Thursday, January 12, 2017

தோற்றவர்களின் கதை – வால்ட் டிஸ்னி

தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள்!

வால்ட் டிஸ்னியின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.  மிக்கி மவுஸ், டொனால்ட் டக் போன்ற அற்புதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை உருவாக்கிய மகத்தான கலைஞர். டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காக்களின் ஸ்தாபகர். வால்ட் டிஸ்னி கம்பெனியின் நிறுவனர்.

இந்தச் சாதனைகளின் பின் உள்ள கொடுமையான சோதனைகள் பற்றிப் பெரும் பாலானவர்களுக்குத் தெரியாது. 

தோல்விகளின் வலி மிகுந்த தனது வாழ்க்கைப் பயணம் வெற்றிகரமானதாகத் தோற்றமளிப்பது பற்றி வால்ட் டிஸ்னி இப்படிக் குறிப்பிட்டார். 

“நான் தொட்ட காரியமெல்லாம் வெற்றி பெறுவதாகவும், நான் எடுக்கும் முடிவுகள் அபூர் வமாகவே தோற்பதாகவும் சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் நான் எடுத்தத் தவறான முடிவுகளால் பல முறை படுதோல்வி அடைந்திருக்கிறேன். எனினும், நான் அடுத்தடுத்து முயற்சி செய்து கொண்டே  இருப்பதால், தவறுகள் வெளியில் தெரியாதபடி அதிலிருந்து வேகமாக மீண்டு வந்திருக்கிறேன். என்னைப்போல நீங்களும் அடுத்தடுத்த ஏராளமான முயற்சிகளை எடுக்கக் கற்றுக்கொண்டால் உங்களுக்கும் சராசரி வெற்றி அதிகமாகவே இருக்கும்.” 

அமெரிக்காவில் சிக்காகோ நகரில் 1901-ம் ஆண்டு பிறந்தார் வால்ட் டிஸ்னி. வறுமையான பின்னணியால் அவரது தந்தை எலியாஸ் சார்லஸ் டிஸ்னி, தனது கோபத்தை எல்லாம் குழந்தைகள் மீது காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தந்தையின் துன்புறுத்தல் பொறுக்காமல் வால்ட் டிஸ்னியின் அண்ணன்மார்கள் மூவர் ஊரைவிட்டே ஓடிவிட்டனர். சிரமங்களைச் சகித்துக்கொண்டு பள்ளி சென்றுவந்தார் வால்ட் டிஸ்னி. 

டிஸ்னி குடும்பம் கான்சாஸ் நகருக்கு இடம்பெயர்ந்தது. வால்ட் டிஸ்னியின் தந்தை 1911-ம் ஆண்டில் செய்தித்தாள் விநியோக ஏஜென்சி எடுத்தார். அதில், தனது 10 வயதிலேயே பேப்பர் விநியோகிக்கும் கடுமையான வேலையில் வால்ட் டிஸ்னி ஈடுபட்டார். இதன்மூலம் வால்ட் டிஸ்னிக்கு கிடைத்த சொற்ப வருமானத்தையும் அவரது அப்பா பறித்துச் சென்றுவிடுவார். இருந்தாலும், தனது வருமானத்தில் ஒருபகுதியை மறைத்துவைத்து சேமித்தார்.   

1917-ல் டிஸ்னி குடும்பம் மீண்டும் சிக்காகோவுக்கு இடம்பெயர்ந்தது. மெக்கின்லி பள்ளியில் சேர்ந்த வால்ட் டிஸ்னி, சிக்காகோ நுண்கலை அகாடமியில் இரவுநேரப் படிப்பில் சேர்ந்தார். பிற்காலத்தில் அவரது சாதனைப் பயணத்துக்கான படைப்பாற்றல் பயிற்சி அங்கே கிடைத்தது. 

1918-ல், முதல் உலகப்போரின்போது ராணுவ வீரராகச் சேர்ந்து போரிட விரும்பிய வால்ட் டிஸ்னியால் அதில் சேர முடியவில்லை. எனினும், செஞ்சிலுவைச் சங்கத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராகச் சேர்க்கப்பட்டு, பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே அவரது ஆம்புலன்ஸ் மிகவும் பிரபலமாகியது. காரணம், அதன் வெளிப்புறத்தில் அற்புதமான கார்ட்டூன் சித்திரத்தை வரைந்துவைத்திருந்தார் வால்ட் டிஸ்னி.

செஞ்சிலுவைச் சங்கப் பணி முடிந்து ஊருக்குத் திரும்பிய வால்ட் டிஸ்னி, சிபாரிசுகளைப் பிடித்து கன்சாஸ் பத்திரிகை ஒன்றில் கார்ட்டூன் உதவியாளர் பணியில் சேர்ந்துவிட்டார். ஆனால், அவரது மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவருக்கு அரசியல் சமூக கோபம் போதிய அளவில் இல்லை என்றும், அதனால் பத்திரிகை கார்ட்டூனிஸ்ட் வேலைக்கு அவர் ஒத்துவரமாட்டார் என்றும் விமர்சிக்கப்பட்டு, வேலையில் இருந்து சில மாதங்களில் வெளியேற்றப் பட்டார் வால்ட் டிஸ்னி. 

பின்னர், பேஸ்மன் ரூபின் ஆர்ட் ஸ்டுடியோவுக்கான எடுபிடி வேலைகள் செய்யும் பணி கிடைத்தது. அங்கேயும் கிறிஸ்துமஸ் சீசன் வியாபாரம் முடிந்தவுடன் துரத்திவிட்டர்கள்.

அந்த ஸ்டுடியோவில் வேலைபார்த்த ஐவர்க்ஸ் என்ற கார்ட்டூனிஸ்ட் வால்ட் டிஸ்னியின் நண்பரானார். இருவரும் சேர்ந்து ஐவர்க்ஸ் – டிஸ்னி வரைகலை நிறுவனத்தைத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் ஒருசில வாடிக்கையாளர்கள் கிடைத்தபோதும் போதிய வருவாய் ஈட்டமுடியவில்லை.

சுயதொழில் முயற்சியை அப்படியே கைவிட்டுவிட்டு, கான்சாஸ் சிட்டி சினிமா விளம்பர நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர். அந்த நிறுவனம் கட்-அவுட் முறை அனிமேஷன் என்ற பழைய தொழில்நுட்பத்தில் விளம்பரப் படங்களைத் தயாரித்து வந்தது. ‘‘செல்லுலாய்டு அனிமேஷன் என்ற புதிய தொழில்நுட்பத்தில் விளம்பரப் படங்களைத் தயாரிப்பது சிறந்தது’’ என்று வால்ட் டிஸ்னி எடுத்துச் சொன்னார். அந்த விளம்பர நிறுவனம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அங்கிருந்தும் வெளியேறினார் வால்ட் டிஸ்னி. 

வீட்டிலேயே செல்லுலாய்டு அனிமேஷன் தொழில்நுட்பம் குறித்து பயிற்சிசெய்த அவர், ஹர்மன் என்ற நண்பருடன் இணைந்து சிறிய அனிமேஷன் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். ஈசாப் குட்டிக் கதைகள் பாணியில் “Newman’s Laugh-O-Grams” என்ற அனிமேஷன் தொடரை வால்ட் டிஸ்னி உருவாக்கினார். 

இந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பால் உற்சாகமான வால்ட் டிஸ்னி, 1921-ம் ஆண்டில் Laugh-O-Gram ஸ்டுடியோவைத் தொடங்கினார். பிரபலமான அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் கதையை அனிமேஷன் படமாகத் தயாரித்தார். 12 நிமிட அனிமேஷன் படத்தைத் தயாரித்து முடிப்பதற்குள் பெரும் நிதிநெருக்கடிகளைச் சந்தித்த அந்த ஸ்டுடியோ நிறுவனம், 1923-ம் ஆண்டில் திவாலானது. பெரும் அவமானத்துடன் அந்த ஸ்டுடியோ முயற்சியைக் கைவிட நேர்ந்தது.

வேறு வழியின்றி லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்குக் குடிபெயர்ந்தார் வால்ட் டிஸ்னி. தான் தயாரித்த அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் அனிமேஷன் படத்தை விற்பனை செய்திட அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இறுதியில் நியூயார்க் பட விநியோகஸ்தர் மார்கரெட் வின்க்லெர் என்பவர் வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் படங்களை விநியோகிக்க முன்வந்தார். 

1923-ம் ஆண்டு அக்டோபரில், வால்ட் டிஸ்னியும் அவரது அண்ணன் ராய் டிஸ்னியும் இணைந்து வால்ட் டிஸ்னி கம்பெனியை ஹாலிவுட்டில் தொடங்கினார்கள். இதனை பழைய நண்பர்களுடன் ஒரு வலிமையான அனிமேஷன் பட நிறுவனமாக வளர்க்கத் தொடங்கினார் வால்ட் டிஸ்னி.

அலைஸ் இன் வொண்டெர்லேண்ட் அனிமேஷன் தொடருக்கான பணிகள் 1927 வரை தொடர்ந்தன. அதில் சலிப்படைந்த வால்ட் டிஸ்னி, தனது நண்பர் ஐவர்க்ஸுடன் இணைந்து Oswald the Lucky Rabbit என்ற கார்ட்டூன் கதாபாத்திரத்தை உருவாக்கினார். இந்தத் தொடரினால் அதிக லாபம் பெற்ற பட விநியோக நிறுவனமான மின்ட்ஸ், உரிய பங்கினை டிஸ்னிக்குத் தர மறுத்தது. Oswald கதாபாத்திர உரிமை தன்னிடமே இருப்பதாக மிரட்டியது. டிஸ்னி நிறுவன ஊழியர்களை வெளியேறச் செய்து, தானே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில், அவர்களைப் பணிக்கு அமர்த்தி டிஸ்னிக்கு நெருக்கடி கொடுத்தது.

நெருக்கடிகளைச் சந்தித்துப் பழகிப்போன வால்ட் டிஸ்னி, விநியோக நிறுவனத்தின் மிரட்டல்களுக்குப் பணிய மறுத்துவிட்டார். வால்ட் டிஸ்னியின் நெருங்கிய நண்பரான ஐவர்க்ஸ் தவிர, பல மூத்த கலைஞர்கள் டிஸ்னியில் இருந்து வெளியேறிவிட்டனர். 

தனது நண்பர் ஐவர்க்ஸுடன் இணைந்து ‘மிக்கி மவுஸ்’ என்ற அட்டகாசமான கதாபாத்திரத்தை 1928-ம் ஆண்டு உருவாக்கினார் வால்ட் டிஸ்னி. முன்னர் திவாலாகிப்போன Laugh-O-Gram ஸ்டுடியோவில், தான் இரவுபகலாக உழைத்தபோது தன்னோடு விளையாடிய ஒரு செல்லமான எலியை மனதில்கொண்டே இந்தக் கதாபாத்திரத்தை வால்ட் டிஸ்னி உருவாக்கினார். 

மிக்கி மவுஸ் கதாபாத்திரத்தின் முதல் அனிமேஷன் படம் முடிவுற்றபோதும் உரிய விநியோகஸ்தர் கிடைக்கவில்லை. ஒருவழியாக, பவர்ஸ் சினபோன் என்ற விநியோக நிறுவனத்துடன் ஒப்பந்தம்போட்டு மிக்கி மவுஸ் படம் வெளியானது. படம் வெற்றிபெற்று, விநியோக நிறுவனம் லாபம் குவித்தது. லாபத்தில் உரிய பங்குத் தொகையை வழங்குமாறு டிஸ்னி நிறுவனம் கேட்டபோது, அதற்கு மறுப்புத் தெரிவித்த விநியோக நிறுவனம், வால்ட் டிஸ்னியின் நெருங்கிய நண்பர் ஐவர்க்ஸுக்கு ஆசைகாட்டி அவரை டிஸ்னி நிறுவனத்திலிருந்து வெளியேறச் செய்து, அவரோடு திருட்டுத்தனமாக ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. 

இப்படி அடுத்தடுத்த ஏமாற்றங்களைச் சந்தித்த வால்ட் டிஸ்னிக்கு நரம்புத் தளர்வு ஏற்பட்டது. நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டு, கியூபா, பனாமா நாடுகளுக்குச் சென்றுவந்து தனது மனதைத் தேற்றிக்கொண்டார் வால்ட் டிஸ்னி. 

புதுத் தெம்புடன் வந்த வால்ட் டிஸ்னி, கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் விநியோக ஒப்பந்தம் செய்துகொண்டார். இதனைத் தொடர்ந்து மிக்கி மவுஸ் படங்கள் உலக அளவில் பிரபலமாகின. விருதுகள் தேடிவந்தன. அது, அனிமேஷன் படங்களின் பொற்காலமாக மாறியது. வால்ட் டிஸ்னிக்குப் பல வெற்றிகளைத் தந்தது.  

1939-ம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் டிஸ்னி படங்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. செலவுகள் மிக அதிகமாகிவிட்டதால், டிஸ்னி நிறுவனம் கடனில் தத்தளித்தது. கடனைச் சமாளிக்க டிஸ்னி நிறுவனம் பொதுப் பங்குகளை வெளியிட்டது. இருப்பினும் நிதிச் சிக்கல்கள் தீரவில்லை. வேறு வழியின்றி தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை டிஸ்னி நிறுவனம் மேற்கொண்டபோது அதற்குப் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. டிஸ்னி நிறுவனத்துக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன.   

1944-ம் ஆண்டில் அமெரிக்க வங்கியில் டிஸ்னி நிறுவனத்தின் கடன் தொகை 40 லட்சம் டாலராக இருந்தது. பெரும் உழைப்புடன் உருவாக்கப்பட்ட அனிமேஷன் படங்கள் சில, எதிர்பாராதத் தோல்வியைத் தழுவின. தோல்வி மேல் தோல்விகள். கடன் கொடுத்தவர்கள் துரத்திவந்து நெருக்கடி கொடுத்தார்கள்.  

கலங்கவில்லை  வால்ட் டிஸ்னி.   பின்வாங்குவதற்குப் பதிலாக விரிவாக்கம் பற்றிச் சிந்தித்தார். பொதுமக்கள் விடுமுறைகளைக் குதூகலமாகச் செலவிடுவதற்கான டிஸ்னி லேன்ட் கேளிக்கைப் பூங்காவை பிரமாண்டமாக உருவாக்கத் திட்டமிட்டார். இதற்கு நிதி வழங்க  வங்கிகள் மறுத்துவிட்டன. இந்தநிலையில், அப்போது தொலைக்காட்சியில் பிரபலமாகிவந்த டிஸ்னி லேன்ட் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தொடங்கி, அதன்மூலமாக பெரும் நிதி திரட்டினார். 

கேளிக்கைப் பூங்காவை முதலில் ஆதரிக்காத மக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக ஈர்க்கப்பட்டு தேடிவரத் தொடங்கினர். கூட்டம் குவிந்தது. இதுவரை சுமார் 70 கோடி மக்கள் அந்தப் பூங்காவைப் பார்வையிட்டுள்ளனர். உலகின் 14 இடங்களில் கிளைகள் விரிந்தன. தோல்விகளைப் படிக்கட்டுகளாக மாற்றி முன்னேறுவதில் வல்லவரான வால்ட் டிஸ்னி 1966-ம் ஆண்டில், அவரது 65-வது வயதில் புற்றுநோயால் மரணமடைந்தார். எனினும், அவர் உருவாக்கிய டிஸ்னி நிறுவனம் ஆலமரமாய் தழைத்தோங்கியபடி இருக்கிறது. அதன் ஆண்டு வருமானம் மூன்றரை லட்சம் கோடி ரூபாய் என்பதே வால்ட் டிஸ்னி விதைத்த நம்பிக்கை விதைகளின் வலிமையைப் பறைசாற்றுகிறது. 

மாபெரும் கனவுத் திட்டங்களை நனவாக்கிய நம்பிக்கை  நாயகன் வால்ட் டிஸ்னி  இளைஞர்களுக்குக் கூறும் அனுபவப் பாடம் இதுதான்: 

‘‘தோல்விகளே மிகச் சிறந்த பரிசுகள். நீங்கள் தோல்வி அடையும்போது அதன் அருமை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். உங்களைக் கீழே வீழ்த்தும் தோல்விதான், இந்த உலகம் உங்களுக்குத் தரும் மிகச் சிறந்த பரிசு என்பதை பின்னர் நீங்கள் உணர்வீர்கள்.’’

சுசி திருஞானம்

நன்றி – விகடன்

No comments:

Post a Comment