Tuesday, July 2, 2013

யார் வீரன், யார் கோழை...

கோபப்படுகிறவன் வீரன், பொறுமையாக இருப்பவன் கோழை, குரங்காட்டம் போடுகிறவன் வீரன், மானை போல அமைதியாக இருக்கிறவன் கோழை.

இப்படி கோழைத்தனத்தை வீரமாகவும், வீரமானவைகளை கோழையாகவும் உலகம் அங்கீகரித்துக் கொண்டிருக்கிறது.

உடலில் பலமில்லாதவன் கோழையல்ல, தன் ஆற்றலை தட்டி, வெளியே கொண்டு வராமல், இருக்கும் வரையிலும் நம் அனைவரும் கோழைகளே..

மன ஆற்றல் கொண்டவர்களால்தான் பொறுமையாக இருக்க முடியும்.

சிறிய விமர்சனங்களை கேட்டாலே,

ஓ.. என்னை அப்படியா சொல்கிறான், நான் யார் என்று அவனுக்கு காண்ப்பிக்கிறேன் என்று கோபம் கொள்வது வீரத்தின் வெளிப்பாடல்ல.

அது ஒரு வகை மனக்குமுறல். மனம் அடங்காமல் குமுறி ஓடுவது வீரத்தின் அடையாளமல்ல.

இவர்கள் நியாயமான நிகழ்வுகளுக்கு மட்டுமல்ல,

தவறு இவர்கள் மேல் இருந்தாலும் தன் கட்டுப்பாடுகளை மீறி, குமிறிக் கொண்டுதான் இருப்பார்கள்

மனைவியை அடிப்பது,

குழந்தைகளை மிரட்டுவது,

வலிமை இல்லதாவர்களிடம் தன் வீரத்தை காண்பிப்பது,

இவைதான் இவர்களின் வீரம்.

இவர்கள் அடிப்பதற்கும், கோபம் கொள்வதற்குமே சிலரை வைத்திருப்பார்கள். இப்படி தன் கோபங்களை வலு வில்லாதவர்களிடம் காட்டிக்கொண்டு தன்னை பலசாலியாக்கி கொள்கிறார்கள்.

சிலர் வீட்டில் மனைவி, குழந்தைகளை அடித்து, சட்டி, பானைகளை நொறுக்கி பெரிய யுத்தமே செய்வார்கள்.

வெளியில் சென்றால், அமைதியாக இருப்பார்கள்.

காரணம் வெளியே விளையாடினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கே நன்கு தெரியும்.

அமைதியாக இருக்க வேண்டி நேரத்தில் கோபம் கொள்வதும், கோபப்பட வேண்டியவைகளில் அமைதி கொள்வதும் அடக்கமில்லாமையால் ஏற்படும் பிழையாகும்.

எந்த நேரத்தில் கோபத்தை காட்ட வேண்டும், எந்த நேரத்தில் அமைதி காக்க வேண்டும் என்று நேரத்தை சொல்லித் தருவதும் அடக்கம்தான்

நாம் எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து வைத்துகொண்டுள்ளோம். கெட்டதை எல்லாம் நல்லதாக பார்க்கின்றோம், பொய்களை எல்லாம் உண்மைகளாக பார்க்கின்றோம்.

அகத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் அதில் என்ன மகிழ்ச்சி கிடைக்கும், அதையே அழுக்காக வைத்துக் கொண்டால் அதில் விதவிதமான இன்பங்களை குடியமர்த்த முடியும்.

குடி, போதையென்று இன்பகரமான பானங்களை ஊற்றிக் கொள்ள முடியும்.

மனம் நினைக்கும் சுகங்களையெல்லாம் காண முடியும்.

இப்படி,

தூய்மையின், நல்லவைகளின் சுவை என்ன என்பதை உணராமல் இருப்பதால்தான்,

வீரர்களெல்லாம் கோழைகளாக தெரிகிறார்கள்,

கெட்டவர்களெல்லாம் வீரர்களாகவும், ஆண்மகனாகவும் தெரிகிறார்கள்.

கோபத்தை, மனதை, நாவை அடக்க முடியாமலிருக்கும் போது நினையுங்கள் நான் ஒரு கோழையென்று.

அதுதான் உண்மை.

உண்மையை உண்மையாக நினைத்தால்,

ஒப்புக்கொள்ள பழகினால்,

நிச்சயம் நாம் தான் வீரர்கள்..

No comments:

Post a Comment