Friday, November 9, 2018

எடுத்த காரியம் வெற்றி பெற..

நீங்கள் எதைச் செய்தாலும் வெற்றி மேல் வெற்றி வேண்டுமா?

வாலிபமாக இருந்தாலும் சரி, வயோதிகமாக இருந்தாலும் சரி, நீங்கள் வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் என்றாலும், சுயமாக வேலை தொடங்க எண்ணி இருந்தாலும் உங்கள் நம்பிக்கையில், காரியத்தில் வெற்றி பெற ஒரே தாரக மந்திரம்தான் இருக்கிறது. அதன் பெயர் முயற்சி. ஆனால் வெற்றிக்கு பல வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன? ஒவ்வொன்றாக அறிந்து கொள்ளலாம் இனி. எண்ணித் துணிக கருமம் என்று கூறியிருக்கிறார்கள் தாதையர்கள். `சிந்திக்காதவன் முட்டாள், சிந்திக்கத் தெரியாதவன் கோழை, சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்’ எனக் கூறுகிறார் இங்கிலாந்து மேதை பிரியாண்ட். விஞ்ஞானி ஐன்ஸ்டினோ, ஆழ்ந்த சிந்தனைக்கு அதிகம் பயன் உண்டு என்கிறார்.

சிந்தனை செய்யாமல் தொடங்கும் எந்தக் காரியமும் வீண். செயலில் குதிக்கும் முன் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஒன்றுக்கு பலமுறை திரும்பத் திரும்பச் சிந்திக்க வேண்டும். நேர்மறையாக நல்ல முடிவை எதிர்பார்த்து மட்டுமே செயல்படாமல், எதிர்பாராத திருப்பங்களை சந்திக்கவும், லாபம்போல நட்டத்தை சமாளிக்கவும் மனோ தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திடமான முடிவெடுக்க வேண்டும். துணிந்தபின் விவேகம்தான் இரண்டாவது தேவை. செய்யலாமா? வேண்டாமா? என்று முடிவெடுப்பதற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு செயலில் இறங்கியபிறகு பின்வாங்கவோ, திகைக்கவோ கூடாது. வேகத்தைவிட விவேகம் முக்கியம். சிறுசிறு முயற்சியாக முன்னோக்கியே அடியெடுத்து வைக்க வேண்டும். புதிய புதிய சிந்தனைகள் வெற்றியை தேடித்தரும் அடுத்த வழியாகும். எல்லா தொழில்களிலும் போட்டி உண்டு. பழைய பேப்பர், பலசரக்கு வியாபாரம் முதல் பங்குச் சந்தை, தகவல் தொழில்நுட்பம் வரை எல்லாம் போட்டிதான்.

பரபரப்பான இயக்கத்தில் நாமும் ஒரு பந்தயக் குதிரை என்று எண்ண வேண்டும். நமக்கு கடிவாளம் கட்டப்பட்டு இருந்தாலும் இலக்கு ஒன்றே குறி. ஆனால் வழிகள் பல உண்டு. புதிதாக சிந்தித்து செயல்படுத்த வேண்டும். போட்டியாளருக்கு ஏற்ப வாடிக்கையாளருக்கு சலுகை அளிக்க வேண்டும். தரமான பொருட்களை வழங்க வேண்டும். தொலைநோக்கு சிந்தனையே நம்மை நிலை நிறுத்தும். காலம் ஒரு சுழற்சி முறைக்கு உட்பட்டது. இருந்தாலும் பல புதிர்களைக் கொண்டது. ஆகையால் எதிர்காலத்தைக் கணிப்பது கடினம்தான். ஆனால் நாளைய தேவையையும், மாற்றத்தையும் யூகித்து அறிந்து செயல்பட்டால் வெற்றி கைகூடும்.

காற்றடிக்கும் நேரத்தில் மாவு விற்கவும் கூடாது, ஊசி தேவைப்படும் இடத்தில் நூல் விற்கவும் கூடாது. காலம், தேவை இரண்டையும் கவனத்தில் கொண்டால் வெற்றி என்பது உங்கள் கைகளில் தவழும். நாம் செய்யும் தவறுக்கு அனுபவம் என்று பெயரிடுகிறோம் என்பார்கள். அனுபவம்தான் நம்மைப் பக்குவப்படுத்தும். அவைதான் வாழ்வின் பொக்கிஷங்கள். அவ்வப்போது ஏற்படும் வெற்றி தோல்வி களை அசைபோட்டு அனுபவப் பாடங்களில் தேர்வு பெற்று வெற்றிப் பயணத்தில் பீடு நடைபோடுங்கள். பயத்தை கைவிடுவதே வெற்றிப் பாதைக்கு பலம் சேர்க்கும். தோல்வியைக் கண்டு பயம் கொள்ளக்கூடாது. தடங்கல்களைக் கண்டு தயங்கி நிற்க கூடாது. ஒரு மேட்டை கடக்க வேண்டுமென்றால் இரண்டு பள்ளங்களை கடந்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றியின் அடிப்படையே பேச்சுக்கலைதான். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்களே. வாழ்க்கையின் தாரக மந்திரம் அதுதான். வியாபாரத்திலும் அதுதான் பெரும் சக்தி. உற்சாகமாகப் பேசினால் உலகத்தையே வளைத்துப் போட முடியும். பேச்சுடன் முகத்தில் புன்னகையும் ஏந்தியவர்களுக்கு வெற்றிமேல் வெற்றிதான். சாதனைக்கு எல்லை கிடையாது. சோதனை இல்லாமல் வெற்றியும் கிடையாது. எத்தனை இடையூறுகள் வந்தாலும் முயற்சியை இடையில் விடக்கூடாது. `கிடைத்ததுபோதும்’ என்று சலிப்பு கொள்ளவும் கூடாது. எடுத்த காரியத்தில் உறுதி இருக்க வேண்டும். அதை வென்று முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment