Tuesday, December 18, 2018

சாதனை படைப்பது எப்படி? இயற்கையை வெற்றி கொள்!

* உள்ளக்கதவைத் திறந்து வையுங்கள். நாலாபுறத்திலும் இருந்து நல்ல விஷயங்கள் அதற்குள் நுழைய அனுமதி அளியுங்கள்.
* எல்லாப் பூக்களில் இருந்தும் தேனைப் பெற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் பகை பாராட்ட வேண்டாம். நட்புணர்வுடன் பழகுங்கள். ஆனால், உங்கள் சொந்தக்கருத்தை விடாப்பிடியாகப் பற்றுங்கள். 
* மனிதன் பிறந்திருப்பது இயற்கையை வெற்றி கொள்ளத் தானே தவிர, அதற்கு ஒருபோதும் பணிந்து போவதற்கு அல்ல.
* பாமர மக்களுக்கு உயர்வான எண்ணங்களைப் பரப்புவதற்காகவே புராணங்கள் எழுதப்பட்டன.
* கடவுளை வணங்கும் போது, அவரை நமது தாய் தந்தையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்களை சகோதர சகோதரிகளாக நேசிக்க மறந்து விடுகிறோம்.
* நாலுபேர் அறிய நல்லவனாக காட்டிக் கொண்டு, பிறர் அறியாதவகையில் தீய செயல்களில் ஈடுபடுவது இழிவான செயல்.
* ஒழுக்கம் நிறைந்த மனிதனே நிஜமான கல்விமான். 
* தன்னம்பிக்கையை இழப்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதற்குச் சமம்.
* குற்றம் காண்பதை விட குணத்தைக் காண்பது தான் உயர்ந்த குணம்.
* பெற்றுக் கொள்பவன் அல்ல. கொடுப்பவனே பேறு பெற்றவன்.
* தன்னலத்தை ஒழிப்பதில் தான் மகிழ்ச்சி அடங்கி இருக்கிறது. உன்னைத் தவிர வேறு யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது.
* தன்னை மறந்து பணியாற்றும்போது தான் கடமையில் சாதனை படைக்க முடியும்.
* கோபப்படும் மனிதனால் சிறப்பாக பணியில் ஈடுபட முடியாது. மன்னிக்கும் மனோபாவம் கொண்டவனே, தனது பணியில் தீவிரமாக செயல்பட முடியும்.
* எல்லோருக்கும் ஒரே மாதிரியான இன்பம் தரும் பொருள் உலகத்தில் இல்லவே இல்லை.
* கருணை நிறைந்தவர்களாக மாறுங்கள். ஏனெனில், கருணையே இனிய சொர்க்கம்.
* எல்லாவற்றையும் ஆராய்ந்து பாருங்கள். ஆனால், உங்கள் கருத்தில் உறுதியாக இருங்கள்.
* வாழ்வில் ஒரு நன்மையாவது செய்யுங்கள். அதனால், பாவம் அனைத்தும் தீர்ந்து விடும். 
* பிறவிப்பிணி நீங்க வேண்டுமானால், ஆசையின் சாயலே அற்றுப் போய் விட வேண்டும். வேறெந்த முயற்சியும் வீணானவை தான்.
* யார் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டுஇருக்கட்டும். எதைச் சரி என்று நினைக்கிறீர்களோ அதை கடவுளின் வழியில் செய்து கொண்டிருங்கள்.
* பெண்ணுக்கு நாணமே ஆபரணம். அது இல்லாத பெண்ணைப் பெண் என்றே சொல்ல முடியாது. 
* ஆசையை யாராலும் விலக்க முடியாது. உடம்பு என்ற ஒன்று இருக்கும்வரை அதுவும் இருந்தே தீரும். ஆனால், அதை கட்டுக்குள் வைக்க வேண்டும். 
* "கடவுள் என்னுடையவர்' என்ற சிந்தனையை விதைப்பதற்கு ஏற்றது குழந்தைப் பருவமே. பக்தியை குழந்தைப் பருவத்திலேயே கற்றுக் கொடுங்கள். 
* தாயும் தந்தையும் மகிழ்ச்சி அடைந்தால், கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார்.
* நீங்கள் எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பொருட்டு மனம், இதயம், ஆன்மா இந்த மூன்றையும் அர்ப்பணித்து விடுங்கள்.
* உயர்ந்த லட்சியம் கொண்டவன் ஆயிரம் தவறு செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகளைச் செய்வான்.
* நாம் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். புனிதமும் பூரணத்துவமும் கொண்டவர்கள். மகத்தான செயல்களைச் செய்வதற்காகவே ஆண்டவன் நம்மைப் படைத்து இருக்கிறான். அவற்றை நாம் விரைந்து செய்து முடிப்போம்.
* நல்ல எண்ணங்களின் கருவிகளாக்கிக் கொள்ளும் முயற்சியில் மனதை எப்போதும் ஈடுபடுத்துங்கள். 
* சரியான வழியில் செலுத்தப்பட்ட மனம் நம்மைக் காக்கும். இறுதியில் நம்மை விடுதலை பெறச் செய்யும். 
* தூய உள்ளம் படைத்தவர்கள் அதிகமானால், இந்த உலகமும் தூய்மை பெற்றதாக மாறி விடும்.
* இதயம் விரிவடைந்தால் தான் உண்மை ஞானம் உதிக்கும். உண்மை ஞானம் மலர்ந்தால் மனதில் நம்பிக்கை நிலைக்கும்.
* பொன், பொருளில் ஆசை கொண்டு அற்ப வாழ்க்கை நடத்துபவர்கள் பொருட்படுத்தக் கூடியவர்கள் அல்ல.
* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ அவரே மகாத்மா.
* கோழைகளே பாவச் செயல்களைச் செய்வர். தைரியம் கொண்ட மனிதர்கள் ஒருக்காலும் பாவம் புரிய நேர்வதில்லை. 
* வஞ்சனையால் பெரிய விஷயம் எதையும் வாழ்வில் சாதித்து விட முடியாது. 
* அறிவைப் பலவீனப்படுத்தும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை விஷம் எனக் கருதி ஒதுக்குங்கள்.
* உண்மை உங்களை எங்கே இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். ஒருபோதும் கோழையாகவோ, கபடதாரியாகவோ இருக்காதீர்கள்.
* நிச்சயமாக நன்மை விளையும் என்று உணர்ந்தால் மட்டுமே மனதில் இருப்பதை வெளிப்படுத்துங்கள்.
* திண்ணையில் உட்கார்ந்திருப்பவன் கீழே விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ அல்லது சுளுக்கு ஏற்படுவதோடோ போய்விடும். ஆனால், பணக்காரன், பதவிக்காரன் மாடி மீது இருக்கிறான். அவன் கீழே விழுந்தால் எலும்பு முறிந்துவிடும், ஏன்...உயிருக்கே ஆபத்து உண்டாகும்.
* உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனும், "தான் ஒருவனே மகா கெட்டிக்காரன், மகா யோக்கியன், ரொம்ப அழகுள்ளவன்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதுபோலவே, துன்பப்படுபவனும் "தான் ஒருவன் மட்டுமே உலகிலேயே அதிகத் துன்பப்படுபவன்' என்று எண்ணிக் கொள்கிறான். ஆனால், இரண்டுமே உண்மையல்ல. சுகமும் துக்கமும் இரட்டைப்பிறவிகள். சுகம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கும். இன்பமும் துன்பமும் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதில்லை. எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் விட்டாலன்றி நிம்மதிக்கு வேறு வழியில்லை.
* காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை மனதில் நினைத்து வழிபடுங்கள்.
* "இன்றைய நாள் முழுவதும் நல்ல பொழுதாக அமைய வேண்டும்' என்று தினமும் வேண்டிக் கொள்ளுங்கள்.
* புண்ணிய நதிகள், பசு, சிரஞ்சீவிகள், சப்தகன்னியர்களை குறைந்தது ஒரு நிமிடமாவது சிந்தியுங்கள்.
* வாரம் ஒருமுறையாவது கோயில் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.
* அண்டைவீட்டாரையும், மற்ற மனிதர்களையும் அன்புடன் நேசித்து வாழுங்கள்.
* சாப்பிடும் முன் மிருகம், பறவைகளுக்கு உணவு அளித்த பின்னரே சாப்பிடுங்கள்.
* அன்றாடம் அவரவர் சக்திக்கேற்ப தர்மம் செய்து வருவது நன்மை அளிக்கும்.
* நீராடிய பின் நெற்றியில் தவறாமல் திருநீறு, குங்குமம் வைத்துக் கொள்வது அவசியம்.
* உறங்கும் முன் அன்றைய நாளில் நடந்த நல்லது, கெட்டதை எண்ணிப் பார்ப்பது நம்மைத் திருத்திக் கொள்ள வழிவகுக்கும்.
* பாவிகளை நாம் வெறுப்பதாலும், அவர்களை கோபிப்பதாலும் பயனில்லை. அவர்களுடைய மனசும் நல்ல வழியில் திரும்பவேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.
* நம் நாட்டில் முற்காலத்தில் கல்வியின் முதல் நோக்கம் அமைதியை அடைவதே ஆகும். ஆத்ம ஞானத்தை அளிக்கும் கல்வியைப் 'பரவித்யை' எனவும், மற்றவற்றை 'அபரவித்யை' எனவும் கூறுவர்.
* பாவத்திற்கு மூலம் கெட்ட காரியம். கெட்ட செயலுக்கு மூலம் ஆசை. ஆகையால், நம் கஷ்டம் அனைத்திற்கும் மூலகாரணமாகிய ஆசையை நிவர்த்தி பண்ணினால், நிரந்தரமான துக்க நிவர்த்தி உண்டாகும்.
* கடவுள் ஒன்று என்று சொல்வதோடு மற்ற மதங்கள் இருந்துவிடுகின்றன. ஆனால், இந்துமதமோ ஒரே கடவுளை அவரவர் மனோபாவப்படி அன்போடு வழிபட பலப்பல தெய்வ வடிவங்களை நமக்குக் காட்டுகிறது.
* தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள் கூட அவனை ஆதரிக்கும். அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகி விடுவான்.
* அக்னியில் நெய்யை விட்டால் அது அணைந்தா போகிறது? மேலும் பெரிதாக வளர்கிறது. இப்படியே ஓர் ஆசை பூர்த்தியானவுடன் இன்னொரு ஆசை மூள்கிறது.
* கஷ்டங்களைச் சொல்லிக் கொள்ளாமல் யாராலும் இருக்க முடியாது. வெளிப்படச் சொன்னாலே அதில் ஒரு நிம்மதி பிறக்கிறது.
* தமிழ்நாடு ஒரு குளிர்சாதன பெட்டி போல எல்லா பாஷைகளையும், எல்லா நாகரீகங்களையும் கெடாமல் குளிர்ச்சியுடன் காத்துத்தந்து வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் நிறைந்திருப்பது எது? வேதம் நிறைந்த தமிழ்நாடு என்று பாரதியார் பாடியது உண்மையாகும்.

1 comment: