Thursday, June 13, 2013

தினமும் ஒரு இஞ்ச்!

தினமும் உங்கள் தன்னம் பிக்கையை அதிகரித்துக்கொள்ள இந்த நான்கு விதிகளைக் கட்டாயம் கடைபிடியுங்கள். 

உங்களைப் படுக்கையில் இருந்து துள்ளியெழச் செய்யும் அளவுக்கு இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்! 

உங்களுக்கு என்ன தேவை, உங்களுக்கு எது மட்டும் தேவை என்பதில் தெளிவாக இருங்கள்! 

உங்கள் இலக்கை அடைய உங்கள் உழைப்பு மட்டுமே போதுமானதாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள் 

இலக்குகளைச் சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, பகுதி பகுதியாக நிறைவேற்றிவெற்றிக் கோட்டை எட்டிப்பிடியுங்கள்! 

உள்ளுக்குள் உறங்குது எரிமலை! 

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டீர்கள். என்ன செய்கிறோம், ஏன் செய்கிறோம் என்றே தெரியாமல் சில முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறீர்கள். அப்போது என்ன செய்வது? இந்த இடத்தில் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். 

உங்கள் வீட்டுக் கதவின் நிறம் என்ன? 

அந்தக் கதவில் சாவித் துவாரம் எந்தப் பக்கம் இருக்கிறது? 

இந்த நொடி உங்கள் கற்பனையில் உங்கள் வீட்டுக் கதவு, அதன் நிறம், சாவித் துவாரம் ஆகியவை காட்சி களாக விரிகின்றனவா? அதுதான்... அதேதான்! இந்த நிஜத்தைக் கற்பனை செய்யும் யுக்தியைத்தான் சிக்கலான சூழல்களைச் சமாளிக்கவும் நாம் கையாள வேண்டும். மனம் நொந்து வெந்து நீங்கள் சொதப்பிக் கொண்டு இருக்கும் சமயம், ஒரு நிமிடம் அமைதியாக உட்காருங்கள். அதற்கு முன் உங்கள் சாதனை என்று நீங்கள் நினைக்கும் சம்பவத் தருணங்களையோ, 'பின்னிட்டப்பா!' என்று மற்றவர்கள் உங்களைப் பாராட் டிய தருணங்களையோ மீண்டும் உங்கள் மனத்திரையில் ஓட்டிப் பாருங்கள். முன்னரே நீங்கள் அனுபவித்த இனிய நினைவுகளை 'ஃப்ளாஷ்பேக்'கும்போது உங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தும் அந்தத் தருணத் துக்கே சென்று மீளும். நிற்க. அதிகபட்சம் ஒரு நிமிடம் தான். அந்த சந்தோஷத் தருணத்தில் கொஞ்சமே கொஞ்சம் நீச்சலடித்து மீண்ட பிறகு, இந்த நொடிக்குத் திரும்புங்கள். இப்போது உங்கள் முன் இருக்கும் இக்கட்டு அத்தனை மிரட்டலாக இருக்காது! 

இலகுவானது அல்ல இலக்கு! 

'Size does matter' என்பார்கள். அதாவது, அளவும் முக்கியம்! வெறுமனே இலக்குகளை நிர்ணயிப்பது மட்டும் போதாது. உங்களைச் செயல்படத் தூண்டும் அளவுக்கு இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். உதாரணமாக, 'நாளை எப்படியாவது கடந்த ஆண்டைவிட ஒரு பாலிசியாவ்து கூடுதலாக பூர்த்திசெய்தால் போதும்' என்பது இலக்காக இருந்தால், தாமதமாகப் படுத்து சோம்பலாக எழுந்து நிதானமாக அடுத்தடுத்த வேலைகளைப் பார்ப்பீர்கள். அதுவே, 'எந்தக்கிளையும் செய்யாத வணிகத்தை நான் செய்யவேண்டும்' என்பதை இலக்காக நிர்ணயித்துக் கொண்டால், அதிகாலை ஐந்து மணிக்கு மேல் உங்களுக்குத் தூக்கம் பிடிக்காது. தீப்பிடித்ததுபோல அலறி ஓடுவீர்கள். அந்த ஓட்டத்தின் ஒவ்வொரு துளி வியர்வையும், ஒரு பவுன் தங்கக் காசுதான். 

படிப்பு, வேலை என்றில்லை... அன்றைய தினம் நீங்கள் எது சம்பந்தமாகத் திட்டமிட்டு இருந்தாலும், அதன் இலக்கைச் சில மி.மீ. (முடிந்தால் கி.மீ.) உயர்த் துங்கள். 'ஐந்துக்குப் பதில் இன்று 50 வாடிக்கை யாளர்களைச் சந்திப்பேன்!', 'இன்றைய பார்ட்டியில் அனைவரது கவனமும் என் பக்கம் இருக்கும்படி ஜோக் அடிப்பேன்', 'இன்று ஜிம்மில் வழக்கத்தைவிட அரை மணி நேரம் அதிகமாகச் செலவழிப்பேன்!' என்று அன்றைய அனைத்து நடவடிக்கைகளுக்கும் இலக்கு நிர்ணயிங்கள். இவ்வாறு நீங்கள் செயல்படும்போது, உங்களுக்குள் நிகழும் மாற்றங்களை மற்றவர்கள் பளிச் என உணர்வார்கள். இப்படி இலக்குகளை உயர நிர்ண யிப்பதில் இன்னொரு வசதி என்னவென்றால், இலக்கில் பாதியை எட்டினாலே அது வழக்கத்தைக் காட்டி லும் அபாரப் பாய்ச்சலாக இருக்கும்! 

இந்த நாள்... உன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்! 

வீடு வாங்குவது, இன்ஜினீயரிங் படிப்பில் டிஸ்டிங்ஷன் பெறுவது, விருப்பப்பட்ட வேலையைப் பெறப் போராடுவது, ஆசைப்பட்ட பெண்ணிடம் காதலைத் தெரிவிப்பது, பிரபல பள்ளியில் குழந்தையைச் சேர்ப்பது என எந்த இலக்கு நிர்ணயித்தாலும், தினமும் அதை நோக்கி ஒரு இன்ச் ஆவது முன்னேறுங்கள். அதாவது அந்த இலக்கை நோக்கிய பயணத்தை ஒரு பழக்கமாக்கிக்கொள்ளுங்கள். தினமும் நாம் அலுவலகத் துக்கோ, பள்ளிக்கோ, கல்லூரிக்கோ செல்கிறோம். எத்தனை அவசரம் இருந்தாலும், என்றாவது ஒருநாள் ஆடை அணிய மறந்து அந்த இடங்களுக்குச் சென்றிருக்கிறோமா? 'அடச்சே! அவசர அவசரமாக் கிளம்புனேனா... அதான் டிரெஸ் போட மறந்து அப்படியே வந்துட்டேன்' என்று நம்மில் யாராவது புலம்பி இருக்கிறார்களா? மாட்டார்கள். ஆடை அணிவதை ஒரு பழக்கமாக்கிக்கொண்டதால் எத்தனை சிக்கலான சூழலாக இருந்தாலும், ஆடை அணிய மறக்க மாட்டோம். இலக்கை நோக்கிய உங்கள் நடவடிக்கைகளையும் அப்படி தினசரி நடவடிக்கை ஆக்கிக்கொள்ளுங்கள். அது உள்ளுக்குள் ஊறிவிட்டால், போகிறபோக்கில் நீங்கள் உயரங்களை எட்டிப் பிடித்து விடுவீர்கள்! 

மிக மிகச் சுருக்கமாக, தினமும் உங்கள் தன்னம் பிக்கையை அதிகரித்துக்கொள்ள இந்த நான்கு விதிகளைக் கட்டாயம் கடைபிடியுங்கள். 

1) உங்களைப் படுக்கையில் இருந்து துள்ளியெழச் செய்யும் அளவுக்கு இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்! 

2) உங்களுக்கு என்ன தேவை, உங்களுக்கு எது மட்டும் தேவை என்பதில் தெளிவாக இருங்கள்! 

3) உங்கள் இலக்கை அடைய உங்கள் உழைப்பு மட்டுமே போதுமானதாக இருக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள்! 

4) இலக்குகளைச் சின்னச் சின்னப் பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு, பகுதி பகுதியாக நிறைவேற்றிவெற்றிக் கோட்டை எட்டிப்பிடியுங்கள்!

No comments:

Post a Comment