில் ஏற்பட வேண்டிய மாற்றத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.
பசுமை கூடக வாயுக்களை நிறுத்தினாலும், வெப்ப உயர்வு உடனே நின்று விடாது,காலத்தால் இந்த வெப்பநிலை குறைவதற்கு இன்னும் சில காலமாகும்.இப்போது உலக அளவில் இந்த வாயுக்களின் அளவை 450 முதல் 550 PPM ஆக நிறுத்துவது(குறைப்பது) தான் முதல் தீர்வாக கொண்டுள்ளனர்.இதன் தற்போதய அளவு 380 ஆக உள்ளது.அரசாங்கமும்,பல சமூக அமைப்புக்களும் இந்த பணியில் தீவிரமாக பணி ஆற்றிவருகின்றன, இன்னும் முக்கியமான சில மாற்றங்களான, இயற்கை வேளாண்மை,சூரிய சக்தி,இயற்கை பொருள்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்,சுற்றுசூழல் சீர்கேட்டை தடுக்கும் நடவடிக்கைகள்,இவற்றினால் மட்டுமே இதன் தாக்கத்தை குறைக்க முடியும்.
இப்போது நம்முடைய பங்களிப்பை தெரிந்து கொள்ளவேண்டிய நேரம் இது,நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய வேலை இந்த தாரக மந்திரத்தை கடைபிடிப்பது தான்                     

“பொருள்களின் பயன்பாட்டை குறிப்பது,

மறுமுறை பயன்படுத்துவது,

மறுசுழற்சி செய்வது.”

                                துரிதமாக செயல்படுவோம் காலம்கரையும் முன்

"காற்றுள்ளபோதே தூற்றிகொள்வோம்"

வாழ்க வையகம்            வாழ்க வையகம்

வாழ்க வளமுடன்