Monday, April 6, 2015

பயத்தை விரட்டும் பயணத்தை துவக்குவோம்

பயத்தை விரட்டும் பயணத்தை துவக்குவோம்

வேலை கேட்டு விண்ணப்பம் போடுவதானாலும் சரி, தொழில் தொடங்க முயற்சிப்பதானாலும் சரி, நகரத்தில் படித்தவர்களுக்கும், கிராமத்தில் படித்தவர்களுக்கும், அடிப்படை முயற்சியிலேயே ஆயிரம் வித்தியாசங்கள். ஏன்? பயமும் தயக்கமுமே பிரதான காரணங்கள்.

நிறுவனத்திற்கு வேலை தேடி வருபவர்களிடம் மிக சாதாரணமான கேள்வியைக் கேட்டால்கூட பதில் சொல்ல தயங்குகிறார்கள். மிகவும் பயப்படுகிறார்கள்.

எந்த நிறுவனத்திற்கு வேலைக்கு விண்ணப்பித்தாலும் இந்த வேலை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வேண்டும். பின் அவ்வாறு கிடைக்கின்ற வேலையை வெற்றியுடன் பணியாற்றி அடுத்தவர்களின் பாராட்டை பெற வேண்டும். இது அணுகு முறையிலும் அடிப்படைத் தயாரிப்புகளிலும் இருக்கிறது.

புதியவர்களைப் பார்க்கும்போது நமது அணுகுமுறையாலேயே நல்ல உறவை அவர்களிடம் வைத்துக் கொள்ள முடியும்.

கடந்த வாரம் வியாபார விஷயமாக வெளிநாடு செல்வதற்காக Airport-ல் நின்றிருந்தபோது நடிகர் ரியாஸ்கான் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எதேச்சையாக கிடைத்தது. அவரோடு இருக்கும்போது பலரும் அவரையே பார்த்தார்கள். அவரிடம் உங்களை அனைவரும் பார்ப்பது உங்களுக்கு ஒருமாதிரியாக இருக்குமே என்று கேட்டேன். உடனே இது பழக்கமாகி விட்டது என்று கூறியதோடு என்னைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்து எனது Business Card-டையும் கேட்டுப் பெற்றுக் கொண்டார். பின் எனது மகனையும், அவருடைய மகனையும், அறிமுகம் செய்து கொள்கிறார். பின் எனது, “உழைப்பை ருசித்துப் பார்” புத்தகம் ஒன்றை பரிசாக அவருக்கு கொடுத்தபோது அருமையான பரிசு என்று மகிழ்கிறார். எனக்கும் மகிழ்ச்சி, அவருக்கும் மகிழ்ச்சி. எப்படி? அவரிடம் பேசுவதற்கு எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஒரு வேளை நான் பேசி அவர் சரியாக பேசாமல் இருந்திருந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. காரணம், அது அவருடைய விருப்பம். ஆனால் மிக அருமையாக அவர் பேசியது உண்மையாகவே பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.

அதேபோல் விமானத்தில் பயணம் செய்யும்போது அருகிலேயே Poland நாட்டைச் சேர்ந்த ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியாது. அவருடைய தாய் மொழிதான் தெரியும். இருப்பினும் கை சாடையிலும் அவருக்குத் தெரிந்த சில ஆங்கில வார்த்தைகளை வைத்து பல மணி நேரம் மகிழ்ச்சியாக பேசி வந்தோம். பின் அவருக்கு தமிழில் ‘நன்றி’ என்றும் ‘வணக்கம்’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு தமிழையும் கற்றுக் கொடுத்தேன். அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். பின் Airport-ல் என்னோடு வந்திருந்த மற்ற நண்பர்களுக்கும் அவர் தமிழில் நன்றி சொன்னார். மேலும் அவருடைய மொழியில் ‘நன்றி’ என்பதற்கும் வணக்கம் என்பதற்கும், 1 முதல் 10 வரைக்கும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அதிலும் மகிழ்ச்சி.

எப்படி மொழி தெரியாதவருடன் உரையாடவும், உறவாடவும் முடிந்தது. அதோடு 10 மணி நேர விமான பயணம் மிக மகிழ்ச்சியாக சென்றது.

மேலும் மேற்கத்திய நாட்டினர் என்றாலே ஆங்கிலம் தெரியும் என்று பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான வர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் வியாபாரம் செய்கிறார்கள். அதேபோல் தேவையான அளவுக்கு ஆங்கிலத்தை தெரிந்து கொண்டாலே போதும்.

எப்படி ஒரு சாதாரணமானவன் சாதிக்க முடியும்? கற்றுக்கொள்ள வேண்டும். கால அவகாசம் எடுக்கும். பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கடந்த வாரம் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது நீண்ட நேரம் ஆங்கிலத்தில் என்னால் பேச முடிந்தது. எப்படி சாத்தியம். ஆங்கிலத்தில் பேசுவது அப்படி கடினமா என்று இன்றைய இளைஞர்கள் நினைக்கலாம். என்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் கடினம்தான். ஏன் என்றால் SSLC- வரை ஆங்கிலமே தெரியாது. எப்படி ஆங்கிலத்தில் பேசுவது? பேச வேண்டும் என்ற எண்ணம், ஆசை, தினமும் காலையில் 1 மணி நேரம் Tuition பேச முடிந்தது. பல நாடுகளுக்கு எந்த துணையும் இன்றி செல்ல முடிகிறது. எப்படி? முயற்சி.

அறிவும் அனுபவமும் சேரும்போது வெற்றியாகிறது. ஓர் இடத்தை அடைவதற்கு பயணம் எப்படி முக்கியமோ அதுபோல் ஓர் இலக்கை அடைவதற்கும் பயணம் முக்கியம். ஏற்றுமதி தொழிலை வளர்ப்பதற்கு Frank Furt (Germany) பயணம் எங்களுக்கு எப்படி முக்கியமோ, அதுபோல் இன்றைய இளைஞர்கள் இலக்கை அடைவதற்கு அவர்களிடம் உள்ள பயத்தை விரட்டும் பயணம் முக்கியம்.

“விரைவில் துவங்குங்கள் பயணத்தை
விரட்டி அடியுங்கள் பயத்தை”

No comments:

Post a Comment