Friday, August 12, 2016

திறந்த மனமே சிந்தனை தெளிவாம்

நீங்கள் விரும்பும் துறையில் சாதனை படைக்க வேண்டும் என்றால், உங்களைப் பற்றியும், குடும்பம், சமுதாயம் பற்றியும், மனித உறவுகள், அறிவியல் வளர்ச்சி, அறநெறிகள், சமயங்கள் பற்றிய தெளிந்த கண்ணோட்டம் உங்களுக்குத் தேவை.

சரியான கண்ணோட்டம் இல்லாத போது உங்கள் முயற்சிகள், தொடரும் உழைப்பு எல்லாமே பயனற்றுப் போகின்றன. அல்லது தடைபட்டுப் போகின்றன.

உலகைக் குறித்தும் உலகின் இயக்கம் குறித்தும், மக்கள் மனப்பாங்கு குறித்தும் தெளிவான கண்ணோட்டம் அமைய, தெளிவான திருத்தமான சிந்தனை தேவைப் படுகிறது. திருத்தமான சிந்தனை அமைய திறந்த மனம் தேவைப்படுகிறது.

திறந்த மனம்தான் ஒருவனைச் சுதந்திர மாகக் சிந்திக்க வைக்கிறது. மூடிய மனம் எதையும் பரிசீலிக்காமலேயே ஒன்றைப் புறக்கணிக்கிறது. தொடர்ந்து எதிர்க்கிறது.

புதிய கருத்திற்கும், யோசனைக்கும், அனுபவங்களுக்கும் தன் மனதை மூடி வைத்து, பரிசீலிக்கவே மறுக்கும் ஒருவன் தன் ஆளுமையை அடிமைப்படுத்தி, இயங்காமல், வளராமல் செய்து விடுகிறான்.

மூடிய மனம் சகிப்புத்தன்மையைக் சாகடிக்கிறது. புதிய வாய்ப்புகளைப் புரிந்து கொள்ள மறுக்கிறது. புதிய தொடர்புகளை ஏற்க மறத்துவிடுகிறது.

திறந்த மனதுடன் சிந்திக்கும்போது காரியங்களைப் பற்றி புதிய கண்ணோட்டம் அமைகிறது. உங்கள் கற்பனைகள் புதிய திசைநோக்கி விரிவடைகிறது. உங்கள் முன்னேற்றத்திற்கான யோசனைகள் உங்களுக்கு அலையலையாக உருவாகின்றன.

நுண்ணறிவுடைய மனிதர்கள் கூட புதிய அறிவியல் முறைகள், உண்மைகள் முதன்முதலாக அறிவிக்கப்பட்டபோது அவற்றைக் கேலி செய்தார்கள். கண்டு பிடித்தவர்களுக்கு கண்டனத்தையே பரிசாக அளித்தார்கள்.

திறந்த மனமுடையவர்கள் மட்டுமே புதிய உண்மைகளைப் பரிசீலித்தார்கள் எதுவும் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று உருவாக்கித் தமக்கும் பெருமை சேர்த்து மக்கள் சமுதாயத்திற்கு அளப்பரும் சேவை செய்தார்கள்.

மூடிய மனதை உடையவர்கள் முடியாது என்று குரல் கொடுக்கும் அதே நேரத்தில் திறந்த மனதை உடையவர்கள் தொழிற்துறையிலும், வணிகத் துறையிலும் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டுள்ளார்கள்.

மூடியமனம் எவ்வாறு அமைகிறது. விருப்பு வெறுப் புடன் சிந்திக்கப் பழகிவிட்டால் உள்ளம் மூடிக்கொள்கிறது. மூட நம்பிக்கை அங்கே உருவாகிறது. எதிலும் உணர்ச்சி வசப்பட்டுச் சிந்திக்கும்போது உண்மையை அறியமுடியாமற் போகும். மற்றவர் கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்க மறுக்க வேண்டி வரும். வதந்தி களையே உண்மை என்று மயங்கும்படி நேரும்.

நீங்கள் வாழ்க்கையில் சாதனை படைக்க விரும்பினால் மனதைத் திறந்துவிட்டு புதிய கருத்துக்களையும், புதிய வாய்ப்புகளையும் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் பரிசீலிக்க வேண்டும்.

நமக்கு முன்னர் வாழ்ந்த மேதைகள் புதிய கருத்துக்களைச் சொல்லிவிட்டு மூடிய மனம் பெற்றவர்களால் பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.

சாக்ரடீஸுக்கு நச்சுக் கோப்பை, ஏசுவுக்கு சிலுவை மரணம், கலிலியோவுக்கு வீட்டுக்காவல்.

“குதிரையோ, மாடோ இழுக்காமல் தானே நகரும் வாகனத்தைச் செய்வேன்” என்று ஹென்றிபோர்டு முதன்முதலில் சொன்னபோது கேலி பேசப்பட்டார்.

காற்றில் உள்ள ஈதர் ஒலி அலைகளைத் தாங்கிச் செல்லக்கூடியது. அதன் உதவியால் ஓரிடத்தில் பேசுவதை ஒலியலைகளாக மாற்றி பல்லாயிரம் மைல்களுக்கப்பால் மீண்டும் பேச்சாக மாற்றிக் கேட்க முடியும் என்று மார்க்கோணி சொன்னபோது அவரைப் பைத்தியம் என்று முடிவு கட்டினார்கள்.

இராக்கெட் விண்கலங் களை உருவாக்கி, மனிதனைச் சந்திரனில் கொண்டுபோய் இறக்க முடியும் என்று அறிவியலறிஞர்கள் முதன்

முதலில் சொன்னபோது சாத்தியமே இல்லாத அதீத ஆசை என்று கடிந்துகொள்ளப்பட்டார்கள்.

ஆகவே திறந்தமனம் உங்களிடம் இல்லை என்றால் தெளிவான சிந்தனையை நீங்கள் பெறமுடியாது.

தெளிவான சிந்தனை இல்லாதவன், தன் ஆற்றலை உணர முடியாது. தன்னூக்கம் கொள்ள முடியாது. வாழ்வில் வெற்றிபெற முடியாது.

மற்றவர் முன்னேற்றத்தைக் காணும்போது பொறாமை அவனிடம் உருவாகும். அவர்கள் தவறான வழியில் பதவியைப் பிடித்துவிட்ட தாகவும், பணத்தைச் சேர்த்து விட்டதாகவும் பேசிக் கொண்டிருப்பான்.

ஒருவனிடம் பொறாமை சேரும்போது வெறுப்புணர்வு, பகையுணர்வு ஆகியவை அவனை அண்டிக்கொள்ளும். பிறரை விமர்சனம் செய்வதில் காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பான். தன் முன்னேற்றத்தைத் தானே தடுத்து நிறுத்தி விடுவான்.

மூடிய மனமுடையவன் காரியங்களை பிறர் கோணத்திலிருந்து பரிசீலிப்பதில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள் என்று சாதிக்கிறான்.

தன் மதம் மட்டுமே உயர்வானது, மற்றவை தாழ்ந்தவை என்று பேசுகிறான். தன்மொழி மட்டுமே சிறப்பானது மற்றவை இழிவானவை என்கிறான். தன் இனம் மட்டுமே வாழ வேண்டியது; மற்றவை சாக வேண்டியவை என்னும் உணர்வோடு செயல்படுகிறான். தான் சார்ந்துள்ள கட்சி மட்டுமே ஆளத் தகுதியானது; மற்றவை தகுதியற்றவை எனச் சாதிக்கிறான்.

திறந்த மனம் இல்லாத வரிடம் தெளிந்த சிந்தனை பிறப்பதில்லை. விருப்பு வெறுப்புடன் மதிப்பீடுகளைச் செய்வதனால் சரியான முடிவு களுக்கு வர முடிவதில்லை.

நுண்ணறிவும், புத்திசாலித் தனமும் உடையவர்கள் சிலர் தெளிந்த சிந்தனை இல்லாதவர்களை அடையாளம் கண்டு தம் சுயநல நோக்கங்களுக்கு அவர் களை அடிமையாக்கி விடுகிறார் கள். சாதி, மத, இன, மொழி அடிப்படை உணர்வுகளைத் தூண்டி தம் நோக்கங்களுக் கேற்ப அவர்களை ஆட்டி வைக்கிறார்கள்.

இவர்கள் குழுவாகச் சேர்ந்து கொள்ளும் போது அமைதியான உலகச் சூழ் நிலையை மாற்றி அமளிக் காடாக்கி விடுகிறார்கள். தம் வாழ்க்கையை வீணாக்கி சமுதாய முன்னேற்றத் தையும் பாழ்படுத்தி விடுகிறார்கள்.

சமுதாயத்தின் எல்லாச் சீரழிவுகளும் மூடிய மனதில் தான் துவங்குகின்றன. திறந்த மனம் எல்லாவற்றையும் பரிசீலிக்கிறது. சிறந்ததை ஏற்கிறது. தெளிந்ததை மதிக்கிறது.

மாபெரும் வெற்றிபெற விரும்பும் நீங்கள் திறந்த மனதுடன் புதிய கருத்துகளைப்

பரிசீலிக்க வேண்டும். எது உண்மை என்று கவன மாக ஆராய வேண்டும். உங்கள் குறிக்கேளுக்குச் சாதகமானவற்றைப் பற்றிக்கொள்ள வேண்டும். சோதித்துப் பார்க்காமல் எதையும் விமர்சிக்கவும் கூடாது. ஏற்கவும் கூடாது.

ஆழ்மனம், அதன் ஆற்றல்கள், அதை இயக்கப் பயன்படும் ஆட்டோசஜசன், மனச் சித்திரம், நமக்கு எதிராக உள்ள சூழ்நிலையை மாற்றும் மனச்சித்திரத்தின் ஆற்றல், நம்பிக்கை யின் மந்திரசக்தி போன்ற ஆற்றல் ஆகியவை உங்களுக்குப் புதிய செய்திகளாக இருக்கலாம். விநோதமாகக் கூடத் தோன்றலாம்.

ஆனால் முப்பது, அறுபது நாட்கள் அவற்றைச் செய்து பார்க்கும்போது, நடைமுறைப் படுத்தும்போது உள்ளக் கிளர்ச்சியை நீங்கள் அனுபவிப்பீர்கள். உண்மையை அறிவீர்கள்.

தெளிந்த சிந்தனையோடு செயல்படுபவர்க்கு மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதால், அவ்வெற்றிக்கு வழிவகுக்கும் அதிமுக்கியமான சில செய்திகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள்.

ஆழ்மனம் ஒரு வளமான நிலம் போன்றது. வெற்றிக்கான நல்ல எண்ணங்களை, நம்பிக்கை யுடன், எதிர்பார்ப்புடன் பதிக்கும்போது, எண்ணமாகிய விதை முளைத்துச் செடியாகி, மரமாகி உங்கள் எண்ணத்திற்கேற்ற கனிகளைத் தந்தே தீரும்.

நல்ல எண்ணங்களை விட்டு வறுமை, பற்றாக்குறை, தோல்வி, அவமானம் பற்றிய எண்ணங்களை விரும்பியோ, விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ, மனதில் பதித்தால் அவையே செடியாகி, மரமாகி அதற்கேற்ப கனி கொடுக்கும்.

வெற்றிக்கான விதைகளை எண்ணத்தின் மூலம் நீங்களாக ஊன்றாமல் விட்டுவிட்டால், நல்ல நிலத்தில் களைகளும், முட்செடிகளும், முளைத்துப் புதராவது போன்று, வாழ்க்கையில் வறுமையும், தோல்வியுமே விளைந்து கொண்டிருக்கும்.

ஆழ்மனமாகிய நிலத்தில் நல்ல விதைகளை விதைப் பதற்குப் பயன்படும் உளவியல் உத்திதான் ஆட்டோ சஜசன். தற்போதைய வாழ்க்கை நீங்கள் விரும்பாத நிலையில் இருக்குமானால் அதை ஆட்டோ சஜசனால் மட்டுமே மாற்ற முடியும்.

பழைய பாடல் பதிவாகியுள்ள ஒரு கேசட்டில், புதிய பாடலைப் பதிவு செய்வது போன்று, எதிர்மறை எண்ணங் கள் பதிவாகியுள்ள ஆழ்மனதில், ஆக்கப் பதிவுகளை பதிக்க வேண்டும்.

இதற்கு “ஆட்டோ சஜசன்” என்பது என்ன என்று முற்றிலும் ஆராய்ந்து அறிவது அவசிய மில்லை. “ஸ்விட்ச்” சைப் போட்டால் மின்விளக்கு எப்படி எரிகிறது? என்று கேட்டால் எத்தனை பேருக்கு விடை தெரியும்? விடை தெரியாமலே மின்விளக்கைப் பயன்படுத்துகிறோமா இல்லையா? அது போன்று ஆட்டோ சஜசனைப் பயன்படுத்தி உங்களால் வெற்றி பெற முடியும்.

அதுபோன்றே, மனச் சித்திரம் பார்த்தல் என்னும் உத்தியும் உங்கள் வெற்றி வாழ்க்கையை அமைத்துத் தரும். அதைப்பற்றி நீங்கள் முழுமை யாக ஆராய்வது அவசியமில்லை. நடைமுறைப் படுத்தினாலே நல்ல முன்னேற்றம் காணமுடியும்.

வெற்றிபெற முடியும்; சாதிக்க முடியும்; வளமடைய முடியும் என்று பலரால் ஏன் நம்ப முடியவில்லை? அவர்களுக்கு நம்பிக்கையின் ஆற்றலைப் பற்றித் தெரியாததே காரணம்.

மனிதனுக்கு எதிராக விரோதமாக, பாதகமாக இருக்கும் சூழ்நிலையை மாற்றும் சக்தி அவனைத் தவிர வேறு எவரிடமும் இல்லை.

விரும்பாத சூழ்நிலை ஒருவருக்கு அமைந்திருக்குமானால், அழுவதாலோ, புலம்பு வதாலோ, கவலைப்படுவதாலோ அதை மாற்றி அமைக்க முடியாது. நம்பிக்கை என்னும் மந்திர சக்தி மட்டுமே அதை மாற்றி அமைக்கும்.

“உங்கள் சூழ்நிலை சாதகமாக இல்லாத நிலையிலும், அது சாதகமாக மாறும் என்பதற்கு அறிகுறியோ, அடையாளமோ, ஆதாரமோ இல்லா நிலையிலும், விரைவில் சூழ்நிலை சாதகமாக, ஆதரவாக, உதவியாக, ஒத்துழைப்பாக, வளமாக, வெற்றிகரமாக மாறியே தீரும்” என்று நம்பிக்கையைப் பதிவு செய்யுங்கள்.

நீங்கள் அடைய விரும்புவது, விரும்புகிற காலவரையறைக்குள் கிடைத்தே தீரும். எப்படி என்று தெரியாது. அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் கிடைத்தே தீரும் என்று சொல்லிச் சொல்லி மனதில் பதிய வையுங்கள்.

ஆழ்மனச் சக்தி ஐம்புலன் களால் அறியப்பட முடியாதது. “நம்பிக்கை” என்னும் ஆற்றலை யும் ஐம்புலன்களால் அறிய முடியாது, ஆனால் அவற்றைப் பயன்படுத்தி நல்ல விளைவுகளைக் கொண்டு அறிய முடியும்.

மேலோட்டமாகப் பார்த்தால் மூட நம்பிக்கை போன்று தோற்றமளிக்கும். மூட நம்பிக்கை என்று நினைத்து ஏமாற வேண்டாம். திறந்த மனதோடு ஆராய்ந்து தெளிந்த சிந்தனை உடையவர்கள் இவற்றை நிரூபித்திருக்கிறார்கள்.

அவர்தம் அனுபவங்களைத் திறந்த மனதுடன் ஆராயுங்கள்; தெளிந்த சிந்தனை அமையும்.

வெற்றியின் ஆறாவது இரகசியம் இதுதான்.
திறந்த மனமே சிந்தனைத் தெளிவாகும்.

No comments:

Post a Comment