Friday, October 2, 2015

எல்லாம் நன்மைக்கே!

எல்லாம் நன்மைக்கே!

என் வாழ்வில் அஃபர்மேஷன் முறை முதன் முறையில் பெரிதாக உதவியதே ஒரு சுவாரசியமான கதை. பத்து வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது அது.

புதிதாகக் கட்டிக்கொண்டிருந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒன்றை பதிவு செய்தேன். தங்கியிருந்த வாடகை வீட்டில் சொல்லி விட்டு புதுமனைப் புகுவிழாவுக்கு பத்திரிகை அடித்தபோதுதான் எனக்கு அந்தச் செய்தி தெரிந்தது.

நான் முன்பணம் கொடுத்திருந்த குடியிருப்புக்கு இன்னும் அரசு ஒப்புதல் வாங்கப்படவில்லை என்று. ஐந்து லட்ச ரூபாய் கொடுத்தாயிற்று. நான் தங்கியிருக்கும் வீட்டுக்கும் வேறு ஆளிடம் முன்பணம் வாங்கிவிட்டார் வீட்டு உரிமையாளர்.

யானை வாய் கரும்பு

அதனால், எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று நான் சொன்னதை என் அப்பா ஒப்புக்கொள்ளவில்லை. “முன்பணத்தைத் திருப்பிக் கேள், பதிவு செய்ததை ரத்துசெய், வேறு வீடு பார்!” என்றார். நான் தங்கியிருந்த வாடகை வீட்டின் சொந்தக்காரரோ கறாரானவர். இது தவிர, புதுமனைப் புகுவிழாவுக்கு ஊருக்கே தகவல் சொல்லிவிட்டேன். இன்னும் 3 வாரங்கள்தான் இருந்தன.

என் நண்பன் வேறு பயமுறுத்தினான். “ரியல் எஸ்டேட் பிஸினஸ்ல எல்லாம் பணம் கொடுத்தா யானை வாயில போன கரும்பு தான். எல்லா வேலையையும் விட்டுட்டு தினம் அந்தக் கட்டுமான நிறுவனத்துக்குப் போய் கண்டிப்புடன் பேசு. அலைஞ்சாத்தான் ஏதாவது தேறும்!” என்பான்.

மீண்ட கரும்பு

திக்குத் தெரியாமல் நின்றபோது எனக்கு ரெய்கி, மலர் மருத்துவம், அஃபர்மெஷன் எல்லாம் கற்றுத்தந்த ஆசிரியர் பாலகுமாரிடம் சென்றேன். “பயம் வேண்டாம். நம்பிக்கையோடு இதைச் சொல். போதும்” என்று ஒரு அஃபர்மேஷன் தந்தார்.

அதைச் சொல்லியபடி வண்டி ஓட்டிக்கொண்டு வந்தேன். நேராக வீட்டுக்காரரிடம் சென்று என் நிலையைச் சொன்னேன். அவரோ “ அந்த ஃப்ளாட் வேண்டாம். ரிஸ்க். பரவாயில்லை, நம் வீட்டிலேயே இருங்கள், அடுத்த வீடு கிடைத்து செட்டில் ஆகும் வரை!” என்றார். பாதி வெற்றி கிடைத்தது.

அடுத்த நாள் அந்தப் பெரிய கட்டுமானக் கம்பனியின் முதலாளியைப் பார்த்தேன். எனக்கு வீடு வேண்டாம் என்று கடிதம் கொடுத்தேன். முதலில் நெருக்கடியாகப் பேச ஆரம்பித்தவர், பின்னர் “10 ஆயிரம் ரூபாய் பிடித்தம் போக மிச்சப் பணம் உங்கள் ஃப்ளாட்டை அடுத்த ஆள் வாங்கும்போது தருகிறேன்” என்றார். நானும் அதோடு விட்டு விட்டு மற்ற வீடுகளைப் பார்த்தேன். அவர் சொன்ன தொகை காசோலையாக வீட்டுக்கு வந்திருந்தது. நம்ப முடியவில்லை. ஆனந்தத்தில் ஸ்தம்பித்துப்போனோம்.

மாறு! மாறும்!

கதை இன்னும் முடியவில்லை. அடுத்த வாரமே நண்பரைப் பார்க்கப் போகும்போது வழி மாறி நந்தனத்தில் சுற்றியபோது முடிந்த நிலையில் ஒரே ஒரு ஃப்ளாட் நல்ல விலைக்குத் தயாராக இருந்ததைப் பார்த்தேன். குறைந்த விலையில் நல்ல சூழலில் இருந்தது. உடனே முடித்து விட்டோம். சொன்ன நாளில் புதுமனை புகுந்தோம். அனைத்தும் சுபமாக முடிந்தன.

எனக்கு அவர் சொன்ன அஃபர்மேஷன் இது தான். I trust the process of life. (நான் வாழ்க்கையின் வழிமுறையை நம்புகிறேன்!)

என் சந்தேகமும் பயமும் பதற்றமும் என்னை விட்டு விலகின. என் நம்பிக்கையும் அமைதியும் எதிராளிகளைப் பாதித்திருக்கின்றன. வீட்டுக்காரர் சிரமம் பார்க்காமல் உதவினார். அதே போல, கட்டுமான நிறுவன உரிமையாளரும் என் நியாயத்தையும் நம்பிக்கையையும் உணர்ந்து, அவர் சொன்ன தொகையை (நான் பலமுறை பேசவேண்டிய அவசியம் இல்லாமல்) காசோலையை வீட்டுக்கே அனுப்பி வைத்தார்.

எல்லாம் நன்மைக்கே என்ற அடிப்படையிலான என் ஆழ்மன மாறுதல்கள், என் உடல் நிலை, மன நிலை, என் பேச்சு, என் முடிவு எடுக்கும் திறன், எதிராளியைக் கையாளும் திறன், நெருக்கடியைக் கையாளும்போது விலகாத அமைதி என்று சகலத்தையும் எனக்குள் மாற்றியிருந்தன. அதன் சிறு வெளிப்பாடுகள் தான் புற உலகின் மாற்றங்கள்.

இது நடந்தபோது பலர் பலவிதமாக இந்த நிகழ்வைப் புரிந்துகொண்டார்கள். நான் புரிந்துகொண்டது ஒன்றே ஒன்றைத்தான். நாம் மாறினால் நம்மைச் சுற்றியுள்ள சூழல் மாறும்!

சங்கிலிப் பின்னல்

பிறகு, ஒவ்வொரு உடல் வலிக்கும் வாழ்வின் சிக்கல்களுக்கும் இந்த நேர்மறை வாக்கியங்களின் வழிமுறைகளைப் பின்பற்றி பல வெற்றிகள் கண்டிருக்கிறேன். என்னை விடப் பிறருக்கு அதிகமாக வெற்றிகள் கொடுப்பது என்னை மிகவும் யோசிக்கவும் வைத்தது. இந்த வழிமுறை எந்த மனதுக்கு எப்படி வேலை செய்கிறது என்றெல்லாம் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வைத்தது.

மொத்தத்தில் சிந்தனை- உணர்வு- உடல் நிலை- செயல்- விளைவுகள் எனும் சங்கிலி எவ்வளவு பலமாகப் பின்னப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.

அற்புதங்கள் என்பது என்ன? நம்ப முடியாதவை நடக்கும்போது அவற்றை அற்புதங்கள் என்று கூறுகிறோம். அப்படிப் பார்த்தால் “முடியாது” என்று இருந்த நிலை உங்களாலேயே நம்ப முடியாத தருணத்தில் “முடியும்” என்று மாறினால்? அது தான் அற்புதம்!

ஆன்மிகமும் அறிவியலும்

உங்கள் தர்க்க அறிவை விட மிகவும் சக்தி வாய்ந்த உள்ளுணர்வு சக்தி ஆழ்மனதுக்கு இந்தச் சிந்தனைகளைக் கொண்டு செல்கிறது. அதன் தாக்கம் உங்களுக்குள்ளும் வெளியிலும் மெல்லப் பரவும்.

இது அறிவியலா அல்லது ஆன்மிகமா என்று சிலர் கேட்பர். நான் கூறுகின்ற விஷயங்களில் அடிப்பகுதி ஆன்மிகம். மேல் பகுதி அறிவியல்.

மருத்துவத்துக்கும் ஆன்மிகத்துக்கும் இடையில் உளவியல் துறை பயணிப்பதால் இரு பக்கத் தாக்கங்களும் என்றும் அதற்கு உண்டு!

உங்கள் மனதைக் கூர்ந்து நோக்குங்கள். அதன் செயல்பாடுகள்தான் உங்கள் வாழ்க்கையில் சகலத்தையும் தீர்மானிப்பவை!

No comments:

Post a Comment