Thursday, July 18, 2013

நண்பர்களை தேர்வு செய்யும் ரகசியம்


"நட்பு இல்லாத மனிதன் உலகில் இல்லை" என்பதற்கு ஏற்றாற்போல், நமது வாழ்வில் நட்பு பெரும் பங்கு வகிக்கிறது.

எல்லோருக்கும் எல்லா பருவங்களிலும் நண்பர்கள் கிடைக்கின்றனர். சிலர் மழலை, பள்ளி, கல்லுõரி மற்றும் அலுவலக பணி போன்றவற்றோடு விடைபெற்று விடுகின்றனர். சிலர் வாழ்க்கைத் துணையாகவும் மாறுகின்றனர்.  சிலர் மட்டுமே இதயத்தில் கடைசிவரை இடம்பெறுகின்றனர்.

"பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல", நண்பர்களோடு பழகும்போது அவர்களின் குணங்களும் நம்முள் வந்துவிடும். அகத்தின் அழகை முகம் காட்டுவது போல, அவரின் குணத்தை, நண்பர்களின் நடத்தையில் காண முடியும். பெரும்பாலும் வெற்றிக்கும் தோல்விக்கும், காரணமாக அமைவது நண்பர்களே.

அவர்கள் நல்லவர்களாக அமைவது முக்கியம். நல்ல நண்பர்கள் நம்மை எப்படி உயர விடுவார்களோ, அதுபோல் தீய நண்பர்கள், உயரத்தில் இருந்து இழுத்து, பள்ளத்தில் போட்டு விடுவர்.

உங்களிடம் உள்ள தீய பழக்கங்களிலிருந்து மீட்டுக்கொணர்வது, ஆரோக்கியம், முன்னேற்றம் எண்ணம் கொண்டவரே உண்மையான நண்பன். தவறுகளை கடிந்து கொள்வது, மனம் நோகாமல் நடப்பது போன்றவற்றை செய்பவன் நல்ல நண்பன் அல்ல.

உங்கள் லட்சியங்களை உங்கள் நண்பன் ஆதாரிக்கிறானா? இல்லை தடைக்கல்லாக இருக்கிறானா என்பதை பாருங்கள். உண்மையான நண்பன், உங்கள் திறமைகளை முழுமையாக பயன்படுத்த ஊக்குவிப்பான். உங்களது வெற்றியின் போது வந்து, கைகுலுக்கிவிட்டு போகும் மனிதனாக இருக்க மாட்டான்.

பிற நண்பர்களைப் பற்றி, உங்களிடம் தரக்குறைவாக பேசும் நண்பர்களிடம் கவனமாய் இருங்கள். உங்களைப் பற்றியும் மற்றவர்களிடம் அவன் தவறாக பேசுவதற்கு வாய்ப்புண்டு. ஒரு கூடையில் உள்ள நல்ல பழங்களை எவ்வாறு ஒரு அழுகின பழம் நாசமாக்குகிறதோ, அது போல் நல்ல நண்பர்கள் கொண்ட குழுவை, ஒரு தீய நண்பன் கெடுத்து விடுவான்.

எனவே நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை. போதை, திருட்டு, பாலியல், சமுக விரோத செயல் போன்ற தவறுகள், நண்பர்கள் மூலமாகவே கற்றுக்கொள்ளப்படுகிறது. இவர்களிடம் இருந்து நட்பை விலக்கி விடுங்கள்.

மனக் கஷ்டம், பணக்கஷ்டம், உதவி தேவை போன்ற நேரங்களில் மட்டும் வரும் நண்பர்கள் சுயநலவாதிகள். எனவே ஒருவரது வாழ்க்கையின் திசையை மாற்றும் வல்லமை கொண்ட நட்பை தேர்ந்தெடுக்கும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை.

No comments:

Post a Comment