Friday, January 23, 2015

பயத்தை வெல்வது எப்படி?

பயத்தை வெல்வது எப்படி?

பயம் மனித உணர்ச்சிகளில் மிக இயல்பானது. அது தேவையானதும் கூட. பல சந்தர்ப்பங்களில் அது நம் பாதுகாப்பிற்கு உதவுகிறது. முட்டாள்தனமாகவும், கண்மூடித் தனமாகவும் நாம் நடந்து கொள்ளாமல் இருக்க உதவுகிறது. ஆபத்தான சூழ்நிலைகளில் அஜாக்கிரதையாய் இருந்து விடாமல் நம்மைத் தடுக்கிறது. எனவே தான் “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்றார் திருவள்ளுவர்.

பலரும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க முக்கியக் காரணம் தண்டனைக்குப் பயந்து தான். அந்தப் பயம் இல்லா விட்டால் சமூகத்தில் சீரழிவே ஏற்படும். எனவே பயப்பட வேண்டியதற்கு பயப்பட்டுத் தான் ஆக வேண்டும். தவறுகள் செய்ய அஞ்சவே வேண்டும். விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் ஆபத்தான செயல்களில் ஈடுபட பயப்படுவதே புத்திசாலித்தனம். குற்றங்களில் ஈடுபட அஞ்சவே வேண்டும். இதில் எல்லாம் பயம் ஏற்படுவது இயற்கை நமக்கு அளித்திருக்கும் பாதுகாப்பு அரணே. தோன்றியபடியெல்லாம் நடந்து கொள்ளாமல் தடுத்து நம்மை சிந்திக்க வைப்பதால், நம் வேகத்தைப் பல சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத்துவதால் பயம் நமக்கு நன்மையை செய்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.

ஆனால் பயம் ஒரு எல்லையை மீறும் போது, அறிவு சாராமல் இருக்கும் போது அது நமக்கு நன்மையை விட அதிக தீமையையே செய்வதாகிறது. அந்த சமயங்களில் அது பாதுகாப்பு அரணாக இருப்பதற்குப் பதிலாக அடிமைச்சங்கிலியாக மாறி நம்மை செயலிழக்க வைத்து விடுகிறது.

நம்மை செயலிழக்க வைக்கும் பயத்திற்கு மிக முக்கிய காரணம் விளைவுகளைக் குறித்து நமக்கு ஏற்படும் விபரீதக் கற்பனைகளே. என்ன எல்லாம் நேரக் கூடும் என்று ஒருவன் கற்பனைக் குதிரையைத் தட்டி விடும் போது அவன் மனம் வரக் கூடிய பயங்கர விளைவுகளை எல்லாம் பட்டியல் இட ஆரம்பித்து விடுகிறது. இப்படி எல்லாம் ஆனால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பிக்கும் போது பயம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விடுகிறது. சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் அவன் ஸ்தம்பித்துப் போகிறான்.

அதே போல் புதியதாக ஒன்றைத் தொடங்கும் முன் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற பயம், குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்கிற பயம், தோற்று விட்டால் என்ன செய்வது என்கிற பயம் ஏற்பட்டு அந்த செயலை ஆரம்பிக்கவே விடாமலும் செய்து விடுகின்றது. வெற்றிக்காகவே முயல்கிறோம் என்றாலும் தோல்வி வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல.

உலகில் மிக உயர்ந்த வெற்றிகளைக் குவித்த வெற்றியாளர்களை ஆராய்ந்தவர்கள் அவர்கள் கூட 60 சதவீத முயற்சிகளில் தான் வெற்றி அடைந்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அதாவது நாம் போற்றும் பெரிய வெற்றியாளர்களே பத்து முயற்சிகளில் நான்கு முயற்சிகளில் தோற்றுப் போகிறார்கள் என்றால் தோல்வி சாதாரணமான ஒன்று தானே. அதில் வெட்கித் தலைகுனிய என்ன இருக்கிறது?

இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் அமெரிக்கா பொருளாதார நிலையில் மிகவும் சீரழிவை சந்திக்க வேண்டி வந்தது. வேலையில்லா திண்டாட்டம், வங்கிகளில் பணமில்லாமை எல்லாம் மக்கள் மனதில் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி பெரியதொரு பயத்தை ஏற்படுத்தியது. அப்போதைய ஜனாதிபதி பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். ”இப்படிப்பட்டவராலேயே நம் நாட்டின் இன்றைய நிலையைத் தவிர்க்க முடியவில்லையே, இனி நம் எதிர்காலம் என்ன?” என்ற பயம் மக்களிடம் பரவி இருந்தது.

அந்த சமயத்தில் தான் ஃப்ராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். அவர் தன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில் சொன்ன செய்தி வரலாற்று சிறப்பு மிக்கது. “நாம் பயப்பட வேண்டிய ஒரே விஷயம் பயமே. ஏனெனில் அந்த இனம் புரியாத, ஆதாரமற்ற, உண்மையைச் சார்ந்திராத பயம் நம் பின்னடைவை மீறி முன்னேற விடாமல் நம்மை செயலிழக்க வைப்பதில் வல்லதாக இருக்கிறது”

அவர் அதிபராக இருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போரையும் மீறி அமெரிக்கா பொருளாதாரத்தில் முன்னேறியதோடு வல்லரசு நாடாகவும் உருமாறியது. அதற்கு மிக முக்கிய காரணம் பயத்தை நிராகரித்து தைரியத்தைத் துணை கொண்டு செயல்படும் ஒரு தலைமை அந்த நாட்டிற்கு இருந்தது தான் என்பதில் சந்தேகம் இல்லை.

அதெல்லாம் சரி, பயம் இயல்பாகவே வந்து விடுகிறதே, அதை விலக்கி வெற்றி பெறுவது எப்படி என்று கேட்போருக்கு சில ஆலோசனைகள்-

முதலில் பயத்திற்கான காரணங்கள் கற்பனையா இல்லை உண்மை தானா என்று அலசுங்கள். அந்த காரணங்கள் உண்மைக்குப் புறம்பான அனுமானத்தின் அடிப்படையில் ஏற்பட்டவையாக இருந்தால் உறுதியான மனத்தோடு புறக்கணியுங்கள். அந்த கற்பனை காரணங்களிலும், அனுமானங்களிலும் அதிக நேரம் எண்ணங்களைத் தங்க விடாதீர்கள். ஏனென்றால் அதிக காலம் அந்த எண்ணங்களிலேயே இருந்தால் அதையே உண்மை என மனம் நம்ப ஆரம்பித்து விடும். பின் பயம் நம்மை ஆட்கொள்ளவும் ஆரம்பித்து விடும்.

ஒருவேளை அந்தக் காரணங்கள் கற்பனை அல்ல, உண்மையின் அடிப்படையில் தான் எழுந்தவை என்றானால் அந்தக் காரணங்களை அங்கீகரியுங்கள். உண்மையை புறக்கணிப்பது எக்காலத்திலும் நல்லதல்ல. ஆனால் பயத்தினால் செயலிழப்பதும் புத்திசாலித்தனமல்ல என்பதை மறந்து விடாதீர்கள். பயப்படும் படியான விளைவுகளையும், சூழலையும் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்.

மனம் உடனடியாக அந்த செயலை செய்யாமல் இருப்பதே சிறந்தது என்று உடனடியாகச் சொல்லும். அந்த செயல் தேவையற்றதாகவும், எவ்விதத்திலும் நம் முன்னேற்றத்திற்கு உதவாததாகவும் இருந்தால் இரண்டாவது சிந்தனையே தேவையில்லை. அச்செயலைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். ஆனால் அந்த செயல் நம்மை நல்ல சூழலுக்கு மாற்ற உதவுவதாகவும், உண்மையான முன்னேற்றத்திற்கு உதவக்கூடியதாகவும் இருந்தால் செயல்படாமல் இருப்பது

ஒரு புத்திசாலித்தனமான தீர்மானம் அல்ல என்பதை உணருங்கள். அதிகம் பாதிக்கப்படாமல் செயலைச் செய்து முடிக்கும் வழிகளை சிந்தியுங்கள். இந்த சூழ்நிலைகளை சமாளித்து வென்றவர்கள் என்ன செய்தார்கள், எப்படி சமாளித்தார்கள் என்றும் கவனியுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.

தோல்வியைப் பற்றிய பயம் என்றால் ஒரு உண்மையைத் திரும்பத் திரும்ப மனதில் பதியுங்கள். ”இந்த உலகில் எதிலுமே தோல்வி அடையாதவன் இது வரை தோன்றவில்லை. இனி தோன்றப் போவதுமில்லை”. நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணருங்கள். முன்பு கூறியது போல மாபெரும் வெற்றியாளர் கூட பத்து முயற்சிகளில் சராசரியாக நான்கு முயற்சிகளில் தோல்வி அடைகிறார்கள் என்றால் தோற்பதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?

மரியோ புஸோ எழுதிய “காட் ஃபாதர்” நாவலில் முக்கிய கதாபாத்திரமான காட் ஃபாதர் பயத்தையே அறியாதவனாக படைக்கப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் அவன் ”ஒரு மனிதனுக்கு ஒரு விதி தான் இருக்க முடியும்” என்று விஷயத்தை உறுதியாக நம்பியது தான். என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்றால் பின் பயந்து நடுங்க என்ன இருக்கிறது? இது கூட ஒரு வகையில் பயத்தைப் போக்கும் சித்தாந்தமல்லவா?

நீங்கள் இறை நம்பிக்கை உடையவராக இருந்தால் உங்களுக்கு கடவுளின் துணை என்றும் இருப்பதாக நம்புங்கள். கடவுள் துணையாக இருக்கையில் எது தவறாகப் போக முடியும்? தன்னம்பிக்கையைக் குறைக்க முடிந்த பயம் கடவுள் நம்பிக்கை முன் சக்தியற்றுப் போவது நிச்சயம்.

அப்படியும் பயம் போகவில்லை என்றாலும் பயந்து கொண்டே ஆனாலும் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பியுங்கள். செயல் புரிய ஆரம்பித்தவுடனேயே பெரும்பாலான பயங்கள் நம்மை விட்டு தானாக அகல ஆரம்பிக்கின்றன. சூரியனைக் கண்ட பனித்துளி போல அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகின்றன.

மொத்தத்தில் எப்படியாவது பயம் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள்.

வெற்றி தோல்விகளுக்கு மனமே காரணம்.

வெற்றி தோல்விகளுக்கு மனமே காரணம்.

நான் தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவது எப்படி? என்பது பற்றி கூற வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது ஆனால் என்ன செய்வது? நேரம் கிடைக்கவில்லை, ஆகவே நான் இதில் தோல்வி அடைந்துவிடுவோமோ என் மனதில் நினைத்தேன்........ஆனாலும் மனதில் ஒரு வெறி இருந்தது. எப்படியாவது.......... இதை வலையில் வெளியிட வேண்டும் என்று. அது இன்று தான் வெற்றி பெற்றது.

உலக வாழ்க்கையில் ஒவ்வொரு படியிலும், எதையாவது புதிதாகக் கற்றுக்கொண்டுதான் இருக்கின்றோம். "கல்வி கரையில" என்று இதனாலேதான் பெரியோர்கள் கூறுகின்றனர்.

சிறுவயதில் பிறந்த வீட்டிலேயுள்ள பெற்றோரிடமும், அங்கேயுள்ள குடும்பத்தாரிடமும் பல செய்திகளை கற்றுக் கோள்கின்றோம். அதன் பின்னர் பள்ளிக்கூடங்களில் சென்று ஒரு பொதுக்கல்வியைப் பெறுகின்றோம். இதன் பின்னர் ஏதாவது ஒரு தொழிலுக்கான சிறப்புக் கல்வியையும் பயிற்சியையும் பெறுகின்றோம். இதனைத் தொடர்ந்து குடும்ப வாழ்வு சமூக வாழ்வு, என பல வகையான அறிவுகளை பெறுகின்றோம். 

உலகில் ஒவ்வொருவரும் இந்த முயற்சிகளிலே ஈடுபடுவதனால், ஒருவருக்கொருவர் போட்டிகள் இயல்பாகின்றன. இதனால் வெற்றி தோல்விகளும் இயற்கையாகின்றன. 

உலக வாழ்வில் வெற்றி பெற வேண்டும். இந்த நோக்கத்தில் மன உறுதி வேண்டும். இதற்கேற்றப்படி நடந்து கொள்ளவும் முயல வேண்டும். இதைச் சிதைக்கும் அல்லது தடுக்கும் வேறு நோக்கங்களுக்கு முதன்மை தருகின்வர்கள் உலகை சார்ந்த வாழ்வில் வெற்றி பெற முடியாது. வாழ்வின் வெற்றிக்கான செல்வத்தின் பெருக்கத்தையோ, அல்லது ஆதரவான துணை வசதிகலையோ பெற முடியாது.

தாங்கள் உயர்வாகப் போற்றி மதிக்கும் நோக்கங்களையும், பண்புகளையும், கோட்பாதுகளையும் நடைமுரை உலக வாழ்விலேயும் கடைப்பிடிக்க முயல்பவர்கள் பெறும்பாலும் உலகில் தோல்வியையே சந்திப்பார்கள். இவைகளையும் உலகப் போக்கோடு இணைத்துக் கொண்டு உலகத்தோடு, ஒட்டி வாழ்வதிலே கருத்துச் செலுத்தினால், இவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும்.

தோல்வி என்றால் என்ன?

தோல்வி என்றால் என்ன?

ஏதாவது செயலைச் செய்ய எண்ணும்போது, அந்தச் செயலின் விளைவாக ஏற்படுகின்ற நலத்தைப் பற்றியே மிகுதியாக எண்ணுகிறோம். இந்த எண்ணத்தினாலேயே அதை மேற்கொண்டு செய்கின்றேம்.

அந்தச் செயலின் விளைவுகள் நாம் எதிர்பார்த்த படியாகவே அமைந்துவிட்டால் அதை வெற்றி என்று நினைத்து மகிழ்ச்சி அடைகின்றோம். எதிர்பார்த்த அளவுக்கு மேலான நன்மைகள் ஏற்பதுமானால் அதை எதிர்பாராத வெற்றி என்கின்றோம். எதிர்பார்த்ததைவிடப் பயன்கள் குறையுமானால், அது சாதாரண வெற்றி என்று நினைத்து ஆறுதல் அடைகின்றோம்.

எதிர்பார்த்தபடி பயன் கிடைப்பதற்குச் சற்றும் வழியில்லாமல் போய்விடும்போது அதற்காக நாம் உழைத்த உழைப்பும், செலவிட்ட மூலதனமு, செலவிட்ட காலமும் விரயமாகின்றன. நாம் நினைத்துச் செய்வதற்கு மாறான விளைவுகளை நாம் அடைய நேர்கின்றது. அகவே இதைத் தோல்வி என்று எண்ணி வருந்துகின்றோம்.

ஒரு பாலத்துச் சுவரின் மேல் அமர்ந்து ஒருவன் அழுது புலம்பிக் கொண்டிருந்தான். பத்து லட்சம் போச்சு என்று புலம்பிக் கொண்டிருந்தான். அவனுடைய புலம்பலைக் கொண்டு இரக்கங்கொண்ட பெரியவர் ஒருவர் அவன் அருகே சென்றார்.

"பத்து லட்சம் பெரிய இழப்பாச்சே? எப்படி அப்பா இவ்வளவு பெரிய இழப்பு உனக்கு உண்டாயிற்று?" என்று அநுதாபத்தோடு கேட்டார்.

"பத்து லட்ச ரூபா முதற் பரிசுள்ள பரிசுச் சீட்டில் ஒன்றை இரண்டு ரூபாவுக்கு வாங்கினேன். இரண்டே எண்கள் வித்தியாசத்தில், பரிசு இன்னொருவனுக்குப் போய்விட்டது. அதுதான் வேதனை தாளமாட்டாமல் புலம்புகிறேன்" என்றான்.

பெரியவருக்குச் சிரிப்பும் கோபமும் வந்தது. 'நான் என்னவோ ஏதோ என்று நினைத்தல்லவா இரக்கப்பட்டேன் இதற்காகவா இப்படிப் புலம்புகின்றாய்? போய் உழைத்து வாழ்வதற்கு முயற்சி செய். உழைக்காமல் சோம்பிக் கிடந்து வீணாக்காதே' என்று சொல்லிச் சென்றார்.

இப்படிப் பலர் இருக்கின்றார்கள், நூலைக் கட்டி மலையை இழுக்க நினைப்பவர்கள். இவர்கள் எப்படி வெற்றி அடைய முடியும்? இவர்கள் தோல்வி அடைந்ததாகப் புலம்புவது எல்லாம் பொருத்தம் அற்றவையே!

ஆகவே, தோல்வி என்பது இவைபோல் அல்ல இவை போன்றவற்றைத் "தோல்வி" என்று நினைப்பதும் தவறு. இவற்றை வெற்றிகளாக மற்றவும் இயலாது.

முடிவு எடுக்க முன்...

முடிவு எடுக்க முன்...


எந்த ஒரு விசயத்தையும் சில கோணங்களில் ஆராய்ச்சி செய்து முடிவு எடுத்தால்  அம்முடிவு தெளிவான முடிவாக இருக்கும்.

1.நான் இப்போது எடுத்துள்ள முடிவு உணர்ச்சி பூர்வமான முடிவா,அல்லது அறிவு பூர்வமான முடிவா?

2.இந்த நிலைப் பாட்டிலிருந்து நான் பின் வாங்குவது எனக்குப் பெருமையா, பின்னடைவா?

3.இந்த முடிவின் விளைவுகள் என்னவாக இருக்கும்?அவற்றை எதிர் கொள்ளும்  திறன் நமக்கு உண்டா?

4.இந்த முடிவின் மீது விமரிசனங்கள் எப்படி இருக்கும்?அவை புறக்கணிக்கத்
தக்கவையா,ஏற்கத் தக்கவையா?

5.எதிராளி இதற்கு எத்தகைய பதிலடி கொடுப்பான்?அவனை நாம் எடுக்கும் முடிவு, சாய்க்க வல்லதா,பணிய வைப்பதா,முன்னிலும் வீறு கொண்டு எழச் செய்வதா?

6.எதிராளி இதனால் துன்பப் படுவாரா? இதில் நம் மகிழ்ச்சி மட்டும் முக்கியமா?

7.இது பற்றி ஒரு சிலரிடம் கலந்து ஆலோசித்தால் என்ன?

8.முடிவுக்கு வர இன்னும் கால அவகாசம் இருக்கிறதா?ஆம் எனில்,அந்தக் கால அவகாசத்தை நாம் இன்னும் நன்றாக சிந்திக்கப் பயன் படுத்திக் கொண்டால் என்ன?

நில்; கவனி; முன்னேறு!

நில்; கவனி; முன்னேறு!

* எந்தச் செயலையும் தன் முனைப்போடு செய்யுங்கள். மற்றவர்கள் சொல்வதற்காகச் செய்ய வேண்டாம்.

* மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வதில் ஆர்வமுடையவராய் இருங்கள். உங்கள் வளர்ச்சிக்கு அது மிகவும் உதவியாக இருக்கும்.

* தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள். மாறாகச் சமாதானம் செய்து கொள்ளாதீர்கள்.

* நிதானமாய் செயல்படுங்கள். அவசரம், ரென்ஷன் முதலியவைகளை அறவே தவிர்த்து விடுங்கள்.

* சுய ஒழுக்கத்தை உங்களிடம் இருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுங்கள்.

* உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்துச் செயற்படுங்கள். காக்காய் பிடிப்பது, ஜல்ரா தட்டுவது போன்றவைகளை அறவே தவிருங்கள்.

* மற்றவர்களின் வளர்ச்சிக்கு உதவுபவராக இருங்கள்.மாறாக பொறாமைப்படுபவராக இருக்க வேண்டாம்.

* உங்களின் பேச்சிலும் செயலிலும் வெளிப்படையாக இருப்பதன் மூலம் மற்றவர்களிடம் உங்களின் நம்பகத்தன்மையை அதிகரியுங்கள்.

* எத்தனை வேலைகலை முடிக்கிறோம் என்பதல்ல முக்கியம். எத்தனை அழகாகவும் நேர்த்தியாகவும் திறமையாகவும் முடிக்கிறோம் என்பதே முக்கியம்.

* உங்களின் செயல்பாட்டினால்; வேலையைச் செய்து முடிக்கும் தன்மையினால் மற்ரவர்களைக் கவர முயற்சி செய்யுங்கள். மாறாக உங்கள் சாதுரியமான பேச்சினால் அல்ல.

* உங்கள் திறமையில் நம்பிக்கை உடையவராய் இருங்கள். மாறாக கர்வமோ தலைக்கனமோ கொள்ள வேண்டாம்.

* அன்றய வேலையை அன்றே செய்து முடிக்கப் பழகுங்கள். நாளைக்கு என்று தள்ளிப் போட வேண்டாம்.

* எடுத்துக் கொண்ட வேலையில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். ஏனோ தானோ என்று கடமைக்காகச் செய்து முடிக்க வேண்டாம்.

* கூட்டுகிற வேலையாக இருந்தாலும் அதில் உங்கள் திறமையைக் காட்டுங்கள்.

* உங்கள் வேலை நீங்கள் முன்னுக்கு வருவதற்காக அளிக்கப்பட்ட பொன்னான சந்தர்ப்பம்.அதில் முறையாகச் செயற்பட்டு உங்கள் முன்னேற்றத்திற்காகப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

தோல்வி என்றால்.... என்ன

தோல்வி என்றால்.... என்ன

தோல்வி

என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருள் அல்ல நீங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை என்று பொருள்.

தோல்வி

என்றால்,நீங்கள் எதையுமே சாதிக்கவில்லை என்று பொருள் அல்ல சில பாடங்கள் கற்றுக்கொண்டு இருக்கிறீர்கள் என்று பொருள்.

தோல்வி

என்றால் நீங்கள் அவமானப்பட்டு விட்டதாகப் பொருள் இல்லை முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் உள்ளது என்று பொருள்.

தோல்வி

என்றால் உங்களிடம் சரக்கு இல்லை என்று பொருள் அல்ல வேறு உத்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தை உணர்ந்து விட்டீர்கள் என்று பொருள்.

தோல்வி

என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருள் இல்லை மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பொருள்.

தோல்வி

என்றால் விட்டு விட வேண்டும் என்று பொருள் அல்ல இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும் என்று பொருள்.

தோல்வி

என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல அடையக் கொஞ்சம் தாமதமாகலாம் என்று பொருள்.

தோல்வி

என்றால் கடவுள் உங்களைக் கை விட்டு விட்டார் என்று பொருள் இல்லை உங்களுக்கு வேறு நல்ல எதிர் காலத்தை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார் என்று பொருள்.

Wednesday, January 21, 2015

எப்போதும் ஜெயிக்க சில டிப்ஸ்:-

எப்போதும் ஜெயிக்க சில டிப்ஸ்:-

1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள்.

2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள்.

3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள்.

4. வருமானத்திற்கான வழி மிகவும்முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள்.

5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள்.

6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள்.

7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள்.

8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள்.

9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.

10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும்.

11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள்.

12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

13.ஒருவர் இல்லாதபோது அவருடைய சிறப்பம்சங்களையே பேசுங்கள்.

14. அரட்டைப் பேச்சுக்களையும் அபவாதங்களையும் ஊக்குவிக்காதீர்கள்.

15. மற்றவர்களின் தவறுகளை மன்னி யுங்கள். ஒரு போதும் மறக்காதீர்கள்.

16. உங்கள் வாழ்வின் ரகசிய அம்சங்கள் முடிந்தவரை குறைவாகவே இருக்கட்டும்.

17. குடும்பம் என்கிற எல்லையைக் கடந்து, பொது அமைப்பு எதிலாவது ஈடுபடுங்கள்.

18. மாதம் ஒரு முறையாவது உங்கள் தகுதிகளையும் தவறுகளையும் பட்டியல் இடுங்கள்.

19. மற்றவர்களைப் பேச விடுங்கள். அவர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் அக்கறையை உணர்த்துங்கள்.

Tuesday, January 20, 2015

உங்களது ஒருநாள் எப்படி இருக்க வேண்டும்?

உங்களது ஒருநாள் எப்படி இருக்க வேண்டும்?

வேகமாக இயங்கும் இயந்திர உலகில் ஒருநாள் என்பது ஆரம்பித்ததுமே முடிந்துவிடுவது போல உள்ளது. இன்றைக்கு என்ன செய்ய போகிறோம் என்பதை திட்டமிட்ட்டு செய்ய வேண்டும் என்பார்கள். இன்று திட்டமிடவே பாதி நாட்கள் போய் விடுகிறது என்று கூறுபவர்களும் உள்ளனர்.

ஆனால், அதே நேரத்தில் ஒரு நாளை சிறப்பாக கையாளும் ஆளுமை திறன் கொண்டவர்களும் உள்ளனர். ஒரு நாளில் எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும்? எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்படுபவர்களும் உள்ளனர். அவர்களது ஒருநாள் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

தொழில் முனைவோராக இருப்பவரோ அல்லது அலுவலகத்தில் பணிபுரிபவராகவோ இருந்தால் அவர் காலை 6.00 மணிக்கு எழுந்திருப்பது சிறந்தது. அதிலிருந்து அவரது அன்றைய நாளை துவங்கலாம். காலை 6.15 முதல் 7 மணி வரை அன்றைய நாளை சிறப்பாக துவங்க புத்துணர்ச்சியாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்யலாம். பின்பு 7 மணி முதல் 8 மணி வரை ஒருவர் குளியல் உள்ளிட்ட வேலைகளை முடித்து அலுவலகத்துக்கு கிளம்ப தயார்படுத்துக் கொள்ள பயன்படுத்தலாம். 8 மணிக்கு அவர் தனது அலுவலகத்துக்கு பயணிக்க தொடங்கினால் 8:30 மணிக்குள் அலுவலகத்தை அடைந்துவிடலாம் என்று வைத்து கொள்வோம். அப்படி இருக்கும் போது 8:30 மணியிலிருந்து 9:15 மணிக்குள் தனக்கு வந்திருக்கும் இ-மெயில்கள், கடிதங்கள் ஆகியவற்றை பார்த்து பதிலளிக்க பயன்படுத்தி கொள்ளலாம்.

இதன் பின் தான் அலுவலக வேலைகள் துவங்க உள்ளன. 9:15 மணிக்கு துவங்கி 9:40 மணி வரை இன்றைய நாளுக்கான திட்டங்கள், இன்றைய நாளில் செய்ய வேண்டிய வேலைகள் ஆகியவற்றை பற்றி அலுவலக குழுவுடன் சேர்ந்து விவாதிப்பது. அதில் எடுக்கப்படும் முடிவுகளை அமல்படுத்துவது குறித்து திட்டமிடுவது போன்ற செயல்களை செய்யலாம். 9:40 மணி முதல் 10 மணி வரை உங்களது சிறிய உணவு இடைவேளை எடுத்து கொள்வது வேலையை மீண்டும் புத்துணர்ச்சியாக்கும்.

10 மணிக்கு மீண்டும் வேலையை துவங்கி முழுமையான இரண்டு மணி நேரம் உங்கள் வேலையை பார்க்கும் போது உங்கள் வேலை கிட்டத்தட்ட 60 சதவிகிதம் பூர்த்தியாகிவிடும். 12 மணி முதல் 12:30 வரை கான்ஃப்ரன்ஸ் கால்களை பேசுவதிலோ அல்லது வாடிக்கையாளர் அல்லது க்ளைண்ட்களுடன் பேசுவதோ செலவிடலாம். 

12:30 மணி முதல் 1 மணி வரை உணவு இடைவேளைக்கு எடுத்து கொண்டு 1 மணி முதல் 3 மணி வரைமீண்டும் தனது வேலையை முழுமையாக கவனித்து 3 மணிக்கு மேல் 15 நிமிட இடைவேளை எடுத்து கொள்ளலாம். அது அடுத்த 2 மணி நேர வேலைக்கான புத்துணர்ச்சியை அளிக்கும்.

5:30 முதல் 6:30 வரை அலுவலகத்தில் இருந்து உங்கள் வீட்டுக்கு வருவதற்கு நேரமாகிறது எனில் 6:30 மணியிலிருந்து 8 மணி வரை உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் நண்பர்கள் ஆகியோரோடு செலவழியுங்கள். 8 மணி அல்லது அதற்கு முன்பு இரவு உணவை எடுத்து கொள்ளுங்கள்.

9 மணியிலிருந்து 10.15 மணி வரை உங்களது அறிவை வளர்த்து கொள்ளும் விஷயங்களில் நாட்டம் செலுத்துங்கள் 10:30 மணிக்கு தூங்க சென்றால் காலை 6 மணிக்கு எழ வேண்டும் என்றால் சராசரியாக ஏழரை மணி நேர உறக்கத்தை எடுத்து கொள்வது அவரது உடலை ஆரோக்கியமாகவும், அடுத்த நாளை சுறுசுறுப்பாக துவங்கவும் உதவும்.

இப்படி செயல்பட்டால் அவரால் சிறப்பாக ஒரு நாளில் செயல்பட முடியும். இதைதான் சிலர் சிறப்பாக கடைபிடித்து சரியாக தனது நாளை பயன்படுத்துகின்றனர். நீங்களும் இதனை கடைபிடிக்கலாமே?

Tuesday, January 6, 2015

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!

மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ 8 பழக்கங்கள்!

சாதனையாளர்கள் மற்றவர்களை விட தங்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி தங்களின் மன நிலைகளை சரியான முறைகளில் தக்க வைத்து கொள்வது மட்டுமல்லாமல், தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அதனை திறம்பட வெளிப்படுத்துகின்றனர். சாதனையாளர்களிடமிருந்து கவனிக்கப்பட்ட 8 பழக்கங்களை இங்கே பார்ப்போம். அந்த பழக்கங்களை நாமும் கற்றுக்கொண்டு மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ்வோம்.

1) ஃபோகஸ்; கவனத்தை சிதறவிடக்கூடாது

சாதனையாளர்கள் தங்களின் கவனத்தை சிதறவிடமாட்டர்கள். ஒரு நேரத்தில் ஒரு பிரச்சினை மட்டும் தான் பார்ப்பார்கள். ஒரே நேரத்தில் பல பிரச்சனைகளை பார்ப்பது மன அழுத்தத்திற்கு பெரிய காரணமாக அமைகிறது. அதனால் மற்ற பிரச்சனைகளை பிறகு பார்த்துக்கொள்வதுதான் நல்லது. எனவே நீங்கள் நிகழ்கால பிரச்சனைகளை மட்டும் நிலைநிறுத்திக்கொள்ளுங்கள், கடந்த காலம் மற்றும் எதிர்கால பிரச்சனைகளை யோசித்து கவலைக்கொள்ளாதீர்கள். இதுவே மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த வழி ஆகும்!

2) பிரச்சனைகளை பார்த்து கவலை வேண்டாம்; 

நமது செயல்களில் ஏதேனும் தவறு ஏற்படும் என்று நினைத்தால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொள்ள வேண்டும், நம்முடைய செயல்கள் சரியான இலக்கை அடைய விழிப்புணர்வோடு செயல்பட வேண்டியது மிக முக்கியமானதாகும். நம்முடைய எல்லா பிரச்சனைகளை பற்றி கவலை அடைவதே நம மன அழுத்தம் அதிகரிக்க காரணமாக உள்ளது. 

3) போராடுங்கள், விட்டு கொடுக்க கூடாது!

ஒரு சில நேரங்களில் நமக்கு எதிராக எல்லா செயல்களும் நடப்பது போல் அமையும். அந்த நேரத்தில் மனதை தளரவிடாமல் போராடி நமது இலக்கை அடைய வேண்டும். இந்த மனப்பக்குவமே சாதனையாளர்கள் மற்றும் சாதனையற்றவர்களை வேறுபடுத்திக் காட்டுகிறது.

4) மற்றொரு கோணத்தில் பாருங்கள்!

ஒரு பிரச்சினை நம்மை சூழ்ந்திருக்கும்போது, சில நேரங்களில் அது பெரியதாக தோன்றும். அந்த நேரத்தில் அந்த பிரச்சனைகளிலில் இருந்து விலகியிருந்து மற்றொரு கண்ணோட்டங்களில் பார்த்துக்கொள்வது மிக முக்கியமானதாகும். எனவே பிரச்சனைகள் எழும்போது நாம் அமைதியாக தூங்கி எழுந்தால் அந்த பிரச்சனைகள் மிக எளியதாக தோன்றும். மற்றொரு கண்ணோட்டத்தில் பிரச்சனைகளை பார்ப்பதன் மூலம் புதிய கோணத்தில் அதற்கொரு முடிவு கிடைக்கிறது. 

5) எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; தயாராக இருக்க வேண்டும்.

சிறந்த வாசிப்பு, புரிந்துகொள்ளுதல் மற்றும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். மேலும், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தால், மன அழுத்த காலங்களில் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்.

6) அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்

நீங்கள் ஓய்வெடுக்கவும் மற்றும் உங்களின் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கவும் நேரத்தை ஒதுக்க வேண்டும். உங்களுடைய நம்பிக்கை உரியவர்களிடம் உங்களின் நேரத்தை ஒதுக்கி செலவிடுவது, நீங்கள் ஓய்வெடுத்து கிடைப்பதைவிட மிக நிறைவாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். 

7) உறங்குதல். உடற்பயிற்சி, தியானம்

உங்களின் உணர்வுசார் நுண்ணறிவை அதிகரித்து மூளையை ரீசார்ஜ் செய்வதன் மூலம் மன நிலைகளை நிர்வகிப்பதில் தூக்கம் முக்கியமானதாகும். உங்களுடைய சுய கட்டுப்பாடு, கவனம், மற்றும் நினைவகம் ஆகியவை உங்களின் மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் போது, உங்களின் கண்களை மூடிக்கொண்டு, உட்கார்ந்து, மூச்சு சுவாச பயிற்சியை மேற்கொள்ளவும். இதன் மூலம் உங்கள் மனம் அமைதி அடையும்.

8) தாழ்வாக நினைப்பதை நிறுத்தவும்

நம்மளை பற்றி நாமே எதிர்மறையாக அல்லது தாழ்வாக நினைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏதாவது தவறாக சென்றாலும் அதை பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் இதோடு உலகம் முடிவதில்லை. எப்போதும் உங்களை உயர்த்தியே எண்ணுங்கள். 

Monday, January 5, 2015

நம் துன்பத்துக்கு யார் கரணம் ..?

நம் துன்பத்துக்கு யார் கரணம் ..?

நம் துன்பத்திற்கு இவர்தான் காரணம் என்று நாம் யாரையாவது நினைத்துக்கொண்டு மேலும் துன்பப்படுகிறோம்.

உண்மையில் நம் துன்பத்திற்கு யார் காரணம்..? இவர் மட்டுமா ..? இல்லை நம் வினைகளுமா ..?

இதனை அறிய கர்ணன் கதையைக் காணலாம்...

கர்ணனை அர்ஜூனன் தான் கொன்றான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் கர்ணனை வலிமை இழக்கச் செய்து கொல்வதற்கு பங்களித்தவர்கள் ஆறு பேர்கள்...!!

கர்ணனைக் கொல்ல அர்ஜூனன் அம்பாய்ப் பயன்பட்டானே தவிர, அவன் மீது அந்த அம்பை எய்தவர்கள் ஆறு பேர்.

யார் அந்த ஆறு பேர்கள்...?
────────●●●────────

முதலாவதாகப் பரசுராமர்....

இவர் அந்தணர்களுக்கு மட்டும்தான் வில்வித்தை கற்றுக் கொடுப்பேன் என்று சபதம் செய்திருந்தார். இதையறிந்த கர்ணன், தான் அந்தணன் என்று சொல்லி அவரிடம் வில்வித்தை கற்றுக் கொண்டான்.

ஒருநாள் இவன் மடியின் மீது தலை வைத்து, பரசுராமர் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் இந்திரன் வண்டுருவில் வந்து, கர்ணனின் தொடையைப் பிளந்து அவனுடைய ரத்தத்தைப் பரசுராமர் மீது விழும்படி செய்தார்.

ஆசிரியரின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்று கர்ணன் வலியைப் பொறுத்துக் கொண்டான். ரத்தம் பட்டதால் விழித்தெழுந்த பரசுராமர், அவன் அந்தணன் இல்லையெனத் தெரிந்து அவனைச் சபித்தார்.

அதாவது, “நீ கற்ற பிரம்மாஸ்திரம் உனக்குத் தக்க சமயத்தில் மறக்கக் கடவது” என்று சபித்தார்.
────●●●────

இரண்டாவதாக ஒரு முனிவர்...

முனிவருடைய பசுங்கன்று, கர்ணனின் தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு இறந்ததால் "யுத்தத்திலே உன் இரதம் பூமியில் அழுந்தட்டும் " என்று அவர் சபித்தார்.
────●●●────

மூன்றாவதாக இந்திரன்...

கர்ணனின் கவச குண்டலங்களை அந்தணன் போல் வந்து யாசித்துப் பெற்றுச் சென்றான்.
────●●●────

நான்காவதாகக் குந்தி...
கர்ணனைப் பெற்ற குந்தி, பஞ்ச பாண்டவர்களில் அர்ஜூனனைத் தவிர, வேறு யாரையும் கொல்லக் கூடாது என்றும், நாகாஸ்திரத்தை அர்ஜூனன் மீது ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் கர்ணனின் வரம் பெற்றாள்.
────●●●────

ஐந்தாவதாகச் சல்லியன்...
கர்ணனுக்குத் தேரோட்டிக் கொண்டிருந்தவன், தக்க சமயத்தில் தேரிலிருந்து குதித்து ஓடிப் போனான்.
────●●●────

ஆறாவதாகக் கண்ணன்...
கர்ணன் அர்ஜூனனை நோக்கிச் செலுத்திய நாகாஸ்திரம் அர்ஜூனனைத் தாக்காதபடித் தேரைத் தரையில் அழுத்தி அர்ஜூனனைக் காப்பாற்றியதுடன், கர்ணனைக் காத்துக் கொண்டிருந்த அவனது புண்ணியத்தையும் யாசித்துப் பெற்றான்.
────●●●────

ஆக இவரால் தான் நமக்கு கஷ்டம் வந்து விட்டது என்று துன்பப் படாமல் , நம்முடைய ஊழ்வினைகள்தான் இப்படி பல உருவில் வருகிறது என்று தெரிந்து கொண்டு, யாரையும் நோகாமல் நமக்கு வரும் கஷ்டங்களுக்கு நாம்தான் பொறுப்பு என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
நம் கஷ்டங்களுக்கு நாம் தான் பொறுப்பு ..!!