Thursday, September 10, 2015

மகிழ்ச்சி… மகிழ்ச்சி… மகிழ்ச்சிக்காகத்தானே?

மகிழ்ச்சி… மகிழ்ச்சி… மகிழ்ச்சிக்காகத்தானே?

மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழத்தான் அனைவரும் விரும்புகிறோம். கலைகள் முதல் காதல் வரை, சாமி முதல் சாராயம் வரை மனிதன் தேடித் தேடி ஓடுகிறான். ஏன்? மகிழ்ச்சி… மகிழ்ச்சி… மகிழ்ச்சிக்காகத்தானே?

மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய என்ன செய்வது? நம் சூழலிலும் அன்றாட வாழ்விலும் அது எளிமையாகக் கிடைக்க வழி இருக்கிறதா? நிச்சயம் இருக்கிறது. நம் வாழ்க்கைமுறையில் சிறுசிறு மாற்றங்களைச் செய்தாலே போதும்… மகிழ்ச்சியைப் பரிசாகப் பெற முடியும். ஆனந்தமான வாழ்வே ஆரோக்கியத்தின் ஆணிவேர். இனி மகிழ்ச்சியில் திளைக்க சில மகத்தான வழிமுறைகள்…

ஸ்மைல் ப்ளீஸ்!
புன்னனகைக்கும்போது, முகத்தில் இருக்கும் தசைகள் தளர்வடைகின்றன. மூளையில், எண்டார்பின் (Endorphin) எனும் ஹார்மோன் சுரக்கிறது. இது மன அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சியைத் தருகிறது.  மூளைக்குச் சந்தோஷமான சூழல் எனும் செய்தியை அனுப்பி, நல்ல மனநிலையை உருவாக்கித் தருகிறது.புன்னகை நிறைந்த முகம், இனிய சூழலை உருவாக்கும் மோன மந்திரம்.

அதிகாலை தரும் ஆனந்தம்!
அதிகாலை, சூரியன் உதயமாகும் நேரத்தில் மாடியில் இருக்கப் பழகிக்கொள்ளுங்கள். அதிகாலை காற்றும் வெளிச்சமும் நல்ல மனநிலையைத் தருபவை. எண்டார்பின் சுரந்து, உங்கள் மனதையும் உடலையும் உற்சாகமாக்கும். ஒரு நாளைக்குத் தேவையான வைட்டமின் டி-யை நம் உடல் எடுத்துக்கொள்ள முடியும். அதிகாலைக் காற்று அந்த நாளையே புத்துணர்ச்சியாக்கும். சோகம், கவலை ஆழ்மனதைத் தாக்காமல் பார்த்துக்கொள்ளும்.

காற்றும் வெளிச்சமும் நிரம்பட்டும்!
இருளான அறையில் இருக்கும்போது, மனத்தளர்ச்சி ஏற்படும். சோகம், கவலை போன்ற எதிர்மறை எண்ணங்கள் உதயமாகும். வெளிச்சமான அறை, பிரகாசமான சித்திரங்கள் வரைந்த அறை, விளக்குகள் ஏற்றப்பட்ட அறைகளில் நேரத்தைச் செலவழிக்கும்போது உற்சாகம் பிறக்கும். அதோடு காற்றோட்டம் நிறைந்த அறையில் இருப்பது மிகவும் முக்கியம். தேவையான ஆக்சிஜன் நமக்குக் கிடைக்கும்போது, கவலைக்கு இடம் இருக்காது.

பணியிடமும் வீடும் இரண்டு கண்கள்!
வேலையையும் வீட்டையும் சம முக்கியத்துவத்துடன் கையாள வேண்டும். இரண்டையும் ஒன்றை ஒன்று பாதிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. அன்றைய வேலையை அன்றைகே முடித்துவிட்டால் தேவையில்லாத டென்ஷன், பதற்றம் ஏற்படாது. வேலையைத் தள்ளிப்போடும்போது, ஏதாவது ஒரு சூழ்நிலை நம்மை சரிவர இயங்க விடாமல் தடை செய்துவிடும்.

ஆரோக்கியமான உறவுகள்!
‘எனக்கு இவர்களைப் பிடிக்காது; இவர்களைக் கண்டாலே ஆகாது’ எனப் பல முரண்பாடுகளை மனதில் வைத்திருப்போம். இதையெல்லாம் ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு, யாராக இருந்தாலும் சின்னப் புன்னகை புரிந்து, ஒரு வணக்கம் சொல்லி வருவது நல்ல உறவுக்கான அடித்தளம். குடும்பத்துடன் தினமும் ஒரு வேளையும்,   நண்பர்களுடன் வாரம் ஒருநாளும் உணவைச் சேர்ந்து சாப்பிடுவது, உரையாடுவது போன்ற பழக்கங்களைக் கட்டாயமாக்குங்கள். ஒவ்வொரு மனிதருக்கும் தேவைப்படும் எனர்ஜி பூஸ்டர் இதுதான்.

இசையோடு இணைவோம்!
இசை ஓர் அற்புதமான ‘மூட் எலிவேட்டர்’. உணர்வை மேம்படுத்தும் டானிக்கும் இதுவே. ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்து அவர்களுக்கான இசை வகைகள் மாறுபடும். திரை இசை, மெல்லிசை, கர்நாடக சங்கீதம் என மனதை மயக்கும் பாடல்களை அரை மணி நேராமாவது கேட்டு ரசியுங்கள். நீங்கள் பாத்ரூம் சிங்கராகவும் மாறலாம். உங்களை நீங்களே புதுப்பித்துக்கொள்ள இசைக்கு முதல் இடம் கொடுங்கள். இசை உங்களை மாற்றும் திசையாக இருப்பின், மனத்தளர்ச்சி, அழுத்தம் போன்றவை வலுவிழப்பது உறுதி.

சிரிப்பு டானிக்!
நகைச்சுவையான டி.வி நிகழ்ச்சிகள்,  வீடியோக்களை தினமும் 45 நிமிடங்களுக்கு ரசிப்பது நல்லது. இது ஒரு வகையில் ‘ஸ்ட்ரெஸ் ரிலீஃபிங் பயிற்சி’. தசைகள் ஓய்வாக இருக்கும். டென்ஷன், மன அழுத்தம் பறந்து போகும். எதிர்ப்புத்திறன் செல்களை அதிகப்படுத்தும். ‘கார்டிசோல்’ போன்ற ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அளவு குறைந்து, உடலுக்கு நலம் சேர்க்கும். சீரான ரத்தஓட்டம் நிகழ்ந்து, இதயம் ஆரோக்கியம் பெறும். குறைந்தது 20 நிமிடங்களுக்காவது நகைச்சுவைக் காட்சிகளைக் கண்டு, வாய்விட்டு சிரிப்பது நல்ல மனநிலைக்குக் கொண்டுசெல்லும்.

உடற்பயிற்சி தரும் உற்சாகம்!
உடற்பயிற்சி செய்யும்போது எண்ணங்கள் சிதறாமல், உடலின் மீது கவனம் குவிக்கப்படுவதால், மனம் அமைதி அடைகிறது. அந்த நேரத்தில் எண்டார்பின் சுரப்பு நடைபெற்று, உடல் உறுதியாகிறது. இதனுடன், யோகா, தியானம் செய்வதால் கூடுதல் பலன்களைப் பெற முடியும்.

நேர்மறை எண்ணங்கள்… வெற்றியின் வாசல்!
எந்த நிகழ்விலும் அதில் இருக்கக்கூடிய நன்மைகளை மட்டுமே எடுத்துக்கொள்வது ‘ஆப்டிமிஸ்டிக்’. இந்தக் குணம் நம்மைப் பலப்படுத்தும். பல மைல்கற்களை எளிதாகக் கடக்கவைக்கும். தோல்வியில்கூட நன்மையைக் கண்டுபிடித்து, அடுத்த முயற்சியில் ஈடுபடும் பக்குவம், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அடிப்படை. ‘எல்லாம் நன்மைக்கே’ எனக் கடந்து போகும்போது, கவலையை மறக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.

நறுமணங்கள் தரும் நற்பயன்கள்!
மனதுக்கு இனிய நறுமணங்களை முகர்தலும் நல்ல தெரப்பியே. மனம், உடல் இரண்டும் ஒரே சமயம் புத்துணர்வு பெற நறுமணங்கள் உதவும். லாவண்டர், வெனிலா போன்றவை மனநிலையை ஊக்கப்படுத்தும். உணவு, தூக்கம், குளியல், ஓய்வு  நேரங்களில் நறுமணங்களை முகர்வது மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தும். செரடோனின், எண்டார்பின் போன்ற நல்ல ரசாயனங்கள் சுரக்கத் தொடங்கும்.

அழுகை நல்லது!
எந்த உணர்வையும் அடக்கிவைத்தால், பிரச்னைதான். அழுகை வரும்போது அழுதுவிடுவது தவறு இல்லை. இது மனநிலையை அமைதிப்படுத்தும்.  மூளையில் உள்ள ரசாயனங்களை ஒருமுறை ஃப்ளஷ்அவுட் செய்வது போன்ற செயல் நடைபெற்று, உற்சாகமாக இருக்க உடல் தயாராகும். அழுகை ஒரு ரீசெட் பட்டன் போல. நம்மை ஒருமுறை புதுப்பித்துக்கொள்ள முடியும்.

தூக்கம் எனும் ரீசார்ஜ்!
அமைதியான அறையில் ஆழ்ந்து உறங்குவதைப் போன்ற ஒரு வரம் கிடையாது. உடலுக்கான ஓய்வு, மனதுக்கான ஓய்வு இரண்டும் கிடைக்கும். சீரான தூக்கத்தை மேற்கொள்பவர்கள் எந்த நேரமும் ஃபிரெஷ்ஷாக இருப்பார்கள். ஒவ்வொரு நாளின் சுமைகளுக்கும் கொடுக்கும் இளைப்பாறுதல் தூக்கமே. மெலடோனின் என்ற ஹார்மோன் சுரந்து, புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் காக்கும் அருமருந்து தூக்கம்.

இயற்கையின் மடியில்…
மாதம் ஒருநாள் இயற்கையுடன் செலவழிக்கலாம். வெறும் கால்களில் புல், தரை, மண், நீர் போன்றவற்றில் நடக்கலாம்; விளையாடலாம். இதனால், உடலில் நியூரோ கெமிக்கல்கள் சுரக்கும். சுற்றுலா செல்ல முடியாதவர்கள் அருகில் இருக்கும் இயற்கையான சூழலில், ஒருநாளில் சிறிது நேரத்்தைச் செலவழிக்கலாம். மாதம் ஒருநாள் மகிழ்ச்சியுடன் இணைவது அனைவருக்கும் சாத்தியமே. மண் மரம், செடி, பறவைகள் எனப் பல்லுயிர் நிறைந்த சூழலில் ஒன்று கூடுங்கள். இயற்கையின் ஒரு பகுதியாக நம்மை உணரும்போது ஏற்படும் ஆனந்தம் அற்புதமானது.

No comments:

Post a Comment