Wednesday, April 26, 2017

வெற்றி, சாதனைக்கு வழிகாட்டும் ஶ்ரீஅன்னையின் 12 அமுத மொழிகள்!

விளையாட்டு மனதுக்கும் உடலுக்கும் உறுதி அளிக்கக்கூடிய ஒன்றாகும். சாதித்த பல விளையாட்டு வீரர்களான சச்சின், டிராவிட்  போன்றவர்களின் வெற்றிக்கான காரணம் திறமை மட்டுமல்ல. அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ ஆன்மிக ரீதியாக ஒரு வீரன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான கோட்பாடுகளைக் கடைப்பிடித்ததால்தான். 
ஆம், ஒரு லட்சிய மனிதன் தன் வாழ்வில் பின்பற்ற வேண்டிய ஶ்ரீ  அன்னையின் பொன்மொழிகள்.

1. நல்ல மனநிலை உடையவன், விஷயங்கள் அவனுக்கு எதிராகப் போகும்போதும், தனக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்படும்போதும் கோபம் கொள்ளமாட்டான்.

2. செய்வதைத் திருந்தச் செய்வான். தோல்வி நிச்சயம் என்று தெரிந்தபோதும் தான் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டேயிருப்பான். நேர்மறை எண்ணங்களால் நேர்மையாகச் செயல்புரிவான்.

3. தனது முயற்சிகள் பயனளிக்க நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தாலும் சோர்ந்து போகாமல் முயற்சித்துக்கொண்டே  இருப்பான்.

4. தவிர்க்க முடியாத இடர்களையும்    துயரங்களையும் சலனமின்றி கடந்து செல்வான்.எத்தனைத் தோல்விகள் ஏற்பட்டாலும் இறுதி வெற்றிக்காக ஓடிக்கொண்டே இருப்பான்.

5. வெற்றியைத் தலைக்கு எடுத்துச் செல்லமாட்டான். தன் தோழர்களைவிடவும், சக வீரர்களைவிடவும் உயர்ந்தவன் என்று கர்வம் கொள்ளமாட்டான். வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலைத் தவறமாட்டான்.

6. பிறரிடமுள்ள சிறப்புகளைப் பாராட்டுவான். குறைகளைப் பெரிதாக்க மாட்டான். இன்னொருவன் வெற்றி பெறுவதற்கு உதவ எப்போதும் தயாராக இருப்பான்.

7. பிறர் பிழைகளைக் கண்டு நகைக்க மாட்டான். எதிராளியின் தோல்வி கண்டு ஆரவாரம் செய்ய மாட்டான். அவர்களைப் பகைவரை நடத்துவது போல் அல்லாமல் நண்பனைப் போலவே நடத்துவான்.

8. பிறருக்கு மரியாதை தருவான். தன்னைப் பிறர் எவ்வாறு நடத்த வேண்டும் என்று நினைக்கின்றானோ அவனும் பிறரை அவ்வாறே நடத்துவான்.

9. தன் புகழுக்காக அல்லாமல் குழுவின் நன்மைக்காக உழைப்பான். குழுவுக்காக என்ன செய்ய வெண்டுமோ அவை அனைத்தையும் சுயநலமின்றி சிறப்பாகச் செய்வான். வெற்றியடைந்தபோதும் தன்னால்தான் நடந்தது என்று கூறாமல் பண்புடன் நடந்துக்கொள்வான்.

10. தான் செய்யப்போவதை தம்பட்டம் அடிக்கமாட்டான். தான் செய்து முடித்ததைப் பற்றிப் பெருமை பாராட்டிக்கொள்ளமாட்டான். பெருந்தன்மையுடைவனாய் இருப்பான். அதே நேரத்தில் தன் கருத்துகளை ஒளிவு மறைவின்றி தெள்ளத் தெளிவாகக் கூறுவதற்கு அஞ்சமாட்டான்.

11. கடுமையாகப் போட்டியிடுவான். ஆனால், விதிகளின்படி நட்பு முறையிலேயே போட்டியிடுவான. எதிராளி காயப்பட்டுவிட்டால் உதவுவான்.

12. எப்போதும் கட்டுப்பாடு உடையவனாகவும் நேர்மை உள்ளவனாகவும் இருப்பான். உணவு கொள்ளும்போது சுவைத்து மகிழ்ந்து உண்பான். உறங்கவேண்டிய நேரத்தில் உறங்குவதை விரும்புவான்.

வெற்றி என்பது உங்கள் உறுதியையும் நேர்மையையும் பொறுத்தே உள்ளது. இனியும் சாதாரண மனிதர்களைப் போல அல்லாமல் ஒரு புதிய உயரிய லட்சியத்தை உடைய  மனிதனின் வாழ்க்கையைப் போல வாழ விரும்புங்கள்.

Monday, April 24, 2017

உங்களுக்குள் இருக்கும் எதிரி யார் என்று தெரியுமா?

கடினப்பட்டு வேலைசெய்து உங்கள் இலக்கை அடைய நினைத்தாலும் அடைய முடியவில்லையா... செய்யும் வேலைகளில் உங்களுக்கே நிறைவு இல்லையா? அப்படியெனில், உங்களுக்குள் மிகப்பெரிய ஓர் எதிரி இருக்கிறான். அவனை அழித்தால் மட்டுமே உங்களால் கனவு வாழ்க்கையை நினைவாக்கிட முடியும். அதற்கான #Morningmotivationதான் இது.

அந்த எதிரியின் பெயர் 'Sleep Inertia' என ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் `தூக்கமின்மை'. இது, உங்கள் வேலையை மட்டும் பாதிக்கவில்லை... உங்களின் உடல்நலத்தையும் கடுமையாகப் பாதிக்கிறது. `பல் பிரச்னையில் தொடங்கி இதயப் பிரச்னை வரை பல நோய்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுப்பதே இந்தத் தூக்கமின்மைதான்' என்று பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தத் தூக்கமின்மையை வெல்ல, ஒரே ஒரு வழிதான் உள்ளது. அது அதிகாலையில் எழுவது. “சீக்கிரம் எந்திரிச்சா எப்படிங்க நல்லா தூக்கம் வரும்? செம உடான்ஸா இருக்கே!” என்கிற உங்கள் மைண்ட்வாய்ஸ் எனக்கும் கேட்கிறது. ஆனால், அதுதான் உண்மை.  அப்படி அதிகாலையில் எழுவதற்கும், தூக்கமின்மையை வெல்வதற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவை....

1. தேவை ஆழ்ந்த தூக்கம்:  முக்கியமான டிப்ஸ் என்பது, சீக்கிரம் தூங்குவது. “தூக்கம் வந்தா தூங்க மாட்டோமா... என்ன பாஸ்!” என உங்களின்  ஆதங்கம் புரிகிறது. ஆனால், தூக்கத்தை வரவழைக்க இன்றைய நவீன வாழ்க்கையில் சில விஷயங்களைச் செய்தாலே போதும். அதில் முதலில் செய்யவேண்டியது, உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.  ஆழ்ந்த தூக்கம்கொள்ளும் பெரும்பாலானோர், இந்த முறையைத்தான் கடைப்பிடிக்கிறார்கள். 

2. நெட்டு கட்டு: படுக்கைக்குப் போவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் சாப்பிடுவது எவ்வளவு நல்லதோ, அதே அளவுக்கு மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்வதும் நல்லது. ஆஃப் செய்ய முடியாது என்பவர்கள், குறைந்தபட்சம் வைஃபை மற்றும் மொபைல் டேட்டாவையாவது தயவுதாட்சண்யம் இல்லாமல் நிறுத்திவைப்பது நல்லது. கண்கள் சொருகும் நேரத்தில் அலெர்ட் டோனோ, நோட்டிஃபிகேஷன் சவுண்டோ அன்றைய தூக்கத்தின் பாதியைக் குறைக்கலாம். மேலும், தூங்கப்போகும் இரண்டு மணி நேரத்துக்கு முன் மொபைலை அப்பால் வைத்தால் தூக்கமின்மையை விரட்ட முடிகிறது என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

3. கொட்டாவிப் படிப்பு: `சாப்பிட்டாயிற்று... மொபைல் நெட் இல்லாமல் செய்தாயிற்று, தூக்கம் வரும் வரை டிவி பார்க்கலாம்' என ப்ளான் போடுகிறீர்களா? அதுவும் கூடாது. ஆனால், படிக்கலாம். இதுதான் சாக்கு எனக் கிண்டில், இ-புக் என எலெக்ட்ரானிக் ஏரியா பக்கம் போகவே கூடாது. புத்தகத்தில் வாசிக்கலாம். இல்லையென்றால் குடும்பத்துடன் பேசிக்கொண்டிருக்கலாம்.

4. ஆரோக்கியமான உடற்பயிற்சி: இதுவரை நாம் படித்த  மூன்றையும் செய்யத் தொடங்கினாலே அதிகாலை விழிப்பு இலகுவாகிவிடும். 

இனி, காலையில் எழுந்தவுடன் செய்யவேண்டியது. உடனே ஃப்ரெஷ்ஷாகி வாங்கிங், ஜாக்கிங் அல்லது சைக்கிளிங் என உடலுக்குப் பயிற்சி கொடுப்பது. உடலில் உள்ள கலோரிகள் காலையில் செய்யும் உடற்பயிற்சிகளால்தான் அதிகம் எரிக்கப்படுகின்றன. 

5. சன்னுக்கு ஹாய்:  காலையில் எழுந்தவுடன் வெளிச்சத்தை நோக்கிப் போக வேண்டும். வெளிச்சத்தை உணர்ந்தவுடன்தான் உங்கள் மனம் அலெர்ட் நிலைக்கு வரும். என்னதான் காலையில் சரியான நேரத்துக்கு எழுந்து யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டாலும் இது முக்கியம். காலையில் எழுந்தவுடன் வெளிச்சத்தைப் பார்ப்பது இரவில் சரியான நேரத்துக்குத் தூக்கத்தைக் கொடுக்கும்.

6. ஹெவி பிரேக்ஃபாஸ்ட்: முதல் நாள் இரவு எட்டு மணிக்குச் சாப்பிட்டிருப்பீர்கள். காலையில் பெயருக்கு எதையாவது வயிற்றுக்கு அள்ளிப் போட்டுக்கொண்டு, லன்ச் பாக்ஸில் சோற்றை அடைத்துக்கொண்டு ஓடாதீர்கள். காலையில் விரைவாக எழுவதால் பரபரப்பு இருக்காது. எனவே, காலையில் நிதானமாகச் சாப்பிடவும். மதியம் அளவாகச் சாப்பிட்டு வெயிட்டை பேலன்ஸ் செய்யலாம். 

மேலே தூங்குவதற்கான ஐடியாக்கள் மூன்று, தூங்கி எழுந்த பிறகு செய்யவேண்டிய மூன்று என ஆறு பாயின்ட்கள் உள்ளன. இவற்றில் மொபைல் நெட்டை எட்டு மணிக்கு கட் செய்தாலே தூக்கம் தன்னால் வந்துவிடும் என்பது சொந்த அனுபவம்.