Wednesday, July 24, 2013

செயல் வெற்றியடைய

ஒரு செயல் செய்யத் துவங்கும் முன்பு அதை ஏன் செய்ய வேண்டும்? எதற்காக செய்ய வேண்டும்? அதனால் வருகின்ற பயன்கள் நமக்கும் பிறர்க்கும் என்னென்ன? என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதை செய்ய வேண்டியதின் அவசியத்தை உணர வேண்டும்.

அந்தச் செயலை நிறைவேற்ற 

என்னென்ன பொருட்கள் வேண்டும்? 
யார் யாருடைய உதவி வேண்டும்?
அதை எங்கு செய்ய வேண்டும்? 
எப்பொழுது செய்வதால் வெற்றியாகும்? (காலம் அறிதல்) 

போன்ற தகவல்களைச் சேகரிக்க வேண்டும். 

செயலை எப்படி துவக்குவது? 
எப்படி முடிப்பது? 
எதை முன்பு செய்ய வேண்டும்? 
எதைப் பின்பு செய்ய வேண்டும்? 

போன்ற அனைத்துச் செயல்முறைகளையும் தெளிந்திடல் வேண்டும். தெரியாவிட்டால் கூச்சம், அச்சம், தயக்கம் இல்லாமல் தக்கவர்களிடம் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும்.

அதன்பிறகு ஓரிடத்தில் கண்களை மூடி அமர்ந்து மனக்காட்சியில் செயலை தொடங்கி வெற்றியாக முடிப்பது போன்ற வெற்றிக் காட்சியை மனக்கண்ணால் பார்க்க வேண்டும். அதனால் வருகிற பயன்களையும் மனக்காட்சியில் பார்க்க வேண்டும். பின் “இந்த செயலை முடித்தே தீருவேன்” என்ற சங்கல்பம் எடுத்துக் கொண்டு கண்களைத் திறந்து கொள்ளவும்.

பின் “என்னால் முடியும், வெற்றி நிச்சயம்” என்று உங்களுக்குள்ளே சொல்லி உற்சாகத்துடன் செயலைத் துவக்கி செய்து முடிக்கவும்.

இவ்வாறு மனக்காட்சியில் வெற்றிக் காட்சியை பார்த்தப் பின்பு செயலை துவங்குவதால் வருகின்ற நன்மைகள்:-

1) தன்னம்பிக்கை ஏற்படும்.
2) ஆர்வம், ஈடுபாடு உண்டாகும்.
3) உடன்பாடு, எதிர்பார்ப்பு (Positive Expectation) உண்டாகும்.
4) எதிர்பார்ப்பு விதி (The law of Expectation) சொல்கிறது: எதை உளப்பூர்வமாக எதிர்பார்க்கிறோமோ அது நடக்கிறது. மனக் காட்சியில் வெற்றிக் காட்சியை பார்த்து உள் மனத்தில் அதை பதிய வைப்பதால் ஒரு உடன்பாடு எதிர்பார்ப்பு உண்டாகி அது நடக்கிறது.

பொதுவாக “நிகழட்டும்” என்று காத்திராமல் “நிகழ வைப்பேன்” என்று உறுதியெடுத்து செயலைச் செய்பவர்கள் செயல்வீரர்கள்; வெற்றியாளர்கள்; சாதனையாளர்கள்;

பொதுவாக மனிதர்களுக்கு செயல் செய்வது என்பது துன்பமாக தெரிகிறது. சரியாக செய்து முடித்துவிட்டால் இன்பம் உண்டாகிறது. மனிதர்கள் இன்பத்தை நாடுகிறார்கள். துன்பத்தை தவிர்க்கிறார்கள்.

மனக்காட்சியில் செயலை செயது முடித்தவுடன் வருகிற பலன்களை காட்சிகளாக பார்க்கும் பொழுது இனபம் ஏற்படுகிறது. அந்த இனபத்தை அடிக்கடி எண்ணும்போது அது மனிதனை செயல்புரிய தூண்டும். உள்ளே ஒரு சக்தியை எழுப்பும்.

உள் சக்தியை எழுப்புவோம்; செயல்புரிவோம்; உள்சக்தியை எழுப்புவதும் எழுப்பாமல் விட்டுவிடுவதும் நாம் எடுக்கிற முடிவுகளை பொறுத்தது இயற்கை அல்லது கடவுள் சக்தியைக் கொடுத்து அதைப் பயன்படுத்துகிற உரிமையையும் சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறது.

மறைந்திருக்கும் மாபெரும் ஆற்றலை தொடர்ச்சியாக எண்ணி அதை தொடர் முயற்சியால் வெளிக்கொணர்வோம். வெற்றி பெறுவோம்! வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment