Tuesday, April 30, 2013

அவரும் நீங்களும்


- விரும்பத்தக்கவராய் ஒரு மனிதரை வாழ்வில் கண்டடைவது மிகவும் நல்லது. ஆனால் உங்களை நீங்களே விரும்புவது வளர்ச்சியின் முதல் படிநிலை.

- நுட்பமான பண்புகள் வாய்ந்த ஒரு மனிதரை மனதுக்குள் பாராட்டுவது மிகவும் நல்லது. அத்தகைய மனிதராக உங்களை நீங்களே வளர்த்தெடுப்பது வளர்ச்சியின் அடுத்த படிநிலை.

- மதிப்பும் அன்பும் ஈடுபாடும் காட்டும் விதமாக வாழ்வில் ஒருவரைக் காண்பது மிகவும் நல்லது. அத்தகைய சிறப்புகள் அனைத்தையும் பெறும் விதமாய் நீங்களும் வளரமுடியும் என்பதை உணர்வதே முக்கியமான படிநிலை.

- இன்னொருவரின் வாழ்வை நீங்கள் வாழ முடியாது. ஆனால் உயர்ந்தவர்களின் தாக்கம் பெற்று உங்கள் வாழ்வை நீங்கள் வடிவமைக்க முடியும்.

- வாழ்க்கை உங்களைக் கேட்கும் கேள்விகளுக்கு நீங்களே விடையாக இருங்கள்.

- வாழ்க்கை உங்கள் முன்வைக்கும் சிக்கல்களுக்கு நீங்களே தீர்வாக இருங்கள்.

- நீங்கள் தனித்தன்மை வாய்ந்த ஒரு மனிதர் என்பதை நீங்கள் முதலில் நம்புங்கள்.

- நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகளை எந்த நிலையிலும் நீங்கள் கைவிடாதீர்கள்.

- நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்ததையெல்லாம் எப்படியாவது செய்து காட்டிவிடுங்கள்.

- வாழ்வை மதித்து ரசித்து வாழ்வதென்று முடிவெடுங்கள். அதில் உறுதியாக இருங்கள்.

- அன்பும் ஆனந்தமும் பரவசமும் மிக்க வாழ்வை வாழ்வதென்பதில் உறுதியாக இருங்கள்.

Monday, April 29, 2013

சொல்லப்படாத சவாலை வெல்லத் தெரிகிறதா?


அறிவின் எல்லையைத்
தாண்டிய ஞானம்
இருந்தால் மட்டுமே
அறிவு பயன்படுகிறது.

இந்தியத் தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவராக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ம.கிருஷ்ணன், செப்டம்பர் 13ல் பொறுப்பேற்றார். சங்கத்தின் புதிய கொடியை அறிமுகம் செய்து தலைமைப் பொறுப்பினை ஏற்றார்.


தலைமை விருந்தினராக, கோவை பாரதீய வித்யாபவன் தலைவர் டாக்டர் பி.கே. கிருஷ்ணராஜ் வாணவராயர், கௌரவ விருந்தினராக திரு. விஜய் மேனன் ஆகியோர் பங்கேற்றனர்.

திரு. விஜய் மேனன் நிகழ்த்திய அறிவின் அலையடிக்கும் ஊக்க உரையின் சில பகுதிகள், இங்கே உங்களுக்காக… அதற்குமுன் விஜய்மேனன் குறித்து சிறியதோர் அறிமுகம்!

முப்பதுகளில் இருக்கும் விஜய் மேனன், சுயமுன்னேற்றப் பயிற்சிகளில் கொடிகட்டிப் பறக்கிறார். கேரள மாநிலத்தில் உள்ள நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற நடுவர்களுக்குப் பயிற்சி தருகிறார்.

நாட்டிலுள்ள அனைத்து ஐ.ஐ.எம் மாணவர்களில் தலைசிறந்தவர்கள் பங்கேற்கும் அஸ்வமேதா என்னும் பயிலரங்கை ஐந்தாண்டுகளாய் நடத்துகிறார்.

650 சிபிஎஸ்இ பள்ளிகளின் முதல்வர்களுக்குப் பயிற்சி அளித்திருக்கிறார்.

இவைதவிர பல முன்னணி அரசு – தனியார் நிறுவனங்களின் பயிற்சியாளர் இவர்.

ஓர் ஆசிரியர் மாணவனிடம் கேட்டார். ரோஜாவைப் பறித்ததில் இருந்தே அது வாடத் தொடங்குகிறதே, ஏன்? பறித்ததால் வாடுகிறது என்று பதில் வந்தது. ஆசிரியர் சொன்னார், தர்க்க ரீதியாய் இது சரியான பதில்தான். உண்மையான காரணம் என்ன தெரியுமா? அதன் வேரிலிருந்து பிரித்தெடுத்ததால் அது வாடுகிறது. தன்னுடைய வேருடன் தொடர்பில்லாத எதுவுமே வாடத் தொடங்கிவிடும்.

என் பயணம் எதற்காக? என் வாழ்வின் நோக்கம் என்ன? என்பதெல்லாம் வேரைத் தேடும் கேள்விகள். இந்த உலகம் அறிவைத் தேடுவதில் ஆர்வம் காட்டுகிறது. அறிவு மிகமிக அவசியம். ஆனாலும், அறிவின் எல்லையைத் தாண்டிய ஞானம் இருந்தால் மட்டுமே அறிவு பயன்படுகிறது.

வேரைத் தேடும் கேள்விகள்தான் வாழ்வை உயர்த்தும். அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் சுவாமி விவேகானந்தர் பேலூர் மடத்தில், இராமகிருஷ்ணர் பெயரிலான இயக்கத்தைத் தோற்றுவிக்க முற்பட்டார். அப்போது சுவாமி யோகானந்தர் அவரிடம் கடுமையாகப் பேசினார். “இராமகிருஷ்ணர் இதையா விரும்பினார்? ஆன்மீகப் பயணத்தில் போகச் சொன்னாரா, சமூகம் பற்றிக் கவலைப்பட்டு செயல்படச் சொன்னாரா?” என்று கேட்டார்.

அதற்கு விவேகானந்தரின் பதில் வெடித்தெழுந்து கிளம்பியது. “இப்படிச் சிந்திப்பவர்கள் இராமகிருஷ்ணரை உணரவில்லை என்று அர்த்தம். நான் சில நாட்களில் என் கௌபீனத்தைக் கட்டுவதற்குக் கயிறில்லாமல் தவித்திருக்கிறேன். அடுத்த வேலை உணவுக்கு உத்திரவாதமில்லாமல் மரத்தடிகளில் கிடந்திருக்கிறேன். வறுமை என்னைத் தாக்கிய போதெல்லாம், “நான் தோற்கமாட்டேன்” என்ற உறுதி எனக்குள் உரமேறிக் கிடந்திருக்கிறது.

அதேநேரம், சிகாகோவில் உலகின் மிக உயர்ந்த மனிதர்கள், என் உடையைத் தொட்டுப் பார்க்க முண்டியடித்தனர். வாழ்வின் இருவேறு நிலைகளிலும் என் மனம் தடுமாறாமல் சமமாக இருந்தது. சமூகப் பணிகள் வழியிலான மனத் தூய்மை பரமஹம்சரின் ஆன்மீகம்” என்று பதில் சொன்னார் விவேகானந்தர்.

வாழ்க்கை என்பது மிகப்பெரிய தாகமாக இருக்க வேண்டும். வெற்றி, புகழ், செல்வம், பிரபல்யம் போன்ற இலக்குகளைத் தாண்டிய தாகமாக இருக்க வேண்டும். எல்லைகள் தாண்டிய செயலூக்கம் அந்தத் தாகத்தின் மூலமே சாத்தியம்.

சித்தார்த்தர், அந்த நள்ளிரவில் அரண்மனையை விட்டுச் செல்ல விரும்பிய போது அந்தப்புரத்தில் உறங்கிக் கொண்டிருந்த யசோதாவின் முகத்தை வந்து ஒரு முறை பார்த்தார். அவ்வளவு அழகான அப்பாவித்தனமான முகத்தைப் பார்த்தவர் கண்களை வலியப் பெயர்த்துக் கொண்டு நடந்தார். மனது கேளாமல் மீண்டும் வந்து பார்த்தார். சில அடிகள் எடுத்து வைத்தவர், மீண்டும் ஒருமுறை பார்த்துவிட்டு மானசீகமாக விடைபெறும்போது சொன்னார், “யசோதா! இதைவிட இன்னும் பெரிய குடும்பத்தைத் தேடிப் போகிறேன்!”

மனிதகுலம் என்னும் மகத்தான குடும்பத்தை விழிப்படையச் செய்ய வேண்டும் என்ற சித்தார்த்தரின் தாகமே அவரை புத்தராக்கியது.

இன்று மனிதர்கள் பலருக்கும் அறிவுச் செல்வம் நிரம்ப இருக்கிறது. ஆனால் அந்த அறிவு, இதயத்துடன் தொடர்பில்லாமல் போய்விட்டது. இந்தியாவின் தலைசிறந்த மேலாண்மை நிறுவனமாகிய ஐஐஎம் சார்பில் 800 நிர்வாகவியல் மாணவர்கள் பங்கேற்ற அஸ்வமேதா என்னும் தலைமைத்துவப் பயிற்சியை நடத்தினேன்.
பல்வேறு சுற்றுகளில் போட்டிகள், சோதனைகள் வைக்கப்பட்டு, நிறைவாக 800 பேர்களிலிருந்து 8 பேர் மட்டும் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

அந்த எட்டுப்பேரும், இறுதிச் சுற்று நாளில் காலை எட்டு மணிக்கு வருமாறு பணிக்கப் பட்டார்கள். அவர்களை ஒரு பேருந்தில் ஏற்றி இந்தூர் அருகிலுள்ள ஒரு சின்னஞ்சிறிய கிராமத்திற்கு அழைத்துச் சென்றோம். எட்டுப் பேரிடமும் சொன்னோம், “உங்களுக்குத் தரப்படுவது இரண்டு மணி நேரம்தான். அதற்குள்ளாக இங்கே ஒரு பெரிய வித்தியாசத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும். இதுதான் போட்டி” என்று.

ஒருவர் பஞ்சாயத்து போர்டுக்குப் போனார். ஒருவர் சுகாதார மையத்துக்குப் போனார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையைத் தேடி நடந்தார்கள்.

கர்நாடகாவிலிருந்து வந்திருந்த ஒரேயொரு மாணவர் மட்டும், சிறிதுநேரம் கண்மூடி யோசித்தார். பிறகு எங்களைப் பார்த்து, இந்த கிராமத்தின் வரைபடம் வேண்டும் என்று கேட்டார். வரைபடத்தைப் பார்த்து அந்த கிராமத்தின் மிகச்சிறிய தொடக்கப் பள்ளியைத் தேடிப் போனார். அங்கிருந்த தலைமையாசிரியையிடம், “இந்த கிராமத்தின் முக்கியப் பிரச்சினை என்ன?” என்று கேட்டார்.

“ஒவ்வொரு வீட்டிலும் யாரேனும் ஒருவர், டெங்கு, மலேரியா போன்ற நோய்களால் ஒன்று பாதிக்கப்படுகிறார்கள். அல்லது மரணமடை கிறார்கள். சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணர்த்தினால் பெரிய மாற்றங்கள் ஏற்படும்” என்று அவர் சொன்னார்.

அங்கிருந்த குழந்தைகளைத் திரட்டி, சுகாதாரம் பற்றி அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாகப் பேசினார். வெளியே பார்த்தால் ஓரிடத்தில் மலைபோல் குப்பை குவிந்திருந்தது. ஊர்க்காரர்கள் பொதுவாக குப்பைகளைக் கொட்டுமிடம். அதுதான் நோய்கள் உற்பத்தி ஆகுமிடம். அந்த இடத்தை தூய்மை செய்ய பள்ளி மாணவர்களைத் தூண்டினார் அந்த இளைஞர். மாணவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க, தானே களத்தில் இறங்கினார்.
தன் வகுப்பின் உடைந்த ஜன்னல் வழியே இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மூன்றாம் வகுப்பு சிறுமி ஓடோடி வந்து உதவி அங்கு நின்று கொண்டிருந்த அத்தனை பள்ளி மாணவர்களும் களத்தில் இறங்கினார்கள்.

இருபது நிமிடங்களுக்குள் அந்த இடமே தூய்மையாகிவிட்டது. செய்தது வரை சரி. திட்டம் பிரமாதம். செயல்திறன் அற்புதம். ஆனால் இங்கே நீ ஏற்படுத்தியுள்ள தீர்வு நிரந்தரமானதா? நாளை மறுபடி குப்பை கொட்டத் தொடங்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் என்று அந்த மாணவரைக் கேட்டேன்.

இது நிரந்தரமான தீர்வல்ல என்பதை அவரும் உணர்ந்தார். சிறிது நேரம் மறுபடியும் கண்களை மூடி யோசித்தார். ஒரு பெரிய சுத்தியலைக் கேட்டார். அருகிலிருந்து பாறையை செதுக்கத் தொடங்கினார். சிறிது நேரத்தில் அந்தப் பாறை ஒரு பெரிய சிவலிங்கத்தின் வடிவமெடுத்தது. குப்பை கொட்டப்பட்ட இடத்தில் அந்தப் பாறையை நிலைநிறுத்தினார்.

விஷயம் என்னவென்றால், அந்த கிராமமே காசி விசுவநாதர்பால் பக்தி கொண்ட கிராமம். “இனி குப்பை போடுவதென்றால் இவரைத் தாண்டிப் போட வேண்டும்” என்று அந்த இளைஞர் அறிவித்தபோது அங்கிருந்த அந்தத் தலைமையாசிரியை பள்ளிச் சிறுமிபோல் துள்ளிக் குதித்தார். ஒரு பிரச்சினைக்குத் தீர்வு பிறந்து விட்டது என்ற பெருமிதம் அவருக்கு. அந்த இளைஞருக்கு தனக்கு சொல்லப்படாத சவாலை வெல்லத் தெரிந்திருக்கிறது. எந்த ஒன்றும் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்வதற்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டும்.

அந்தத் தீர்வைக் காண்பவர்களே வெற்றியாளர்கள். அவர்கள் படைப்பதே புதிய உலகம்” என்றார் விஜய்மேனன்.

உழைக்கத் தெரிந்த உள்ளம்


உலகின் மிகச்சிறந்த வெற்றியாளர்களின் உயர்வுக்குப் பின்னால் இடைவிடாத உழைப்பே காரணமாய் இருக்கிறது. இதை அடிமனதில் அடிக்கோடிட வேண்டும் என்றால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். ஏன் தெரியுமா? அடுத்தவர்களின் உழைப்பை அண்ணாந்து பார்த்து “ஆஹா” என்று பாராட்டும் பலரும், அவரவர் உழைப்பு என்று வரும்போது அலட்சியம் காட்டுகிறார்கள்.


கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெரியவர், கோவையில் சில உறவினர்கள் மூலம் தன் மகனை நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்த்தார். முதல் நாள் அலுவலகத்தில் விட்டுவிட்டு அவர் சொன்ன அறிவுரையைக் கேட்க நேர்ந்தது. “வேலை நேரம் சாயங்காலம் ஐந்தரை மணிவரைக்கும்தான். நேரம் ஆனதுமே மேனேஜர் பார்க்கிற மாதிரி, வாட்சை ஒரு தடவை பார்த்துட்டு எழுந்து வந்திடு. கூடுதலா உட்கார்ந்து வேலைபார்த்தா அப்புறம் அதையே பழக்கமாக்கீடுவாங்க”.

வேலை நேரத்திற்குள் எப்படி திறம்பட உழைக்க வேண்டும், நல்ல பேரெடுக்க வேண்டும் என்பதையெல்லாம் பற்றி அவர் எதுவுமே சொல்லவில்லை.

கடினமான உழைப்பு என்பது நாம் – நமது வளர்ச்சிக்காக நாமே விரும்பி மேற்கொள்வது. பணியாளராய் இருந்து கூடுதலாக உழைப்பது; பயிற்சிக்கான வழியே தவிர, அடுத்தவர்களின் ஆதாயத்திற்காக நம் ஆற்றலை அடகு வைப்பதாய் அர்த்தமல்ல. பின்னர் சொந்தமாகத் தொழில் தொடங்கும் வேளையில் இந்தப் பயிற்சி பெரிய அளவில் கைகொடுக்கும்.

பல்லாண்டு காலங்களுக்கு ஒவ்வொரு நாளும் பில்கேட்ஸ் 20 மணி நேரம் உழைத்தார் என்கிறார்கள். கடின உழைப்பு, எங்கு போனாலும் வேலை நிச்சயம் என்கிற உத்திரவாதத்தைத் தருகிறது. உங்கள் துறையின் உச்சம் நோக்கி உங்களை நகர்த்துகிறது. உங்கள் போட்டியாளரை விடவும் பலமடங்கு உங்களை முன்னேற்றுகிறது.

“வேலையில் என் சக்தியை எல்லை தாண்டி நான் வீணடிக்க வேண்டுமா” என்று சிலர் கேட்பார்கள். வேலையைத் தாண்டி அர்த்தமுள்ள பணி உங்கள் வாழ்வில் இருந்தால் அப்படி வீணடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், எதை நோக்கிச் செல்ல விரும்புகிறீர்களோ அதற்கான வழி உழைப்பு தான் என்பதை உணர்கிறபோது உங்களால் வேலையிலும், வேலையைத் தாண்டிய வேறு பணிகளிலும் உற்சாகத்துடன் ஈடுபட முடிகிறது.

“வேலைபார்ப்பது அவ்வளவு சுகமான விஷயமல்ல. ஆனால் சும்மா இருப்பதை விடவும் வேலை செய்வதில் வரும் சிரமம் சுகமானது” என்கிறார் ஒருவர். உண்மைதான்! சிரமம் பார்க்காமல் உழைப்பவர்கள் சிகரம் தொடுகிறார்கள்.

சோர்வு, சோம்பல், தள்ளிப்போடும் குணம் ஆகிய தடைகளைத் தாண்டி, கடின உழைப்பைக் கைக்கொண்டு சந்தோஷமாய் செயல்பட சில வழிமுறைகள் இதோ:

- கடினமான வேலை ஒன்றை செய்யத் தொடங்கும் முன்பாக, அதைச் செய்து முடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதையும் அதனால் கிடைக்கக்கூடிய பயன்களையும் கற்பனை செய்யுங்கள். அந்த உற்சாகத்தை உள்வாங்கிக் கொண்டு வேலையைத் தொடங்குங்கள்.

- ஒரு பெரிய வேலையை சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு தொடர்ந்து செய்து கொண்டே வாருங்கள்

- வேலையைத் தொடங்கிவிட்டால் குறிப்பிட்ட நேரம் வரை தொடர்ந்து செய்யுங்கள். உதாரணமாக, அரை மணி நேரம் நீங்கள் உழைக்க முடிவு செய்தால் அந்த அரை மணிநேரம் தொலைபேசி அழைப்பு, வேடிக்கை பார்த்தல், வீண் அரட்டையில் ஈடுபடுதல் போன்றவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

- அந்த வேலைக்கான உபகரணங்கள் என்னென்ன உண்டோ, அனைத்தையும் தயாராக வைத்துக்கொண்டு வேலையைத் தொடங்குங்கள். தொடங்கிய பிறகு ஒவ்வொன்றாகத் தேடி எடுத்துக்கொண்டிருக்காதீர்கள்.

- வேலையை செய்து முடிப்பதற்கான நேரத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். முடிவு செய்த நேரத்திற்கு முன்னதாகவே செய்து முடியுங்கள்.

- எந்த ஒன்றையும் புதிதாகத் தொடங்க வேண்டிய நேரத்தில் மனது தள்ளிப் போடுவது இயற்கை. எப்படியாவது தொடங்கிவிடுங்கள். தொடங்கிய பின்னர் தொடர்வது எளிதாக இருக்கும்.

- வேலையின் ஒவ்வோர் அம்சத்தையும் உங்கள் மனதுக்குள் ஒருமுறை ஒத்திகை பார்த்துக் கொள்ளுங்கள். அதன்படி வேலை பார்ப்பது எதிர்பார்த்ததைவிட எளிதாக இருக்கும்.

- நீங்கள் நினைத்ததுபோல் அந்த வேலை முழுமை பெறுகிறதா என்பதில் கவனமாக இருங்கள். மற்றவர்களின் – அல்லது – உடன் உழைப்பவர்களின் விருப்பங்களுக்கேற்ப சமரசம் செய்து கொள்ளாதீர்கள்.

- ஒவ்வொரு நாளும், வேலைக்கான நேரத்தை சரியாகத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். திட்டமிட்டபடி அவற்றைத் துல்லியமாக நிறைவேற்றுங்கள்.

திட்டமிடு தொட்டுவிடு


விண்ணைக் கைகள் தொடமுடியாது. ஆனால் விண்ணை விஞ்சுவது மிகத் தெளிவான எண்ணங்கள்!

“தூய சொல்லும் நேர்மையுமே ஒருவனை வெற்றி எனும் மாளிகைக்கு அழைத்துச் செல்லும்” – மில்டனின் இந்த வரிகள் உண்மையை மட்டுமல்ல, மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வழியைச் சொல்கிறது.


நான் மிகச் சிறந்த தொழிலதிபராக வேண்டும் என்பது லட்சியமாக இருக்கலாம். இலட்சியத்தில் இருக்கின்ற வேகம் லட்சியம் நிறைவேறவேண்டும் என்பதிலும் இருந்தால்தான் வெல்வது எளிது. எண்ணங்களில் தெளிவும் நம்மீதே நமக்குள்ளே நம்பிக்கையும், துணிச்சலும்தான் நமக்கான மூலதனங்கள். முதலீடுகள் என்பது ரூபாய்த்தாள்கள் அல்ல! தகிக்கின்ற லட்சிய நெருப்புதான்.

டி.வி. வந்த புதிதில் டி.வி பழுதுபார்க்கும் ஒரு தொழிலாளியாக வாழ்க்கையை ஆரம்பித்தார் ஒருவர். இரவுகள் கூட அவரின் பகல் பொழுதானது. தொழிலில் ஒரு நேர்மை, நல்ல உழைப்பாளி என்ற பெயர் கிடைத்தது. உழைப்பாளி சரி நல்ல முதலாளி என்று நான் மாறுவது எப்போது என்ற கேள்வி, சதா மனதைத் தகிக்க ஆரம்பித்தது. காலை முழுவதும் வேலை, மாலை முழுவதும் சிந்தனை, இரவு முழுவதும் திட்டமிடல். ஓய்வு ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே. மன நெருப்பு யாகத் தீயாக வளர்ந்தது. சிறிய அளவில் சேலத்தில் ஒரு டி.வி. ஷோரூம் ஆரம்பித்தார். முதல் முதலாக அனைத்து கம்பெனி டி.வி.க்களையும் ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்தார். இன்று கோவை, கரூர், பொள்ளாச்சி உள்ளிட்ட நகரங்களில் காணப்படும் “நட்ஹழ்ல் உப்ங்ஸ்ரீற்ழ்ர்ய்ண்ஸ்ரீள்”என்ற நிறுவனம்தான் அது. 347 தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். அந்த வெற்றியாளனின் வாசகம், “தொழிலுக்கு உண்மையாக இருங்கள்! நீங்களும் ஒரு நாள் முதலாளிதான்”.

(தன்னுடைய) கடந்து போன தோல்விகளையும் என்பதைவிட, வெற்றிக்கான முயற்சிகளையும், எத்தனை வெற்றிகள் பெற்றிருக்கிறோம் என்பதன் கணக்கிடல்களையும் விட்டொழிக்கும் நாளே நமக்குத் திருநாளே! ஏன்? ஏன் முடியாது? ஏன் என்னால் முடியாது? ஏன் இப்பொழுதே என்னால் முடியாது என்ற பரிசீலனைகள்தான் வாழ்க்கையை எடை போடுவதற்கான எடைக் கற்கள் ஆகும். என்ன எடைகள் தான் சற்று வித்தியாசப்படும். சலனம் இருந்தால் வெற்றி அவரவர் கைகளில்தான்.

சுயநலமும் தனித்தன்மையும் நம்மை நிலை நிறுத்தி சிம்மாசனத்தில் அமர வைக்கும். சிம்மாசனங்கள் ஒருபோதும் நமக்காக நகர்ந்து வருவதில்லை. அப்படி ஒரு மந்திரமும் நடக்காது. நம்முடைய தலைமைப்பண்பும் சுயபலமும் வெகு சுலபமாக நமக்கான சிம்மாசனத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். நிரந்தரமாக நம் இருக்கையை மட்டுமல்ல, இருத்தலையும் தக்கவைத்துக் கொள்வதில் இருக்கிறது வெற்றி.

90 வயதிலும்கூட ஒரு பெரியவர் இரும்புப் பட்டறையில் நுட்பமாகவும், கூராகவும் வாள் செய்து கொண்டு இருந்தார். அரசன் மிகவும் ஆச்சரியப்பட்டு அவரிடம், உங்களின் கண்பார்வை மங்கவில்லையா? உடல் தளரவில்லையா? என்று கேட்டபொழுது, பெரியவர் சொன்னார், “நான் 21 வயதில் பட்டறையில் வாள் செய்ய ஆரம்பித்தேன். அன்றிலிருந்து இன்று வரை என் மனக் கண்முன் தோன்றுவது வாளின் கூர்மையான முனையும் கைப்பிடியும்தான். நல்லதொரு கைப்பிடியும் கூர்மையான முனையும் இருப்பதுதான் சிறந்த வாள். இரண்டையும் மட்டும் பார்த்து எழுச்சியுடன் செய்வது என்னுடைய வேலை, 21 வயதில் இருந்த அதே மன எழுச்சிதான் இந்த 90 வயதிலும் என்னிடம் இருக்கிறது. பழகிப் போனது கைகள் மட்டுமல்ல மனமும்தான். நெருப்புக் கங்குகள் கூட எனக்கு கூர்மையான வாளின் முனையாகத்தான் தெரியும்” என்றாராம்.

இன்று நம் அனைவருக்கும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ரேஷன் கார்டு, கோல் ப்ளஸ் கார்டு என்று எல்லா வகை கார்டுகளும் இருக்கின்றன. நமக்குத் தேவை ஒரு அம்க்ஷண்ற்ண்ர்ய் ” அண்ம் – இஹழ்க் தான். ஆம் நண்பர்களே! விருப்பமான குறிக்கோள் அட்டையை சிந்தனையில் வைத்து இருந்தால் போதும். அது தன் வேலையைச் செய்துவிடும்.

எண்ணங்கள் எழுச்சியாக இருந்தால் போதும்.

விண்ணை விஞ்சி விடலாம்!!

எப்போது முயற்சிக்கலாம்


கொஞ்சம் முயற்சி செய்தால் முன்னேறிவிடலாம் என்பது உண்மைதான். அடுத்தவாரம் புதன்கிழமை அந்த முயற்சியைத் தொடங்குவது பற்றி முயற்சிக்கப்போகிறேன்” இப்படி ஒருவர் சொல்வாரேயானால், அந்த புதன்கிழமை வருமே தவிர அவரிடம் முயற்சி வராது.

ஏனென்றால், முயற்சி என்பது விழிப்புணர்வு ஏற்பட்ட விநாடியிலிருந்தே தொடங்குவது. இது முதல் விஷயம். ஆனால் ஒன்றில் வெற்றிபெற முயற்சியைத் தொடங்குவது மட்டும் முக்கியமல்ல. தொடருவதும் முக்கியம். சமீபத்தில், ஈஷா யோகாவின் ஷாம்பவி மகாமுத்ரா பயிற்சி மேற்கொண்டேன். பயிற்சி சொல்லிக் கொடுத்த பிறகு, அவர்கள் சொல்லும் வழிகாட்டுதல், “இந்தப் பயிற்சியை அடுத்துவரும் நாற்பது நாட்களும், காலை மாலை இரண்டு வேளைகள் செய்யுங்கள். இடையில் ஏதாவது ஒரு நாள் காலையோ மாலையோ செய்ய முடியாமல் போனால் மறுநாள் தொடங்கி நாற்பது நாட்கள் காலையும் மாலையும் தொடர்ந்து செய்யுங்கள்” என்பதுதான்.

முயற்சியை உடனடியாகத் தொடங்குவது, தொடங்கிய ஒன்றைத் தொடருவது இந்த இரண்டுமே வெற்றியாளர்களின் அடிப்படை குணங்கள்தாம்.

நீங்கள் ஓர் உணவகம் வைத்திருக்கிறீர்கள். உங்கள் உணவகத்தில் உள்ள சேவையின் சிறப்பையும் சுவையின் சிறப்பையும் ஒருவர் பாராட்டி தன் நண்பரிடம் சொல்கிறார். அவரும் ஆர்வமுடன் உங்கள் உணவகம் வருகிறார். அன்று பார்த்து உங்கள் சமையல் கலைஞருக்கு உடம்பு சரியில்லை. சரியாக சமைக்கவில்லை. உணவு பரிமாறுபவருக்கு மனது சரியில்லை. அவரது சேவை வழக்கமான தரத்தில் இல்லை. அப்படியானால் என்ன நடக்கும்?

சாப்பிட வந்தவருக்கு இந்த சங்கதிகள் தெரியாது. எதிர்பார்ப்போடு வந்ததால் ஏமாற்றம் இரண்டு மடங்காகும். அவர் உங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை அன்றே தொடங்கிவிடுவார். அதற்கு முந்தைய நாளும் அடுத்த நாளும் உங்கள் சேவையும் உணவின் சுவையும் சிகரத்தைத் தொட்டால்கூட எந்தப் பயனும் இல்லை. ஏனென்றால் உங்கள் தரமும் திறமும் நிலையான விஷயமாகப் பதிவாகவில்லை.

தொடங்கிய முயற்சி – தொடரும் முயற்சி இரண்டுமே விழிப்புடன் இருப்பதால் விளைகிற தனித்தன்மை. ஒரு நிறுவன உரிமையாளர் சட்ட திட்டங்களை வகுத்து போதனை தருவதோடு நின்றுவிட்டால் அவர் முழுதாக முயலவில்லை என்று பொருள். வகுத்த கொள்கைகள் நடைமுறைக்கு வருகிறதா என்று நின்று பார்ப்பதே வெற்றியை உறுதிசெய்கிறது.

தனியொரு மனிதர் தனக்கென வகுத்துக் கொண்ட கொள்கைகள் கூட நடைமுறைப் படுத்தும்போதுதான் உறுதியாகிறது. “சரியான நேரத்திற்கு வருவது என் கொள்கை. என்ன செய்வது? கொஞ்சம் தாமதமாகிவிடுகிறது” என்றொருவர் சொல்வது எதைக் காட்டுகிறது?

நேர நிர்வாகத்தில் புலி என்ற பெயர் வாங்கவும் ஆசை, சோம்பலையும் தவிர்க்க முடியவில்லை. இரண்டுக்கும் நடுவே தடுமாறுவதால் சாக்குப் போக்குகள் சொல்லத் தொடங்குகிறது மனம்.

முயற்சிக்கு இரண்டு இலக்கணங்களைச் சொல்கிறார் திருவள்ளுவர். சலிப்பில்லாமல் முயலுவது, காலம் தாழ்த்தாமல் முயலுவது. இரண்டுமே ஒன்றில் ஒன்று தொடர்புள்ளவை.

ஏதாவதொரு கடமை உங்களுக்கு சலிப்புத் தருவதாக இருந்தால், அதற்கு நீங்கள் தருகிற முக்கியத்துவம் குறைகிறது. அதன் காரணமாகக் காலதாமதம் நேர்கிறது.

முயற்சிகள் முனைமுறிவது இரண்டு காரணங்களால்தான். ஒன்று – சலிப்பு. இன்னொன்று – பொறுமையின்மை. ஒரு முயற்சியை இடைவிடாமல் செய்கிறபோதுதான் அது உரிய காலத்தில் உரியவர்களின் கவனத்தைத் தொடுகிறது. அந்த முயற்சிக்குரிய மேன்மையும் அங்கீகாரமும் மலர்கிறது.

விடாத முயற்சியின் வலிமையை உணர்ந்துகொள்ள நிறைய உற்சாகமும் அதைவிட அதிகமாய்ப் பொறுமையும் அவசியம். இந்த இரண்டு குணங்களுக்கான முயற்சியை எப்போது தொடங்கப்போகிறோம்? இப்போதே….. உடனடியாக……

வெற்றி வேண்டுமா வழிகள் இதோ!!


எதைச் செய்தாலும் வெற்றிக்காகவே செய்கிறோம். ஆனால், எப்படிச் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததுதான் வெற்றியும் தோல்வியும். செய்கிற வேலைகளும் தொழில்களும் வேறுபடலாம். பொதுவானதாக இருப்பது அணுகுமுறையும், நம்மை ஆயத்தம் செய்து கொள்கிற விதங்களும்தான். அவற்றில் கவனம் செலுத்துகிறபோது வெற்றிக்கான விதை விழுகிறது.

நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை வெற்றிகரமாகச் செய்வது என்பதை நோக்கி நகர நகர சாதனை என்பதே சுலபமான வேலையாகி விடுகிறது.

அணுகுமுறை எதிலிருந்து ஆரம்பிக்கிறது? எண்ணங்களிலிருந்து ஆரம்பிக்கிறது. எந்தப் பின்புலமும் இல்லாமல் தொடங்கி சிலர் அசகாய வெற்றிகளை எட்டியிருக்கிறார்களே, அந்த வெற்றிகள் எதிலிருந்து தொடங்கின தெரியுமா? அவர்களின் அபிப்பிராயங்களில் இருந்து!! தாங்கள் வெறுமையான சூழலில் இருந்தாலும் அங்கிருந்து வெற்றியாளர்களாய் வளரமுடியும் என்ற அபிப்பிராயம்தான் அவர்களுடைய முதல் உந்து சக்தி. தங்களின் உற்சாகமே அவர்களை உரிய இடத்தில் கொண்டு சேர்க்குமென உறுதியாய் நம்பியவர்கள் அவர்கள்.

அனைத்து வெற்றிகளும் நம் அபிப்பிராயங்களில்தான் ஆரம்பமாகின்றன என்பது நாம் அறிய வேண்டிய முதல்பாடம். அந்த அபிப்பிராயம் தோன்றுகிறபோதே அடுத்தடுத்து அதனை உறுதிசெய்து கொள்ளும்விதமாக நடவடிக்கைகளும், ஒழுங்கும் தானாக உருவாகி விடுகிறது. எனவே வெற்றி பெறவேண்டும் என்கிற அபிப்பிராயமே முதல்படி.

மனதில் ஏற்படுகிற இந்த அபிப்பிராயம் வார்த்தைகளிலும் வெளிப்படத் தொடங்குமென்றால் வெற்றியை நோக்கி இரண்டாவது அடியை எடுத்து வைக்கிறீர்கள் என்று பொருள். ஏதேனும் ஒன்றில் நேர்ந்த தோல்வியைப் பற்றிப் பேசினால், புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது என்று நீங்கள் சொல்லத் தொடங்கிவிட்டீர்களா? அப்படியானால் வெற்றிக்கான மனோபாவம் உங்களுக்குள் அரும்பத் தொடங்கிவிட்டதாக அர்த்தம்.

ஏதேனும் ஒன்றை “இதைச் செய்ய முடியாது” என்று சொல்வதைவிட, “வேறு எப்படி செய்யலாம் என்று யோசிக்கலாம்” என்கிற அணுகுமுறை ஏற்படுவதுதான், மனதில் அரும்புகிற உறுதி வார்த்தைகளிலும் வெளிப்படத் தொடங்கியதன் அடையாளம்.

வெற்றியை நெருங்குவதற்கான வழிகளில் உடற்பயிற்சியும் ஒன்று. இது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் உடற்பயிற்சி ஆரோக்கியத்திற்கும் எடைகுறைப்பும் மட்டுமல்ல. உடற்பயிற்சி மூலம் வாழ்க்கை இயல்பாக இருப்பதாகவும் – புதிய சக்தி கிடைப்பதாகவும் – நம்பிக்கை அதிகரிப்பதாகவும் – ஆய்வு முடிவுகள் அறிவிக்கின்றன.

வெற்றிபெற விரும்புகிறவர்களுக்கு மிக முக்கியமான இன்னொரு பண்பு, புதிய மனிதர்களையும் புதிய சூழல்களையும் தயக்கமில்லாமல் எதிர்கொள்வது. பக்கத்தில் யாராவது புதிதாகக் குடி வந்தால், அவர்களாக வந்து அறிமுகம் செய்துகொள்ளும்வரை காத்திருக்காமல், நீங்களாகச் சென்று அறிமுகம் செய்து கொள்வதில் தொடங்கி, முற்றிலும் அந்நியமான சூழலில் ஏற்படும் வாய்ப்புகளைக் கூச்சமில்லாமல் எதிர்கொண்டு, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதுவரை எத்தனையோ நிலைகளுக்கு இது பொருந்தும்.

நாம் சற்றும் எதிர்பாராத இடங்களிலிருந்து, எதிர்பாராத வாய்ப்புகள் ஏற்படுவதும், அதன் வழியே நாம் புதிய ஏணிகளில் ஏறுவதும் நிகழ்வதற்கு எல்லா சாத்தியக் கூறுகளும் உள்ளன. எனவே புதிய திசைகள் திறந்து கொள்ள உற்சாகமாகக் காத்திருப்பதும், நமக்குள் இருக்கும் நத்தைக் கூட்டை உடைத்துக்கொண்டு நதிபோலப் புறப்படுவதும் வெற்றிக்கு வழிசொல்லும் அம்சங்கள்.

ஒருவர் வெற்றியாளராக உருவெடுக்க நினைக்கிறார் என்றால், மனதுக்குள் சில முன்னோடிகளை அவர் வரித்துக்கொள்வது வழக்கம்.அப்படி வரித்துக்கொள்கிற முன்னோடிகள் நிகரற்ற வெற்றியாளர்களா என்பது முக்கியமல்ல. நிரந்தர வெற்றியாளர்களா என்பதே முக்கியம். கொடிகட்டிப் பறந்து கோலாகலமாய் வளர்ந்து – பிறிதொருநாள், அது குறுக்கு வழியில் கிடைத்த வளர்ச்சி என்று தெரிய வரும்போது, அந்த வெற்றியாளர் மீதான அபிப்பிராயம் மட்டுமா விழுகிறது? வெற்றி குறித்த நம்பிக்கையின் அடித்தளமே ஆட்டம் காண்கிறது. எனவே, சரியான மனிதரை – சரியான காரணங்களுக்காக முன்னோடியாய் வரித்துக் கொண்டு முன்னேறுவது மிகமிக முக்கியம்.

ஒரு பாதையில் நீங்கள் போகிறபோது வாகனத்தை நிறுத்தி வழி கேட்கிறீர்கள். சிலர் சரியாக வழிகாட்டுகிறார்கள். சிலர் குழப்புகிறார்கள். சிலர் அலட்சியமாக நகர்ந்து போய்விடுகிறார்கள். இதற்கிடையே சாலைக்குக் குறுக்கே அவசரக்காரர்களிலிருந்து ஆட்டுக்குட்டிகள் வரை வருவதுண்டு. இவற்றையெல்லாம் தாண்டி பயணத்தை நிகழ்த்துவதே, சென்று சேர்கிற இடத்தில் செய்யவேண்டிய முக்கியமான பணிக்காகத்தான்.

அந்தப் பணியில் இருக்கும்போது, வழியில் நடந்தவற்றை நினைத்துக் கொண்டிருப்பீர்களா என்ன? வாழ்க்கைப் பயணமும் அப்படித்தான். உங்கள் இலக்கை எப்படியாவது சென்றடைய வேண்டுமே தவிர வழியில் வரும் விமர்சனங்களை, சின்னச் சின்ன சீண்டல்களை பொருட்படுத்தக் கூடாது.

வெற்றிக்கு மற்றொரு முக்கியமான வழி, பாராட்டு. பாராட்டு என்றதுமே மற்றவர்கள் பாராட்டும்படி வாழ்வதுதான் முதலில் நம் மனதில் தோன்றும். அதுமட்டும் போதாது. மற்றவர்கள் பாராட்டும் விதமாக வளர்வது போலவே மற்றவர்களைப் பாராட்டும் பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பாராட்டு மட்டும் போதாது. முடிந்தவரை மற்றவர்கள் வெற்றிபெற உதவுவதுகூட உங்கள் வெற்றிகளுக்குத் துணை நிற்கும். உதவி தருபவர்களே உதவி பெறுகிறார்கள் என்பது பொதுவிதி. எப்போதோ விதைத்த விதை எத்தனையோ பழங்களைத் தருவதுமாதிரி, எப்போதோ செய்கிற உதவி நிகரற்ற நன்மைகளாகத் திரும்பவரும்.

உள்ளத்தில் ஏற்படும் அபிப்பிராயம், உங்களிடம் வெளிப்படும் வார்த்தைகள், உடற்பயிற்சி, அறியாத இடங்களிலும் ஆளுமையுடன் அணுகுதல், உண்மையான வெற்றியாளர்களைப் பின்பற்றுதல், முக்கிய இலக்கில் மட்டும் கவனம் செலுத்துதல், மற்றவர்களைப் பாராட்டி, உரிய உதவிகள் புரிதல். இத்தனை பண்புகளும் எப்போது உங்களிடம் ஜொலிக்கிறதோ, நீங்கள் ஜெயிக்கப் போவது நிச்சயம்!

வெற்றியை அளந்தால்தான் விபரம் புரியும்


வெற்றியின் அளவுகோல்கள் விதம் விதமானவை. வித்தியாசமானவை. இருந்தாலும், நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்களா என்பதைக் கண்டறிய சில எளிய அளவு கோல்கள் உண்டு.

ஒரு துறையில் ஈடுபடும்போது, அதில் உங்கள் வளர்ச்சி அனைத்துப் படிநிலைகளிலும் ஏற்பட்டிருக்கிறதா என்று முதலில் பாருங்கள். உதாரணமாக – நீங்கள் செய்யும் பணிகளால் உங்களுக்குப் பாராட்டு கிடைக்கிறது. புகழ் வளர்கிறது. எல்லோரும் உங்களை நாடி வருகிறார்கள். இதெல்லாம் சரி, உங்களுக்கு இதனால் பொருளாதார நன்மை ஏற்படுகிறதா?

“மற்றவை எல்லாம் கிடைக்கிறது. பணம் கிடைக்கவில்லை. அதனால் என்ன! ஆத்ம திருப்தி கிடைக்கிறதே” என்று நீங்கள் சொல்வீர்களேயானால், உங்களை நீங்களே சமாதானப்படுத்திக் கொள்கிறீர்கள்.

எந்த ஒரு வேலைக்காக நீண்ட நேரம் செலவிடுகிறீர்களோ, அதில் எல்லாம் கிடைப்பது போலவே பொருளாதார நன்மையும் வேண்டும். நிறைய சம்பாதித்தவர்கள், மனநிறைவுக்காக சமூக சேவை செய்பவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

ஆனால் எதைத் தொழிலாகச் செய்கிறீர்களோ அதில் பொருளாதார நன்மையும் ஓர் அம்சம். பொருளாதார நன்மை கிடைக்காமல் இருப்பது இரண்டு காரணங்களில் நிகழ்ந்திருக்கலாம்.

1. நீங்கள் செய்யும் பணிகள் நல்ல பெயரையும் புகழையும் நோக்கி செய்யப்படும் அளவு பொருளாதார நன்மை தரவில்லை என்றால், அந்த வேலையே அப்படித்தான் – அதன் மூலம் பெரிய அளவில் பொருளாதார நன்மைகள் கிடைக்காது என்று பொருள்.

2. அல்லது, உரிய அளவில் பொருளாதார நன்மைகள் கிடைத்தாலும் அந்த நன்மைகளை சரியாகப் பயன்படுத்தி வளங்களைப் பெருக்கும் வழி உங்களுக்குக் கிடைக்கவில்லை என்று பொருள்.

இதில் முதலாவது காரணம்தான் உங்கள் வாழ்க்கையில் காணப்படும் நடைமுறை உண்மையென்றால், உங்கள் உழைப்புக்கான விலையை நிர்ணயிக்க நீங்கள் தயங்குகிறீர்கள் என்று கருதலாம்.

இது மிகவும் ஆபத்தான அணுகுமுறை. மற்றவர்கள் தவறாகக் கருதுவார்கள் என்று மகத்தான பணிகளை செய்து அதற்குரிய ஊதியத்தைப் பெறவோ, அல்லது நீங்களே உங்கள் ஊதியத்தை நிர்ணயம் செய்து கேட்கவோ தயங்குவது பிற்காலத்தில் விரக்தியிலும் தன்னிரக்கத்திலும்கொண்டு போய்விடும். எனவே இந்த மனநிலையை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக உள்ள காரணம்தான் உங்களைப் பொறுத்தவரை உண்மை என்றால், நிதி ஆதாரங்களை சரிவரக் கையாள்வதில் உங்களுக்குப் பயிற்சி இல்லையென்று பொருள். இத்தகைய சூழ்நிலையில் சரியான ஒருவரை நியமித்து உங்கள் நிதி ஆதாரங்களை சீர்செய்ய வேண்டும்.

வெற்றியின் இன்னோர் அளவுகோல் வெற்றிகளைத் தொடர்கதையாக்குதல். ஒரு வெற்றி வந்த மாத்திரத்திலேயே, தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்கிற வேகம் வரவேண்டும். முதல் வெற்றி வந்தபிறகு, அடுத்த கட்டமாக முயற்சிகள் செய்து, தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வது என்கிற அச்சம் ஏற்பட்டுவிடுமென்றால், சிலர் முயற்சிகளைத் தொடரமாட்டார்கள்.

வெற்றியை நிகழ்த்திக் காட்டிய யாருக்கும், அந்த வெற்றியை உலகம் நினைவில் வைத்திருக்கும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. தொடர்ந்து வெற்றிகளை நிகழ்த்திக் காட்டிக் கொண்டே இருக்கிற போதுதான் ஒருவர் வெற்றியாளர் என்கிற அங்கீகாரத்தைப் பெறுகிறார்.

வெற்றிக்கு மற்றுமோர் அளவுகோல், அந்த வெற்றியைப் பெற்ற வழி. உழைப்பு, திட்டமிடுதல், சமயோசிதம், துணிவு, முடிவெடுக்கும் ஆற்றல் ஆகிய அடித்தளங்கள் மீது கட்டப்படுகிற வெற்றியின் கட்டிடம்தான் உங்களுடைய வெற்றி என்று கொண்டாடத்தக்கது.

மற்றவர்கள் மூலம் கிடைக்கும் வெற்றி, யானை மாலை போட்டு ராஜா ஆன கதையாகத்தான் இருக்கும்.

வெற்றியின் மற்றோர் அளவுகோல் மேம்பாடு. முதல் வெற்றிக்குப் பிறகு உங்கள் உழைப்பின் தரம் மேம்பட்டிருக்கிறதா? உங்கள் தயாரிப்பின் தரம் மேம்பட்டிருக்கிறதா? உங்கள் நம்பிக்கையின் தரம் மேம்பட்டிருக்கிறதா? நீங்கள் பழகும் இயல்புகளில் மேம்பாடு தெரிகிறதா? என்றெல்லாம் இந்தச் சமூகம் கவனிக்கும்.

ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும், நீங்கள் விளையாடும் களம் மாறிக்கொண்டேயிருக்க வேண்டும். தொடங்கும்போது யாரைப் போட்டியாளர் என்று நீங்கள் கருதினீர்களோ அவரைத்தாண்டி வெகுதூரம் நீங்கள் வந்திருக்க வேண்டும். எட்டவே முடியாத உயரத்தில் இருக்கிறார் என்று யாரை நீங்கள் அண்ணாந்து பார்த்தீர்களோ, அவர் உங்கள் அடுத்த போட்டியாளராக இருக்க வேண்டும். அவரையும் வென்றுவிட்டு, “மளமள” வென்று அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டும்.

வெற்றியை உறுதிப்படுத்தும் இன்னோர் உன்னதமான அளவு கோல் எது தெரியுமா? நீங்கள் பெற்ற வெற்றிகள் பற்றியும் அதற்குக் கையாண்ட வழிமுறைகள் – தாண்டி வந்த தடைகள் பற்றியும் உங்களுக்கு ஒரு தெளிவு இருப்பதுதான். இந்த இடத்திற்கு எப்படி வந்தீர்கள் என்று யாராவது கேட்டால், துல்லியமாக சொல்லத்தெரியும் என்றால்தான் உங்கள் வெற்றி நீங்களே முயன்று பெற்றது என்பதை உலகம் ஏற்கும்.

உலகத்திற்காக வாழ வேண்டுமா என்ற கேள்வியைப் புறந்தள்ளுங்கள் – மிக நிச்சயமாக உலகம் ஒவ்வொரு மனிதனையும் உன்னிப்பாக கவனிக்கிறது. உண்மையாக உழைத்து ஜெயிப்பவனை மற்றவர்களுக்கு சுட்டிக் காட்டுகிறது. அவனைப் பற்றிய விபரங்களை சேகரிக்கிறது. உங்கள் வெற்றியின் போக்கை நீங்களே அளந்து பாருங்கள்! மேலும் மேலும் வெற்றிகள் வசப்பட்டே தீரும்!!

Saturday, April 27, 2013

கல்லிலே கலைவண்ணம் வெற்றியின் பன்முகங்கள்

நீங்கள் நினைத்ததை, முயற்சித்ததை, உழைத்ததை, நீங்கள் திட்டமிட்டதை, சரியான முறையில் எதிர்பார்த்த பலன் கிடைத்து, அதன்மூலம் உங்களுக்கு வருமானமும் கிடைத்தால் அது வெற்றி.


அதற்கிடையில் எத்தனை பிரச்சனைகள் இருக்கின்றன. உங்களது தொழிற்சாலையை மூடவேண்டும் என்று நோட்டீஸ் வரும். திடீரென்று சோதனையிட வருவார்கள். ஏதேனும் ஒரு புகாரைக் கொண்டுவந்து விசாரிக்க வேண்டுமென்பார்கள். இதையெல்லாம் தாங்கிக்கொண்டுதான் ஒருவர் வெற்றி பெறுகிறார். வெற்றி என்பது ஓர் உணர்வு. திருப்தியான உணர்வு.

பணம் சம்பாதிப்பது மட்டும் வெற்றியல்ல. வெற்றி என்பது உங்கள் திட்டம் நன்றாக செயல்பட்டு, அதன் பலன் பலருக்கும் சென்று நாட்டுக்கும் பெருமை சேர்த்து ஒரு “பிராண்டை” உருவாக்கி இந்தப் பொருள் என்றைக்கும் தரமானதாக இருக்கும் என்கிற நிலையை, நம்பிக்கையை உருவாக்குவதே வெற்றி.

ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது துணிச்சலுடன் அதைப் பயன்படுத்துகிற மனப்போக்கை நாம் கொண்டிருக்க வேண்டும்.

நான் திட்டமிட்டு தொழிலில் இறங்கவில்லை. திட்டவிளக்கங்களோடு வங்கியை அணுகி கடன் பெற்றும் தொடங்கவில்லை. எந்த விற்பனை தரவுகளோடும் நான் தொழில் துவங்கவில்லை.

நீச்சல் பழகிக்கொள்ள கிணற்றில் தூக்கிப் போட்டது போல நான் தொழில் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன். அதில் தத்தளித்து, நீந்தி, உயிர் பிழைத்தேன். அதுதான் வெற்றி.

நீங்கள் ஏதேனும் சாதனை படைத்து அதுதான் வெற்றி என்று எண்ணாதீர்கள். கவனித்துப்பாருங்கள். ஒரு திரைப்படம் நூறு நாட்கள் ஓடிவிட்டதென்றால், இவன்தான் மாபெரும் ஹீரோ. அற்புதமான வெற்றி என்கிறார்கள். இரண்டு படம் தோல்வியென்றால் அவனைப்பற்றி பேச்சே வருவதில்லை. தேர்தலிலும் இந்த நிலைதான். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறினால் அது வெற்றி.

பெரிய பணக்காரர் ஒருவரிடம் “What is the power of Money” என்று கேட்டேன். செல்வமிருந்தால் என்ன செய்யும்?

செல்வத்தை வைத்துக்கொண்டு நீங்கள் கற்பனை செய்கிற அனைத்தையும் வாங்கமுடியும். அவ்வளவுதான். செல்வம் மட்டுமே உங்கள் பரம்பரை முழுமைக்கும் வெற்றியைத் தராது. உங்கள் முயற்சியும், கடுமையான உழைப்பும் கண்காணிப்பும்., மற்றவர்களை இணைத்து ஒரு தொழிலை நடத்தும் தன்மையும், உங்கள் வாடிக்கையாளர், உங்கள் விநியோகஸ்தர் என்று யாராக இருந்தாலும், அன்புடன், பண்புடன், அடக்கமுடன் நிதானத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் வரும்.

வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, மோகன் குமாரமங்கலம் போன்ற பிரபல வழக்கறிஞர்கள் எப்படி சாதுர்யமாக வழக்கை நடத்துகிறார்கள் என்று கற்றுக்கொண்டேன்.

வழக்கறிஞர் தொழிலில் ஒரு நல்ல எதிர்காலம் காத்திருந்த வேளையில் அதைவிட்டுவிட்டு குடும்பச் சூழல் காரணமாக இந்தத் தொழிலுக்கு வந்தபோது இந்தத் தொழிலே தமிழ்நாட்டில் இல்லை.

ஊரில், “மகன் வக்கீல் தொழிலை விட்டுவிட்டு கல் உடைக்கிற வேலைக்கு போய் விட்டானாமே” என்று கேவலமாக பேசுகிறார்கள்.

உலக அதிசயங்களில் எதைப் பார்த்தாலும் அது கல்லோடு தொடர்புடையதாகத்தான் இருக்கும்.

ஸ்வீடன் நாட்டிற்குச் சென்று ஒரு விஞ்ஞானியிடம் பயிற்சி பெற்று இந்தியா திரும்பி, தொழில் துவங்கினேன்.

அப்போது எமர்ஜென்ஸி காலம், எங்கள் உறவினர் ஒருவர் அரசியலில் இருந்தார். அவருடைய வளர்ச்சிக்கு நான்தான் காரணம் என்று என் அலுவலகத்தை சோதனையிட்டார்கள். ஐரோப்பாவில் ஏற்படுத்திய ஒப்பந்தத்தையும் அவர்கள் எடுத்துப் போய்விட்டார்கள்.

இப்போது போல் எளிதாக தொழில் துவங்க முடியாது. வருமானவரி அலுவலகத்திற்குச் சென்று ஏற்றுமதியைப் பற்றியெல்லாம் சொன்னேன். அதற்குள் புதிய ஆட்சி வந்தது. வந்த ஆட்சி கல்குவாரிகளை அரசே நடத்தும் என்று என்னிடமிருந்து பறித்துக் கொண்டது.

நானும், என்னை நம்பி இந்தத் தொழில் செய்யலாம் என்று வந்த என்னுடைய சகோதரர்களும் கர்நாடகாவிற்குச் சென்று தொழில் துவங்கினோம். அங்கேயும் இதே நிலை. நல்ல நிலையில் எல்லாம் போய்க் கொண்டிருந்தபோது அரசே என் குவாரியைப் பறித்துக் கொண்டது. வழக்குகள் நடத்தி தொழிலை மீட்டேன்.

வெற்றிகரமான முடிவென்பது சில சமயம் எதுவும் செய்யாமலிருப்பதுதான். இல்லையென்று சொல்வதற்கு மாபெரும் துணிச்சல் வேண்டும். எந்த முடிவு எடுக்க வேண்டுமானாலும் சரி, இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என்று தீர்மானமான முடிவு எடுக்க வேண்டும்.
இந்தத் தொழிலால் எனக்கு என்ன திருப்தியென்றால், ஜப்பானில் முப்பதாயிரம் கட்டிடங்கள் என்னுடைய கற்களால் கட்டப்பட்டவை.

வெற்றி என்று சொல்லும்போது தியாகம், துன்பம் என்பதும் இருக்கும். அதைத் தவிர்த்து வெற்றி மட்டுமே பார்க்காதீர்கள்.

சொத்து என்று பார்த்தால், முதல் சொத்து நீங்கள்தான். உங்கள் உடல்தான். நல்ல உடல் பலத்துடன், மனபலத்துடன் சாதனை புரியுமளவிற்கு பாடுபட்டால்தான் முடியும். அடிப்படையான அந்த சொத்தை விட்டுவிடாதீர்கள்.

ஒரு மனிதன் இறுதிவரை தன்னால் இயன்ற அளவிற்கு மனதாலோ, உடலாலோ உழைத்தால்தான் ஆரோக்கியமாக இருக்கமுடியும்.

நான் இந்த தொழிலுக்கு வந்தபோது ஆண்டு முழுவதும் ஒருகோடி ரூபாய்க்குக்கூட ஏற்றுமதியில்லை. இந்தியா முழுவதும் 4000 கோடி ரூபாய் அளவிற்கு, இப்போது 20 மாநிலங்களில் ஏற்றுமதி செய்கிறார்கள்.

LCD, பிளாஸ்மா டிவி செய்வதற்குக்கூட இப்போது கற்களைப் பயன்படுத்துகிறார்கள். இது இந்தியாவின் வெற்றி.

விடாமுயற்சி -நமது துருப்புச் சீட்டு

எந்த ஒரு வேலையையும் தொடர்ந்து முயல்பவர்களின் விடாமுயற்சி, வாழ்வில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது என்றார் ஒருவர். இதைக் கேட்டதும் சிலருக்கு வியப்பு ஏற்படலாம். முயற்சிகள் தொடரும்போது அதனால் சலிப்பு ஏற்படுவதுதானே நிஜம் என்பது சிலரின் கேள்வியாக இருக்கலாம். ஆனால் சாதிக்கும் வெறி கொண்டவர்களின் கதையே வேறு.

முயற்சியில் தோல்வி ஏற்படும்போதெல்லாம் இன்னும் வேகமாக முயல்கிறார்கள். தங்கள் தீவிரத்தை அதிகப் படுத்துகிறார்கள். அதன்விளைவாக திறக்காத கதவையும் முட்டி மோதித் திறக்கிறார்கள். ஒரு வேலை வாய்ப்பையோ, வணிக வாய்ப்பையோ அந்த முயற்சியின் மூலம் பெறுபவர்கள், அந்தத் தீவிரத்தைத் தக்கவைத்துக் கொள்கிறார்கள். காலம் முழுவதும் தங்களைக் காக்கப் போவது அந்தத் தீவிரம்தான் என்று தெரிந்து கொள்கிறார்கள்.

முதல் முயற்சியிலேயே கிடைத்த வேலை, முதல் பார்வையிலேயே கனிந்த காதல் போன்றவை சில நேரங்களில் ஆபத்தானவை. காத்திருப்பின் வலி தெரியாமலேயே கனிந்துவிடுகிற வெற்றிகளின் அருமை சிலருக்கு சில சமயங்களில் தெரியாமல் போவதுண்டு.

விடாமுயற்சியைத் தக்கவைத்துக் கொள்கிற மனிதனை, அவனது நிர்வாகமும், சமூகமும் உன்னிப்பாகக் கண்காணிக்கிறது. அவனை அதிகம் நம்புகிறது. சாத்தியமற்றவற்றைக் கூட சலிக்காது முட்டி மோதுகிற மனிதன் சாதிக்கப் பிறந்தவன் என்பது, எல்லோரும் அறிந்த ரகசியம்.

நீங்கள் வாழ்வின் எந்த நிலையிலிருந்தாலும் சரி, விடாமுயற்சியைக் கைவிடாதவர் என்ற பெயரை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அதற்கு உண்மையாய் இருங்கள். நீங்கள் நினைத்தால் கூட உங்கள் வளர்ச்சியைத் தடுக்க முடியாது.

இதற்கு வெளியிலிருந்து ஊக்கங்களோ வழிகாட்டுதல்களோ தேவையில்லை. ஒவ்வொரு விநாடியும் எவ்வளவு விலைமதிப்பு மிக்கது என்று உணரும்போது, நம்மை நிரூபிக்க வேண்டிய காலநெருக்கடி இருப்பது எல்லோருக்குமே புலப்படும்.

சாதாரண மனிதர்களுக்கு பொழுது போகாது, சாதனையாளர்களுக்கோ பொழுது போதாது. இந்த முனைப்பும் காலம் பற்றிய விழிப்புமே காலங்காலமாய் வெற்றியாளர்களை செதுக்கி வருகிறது. தொடர் முயற்சி, வாழ்க்கையில் நமக்கிருக்கும் முக்கியமான துருப்புச்சீட்டு. குறிப்பிட்ட அளவு வயது வந்த பிறகோ அனுபவம் அடைந்த பிறகோ அதனைக் கீழே போட்டு விடலாகாது.

ஏனெனில் காலத்தோடு சேர்ந்து நாமும் பழசாகாமல் காப்பாற்றுவதே அதுதான். எனவே, விடாமுயற்சி செய்யுங்கள்…. விடாமுயற்சியைத் தக்க வைத்துக் கொள்ள!!

திரை கடலோடு திரவியம் தேடு

ஒளிமயமான எதிர்காலம் இதோ! இதோ!” எனக் கனவுகண்டு, “வருங்கால வல்லரசுகளில் இந்தியா முதல்வரிசையில் நிற்கும்” என்ற நம்பிக்கையோடு, இந்தியா மட்டுமன்றி, திரைகடல் கடந்த நாடுகளிலும் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மிக வேகமாகப் பயணித்துக்கொண்டிருந்த இந்தத் துணைக்கண்டத்தின் முன்னேற்றம், “திடீரென்று” ஆட்டம் காண ஆரம்பித்திருக்கின்றது. உலகப் பொருளாதாரமே நிலையில்லாமல் தள்ளாடும்போது, இது தற்காலிகமானதுதான் என்று என்னதான் சமாதானம் செய்தாலும் எல்லோர் மனதிலும் “பயம்” தோன்ற ஆரம்பித்திருக்கின்றது. ஓரிரு மாநிலங்களைத் தவிர, மின்சாரம் தட்டுப்பாடின்றிக் கிடைப்பது மிக அரிதாகிவிட்டது.

ஜெனரேட்டர்களை வைத்து உற்பத்தி செய்யலாம் என்றால் “டீசல்” விலை “கன்னா” பின்னா” வென்று உயர்ந்து “கட்டுப்படியாகாமல்” “‘ஷாக்” அடிக்கின்றது.

பங்குச் சந்தையின் “பன்னாட்டுச்” சூதாட்ட வலையில் நடுத்தர வர்க்கம் வாழ்நாள் சேமிப்பைத் தொலைத்துவிட்டு “இரகசியக் கண்ணீர்” சிந்திக்கொண்டிருக்கின்றது. “வங்கிக்கடன்” வட்டிவிகிதம் எகிறிக் கொண்டிருக்கிறது. எல்லா அரசியல்வாதிகளும், நாட்டுக்குச் சேவை செய்கிறேன் பேர்வழி என்று தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்து உள்ளதையும் கெடுத்துத் தங்கள் “பெருமையை”க் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

மூலப் பொருட்களின் விலையேற்றம், அந்நிய நாட்டு டாலர், யூரோ போன்றவற்றின் வீழ்ச்சி, எழுச்சி – நஷ்டங்கள் ஒரு புறத்தில் நமது பொருட்களை விலையேற்ற வைக்கிற. “தொழிலாளர் பிரச்சினை என்று, இல்லாத பிரச்சினைகளை உருவாக்கி சில அரசியல்கட்சிகள் மொழி, மாநில, மத வேறுபாட்டைக் கிளறிவிட்டு ஒவ்வொரு நாளும் தொழிலை முடக்கி நாட்டுக்கு நன்மை செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட குழப்பமான, கடினமான, நிச்சயமற்ற சூழ்நிலையில் திரைகடலோடித் திரவியம் தேட முடியுமா என்ற கேள்வி தவிர்க்க முடியாதது. ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலைகள் எல்லாக் காலகட்டங்களிலும் எல்லா நாடுகளிலும், ஏதோ ஒரு சமயத்தில் இருந்துள்ளன. இவற்றை எதிர்கொண்டும், ஏற்றுக்கொண்டும்தான் நாம் நமது பணியைத் தொடர்ந்து செய்து வரவேண்டும்.

இம்மாதிரி சமயங்களில் “நம்பிக்கையை” இழந்துவிடக்கூடாது. முக்கியமாக எல்லோருமே ஒரு புத்திமதியை முன்வைப்பார்கள் – சிக்கனமாகச் செலவு செய். தேவையற்ற செலவுகளைச் செய்யாதே – ஆடம்பரத்தைக் குறை- என்று. மூன்றுமே ஒரே அர்த்தத்தைத்தான் குறிக்கின்றன.

நம் நாட்டில் பெரும்பாலான நிறுவனங்கள் – மேற்கூறிய மூன்றையும் – எப்போதுமே கடைப்பிடித்து வருவதால், இதற்குமேல் எங்கே சென்று செலவைக் குறைப்பது? கடைந்த மோரில் வெண்ணெய் எடுப்பது இயலுமா? இங்கேதான் சரியான திட்டமிடுதல், சட்டப்படியானவற்றைச் சரியாகச் செய்தல், மனிதவள மேம்பாட்டோடு தொழிலாளர் உறவைப் பேணுதல், சரியான பொருளாதாரச் சிந்தனை, தரத்துக்காக மெனக்கெடுவது, வாடிக்கையாளர் தொடர் நல்லுறவு – ஆகியவை கைகொடுக்கும்.

அகலக்கால் வைக்காமல், படிப்படியாக வளர்ச்சி இருந்திருந்தால் – எந்த நிலையிலும் நம்மால் தாக்குப்பிடிக்கமுடியும். அதிக நஷ்டம் ஏற்படும் என்று தெரிந்தால் அதற்கான மாற்று வழிகளை உடனே செய்தாக வேண்டும். தொழிலையே சிலகாலம் நிறுத்திவைக்க வேண்டியது வந்தாலும் சரியான சட்டரீதியான, அணுகுமுறையுடன் நஷ்டத்தைக் குறைக்க சிலகாலம் நிறுத்திவைத்தாலும் தவறில்லை. ஏனென்றால் வெற்றிக்குப் பலபேர் பங்கு கேட்பார்கள். தோல்வியை நீங்கள்தான் சுமக்கப் போகிறீர்கள்.

தொழிலாளர் சம்பளம், போக்குவரத்துச் செலவுகள், ரயில், விமானப் பயணங்கள் அன்றாடச் செலவுகள் – எதையுமே நீங்கள் நினைப்பதுபோல் குறைத்துவிட முடியாது. சிங்கப்பூருக்கு விமானத்தில்தான் போகமுடியும். கப்பலில்போனால் பலநாள் வீணாகும். இப்படி எந்த அத்யாவசியச் செலவையும், எந்த நிறுவனமும் குறைத்துவிடமுடியாது. வேண்டுமானால் சிலவற்றைத் தள்ளிப்போடலாம், சிலவற்றைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கலாம்.

விளம்பரச் செலவுகளைக் குறைக்கலாம். வாடிக்கையாளரைச் சென்று சந்திப்பதை அவசியத்தின்போது மட்டும் செய்யலாம். மூலப் பொருட்களின் இருப்புகளை முடிந்தவரை குறைத்துக் கொள்ளலாம். இவை தவிர நம்மால் வேறெதையும் குறைக்க முடியாது. லாபத்தைக் குறைத்துக்கொள்ளலாம். நஷ்டம் ஏற்படாமல் தடுக்கலாம். நஷ்டம் ஏற்படுமானால் சில நாட்களுக்கு நமது பொருளாதார வசதியை வைத்து குறைவான நஷ்டத்தைச் சந்திக்கலாம்.

இதிலே ஒரு மிகப்பெரிய வேறுபாடு என்னவென்றால், நமது நாட்டில் தொழில் செய்பவர்கள் நஷ்டத்தைச் சந்திக்கும்போது, அதற்கான இழப்பை ஈடுகட்டச் சரியான வழிமுறைகள் இல்லை. மேலை நாடுகளில் தொழிலின் வருமானத்தையும், சமூக நலனுக்கு அது எவ்வாறு பயன்படுகிறது, தொழிலாளர்களின் பாதுகாப்போடு, முதலீட்டாளர்களின் பாதுகாப்பும் எப்படித் தேவை என்பதை உணர்ந்து செயல்படுவதால் அரசாங்கப் பாதுகாப்பு அனைவருக்கும் உண்டு. இங்கே எப்படி என்பதை தற்சமயம் மேற்கு வங்காளம், சிங்கூர் “டாடா” நேனோ கார் தொழிற்சாலை விவகாரத்தைப் படித்தாலே தெரிந்து கொள்ளலாம்.

எது சரி, எது தவறு என்பதற்கான விவாதங்களே தேவையில்லை. இந்த மாதிரி சூழ்நிலை வரும்போது திரைகடலோடித் திரவியம் தேட நினைப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? எப்படித் தன் தொழிலை, தன் குடும்பத்தை, தனது நிறுவனப் பணியாளர்களைக் காப்பாற்றுவது என்பதே. எனது சிறு அறிவுக்கு எட்டியவரை என் அபிப்பிராயங்கள் கீழ்க்கண்டவை.

நீங்கள் இறக்குமதி செய்து இந்தியாவில் வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், அந்நியச் செலவாணி உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தால், உங்கள் பொருட்களின் விலையை ஏற்றிவிடுங்கள். ஒன்று நிச்சயம் லாபம் வேண்டும், அல்லது லாபமில்லாவிட்டாலும் நஷ்டம் கூடாது, அல்லது சில நாட்களுக்கு நஷ்டம் ஆனாலும் பின்னர் சரி செய்யலாம் – என்ற முடிவைத் தாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதே சமயம் தங்களுடைய பிரச்சினைகளை தங்களோடு தொழில் தொடர்பு கொண்ட வெளிநாட்டவரிடம் வெளிப்படையாகத் தெரிவித்துவிடவேண்டும். உங்களது வியாபாரத்தைப் பொறுத்து, அதன் மூலம் அவருக்குக் கிடைக்கின்ற ஆதாயத்தைப் பொறுத்து, அவர் உங்களுக்கு என்ன நஷ்டம் வந்தாலும், அந்த ஒப்பந்தத்தைக் காப்பாற்றுங்கள். ஏனெனில் தொழில் தர்மம் மிகமுக்கியம். இன்றைய இந்த மின்வெட்டு, விலைவாசி உயர்வு, பண வீக்கம், வேலை நிறுத்த இடையூறுகள் எல்லாம் மாறி, மீண்டும் ஒரு நல்ல சூழ்நிலை உருவாகலாம். உருவாகும்.

அப்போது இந்த வாக்குறுதியும், ஒப்பந்தமும் அதை நிறைவேற்ற நீங்கள் அடைந்த நஷ்டத்தையும் கூறியே, புதிய ஒப்பந்தத்தில் நல்ல லாபம் பெற வழிவகைகளைச் செய்து கொள்ளலாம்.

மேற்சொன்ன வழி, எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட சூழல் உங்களுக்கு இருக்குமானால், அதனால் அபரிதமான இழப்பு வந்துவிடும் என்று தோன்றினால், திரைகடல் ஓட வேண்டாம். உள்நாட்டில் கவனம் செலுத்துங்கள். உங்களது பொருளாதார பலம் உங்களுக்குத்தானே தெரியும். அதை வைத்து முடிவு செய்யுங்கள்.

தொடர்ந்து தொழில் செய்தால்தான் வெற்றி என்று கூற, இதொன்றும் விளையாட்டு மைதானமல்ல. இழப்பு வரும் என்று தெரிந்தால், தற்காலிகமாக விலகி இருத்தலே நலம் என்றால் விலகி இருங்கள்.

எனக்கு மிக நெருங்கிய நண்பர் ஒருவர். கோவையிலிருந்து சிறிய அளவில், ஏற்றுமதி செய்து கொண்டிருந்தார். சில இயந்திரங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களை வாங்கி, சில குறிப்பிட்ட வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்றுவந்தார். நான்கைந்து வருடங்கள் நன்றாக வியாபாரம் நடந்தது. ஏற்றுமதி மூலம் கணிசமான லாபம் கிடைத்தது. ஒரு சமயம், இந்தியாவில் ஏற்பட்ட சில பொருளாதார சூழ்நிலையால், இவர் ஒப்பந்தம் செய்த விலைக்கு ஏற்றுமதி செய்தபோதும், உள்நாட்டில் வாங்கிய பொருட்களுக்கு அதிகவிலை கொடுக்க வேண்டி வந்தது. மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்ததோடு, கிட்டத்தட்ட இருக்கின்ற வீட்டைக்கூட விற்றுவிட்டு, வாடகை வீடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இரண்டாண்டுகள் சிரமப் பட்டார். அதே சமயம், அந்தக் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்குக் கடிதம் எழுதி, தன்னால் இனிமேல் ஏற்றுமதி செய்ய இயலாது, வேறு யார் மூலமாகவாவது பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டார். தனக்கு ஏற்பட்ட இழப்பை ஏனோ தெரிவிக்கவில்லை, இரண்டாண்டுகள் கழித்து, அந்த வாடிக்கையாளர்கள் இவரைத் தொடர்பு கொண்டு மீண்டும் தொடருங்கள் என்று கேட்ட போதுதான் உண்மையை எடுத்துரைத்தார்.

இவரது அந்த நல்லெண்ணமும், இரண்டாண்டுகள் துயரைத் தன் மனதிலேயே இருத்திக்கொண்ட பொறுமையும், வியாபார நேர்மையும், வாடிக்கையாளரது நம்பிக்கையும் – மீண்டும் அவரது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, இன்று மிகச் சிறப்பாகத் தொழில் செய்துகொண்டு வளமாக வாழ்ந்து வருகிறார்.

எப்போதுமே பாதை சீராக இருப்பதில்லை. குண்டும் குழியுமாக இருந்தால் பத்திரமாகப் பார்த்து ஓட்ட வேண்டியது நமது திறமை. அல்லது சரியான பாதை அமையும்வரை காத்திருப்பது புத்திசாலித்தனம்.

சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்

ராஃபோர்ட் என்கிற நகரம், அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி மாநிலத்தில் உள்ளது. அங்கே வளர்ந்துவந்த இளைஞனின் தந்தை, கட்டிடங்கள் கட்டுவதற்கு செங்கல் சுமக்கும் கூலியாளாக வேலைபார்த்தார். விடுமுறைக் காலங்களில் அப்பாவுக்கு உதவியாய் இந்த இளைஞனும் போவான். கனவுகள் சுமக்கும் கல்லூரி மாணவனுக்கு செங்கல் சுமப்பதொன்றும் சந்தோஷமான வேலையல்ல.

ஓரிடத்தில் நின்றுகொண்டு, தன்னிடம் வீசப்படும் செங்கற்களைப் பிடித்து, அதே வேகத்தில் அடுத்தவரிடம் வீசுகிற வேலையில், வெய்யிலில் உலர்ந்தும் வியர்வையில் நனைந்தும் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.

ஆனால் அந்த இளைஞன் மன உறுதியுடன் செயல் பட்டான். செங்கற்கள் கைகளில் வந்து விழுகிற போதெல்லாம் கரங்களைப் போலவே அவன் மனதிலும் உரமேறிக் கொண்டிருந்தது. ஒவ்வொருமுறை செங்கல்லைப் பிடிக்கும்போதும் வாழ்வில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று உறுதிகொண்டான் அந்த இளைஞன். கைகளில் செங்கல்லைத் தாங்கிக் கொண்டே ஒரு கால்பந்து வீரனாய் வரவேண்டும் என்ற கனவுக்கு நெய்வார்த்துக் கொண்டிருந்தான் அவன். அந்தக்கனவு நனவானது. உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரனாய் வளர்ந்த ஜெர்ரி ரைஸ்தான் அந்த இளைஞன்.

கால்பந்தாட்டத்தில் ஈடுபாடு இல்லாதவர்கள் கூட “நட்சத்திரங்களுடன் ஒரு நடனம்” (Dancing with the Stars) தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அவரை அறிந்துகொண்டிருந்தார்கள்.

தன் வாழ்வில் தன்னைப்பிழிந்த வறுமையைத் தான் பிழிந்து சாரமெடுத்து, சாறு குடித்து, வெற்றி வேட்கையைத் தணித்துக் கொண்ட ஜெர்ரி ரைஸ், தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டபோது சொன்ன விஷயங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டுகிற வெற்றிச் சூத்திரங்கள்.

சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்:

தன்னைநோக்கி வீசப்பட்ட செங்கற்களைப் பிடிப்பது வேறு வழியில்லாத வேலை. ஆனால் வெட்டி வேலை என்று பலரும் விமர்சனம் செய்தார்கள். ஆனால் அந்த வலிமிகுந்த பொழுதுகளை, எதிர்காலத்தின் வரைபடத்தை இதயத்தில் வரைந்து கொள்ளப் பயன்படுத்தினார் ஜெர்ரி ரைஸ். அந்த வலியில் விழுந்த வியர்வைத் துளிகள் வைராக்கியத்தை வளர்த்தன. எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைக் கொடுத்தன. கொளுத்தும் வெய்யிலில் அசராது நிற்கும் பொறுமை, வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் பக்குவத்தைப் பரிசாய்த் தந்தது.

வெற்றியின் பாதையில் வலிகள் சகஜம்:

வலியும் வேதனையும் தங்கத்தை வாட்டும் நெருப்பின் வேலையைத்தான் செய்கின்றன என்பதை சரியாகப் புரிந்து கொண்டிருந்தார் ஜெர்ரி ரைஸ். உள்ளங்கைகளில் வந்து விழுந்த ஒவ்வொரு கல்லும், “நீ செங்கல் சுமக்கப் பிறந்தவனல்ல” என்று சொல்லிக் கொண்டேயிருந்தது. அந்த வலியே அவரது ஆதர்சக் கனவுகளுக்கு அடித்தளம் அமைத்தது. யாருக்கோ வீடுகட்டப் பயன்பட்ட செங்கல், ஜெர்ரி ரைஸ்-சின் கனவுகளுக்கும் அஸ்திவாரமாய் அமைந்தது. வருகிற போது வலி அவமானமாய்த்தான் இருக்கிறது. ஆனால் வெற்றி நோக்கிய பாதைகளில் அதுவே உந்துசக்தியாய் பயன்படுகிறது.

எதையும் வெறுக்காதீர்கள்! எல்லாமே அனுபவம்தான்!

ஜெர்ரி ரைஸ்-சிற்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே அவர்கள் விரும்பாத ஒன்றைத் தான் வாழ்க்கை முதலில் கொடுக்கிறது. மற்றவர்கள் வெறுத்தொதுக்கி, விலகி ஓடிய விஷயங்களில் துணிந்து முன் நின்றதன் மூலம் ஜெர்ரி ரைஸ், விலைமதிப்பில்லாத அனுபவத்தைப் பரிசாய்ப் பெற்றார். கடினமான வேலைகள்தான் உண்மையிலேயே நாம் யார் என்பதை நமக்குக் காட்டுகின்றன. அதன் மூலம் நம்முடைய தனித்திறன்கள் என்னவென்று நமக்கும் இந்த உலகுக்கும் முதன்முதலாகத் தெரிய வருகிறது.

முடிவெடுங்கள்! செயல்படுங்கள்!

ஒன்றில் இறங்க வேண்டுமா என்ற தயக்கம் எழுகிறபோது அந்தத் தயக்கத்தைத் தழுவி வாழ்ந்தால் அதைத் தவிர்த்துவிட வேண்டும் என்றுதான் உள்மனது சொல்லும். ஆனால் இறங்கிப் பார்ப்பது என்று முடிவெடுத்த உடனேயே புத்தம்புதிய உலகம் நமக்காகத் திறந்து கொள்கிறது. எந்தச் சூழலிலும் துணிவாக முடிவெடுப்பதும் தெளிவாக செயல்படுவதும் புத்தம் புதிய வெற்றிகளை நமக்குப் பரிசாகக் கொடுக்கும்.

கூடுதல் தகுதிகளை வளர்த்தெடுங்கள்:

கால்பந்தாட்ட வீரராக வருவது என்று ஜெர்ரிரைஸ் முடிவெடுத்ததுமே, ஒவ்வொரு நாளும் ஐந்து மைல் தூரம் மலைப்பகுதிகளில் ஓடுவதை வழக்கமாகக் கொண்டார். உடலுறுதியை எவ்வளவு தூரம் வளர்த்தெடுக்கிறோமோ அந்த அளவுக்கு சிறந்த விளையாட்டு வீரராக வரமுடியும் என்பதுதான் அவருடைய எண்ணம். கால்பந்தாட்டம் கற்றுக்கொள்வது முதல் தகுதி. இந்தக் கூடுதல் தகுதியை வளர்த்ததால் தனித்தன்மையுடன் விளங்கினார் ஜெர்ரி ரைஸ்.

மிகப்பெரிய சாதனையாளராக வளர வேண்டுமென்று விரும்பிவிட்டால் குறிக்கோள் நோக்கிக் கடுமையாக உழைக்க வேண்டும். கூடுதல் தகுதிகளை வளர்க்க வேண்டும். சவால்களையே சந்தர்ப்பமாக்கி ஜெயிக்க வேண்டும். இது ஜெர்ரி ரைசுக்கு மட்டுமல்ல…. நம் ஒவ்வொருவருக்குமே வாழ்க்கை தருகிற வெற்றிச் சூத்திரம்.

வட்டத்துக்குள் சுழல்கிறீர்களா? வளர்க்கிறீர்களா..?

நம்மை நாமே அடிக்கடி கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகளில் இதுவும் ஒன்று. ஒரே தொழிலில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே வரும்போது வாழ்க்கை பரபரப்பாகத்தான் இருக்கும். ஒரு தொழிலில் தொடர்ந்து செயல்படுவது என்பதற்கும், ஒரே விதமாக செயல்படுவது என்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. உதாரணமாக ஒரு ஜவுளிக்கடையை எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த ஜவுளிக்கடை ஒரு கிளையுடன் இயங்குகிறபோது அந்தக் கிளையிலேயே புதிய புதிய பிரிவுகள் கொண்டு வருவது, நவீன ரகங்களை அறிமுகப்படுத்துவது என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருக்கும்.

அதே நிறுவனம், புதிய புதிய கிளைகளைத் தொடங்கி இன்னும் பல பகுதிகளில் செயல்படுகிறபோது வளர்வதாக அர்த்தம்.

இது நிறுவனங்களுக்கு மட்டுமல்ல. தனிமனிதர்களுக்கும் பொருந்தும். ஒரு நிறுவனத்தை நடத்துபவர் தன்னுடைய சக்தி முழுவதையும் அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மட்டும் உரியதாக்கி நிறுவனத்தை வளர்ப்பது ஒரு வகை.

பொதுப்பணி, உபதொழில், கொஞ்சம் நிலம் வாங்கி தோட்டக்கலை வளர்ப்பில் ஈடுபடுவது, பங்குச்சந்தை என்று அவரவர் ஆர்வத்திற்கும் திறமைக்கும் ஏற்ப விரிவாக்கம் செய்து கொண்டே போனால் வளர்வதாக அர்த்தம்.

பொதுவாக, புதிதாய் எதையும் முயன்று பார்ப்பதில் தயக்கம் உள்ளவர்களும், தங்களுக்கு வசதியான வாழ்க்கையை சிரமங்களோடு வாழ்ந்தால்கூடப் போதுமென்று நினைப்பவர்களும் வட்டங்களுக்குள்ளேயே வாழ்வார்கள்.

வட்டத்தில் சுழல்வதற்கும் வளர்ச்சிக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு வாகனத்தின் சக்கரத்திற்கும் வாகனத்தில் செல்பவருக்கும் உள்ள வேறுபாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வழவழப்பான சாலையாக இருந்தாலும் சரி, குண்டுங்குழியுமான பாதையாக இருந்தாலும் சரி, வாகனத்தில் செல்பவரோ புதிய புதிய இடங்களைப் பார்க்கிறார். போகும் இடங்களில் எத்தனையோ வேலைகளைச் செய்கிறார்!

சக்கரம் சுழல்வதால்தான் அவர் செல்கிறார் என்பது வேறு விஷயம். ஆனால் வாகனத்தில் பயணம் செய்பவர் பெறும் பயன்களையெல்லாம் வண்டியின் சக்கரம் பெறுவதில்லை. ஒரு வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருப்பவர்கள் வளர்ச்சிகள் எதையும் காண்பதில்லை.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வட்டத்தில் சுழல்பவராக மட்டும் இல்லாமல் வளர்ச்சியும் காண்கிறீர்கள் என்பதை உறுதி செய்துகொள்ள, இதோ சில வழிகள்.

நீங்கள் அன்றாடம் செய்கிற வேலைகளில், முதலிடம் தருகிற வேலைகள் என்னென்ன என்பதைப் பாருங்கள். அவை கீழ்க்கண்ட அம்சங்களுக்குள் அடங்குகின்றனவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்:

1. நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு வருமானம் தருகிறதா?

2. செய்தே தீரவேண்டிய அளவுக்கு முக்கியமானதாய் அமைகிறதா?

3. நீங்கள் கொண்டிருக்கும் இலட்சியங்களுக்கும் வகுத்திருக்கும் இலக்குகளுக்கும் தொடர்புள்ளதாய் இருக்கிறதா?

4. மற்றவர்களுக்கு பிரித்துத்தர முடியாமல் நீங்கள்தான் செய்யவேண்டும் என்ற அளவுக்கு உங்கள் கவனத்துக்குரியதாய் இருக்கிறதா?

இந்தக்கேள்விகளுக்கு பதில் கண்ட பிறகே ஒவ்வொரு வேலையையும் தேர்வு செய்யவேண்டும். அதாவது, ஒரு வாரம் முழுவதும் நீங்கள் செய்து முடிக்கவேண்டிய வேலைகளைப் பட்டியல் போட்டு அவற்றை இந்தக் கேள்விகளுக்கு உட்படுத்த வேண்டும்.

இந்த நான்கு கேள்விகளில் ஒன்றில்கூட உள்ளடங்காத வேலைகள், உங்கள் வளர்ச்சிக்குத் துணை செய்யாதவை என்று தனியாகப் பிரித்துவிட வேண்டும்.

அவற்றை, நிறைய ஓய்வு நேரம் இருக்கையில் செய்வதா, அல்லது மற்றவர்களை செய்யச் சொல்வதா, தேவையில்லாத பட்சத்தில் செய்யாமலேயே விடுவதா என்றெல்லாம் யோசித்துத் தெளிவாக முடிவெடுங்கள்.

உங்கள் ஒவ்வொரு செயலிலும் உச்சகட்டமான பலன் பெறுங்கள்.

பின்னடைவுகளை பிளந்து முன்னேறு

வாழ்வில் சில சம்பவங்கள் நமக்கு சவால்விடும் விதமாய் அமையும். அத்தகைய சவால்கள் வரும்போதெல்லாம் தொடை தட்டி எழுபவர்கள் சோதனைகளைக் கடந்து சாதிக்கிறார்கள். தொடை நடுங்கி நிற்பவர்கள் தோற்கிறார்கள். இது ஒற்றை வரி உபதேசமல்ல. உண்மையின் சாரம். நிகரற்ற சாதனையாளர்கள் வாழ்வில் நிரூபிக்கப்பட்ட சத்தியம்.

காலம் வீசுகிற பந்தைக் கையில் பிடிக்கும் லாவகமே, எறியப்பட்டது பூப்பந்தா அணுகுண்டா என்பதைத் தீர்மானிக்கிறது. எதிர்வரும் சவால்கள் ஒவ்வொன்றிலும் சாதனைக்கான சாத்தியக் கூறுகள் ஒளிந்திருப்பதை உணர்ந்தவர்கள் உயர்கிறார்கள்.

சில நடைமுறை உதாரணங்களை நினைத்துப் பார்த்தால் நம் வாழ்விலும் சோதனைகள் வருவது நாம் சாதிப்பதற்காகவே என்கிற உண்மை புலப்படும்.

ஆப்பிள் கம்ப்யூட்டரை உருவாக்கிய ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் உரையாற்றியபோது தன் வாழ்வில் நடந்த சறுக்கல்களும் சவால் மிக்க பொழுதுகளும் எப்படி சாதனைக்கு வழிவகுத்தன என்பது பற்றி சிலிர்க்க வைக்கும் உண்மைகளை பகிரங்கமாய்க் பகிர்ந்து கொண்டார்.

“வாழ்க்கை, கசப்பான சம்பவங்களால் ஆங்காங்கே புள்ளிகளை வைத்து விட்டுப் போகிறது. அவற்றை கரும்புள்ளிகள் என்று நினைத்துக் கவலைப் படுகிறோம். ஆனால் அந்தப் புள்ளிகளை இணைக்கிற புத்திசாலித்தனம் இருந்தால், அந்தக் கசப்பான சம்பவங்களே கம்பீரமான வெற்றிக்குக் காரணிகள் ஆகின்றன” என்றார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இதனை உணர்த்தும் விதமாய் உதாரணங்களைத் தன்னுடைய வாழ்விலிருந்தே தந்தார் அவர்.

தான் தொடங்கிய ஆப்பிள் நிறுவனத்திலிருந்தே வெளியேற்றப்பட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். கசப்பான அந்தக் கரும்புள்ளி வைக்கப்பட்ட விநாடியே அடுத்த வெற்றியின் புள்ளியைத் தொட, புயல்போல் இயங்கினார் அவர். பிக்ஸல் அனிமேஷன் ஸ்டுடியோஸ் என்கிற புத்தம் புதிய நிறுவனத்தைத் தொடங்கி அனிமேஷன் உலகில் அசகாய சூரராய் மிக விரைவில் வளர்ந்தார். இந்த மகத்தான வெற்றி, தான் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்தை மீண்டும் அவருடைய ஆளுகைக்குள் கொண்டு வந்தது. தன் மறு வருகையை ஒரு சாதனையின் மூலம் கொண்டாடத் தீர்மானித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ். இருபத்தோராம் நூற்றாண்டை உலுக்கும் விதமாய் ஒரு கண்டுபிடிப்பைக் கொடுத்தார். அதுதான் உலகெங்கும் உள்ளவர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாகிக் கொண்டிருக்கும் ஐ-பாட். பின்னடைவுகள், சவால்விடும் தருணங்கள், சோதனைகள் இல்லாமல் இந்த சாதனைகள் சாத்தியமே இல்லை என்று அடித்துச் சொல்லும் ஸ்டீவ் ஜாப்ஸ், கரும்புள்ளிகளை இணைக்கும் வெற்றிக்கோலம் வரைவதற்கான உத்திகளையும் உணர்த்தினார்.

1. புள்ளிகளைப் புரிந்து கொள்ளுங்கள்:

வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சரியாகப் புரிந்து கொள்வதில்தான் சாமர்த்தியம் இருக்கிறது. தோல்விகளும் பின்னடைவுகளும், உண்மையில் தோல்விகளோ பின்னடைவுகளோ அல்ல. அவை ஒரு மனிதன் மேற்கொள்கிற மருத்துவப் பரிசோதனைக்கு நிகரானவை. மருத்துவப் பரிசோதனையின் முடிவுகள், மனிதனின் உடலில் இருக்கிற நோயைக் கண்டறிந்து சொல்கின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் அது கசப்பான செய்தி. அதே நேரம், எனக்குள் நோய் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவும் அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளவும் அருமையான வாய்ப்பு என்பதால் அதுவே ஒரு நல்லசெய்தி. ஒவ்வொரு சம்பவத்தையும் சரியாகப் புரிந்து கொண்டால் அடுத்த கட்டம் நோக்கி நகரலாம்.

2. அடுத்த புள்ளியைத் தொடப் புறப்படுங்கள்:

ஒரு சம்பவத்தை உணர்வு பூர்வமாய் உள்வாங்குபவர்கள் சற்றும் தயக்கமின்றி அடுத்த அடியை எடுத்துவைப்பார்கள். நெருப்பைத் தொட்டால் சுடும் என்பது அனுபவம் தருகிற பாடம். சுடுகிறது என்பதற்காகவே நெருப்பை வெறுப்பவர்கள், நெருப்பைத் தவிர்ப்பவர்கள் வாழ்வில் பல விஷயங்களை இழக்கிறார்கள்.

நெருப்பை சரியாகப் பயன்படுத்தியவர்கள் அதிலிருந்து வெப்பத்தை சமையலுக்கும், தொழில்நுட்பத்திற்கும் பயன்படுத்தி பலன் பெறுகிறார்கள். ஒரு விஷயத்தில் ஏற்படும் தோல்வி, அடுத்த முறை அதை சரியாக செய்வதற்குக் கற்றுத்தருகிறது. எனவே ஒவ்வொரு பின்னடைவும் உயர்வான முன்னேற்றம் நோக்கி நம்மை உந்தித்தள்ளுகிறது.

3. புள்ளிகளை வைத்துக் கொண்டே செல்லுங்கள்:

புதிய புதிய அனுபவங்களுக்கு, புதிய புதிய தொடர்புகளுக்கு எப்போதும் தாகத்தோடு இருங்கள். தயாராக இருங்கள். தொடர்ந்து செயல்படுவதன் மூலமாக மட்டுமே, வருகிற வாய்ப்புகளை, பெறுகிற தொடர்புகளை, கிடைக்கிற அனுபவங்களை வெற்றிக்கான வாகனங்களாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

தொடர்ந்து இயங்குவதன்மூலம், உங்கள் துறையில் வல்லுனராக நீங்கள் வளர்வது மட்டுமின்றி மற்றவர்களாலும் அறியப்படுவீர்கள். ஒரு துறையில் வளர வேண்டும் என்கிற ஆர்வம் மட்டுமே உங்களை வளர்த்துவிடாது. களத்தில் எவ்வளவு உற்சாகமாக இறங்குகிறீர்கள் என்பதுதான் உங்கள் ஊக்கத்தையும் செயல்திறனையும் உலகுக்குச் சொல்லும். பயன்படுத்தாத வாய்ப்புகளும்., வெளிப்படுத்தாத திறமைகளும் எந்தப் பயனையும் தந்துவிடாது.

4. தவிர்க்க வேண்டிய புள்ளிகளையும் தெரிந்துகொள்ளுங்கள்:

அனுபவங்களைத் தராமல் குருட்டாம்போக்கில் சில ஆதாயங்கள் வருவதுண்டு. அத்தனை வெற்றிகளும் அப்படி வரும் என்று நினைத்துவிடாதீர்கள். சில விஷயங்களைத் தவிர்ப்பதால்கூட, தற்காலிகத் தோல்விகளை ஏற்பதால்கூட நிரந்தரமான வெற்றிகளை நோக்கி நாம் பயணமாகலாம். பயணம் போகிறபோது, பக்குவமில்லாத குறுக்குப் பாதைகளில் போவதன் மூலம் போகிற வாகனம் பழுதாவதுபோல, தவறான அணுகுமுறைகள் உங்கள் வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்தக்கூடும். புள்ளிகளை இணைத்துக் கொண்டே போகிற போது தவிர்க்க வேண்டிய புள்ளிகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.

5. தொலைநோக்கின் தெளிவோடு புள்ளிகளை வையுங்கள்:

நீண்ட காலத் திட்டத்தோடு நீங்கள் செய்கிற சில வேலைகளின் முக்கியத்துவத்தைப் பக்கத்தில் இருப்பவர்களால்கூடப் புரிந்துகொள்ள முடியாது. கண்ணுக்குத் தெரியாத அந்த மாயப்புள்ளிகள் நாளைய வெற்றியின் ஆழமான அடித்தளங்களாய் அமையும். ஆப்பிள் கம்ப்யூட்டரிலிருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் மனதுக்குள் அனிமேஷன் ஸ்டுடியோ என்கிற அற்புதம் ஒளிந்திருப்பதை மற்றவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

இந்தத் தொலைநோக்கு நிறைந்த மாயப்புள்ளியை மனதுக்குள் குறித்துக்கொண்டு, வெறித்தனமாக வேகத்தில் அந்தப் புள்ளியை நோக்கிப் புறப்பட்டு வெற்றிகள் குவித்த இன்னொரு சாதனையாளரின் வாழ்க்கையை இங்கே நாம் நினைத்துப் பார்க்கலாம்.

2001 சம்மர் ஒலிம்பிக்ஸில் ஆறு தங்கப் பதக்கங்களையும், 2008 சம்மர் ஒலிம்பிக்ஸில் எட்டு தங்கப் பதக்கங்களையும

சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு வழிகள் என்னென்ன என்று தாமஸ் ஜெஃபர்ஸன் ஒரு பட்டியலே கொடுத்திருக்கிறார். அவை, இவை:

1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்.
2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.
4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.
5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.
6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.
7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.
8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.
9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.
10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.

உங்கள் கனவு நிறுவனம்

சிகரத்தின் படிக்கட்டுகள்

தற்போதைய காலம் எதையும் விரைந்து செய்யும் காலமாக இருப்பதை நாம் அனைவருமே உணருகின்றோம். அதற்குச் சாதகமாக எல்லாம் எளிதில் கிடைக்கின்ற சூழலும் இருப்பதால் அனைத்திலும் வேகத்தைப் பார்க்க முடிகின்றது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை சொந்தமாய் ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கு பல்வேறு இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டி வந்தது. அப்படியும் நினைத்த காலத்திற்குள் தொடங்குவதென்பது எங்கோ ஒரு சிலருக்குத்தான் சாத்தியமாய் இருந்தது. ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. தலைமுறையாய் ஒரு துறையில் ஈடுபட்டிருப்பவர்கள்தான் நிறுவனங்களை நடத்த முடியும். மேலும் கிளைகளை விரிவாக்கம் செய்யமுடியும் என்ற நிலைமாறி, இன்றைய காலத்தில் தகுதியும், தன்னம்பிக்கையும், தைரியமும், பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருவதைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது. மாநில அளவிலும் தேசிய அளவிலும் பன்னாட்டளவிலும் என நிறுவனங்கள் விரிவடைந்து செல்வதையும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தன்னால் செய்யக்கூடியதைக்கூட செய்வதற்கு துணிச்சல் வராமல் வானளாவி உயர்ந்து நிற்கும் நிறுவனங்களைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டபடி, “நான்கூட இப்படிப்பட்ட நிறுவனத்தை தொடங்கவேண்டும் என்று நினைத்தேன். ஏனோ முடியவில்லை” என்று புலம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை. “பல்லாயிரம் மைல்களுக்கான பயணம் முதல் அடியில்தான் தொடங்குகிறது” என்பதை நினைவில் வையுங்கள். முதல் அடியை எடுத்து வைக்கவே பயமும் தயக்கமும் இருந்தால் கனவு அப்படியே கனவாகவே இருக்கும். வாழ்நாளும் முடிந்துவிடும். எனவே எதுவாயிருப்பினும் தயக்கத்தை கைவிட்டு துணிச்சலோடு ஒரு முடிவை எடுக்கும்போதுதான் நம் நோக்கங்களை செயல்படுத்த வழிகள் பிறக்கும்.

உங்களின் கனவு நிறுவனத்தை தொடங்குவதற்கு காலதாமதப்படுத்தும் காரணங்கள் வெளியில் இல்லை. உங்களிடம்தான் இருக்கிறது என்பதை உணருங்கள் மந்தமான வாழ்க்கைச் சூழலிலிருந்து விடுபட்டு விரைவில் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு மாறுங்கள். நீங்கள் கனவு காணும் நிறுவனம் தொடங்கப்படாமல் இருப்பதற்கான காரணங்கள் இல்லாமல் போகட்டும். நிறுவனங்கள் ஏன் தொடங்கப் படுகின்றன? ஒரு நிறுவனத்தை தொடங்குவதற்கான படிநிலைகள் என்னென்ன? என்பதைப் பார்ப்போம்.

நிறுவனங்கள் ஏன் தொடங்கப்படுகின்றன?

நி வழக்கமாக ஓரிடத்தில் சென்று ஒரேமாதிரி பணியைக் குறைந்த வருவாய்க்கு செய்து கொண்டிருப்பதில் இருந்து ஒரு மாற்றம் தேவை.

நி வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வம்.

நி வருவாயைப் பெருக்குவதன் மூலம் வாழ்க்கை வசதிகளை அதிகரித்துக் கொள்ளலாம் எனும் உந்துதல்.

நி தொழில் ரீதியான அனுபவமும், நிதியைத் திரட்டி ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்தக் கூடிய ஆற்றலும், சாதகமான புறச் சூழல்களும் அமைந்திருக்கும்போது தாமே ஏன் ஒரு நிறுவனத்தை தொடங்கக் கூடாது? எனும் சிந்தனை.

நி சமூக பொருளாதார அடிப்படையில் தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளவும், சமூகத்தில் அந்தஸ்து பெறவும் தம்மை அடையாளப்படுத்தவும் தமக்கென்று உள்ள நிறுவனத்தால் மட்டுமே முடியும் என்ற எண்ணம்.

நி சமூக, பொருளாதார அடிப்படையில் தொடர்புகளை அதிகரித்துக் கொள்ளவும், சமூகத்தில் அந்தஸ்து பெறவும், தம்மை அடையாளப்படுத்தவும் தமக்கென்று உள்ள நிறுவனத்தால் மட்டுமே முடியும் என்ற எண்ணம்.

நி எல்லாவிதமான திறன்களையும் வைத்திருக்கும்போது, தான் ஓரிடத்தில் வேலை செய்வதைக் காட்டிலும் பல பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குபவராக தம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற அவா.

நி காலப்போக்கிற்கு ஏற்ப மக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிய நிறுவனங்களைத் தொடங்குதல்.

நி ஓரிடத்தில் படித்த நண்பர்கள், ஒரே இடத்தில் தொழில் பழகியவர்கள் ஒரு குழுவாய்ச் சேர்ந்து தாம் விரும்புகின்ற துறை சார்ந்த நிறுவனத்தை தொடங்குவது.

நி ஏற்கனவே நடத்தப்பட்டுவரும் நிறுவனத்தின் துணைப்பொருட்கள் தேவைகளுக்கு மற்றவர்களைச் சார்ந்திராமல் தாமே அவற்றை இன்னொரு நிறுவனத்தின் மூலம் தயாரித்தால் என்ன என்கின்ற முடிவு.

நி தொலைநோக்கு இலட்சியங்களை அடைவதற்கான முயற்சி.

போன்றவையும் மேலும் பல்வேறு அம்சங்களும் நிறுவனங்கள் தொடங்குவதற்கு காரணங்களாய் அமைகின்றன.

நிறுவனத்தை தொடங்குவதற்கான படிநிலைகள்:

1. புதிய நிறுவனத்தை தொடங்குவதன் முதல்கட்டச் செயல்பாடு ஒரு குழுவை அமைப்பதாகும். ‘ஊர்ழ்ம்ண்ய்ஞ் இர்ம்ம்ண்ற்ற்ங்ங்’ எனப்படும் இக்குழுவில் நான்கு முதல் பனிரெண்டு பேர் வரை இருக்கலாம். நிறுவனம் தொடங்கத் தேவையான அனைத்து அம்சங்களைப் பற்றியும் கலந்தாலோசித்து நடைமுறைப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டியது இக்குழுவின் பணியாகும். ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் /பங்குதாரர்கள் தவிர தேவைப்படும் பட்சத்தில் வெளியில் இருந்து வேறு யாரேனும் நிறுவனத்தில் உறுப்பினர்களாக / பங்குதாரர்களாக இணைவது குறித்து வெளிப்படையான ஒரு கூட்டத்தை நடத்தி அறிக்கையை தயாரிப்பதும் இக்குழுவின் வேலையாகும்.

2. நிறுவனத்திற்கான அமைப்புவிதித் தொகுதியையும் (இர்ய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய்ள்)துணை விதிகளையும் (ஆஹ்ப்ஹஜ்ள்) உருவாக்க அமைப்பு விதிக் குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இக்குழு தற்காலிகமானது. நிறுவனத்தின் கட்டமைப்பிற்கும் தொடர்ச்சியாய் ஓர் ஒழுங்குமுறையோடும், விதிமுறைகளின் படியும் இயங்குவதற்கும் அமைப்பு விதித்தொகுதியும் துணை விதிகளும் மிக மிக அவசியமாகும். இவைதான் நிறுவனத்தின் நோக்கங்களுக்கும், இலட்சியங்களுக்கும் செயல்வடிவம் கொடுப்பவை. முடிவுகளை எடுத்தல், அலுவலர்கள், பணியாளர்களை நியமித்தல், குறிக்கோள்களை அடைவதற்கான வழிவகைகளை உருவாக்கித் தருதல் உள்ளிட்டவை இவ்விதிகளில் அடங்கும்.

3. அமைப்புவிதிக் குழுவினால் உருவாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின் அமைப்பு விதிகளிலும், துணை விதிகளிலும் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி முடிவினை மேற்கொள்ளுதல் வேண்டும்.

4. நிறுவனத்தின் உறுப்பினர்கள் அமைப்புவிதிகளை ஏற்றுக்கொண்ட பின் அமைப்பு விதிக் குழுவினை கலைத்துவிட வேண்டும். அக்குழு உறுப்பினர்களுக்கு வேறு பணிகளை ஒப்படைக்கலாம்.

5. தற்காலிகமான ஒரு நிர்வாகக் குழுவினை நியமித்தல் அடுத்த பணியாகும். தகுதியும், ஆர்வமும் கொண்ட உறுப்பினர்களைக் கொண்டு நிர்வாகக் குழுவை அமைக்கலாம். நிறுவனங்களின் தன்மையைப் பொறுத்து மூன்றுமாதம், ஆறுமாதம், ஒருவருடம் என தற்காலிக நிர்வாகக் குழுவிற்கு கால வரையறையை நிர்ணயிக்கலாம். பின்னர் ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைப்புவிதிகளுக்கேற்ப நிர்வாகக் குழுவினை அமைக்கலாம்.

அமைப்பு விதிகளும் துணைவிதிகளும்:

அமைப்புவிதிகள், நிறுவனத்தின் நோக்கங்களை குறிப்பிடுவதாக இருக்கும் நிறுவனத்தின் கட்டமைப்பையும், நிறுவனம் செயல்படப்போகும் வழிமுறைகளையும் அமைப்பு விதிகள்தான் எடுத்துக் கூறும். துணை விதிகளை உருவாக்கும் அதிகாரத்தையும் அமைப்புவிதி கொண்டிருக்கும்.

ஒவ்வொரு உறுப்பினரும் மிகத் துல்லியமாக நிறுவனத்தின் நோக்கம், செயல்பாடுகளை அறிந்து வைத்திருத்தல் அவசியம். நிறுவனத்தின் அமைப்புவிதித் தொகுதியும், துணைவிதிகளையும் படியெடுத்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

அமைப்புவிதித் தொகுதி (இர்ய்ள்ற்ண்ற்ன்ற்ண்ர்ய்ள்)

: நிறுவனத்தின் பெயர்

: நிறுவனத்தின் இலட்சியங்கள்

: பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தின் முகவரி

: நிறுவனத்திற்கான அடையாள முத்திரை

: நிறுவனத்திற்குள் அதிகாரப் பகிர்வு

: முடிவெடுக்கும் அதிகாரம் உடைய நிரந்தர உறுப்பினர்கள்

: அலுவலர்களுக்கான பதவிப் பெயர்கள், கடமைகள், விதிமுறைகள்

: இயக்குநர்கள் குழு மற்றும் நிர்வாகக் குழுவிற்கான வாக்களிப்பு உரிமையுடன் கூடிய விதிகள்

: உரிமைகளை அளிக்கும் அதிகாரி

: நிறுவனத்திற்கான விதிமுறைகளில் தேவைப்படும் திருத்தம் கொண்டு வரும் வழிமுறைகள்

மேற்கண்டவை மட்டுமல்லாது அவரவர் நிறுவனம் சார்ந்து தேவைப்படுவனவும் இவற்றில் அடங்கும்.

துணைவிதிகள் (ஆஹ்ப்ஹஜ்ள்)

: உறுப்பினர்கள் / பங்குதாரர்களை நிறுவனத்தில் சேர்க்கும் முறை

: கௌரவ உறுப்பினர்கள், குடும்பம் சார்ந்த உறுப்பினர்கள், நிறைஉரிமையில்லா உறுப்பினர்களுக்கான கட்டளை விதிகள்

: நிறுவனத்தில் உறுப்பினர்களாய் இருப்பதற்கான கால வரையறை விதிகள்

: அலுவலர்கள், குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுத்தல், நீக்குதலுக்கான வழிமுறைகள்

: உறுப்பினர்கள் / பங்குதாரர்கள் முதலீடு செய்வதற்கான வழிமுறைகள்

: மாதக்கூட்டம், ஆண்டுக் கூட்டம், சிறப்புக்கூட்டம், அவசரக் கூட்டம் நடத்துவதற்கான வழிமுறைகள்

: நிறுவனத்தின் பொதுக்கூட்டம், இயக்குநர்கள் குழு கூட்டம், ஒவ்வொரு பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள குழுக்களின் கூட்டம் ஆகியவற்றை நடத்துவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை.

: ஒழுங்குவிதிகளுக்கான அதிகாரம்

: முக்கிய முடிவுகள் எடுக்கும்போது வாக்கெடுப்பிற்கு விடுதல்சார்பு

: பணியாளர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிறுவனத்தில் அவர்களின் நிலை (நற்ஹற்ன்ள்)

: துணைவிதிகளை திருத்தியமைக்கும் வழி முறைகள்

: சார்புடைய நிறுவனங்களுடன் மேற் கொள்ள வேண்டிய தொடர்புமுறைகள்

: நிறுவனம் சார்ந்த வழக்குகளுக்கான நீதிமன்ற எல்லை. இவற்றோடு தேவைப்படும் மற்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரு நிறுவனத்தை தொடங்கி நடத்துவதற்கான அடிப்படையான செயல்களை இதுவரை பார்த்தோம். இனி அந்நிறுவனம் வெற்றிகரமாய் இயங்கவும், சிகரத்தின் படிகளில் நம்மை இட்டுச் செல்லவும் அச்சாணியாய் இருக்கும் நிர்வாகம் குறித்து அடுத்த இதழில் பேசுவோம்.

தள்ளிப்போடாமல் இருப்பது எப்படி?

இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டு பதில் பெறலாம் என்று பரபரப்பாக இருக்கிறதா? பொறுங்கள் – கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்!! என்ன – முதலுக்கே மோசமாக இருக்கிறதா? யாரையாவது கேட்பதற்கு முன்னால் உங்களையே சில கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்.

1. வேறு முக்கியமான வேலை வந்தததால் எடுத்த வேலையைத் தள்ளிப் போடுகிறீர்களா? இல்லை, சோம்பல் காரணமாகத் தள்ளிப் போடுகிறீர்களா?

2. நேரத்தை வீணடிப்பதென்பது நம்மையும் அறியாமல் நிகழக்கூடிய விஷயம்தான். ஒரு நாளில் எந்த நேரத்தை எப்படி வீணடித்தீர்கள் என்பதை தினமும் டயரியில் குறித்து வையுங்கள்.

3. தள்ளிப் போடுவதை ஒரு வழக்கமாகத் தொடங்கி, வாழ்க்கை முறையாகவே ஆக்கிக் கொண்டவர்கள் எத்தனை பேர்களை உங்களுக்குத் தெரியும்? அவர்கள் என்ன ஆனார்கள்?

இதையெல்லாம் செய்தாலே தள்ளிப் போடுவதில் இருக்கும் எதிர்மறையான விளைவுகள் பற்றி நமக்குப் புரிந்துவிடும்.

ஒரு மளிகைக் கடைக்குப் போகும்போதே நம்மிடம் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் இருக்கிறதே, ஒவ்வொரு விடியலின் போதும் அந்த நாளில் செய்து முடிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியல் வேண்டாமா என்ன? தள்ளிப் போடும் பழக்கம் நம்மை விட்டுத் தள்ளிப் போக அடிப்படையில் இன்னொரு வேலையையும் செய்தாக வேண்டும். அதுதான் விடியல் பொழுதைப் பயன்படுத்துவது. விடிந்து சிறிது நேரம் சென்றபிறகு விழிப்பவர்களுக்கு நாள் நகர்கிற வேகத்திற்கு ஈடு கொடுத்து, அதைத் துரத்திப் பிடிப்பதே பெரியபாடாகி விடுகிறது.

விடியல் நம்மை நன்றாக வேலை வாங்கக் கூடிய நேரம். தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டுமென்றால், அந்த வேலைக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை சேகரித்துக் கொண்டு, அதன் பின்னர் வேலையைத் தொடங்குவதே உத்தமம்.

இந்தக் கட்டுரையை எழுதுவதற்குக்கூட பேனா, பேப்பர், கிளிப், எழுதுவதற்கான அட்டை என்று ஒவ்வொன்றையும் தவணை முறையில் எடுத்துக் கொண்டு வந்தால், இதை எழுதி முடிக்கிற வேலை கண்டிப்பாகத் தள்ளித்தான் போகும்.

இதையெல்லாம்விட முக்கியம், ஏன் தள்ளிப் போடுகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வது. ஒரு நாள் முழுவதும் இயந்திரம்போல் யாரும் வேலை பார்த்துக் கொண்டே இருப்பதும் சாத்தியமில்லை. உல்லாசத்திற்குக் கொஞ்ச நேரம், பொழுதுபோக்குக் கொஞ்ச நேரம், நண்பர்களுடன் பேச சிறிது நேரம் என்று எத்தனையோ விஷயங்களுக்கு சில நிமிஷங்களை அவ்வப்போது ஒதுக்க வேண்டிவருகிறது.

ஏகத்துக்கு வேலை இருப்பதாக நினைப்பவர்கள் இந்த சின்னச் சின்ன சந்தோஷங்களை முற்றாக நீக்கிவிட்டு, வேலையிலேயே முழு கவனம் செலுத்துவதாய்த் தொடங்குவார்கள். இடையில் அலுப்புத்தட்டத் தொடங்கிவிட்டால் போச்சு. இந்த வேலை – சொந்த வேலை – எந்த வேலையையும் செய்யாமல், வேலைக்கான ஆயத்தப் பணியை வேண்டுமென்றே நீட்டிக்க மனது தூண்டத் தொடங்கும். உற்சாகமும் தூங்கத் தொடங்கும்.

நம்முடைய நேரங்களை சமவிகிதத்தில் சரியாகப் பங்கிட்டு வேலைகளில் ஈடுபடப் பழகிவிட்டால் நேரம் வீணாவதை நிச்சயமாகத் தடுக்கலாம்.

என்ன செய்ய விரும்புகிறோம் – என்ன செய்து கொண்டிருக்கிறோம். இந்த இரண்டுக்கும் நடுவிலான இடைவெளியை அதிகமாக்குவதே தள்ளிப் போடுகிற மனோபாவம்தான்.

இன்னொன்றும் முக்கியம். ஒரு நாளில் எத்தனையோ வேலைகள் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் மிக முக்கியமான வேலை என்று மூன்றை மட்டும் பட்டியலிடுங்கள். அவற்றை முதலில் முடித்துவிடுங்கள். அதன்பின், மற்றவற்றைச் செய்ய உங்களுக்கு உற்சாகம் தானே பிறக்கும்.

நாள் முழுவதும் காரியங்களைத் தள்ளிப் போடாமல் சாதகமாகச் செய்ய வேண்டுமென்றால், அதற்கு விடியற்காலை விசேஷமானது என்று பார்த்தோம். விடியற்காலையைப் பயன்படுத்திக்கொள்ள மிகவும் உகந்த வழி, இரவு விரைவிலேயே உறங்கப் போவதுதான். தூங்குவதற்கு இரண்டு மணி நேரங்கள் முன்பே தொலைக்காட்சி – கணினி ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

தள்ளிப் போடத் தூண்டும் சோம்பல், உங்களைவிட்டுத் தள்ளிப் போகும். தள்ளிப் போடாதீர்கள். துள்ளியெழுங்கள்.

சுய வளர்ச்சியும் விஞ்ஞான வழிமுறைகளும்

வருடங்களாக சுய முன்னேற்ற முயற்சிகள் செய்து வந்துள்ள எனக்கு, ஏன் விஞ்ஞான முறையில் சுயவளர்ச்சியை, மாற்றங்களை, தாக்கங்களை ஆராயக் கூடாது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. எனவே புதிய முயற்சியை மேற்கொண்டு, அவற்றில் நான் கண்டு கொண்ட சில அனுபவங்களை, நேரிடையான சத்தியத்தை பகிர்ந்துகொள்ள முன் வந்துள்ளேன்.

முதற் சாதனம்:

பங்கேற்பு சூழ்நிலைகளின் ஆய்வு (Participatory situation Analaisis)

நான் முதன் முதலில் ஆராய்ந்தது என் அக புறவாழ்வின் சூழ்நிலைகளைப்பற்றி. என் சூழ்நிலைகளை ஆய்வு செய்ய, மேற்கூறிய சாதனத்தின் உதவியை நாடினேன். என் எண்ணத்தில், உணர்ச்சிகளில் செயல்பாட்டில் வழிமுறைகளிலுள்ள சூழ்நிலைகளை ஆராய்ந்தேன். இதைச் செய்ய நிதானமாக, அமைதியான காலை பொழுதினில் 5 நிமிடத்தில் தொடங்கி, தற்பொழுது 1 மணி அளவில் தினந்தோறும் தியானத்தின் மூலமாக ஆய்வு செய்துகொண்டே வளர்கின்றேன். இவ்வாறாக என் உள் யாத்திரையில் நான் கண்டுகொண்ட முடிவுகள் பல. அவற்றில் நான் 15 அக புற சூழ்நிலைகளை தேர்வு செய்தேன். அவைகள் பின் குறிப்பிடப்பட்டுள்ளன.

இரண்டாம் வழிமுறை:

நிறை, குறை, சந்தர்ப்ப அபாய வழிமுறை (Strenth, Weakness, Opportunity, & Threat Analysis SWOT Analysis)

மேற்கூறிய வழிமுறையை உபயோகித்து நான் சேகரித்த 15 சூழ்நிலைகளை ஆய்வு செய்தேன். 9 நிறைகளாகவும், 6 குறைகளாகவும் உள்ளதை உணர்ந்தேன். என்னுள் கண்டுகொண்ட 6 குறைகளை ஏன் சந்தர்ப்பங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அவ்வாறே தூண்டிய எண்ண வழியிலேயே யாத்திரை செய்தேன். என் 9 நிறைகளையும் நான் ஒவ்வொன்றாக உபயோகித்தேன். இந்நிறைகள் எனக்கு தேவையான நம்பிக்கையை வளர்த்தன. இவ்வழியில் சென்றபொழுது பல சமயம், வீழ்ச்சிகளையும், சிலசமயம் வெற்றிகளையும் கண்டு, கைவிடாது முன் சென்றேன். 6 சூழ்நிலைகளில் மாற்றங்கள் தர, ஒவ்வொன்றாக கையாண்டேன். முதன் முதலில் எனக்கு மிகவும் சுலபமாக இருந்ததையும், பின் படிப்படியாக கஷ்டமாக இருந்ததைக் கையாண்டு, மாற்றங்களைத் தந்தேன். இம்மாற்றங்களினால் என் எண்ணத்திலும், உணர்ச்சிகளிம், செயல்முறைகளிலும் மாற்றங்கள், தாக்கங்கள் ஏற்பட்டன.

நான் தினந்தோறும் ஒவ்வொரு நிமிடமும் புதியவன் ஆக வேண்டுமென ஆவல் கொண்டேன். என்னிலுள்ள நற்பண்புகளை காத்திடவும் வளர்த்திடவும், கண்கானித்தல் வேண்டுமென அரிய நோக்கத்தைப் பெற்றேன்.

மூன்றாம் வழிமுறை:

ஒரு வடத்திற்குள் எங்கு எப்படி, எந்த நிலைகளில் மாற்றங்கள் தர (வெளிப்படையான) திறந்த வெளிப்படையான கேள்விகளை (Open ended questions) என்னையே நான் கேட்க ஆரம்பித்தேன். என்னுள் இருக்கும் 6 எதிரிடைய சந்தர்ப்பங்களை, வகை செய்தேன். இந்த ஆறு நிலைகளிலும் ஒரு உறவைக் கண்டேன். எல்லாம் என் உணர்ச்சிகளுக்கு சம்பந்தப்பட்டவை என்று.

நான்காம் வழிமுறை:

காரண காரணிகளின் சம்பந்த முறையில் ஆய்வு செய்வது
(Cause Effect relationships Tools)

என்னுடைய இந்நிலைக்கு காரணங்கள் யாவை? என ஆராய இச்சாதனத்தை தேர்ந்தெடுத்தேன். இதைச் செய்யும்பொழுது எத்தனையோ உட்புறதடைகள் வந்தன. பலமுறை மனம் தளர்ந்தேன். பன்முறை பலர் என்னை பரிகசித்தனர். வீட்டில் இருப்பவர்கள் உட்பட. இருப்பினும் தொடர்ந்து முயற்சிகள் செய்தேன். நேரிடை காரணங்கள், எதிரிடை காரணங்களையும் ஆராய்ந்தேன். தடை செய்யும் காரணங்கள், துணை செல்லும் காரண காரணிகளை ஆராய்ந்தேன்.

இம்முறையினால், நான் குழந்தைப் பருவத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது. அங்கு கீழ் மனதில் கண்டவைகள், அனுபவித்த உணர்ச்சிகள், நிகழ்ச்சிகளை ஆழமாக உணர்ந்தேன்.

என் தந்தையின் வழிமுறைகளில் சில, முக்கியமாக தண்டிப்பது எனக்கு சிறியவனாக இருக்கும் பொழுதிலிருந்தே பிடிக்கவில்லை. எனவே, என் தந்தையையே முழுமையாக மனதினில் வெறுத்து வந்தேன். அதை கீழ்மனதில் புதைத்தேன். பின், அந்நிலையில் எல்லோரையும் முக்கியமாக ஆண்களை, என் தந்தையின் மறு உருவமாக நினைத்து, எல்லோரையும் உணர்ச்சிவசமாக வதைத்து வந்ததை ஆய்வு செய்தேன். இதனால் என் தந்தை வேறு, அவர் வழிமுறைகள் வேறு. அவர் தண்டிக்கும் முறைகள் அவருடைய தாய் இல்லை என்பதை, நான் பாகுபாடு செய்தேன். எல்லோரும் என் தந்தை இல்லை என்பதையும் என்னில் இருந்த எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் செயல்களையும் தூய்மை செய்து மறுபிறவி எடுத்தேன்.

என் சுய முன்னேற்றங்களை, விஞ்ஞான ரீதியாக கண்காணித்து வருகின்றேன். மற்றும் என்னுடைய சேவை நிறுவனத்தின் மூலமாக மேற்கூறிய பல சாதனங்களை மக்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து, குழுக்கள் மூலமாக வறுமைக் கோட்டிலிருந்து வெளிவர பல ஆய்வுகள் செய்துகொண்டு வருகின்றேன். இம்முறையினால் காணும் முன்னேற்றம் கண்டு, நானே மிகவும் வியந்துள்ளேன்.

நீங்களும் ஒரு கை பார்க்கலாமே?

தயாரா!

பின்குறிப்பு:

- படித்த பிறகு உமது தாக்கம் என்ன?

- அனுப்புங்கள் உங்கள் அனுபவங்களை “நமது நம்பிக்கை” ஆசிரியருக்கு

- பலரும் பயனும் பலனும் பெறட்டும்

- அனுபவங்களை அனுப்புபவர்களுக்கு நன்றிகள் பல

“9 நிறைகளின் சூழ்நிலைகள்”

1. நிறைய கனவுகள் காண்பது
2. எப்பொழுதும் புதியவைகளை செய்யத் துடிப்பது
3. புத்தியை கூர்மையாக வைக்க, புத்தகங்களைப் படிப்பது, விவாதிப்பது
4. கடின உழைப்பு
5. தனித்தன்மையில் வாழ்வது
6. மனதில் பட்டதை உடனே தெரியப்படுத்துவது
7. என்னை நான் நேசிப்பவன். அவ்வாறே பிறரையும் நேசிப்பவன்.
8. ஏழைகளுக்கு உதவி செய்யும் “வெறி” கொண்டவன்.
9. எல்லோருக்கும் மரியாதை கொடுப்பவன்.

“6 குறைகளின் சூழ்நிலைகள்”

1. அதிகமாக கோபப்படுதல்
2. நிறைய சாப்பிடுதல்
3. உணர்ச்சிகளை உடனுக்குடன் வெளிப்படுத்துதல்
4. பயமோடு கலந்த உணர்ச்சிகள்
5. எல்லோரையும் சந்தேகிப்பது
6. சாவைப் பற்றி எண்ணி பயப்படுவது.

Friday, April 26, 2013

சிந்தனைசெய் மனமே!

எது கடினம்

“அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எதையும் நம்பாதே. எவன் சொன்ன சொல்லானாலும் அதை உனது சுயமதியால் ஏன் எதற்கு என்று சிந்தித்துப் பார்”
– சாக்ரடீஸ்

மனிதனுக்கு எது கடினமான வேலை. எவரெஸ்ட் போன்ற உயர்ந்த பனி மலைகளில் ஏறுவதா? வறண்ட பாலைவனத்தில் தாங்க முடியாத தலைச்சுமையோடு வெட்ட வெளியில் நடப்பதா?


பெரிய கோடரியால் மரத்தை வெட்டிச் சாய்ப்பதா? கொடிய போர்க்களத்தில் உயிரை பணயமாக வைத்து முன்னேறிச் செல்வதா? இவைகள் யாவும் கடினமான வேலையா?

இல்லை, இல்லை, இல்லவே இல்லை! நம்மில் அநேகருக்கு இவைகள் யாவையும் விட மிகக் கடினமாக வேலை ஒன்று உண்டு. அதுதான் சிந்திப்பது!

மனிதன் செய்யக்கூடிய வேலைகளில் மிக உயர்வானது எது? எத்தகைய கின்னஸ் சாதனைகள் இருக்கின்றதோ, அத்தனையும் விட உயர்வானது எது? சிந்திப்பது! ஆம். அதுவேதான்.

மனிதனின் பலம் எது?

குதிரையைப் போல ஓட முடியுமா? பறவையைப் போல பறக்க முடியுமா? யானையைப் போல மரங்களை சாய்க்க முடியுமா? சிங்கத்தைப் போன்ற பெரிய பற்கள் நம்மிடம் உள்ளதா? உறுதியான கொம்புகள் உள்ளதா? நீண்ட துதிக்கை உள்ளதா? இல்லையே!!

நம்மால் ஒரு நாயைக்கூட அல்லது பாம்பைக் கூட வெறும் காலினாலோ கையினாலோ அடித்துவிட முடியுமா? அதற்குக்கூட ஒரு தடியின் துணை வேண்டுமே! மனித உடல் எத்தனை மென்மையானது. நடந்து செல்ல வேண்டுமானாலும் கூட ஒரு காலணியின் துணை தேவைப்படுகிறது அவனுக்கு. இத்தனை பலவீனமான உடலைக் கொண்டு மனிதன் எப்படி வாழ்கிறான்? எப்படி உலகில் உள்ள அத்தனை உயிரினங்களை விடவும் உயர்ந்து நிற்கிறான். இந்த மனிதனின் பலம் எது? அதுதான் மனிதனின் சிந்தனையின் பலம்!

அதுதான் ஆறாவது அறிவு:

காலம் காலமாக எத்தனையோ சிந்தனையாளர்கள் தங்களின் சிந்தனையால் புதிய புதிய வழிகளையும், புதிய புதிய கருவிகளை கண்டுபிடித்து உலகத்தை முன்னேற்றி இருக்கிறார்கள்.

ஆனால் நம்மில் அநேகர் நமக்கு கொடுக்கப்பட்ட இந்த ஆறாவது அறிவான மனிதனின் மிகச் சிறந்த, பலமான இந்த அறிவை பயன்படுத்துகிறோமா? இந்த அறிவு தேவை இல்லை என்று மூட்டை கட்டி அட்டாலியில் போட்டு விட்டவர்கள் அநேகர். அநேகர் தாங்கள் போகும் இடத்திற்கு இந்த மூளையை எடுத்துச் செல்வதே இல்லை.

எல்லா மனிதர்களுக்கும் தலை இருக்கிறது. ஆனால் தலை தலையாக இல்லை. என்ன ஆச்சு? தலை வாலாக மாறிவிட்டது!

எது ஆடுகிறதோ அது வால்
எது சிந்திக்கிறதோ அது தலை

நம்மில் அநேகர் பிறர் சொல்லை ஆமோதிக்க தலையாட்டுவதற்கு மட்டுமே தலையை பயன்படுத்துகிறார்கள். சிந்திப்பதற்கு அல்ல. அப்போது அது வால்தானே?!
மறுப்பது ஏன்?

ஏன் நாம் சிந்திக்க மறுக்கிறோம்.
ஏன் சிந்திக்க தயங்குகிறோம்.

அப்படி ஒரு பழக்கம் இல்லீங்க! அது நமக்கு தேவை இல்லீங்க! ரிஸ்க் எடுக்க விரும்பலீங்க! நடக்குதா, இது போதும்டா சாமி. எதுக்கு இந்த வேண்டாத வேலை. மூளைக்கு வேலை கொடுத்தால் நிம்மதி கெட்டுப் போகுங்கோ. போகிற போக்கை மாற்ற, புதிய வழி காண அநேகருக்கு ஒரு தயக்கம். ஆறுகள் கூட தான் போகும் வழியை மாற்றலாம். ஆனால் இந்த சாதா மனிதர்கள் யாரும் தன் போக்கை மாற்ற விரும்புவதில்லை.

மாறுபட்டு சிந்திக்க, வேறுபட்டு செயல்பட, ஒரு துணிவு வேண்டியதிருக்கிறது. ஒரு வித அச்ச உணர்வு, நம்மை மாறுபட்டு சிந்திக்க, நமது கூட்டத்தை தாண்டி வர அனுமதிப்பதில்லை. ஆனால் சிந்திக்காத மனிதர்கள் செம்மறியாட்டு கூட்டங்கள்.

ஒரு புகை வண்டியில் நிறைய பெட்டிகள் இருக்கலாம். ஆனால் அத்தனை பெட்டிகளையும் இழுத்துச் செல்லும் இஞ்சின் ஒரே ஒரு பெட்டியில்தான் இருக்கிறது.

அது போலவே இந்த உலகை இழுத்துச் செல்பவர்கள், இந்த உலகை மாற்றியமைப்பவர்கள், இந்த உலகை உருவாக்குபவர்கள் சிந்திக்கும் சில மனிதர்களே! அவர்கள் ஆயிரத்தில் ஒன்று இருப்பது படு அபூர்வம்தான்.

இப்படி சிந்திப்பவர்கள் அறிவியல் அறிஞர்களாகவும் ஆன்மிக அறிஞர்களாகவும், அரசியலில் பெரிய தலைவர்களாகவும், சிறப்புற்று விளங்குகிறார்கள். இந்த உலகம் என்ற மாளிகையை கட்டும் உன்னத சிற்பிகள் இவர்களே!

கோபர்னிக்கோ, கலிலியோ, நியூட்டன், ஐன்ஸ்டீன், டார்வின், எடிசன் இவர்கள் அறிவியல் புரட்சி செய்தவர்கள்.

வால்டேல், ரூஸோ, காரல் மார்க்ஸ் இவர்கள் அரசியல் புரட்சிக்கு வித்திட்டவர்கள்.
புத்தர், ஏசு, நபி, காந்தி போன்ற ஆன்மீக சிந்தனையாளர்கள் உலகை புரட்டிப் போட்ட உத்தமர்கள்.

எது சிந்தனை?

நம்மில் அநேகருக்கு எது சிந்தனை என்று தெரிவதில்லை. மனதில் இடையறாது ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களே சிந்தனை என தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிலருக்கு ஒரு பிரச்சனை வந்துவிட்டால் அதை மனதில் இடையறாது நினைத்து நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதை சிந்தனை என தவறாக நினைக்கிறார்கள்.

இது போலவே இன்னும் சிலர் இனி நடக்கப்போகிற ஒரு நல்ல நிகழ்ச்சி, மனதுக்கு பிடித்த நிகழ்வு இவைகளை நினைத்து ஆனந்தக் கற்பனையில் இருப்பார்கள். இதுவும் சிந்தனை இல்லை!

கணிதத்திற்கு விடைகாண முயலும்போது, புதிர் கணக்குகளுக்கு விடை தேடும்போது, நாம் உண்மையிலேயே சிந்திக்கிறோம். ஆகவேதான் சிந்திக்க விரும்பாத அநேகருக்கு கணக்கு என்றால் பிணக்கு ஆகத் தெரிகிறது.

பிரச்சனைகளை அலசி ஆராய்தல் ((Analysing), கணக்கிடல் ((Calculation), திட்டமிடல் (Plan), புதிய வழி காணல் இவைகளே சிந்தனை எனப்படும்.

ஒவ்வொரு பிரச்சனையும், ஒவ்வொரு சிக்கலும், நமது சிந்தனைக்கு வேலை கொடுக்க வந்த அருமையான தருணங்கள். உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு சிந்திக்க பழக வேண்டும்.

இது போன்று நாம் சிந்திக்க முனையும்போது மனம் அங்கும் இங்குமாக அலைபாயும், தடம் மாறிப் போகும். ஆகவே தெளிவாக சிந்திக்க விரும்பினால் ஒரு பேப்பர், ஒரு பேனா, கொஞ்சம் மூளை இவைகளை எடுத்துக்கொண்டு, ஒரு இடத்தில் அமர்ந்து செயல்பட்டால் எப்படிப்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வு கண்டுவிடலாம் என்கிறார் பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அமெரிக்க அறிவியல், அரசியல் அறிஞர்.

யார் அறிவாளி?

நிறைய நூல்களை படித்தவர்கள் அறிவாளிகளா? இது சரியா?

நிறைய உணவுகளை உண்பவர்கள் யாவரும் பலசாலிகளா? எவர் நல்ல உணவுகளையும் உண்டு, கடினமான உடல் உழைப்பு செய்கிறார்களோ அல்லது கடின உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களோ அவர்களே பலசாலிகளாக இருக்க முடியும். வெறுமனே உணவை மட்டும் உண்பதால் உடல் பலம் வந்துவிடாது. அது போலவே நிறைய வாசித்தால் அறிவாளிகள் ஆகிவிட முடியாது. யோசிக்க வேண்டும். நிறைய படித்தவர்களிடம் நிறைய தகவல்கள் இருக்கலாம். ஆனால் அறிவாளிகள் ஆக முடியுமா? படிப்பு நல்ல தகவல்களையும் நமது சிந்தனையை தூண்டவும் உதவும். அப்போதும் சிந்திக்காவிட்டால் என்ன பலன்.

படித்தது ஏன் நினைவில் இருப்பதில்லை

ஒரு மரக்கட்டைமேல் இரும்பு துண்டை போட்டால் அந்த இரும்புத் தூள் மரக்கட்டையில் ஒட்டுமா? ஒரு காந்தத் துண்டின் அருகே இரும்புத்தூள் இருந்தால்கூட அது ஓடிப் போய் ஒட்டிக்கொள்கிறது. காந்தத் துண்டின் ஈர்ப்பினால் இரும்புத்தூள் போய் ஒட்டிக்கொள்கிறது. எவரிடம் தேடுதல் நிறைய இருக்கிறதோ, எங்கே சிந்தனை இருக்கிறதோ, அவர் படிப்பது அவரிடம் இயல்பாக ஒட்டிக் கொள்கிறது. தேடுதல் இல்லாது ஆர்வம் இல்லாது படிப்பவர்கள் படிக்கும் படிப்புகள் அவர்களிடம் ஒட்டாமல் தனியாக நிற்கின்றன. அவர்கள் ஒரு பாத்திரம் (Carrier) போல இருக்கிறார்கள்.

செரிமானம் ஆகாத உணவு உடலில் ஒட்டாமல் வெளியே செல்வது போல சிந்தனை இல்லாமல் படிக்கும் படிப்பு புத்தியில் ஒட்டுவதில்லை.

தொட்டியில் இருக்கும் நீரை குடத்தில் மொண்டு அண்டாவில் கொண்டு ஊற்றிய பின் அந்தக் குடத்தில் நீர் இருப்பதில்லை அல்லவா!

அநேகரின் படிப்பு இப்படித்தான் காணப்படுகிறது. புத்தகத்தை படித்து தேர்வில் கொட்டிவிட்டு தேர்வு முடிந்ததும் மறந்து விடுகிறோம். அநேக மாணவர்களின் இன்றைய படிப்பு இப்படித்தான் ஒட்டாமல் இருக்கிறது. இன்று இந்த காலி குடம் போலவே காலியாக இருக்கிறது அநேகரின் மூளை.

கார்பரேட் நிறுவனங்கள்

மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களில் (R & D Department) புதிய வழிகளையும், புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க ஓர் ஆராய்ச்சி பகுதி செயல்படுகின்றது. பெரிய நிறுவனங்கள் இந்த பகுதிக்கு பல கோடிகளை செலவு செய்கிறார்கள். இந்த (R & D) ஆராய்ச்சி பகுதி எந்த அளவு சிறந்து விளங்குகிறதோ அந்த அளவுக்கு அந்த கம்பெனியின் சாதனங்கள் உயர்வு பெற்று விளங்குகின்றன. ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும்பகுதி இந்த ஆராய்ச்சி பகுதியின் கண்டுபிடிப்புகளை சார்ந்திருக்கிறது. இதுபோலவே எந்த சமுதாயம் புதிய வழிகளை சிந்திக்கிறதோ அந்த சமுதாயம் விரைவாக உயர்கிறது.