Wednesday, December 10, 2014

வாழ்க்கை லட்சியம்!

வாழ்க்கை லட்சியம்!

‘புலரும் ஒவ்வொரு பொழுதும் நாம் இழந்துவிட்டதை மீண்டும் அடைய ஒரு புது வாய்ப்பு!’

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் இருக்கும்.

நம்மில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட லட்சியங்களும் இருக்கும்!!

இன்னும் சிலருக்கு லட்சியங்கள் மாறிக் கொண்டேயிருக்கும்!!

ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு மூன்று வயது சிறுவனை அவனுடைய தாய் கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். சிறுவன் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்ததும், ‘அம்மா நான் பெரியவனானதும் கண் டாக்டராகப் போகிறேன்.’ என்கிறான். தாய் தன் மகனுடைய லட்சியத்தை செவியுற்று மிகவும் மகிழ்ச்சியடைகிறாள். வருகின்ற வழியில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்துவிட்டு இறங்கி வீட்டை நோக்கி நடக்கையில் மகன், ‘அம்மா நான் பெரியவனானதும் கண்டக்டராகப் போகிறேன்.’ என்றான்.

நம்முடைய வயதும் அனுபவமும் அதிகரிக்க, அதிகரிக்க, நம்முடைய பார்வையின் கோணமும், ஆழமும் மாறத்தான் செய்கின்றன. இல்லையென்று சொல்வதற்கில்லை.

ஆனால் அந்த மாற்றம் நம்முடைய வாழ்க்கையின் போக்கை அடியோடு புரட்டிப் போட்டுவிட நாம் அனுமதிக்கலாகாது.

கள்வனைப் பார்த்து கள்வனைப் போலானால் என்ன என்றும் காவலனைப் பார்த்து காவலானானால் என்ன என்றும் நினைத்தால் அது ஒன்றுக்கொன்று முரணான பார்வையாகிவிடும்.

நம்முடைய லட்சியம் ஒன்றே ஒன்றுதான்..

அது என்னவென்பதைக் குறித்த காலத்தில் கணித்துக்கொண்டு அந்த இலக்கை நோக்கியே நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நகர்வும் அமைய வேண்டும்.

லட்சியத்தையடைய நாம் வகுத்திருக்கும் பாதைகள் மாறலாம், ஆனால் நோக்கம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

நம்முடைய தவறான பாதையால், அணுகு முறையால் தோல்விகளை, சரிவுகளைச் சந்திக்க நேரலாம்.

ஆனால் நம்முடைய லட்சியப்பயணத்தில் சோர்வோ, தயக்கங்களோ அல்லது தடுமாற்றங்களோ இருக்கலாகாது.

இன்று இல்லையேல் நாளை, நாளையில்லையேல் மறுநாள்..

புலரும் ஒவ்வொரு பொழுதும் நமக்கு புதுப்புது வாய்ப்புகளை ஏற்படுத்தும் யுகங்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்..

புலரும் ஒவ்வொரு நாளும் எப்படி மடிகிறதோ அதுபோன்றே தோல்விகளும், சரிவுகளும்..

ஒரு சரிவு முடிவடையும் இடத்திலிருந்து மற்றொரு உயர்வு ஆரம்பமாகிறது என்பதையும் மறக்கலாகாது..

புலரும் ஒவ்வொரு பொழுதும் முந்தைய இரவின் முடிவுதானே!

No comments:

Post a Comment