Friday, July 5, 2013

சாதனையாளர்கள் அனைவரிடமும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

சாதனையாளர்கள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் அனைவரிடமும் உள்ள ஒரு ஒற்றுமை என்ன தெரியுமா? அவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் சரி…. சினிமா நட்சத்திரங்களோ அல்லது எழுத்தாளர்களோ அல்லது தொழிலதிபர்களோ அல்லது விளையாட்டு வீரர்களோ யாராக இருந்தாலும் எந்த துறையை சேர்ந்த சாதனையாளர்களாக இருந்தாலும் சரி… கடவுள் நம்பிக்கை இருப்பவர்களானாலும் சரி… இல்லாதவர்களானாலும் சரி… அவர்கள் அனைவரிடமும் சொல்லி வைத்தார்ப்போல இருக்கும் ஒற்றுமை என்ன தெரியுமா?……………. அதிகாலை எழுவது!

“Early to bed and early to rise, makes a man healthy wealthy and wise.” Benjamin Franklin

நீங்கள் வேண்டுமானால், உங்கள் வட்டத்தில் உள்ள உங்களுக்கு தெரிந்த மிகப் பெரிய சாதனையாளர் என்று நீங்கள கருதுபவர் எவரையாவது கேட்டுப்பாருங்களேன்… நிச்சயம் அவருக்கு அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம் இருக்கும்.

உலகப் புகழ் பெற்ற பல தொழில்துறை ஜாம்பவான்கள் பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள், உலகப் பெரும் பணக்காரர்கள் இவர்கள் அனைவரும் அதிகாலை எழுந்திருக்கும் பழக்கம் உடையவர்களே.

ஜெனரல் மோட்டார்ஸ் சி.இ.ஒ.  டான் ஆகர்ஸன், விர்ஜின் அமெரிக்கா சி.இ.ஒ. டேவிட் குஷ், ஆப்பிள் நிறுவனத்தின் சி.இ.ஒ. டிம் குக், ஆக்சிஜென் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஒ. கெர்ரி லேபோர்ன், யூனிலீவர் சி.இ.ஒ. பால் போல்மன், சிஸ்கோ நிறுவனத்தின் சி.டி.ஒ. பத்மஸ்ரீ வாரியர், பெப்சிகோ முன்னாள் சி.இ.ஒ ஸ்டீவ் ரெய்னி மன்ட் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களும் இயக்குனர்களும் அதிகாலை எழுபவர்களே.

கோடிக்கணக்கில் மாத ஊதியம் பெறும் இவர்களுக்கு நேரம் என்பது எத்துனை அரிய ஒரு விஷயம் என்று தெரியுமல்லவா? நம்மை விடவா அதிக நேரம் கிடைக்கபோகிறது?  ஆனால் அதிகாலை இவர்கள் எழுகிறார்களே எப்படி? …ம்ம்ம் அது தான் வெற்றிக்கான சூத்திரத்தின் முதல் படி.

அதிகாலை எழுந்திருப்பதன் அவசியத்தை வேத நூல்களும் இதிகாசங்களும் கூட பல இடங்களில் வலியுறுத்தியிருக்கின்றன.

பகல் தொடங்குவதற்கு முந்தைய விடியற்காலை நேரம் நமக்கு பிரம்மமுகூர்த்தம் எனப்படுகிறது. இந்த நேரத்தில் படுக்கையில் இருந்து எழுதுவிடவேண்டும்.

அதிகாலையில் எழுந்திருக்கவேண்டுமானால் இரவு நாம் விரைவில் உறங்கச் செல்வது முக்கியம். ஆரோக்கியமான ஒரு உடலுக்கு தினசரி 6 அல்லது 7 மணி நேரம் உறக்கம் அவசியம். அதற்கு மேல் வேண்டியதில்லை.

காலை சீக்கிரம் எழுந்திருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள்  4.00 முதல் 5.00 க்குள் எழுந்துவிடவேண்டும். எழுந்தவுடன் நமது உள்ளங்கையை பார்ப்பதும், இறைவனின் திருவுருவப்படத்தை பார்ப்பதும் அவசியம்.

அதிகாலைச் சிறப்பு

சூரியன் உதிக்கும் முன்பே பசுக்களை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வர். கூட்டமாகச் செல்லும் பசுக்களின் குளம்படி பட்டு புழுதி பறக்கும். இத்தூசி பட்ட காற்று, பாவம் போக்கும் தன்மை கொண்டதாகும். இதற்கு “கோதூளி’ என்று பெயர். அதிகாலைப் பொழுதை ஜோதிட சாஸ்திரம், “கோதூளி லக்னம்’ என்று பசுவின் பெயரால் குறிப்பிடுகிறது. இவ்வேளையில் செய்யும் பூஜை, மந்திர ஜெபம்,புதுமனை புகுதல், மந்திர உபதேசம், ஹோமம், யோகப்பயிற்சி, பாடம் பயில்தல் போன்ற சுபவிஷயங்கள் பன்மடங்கு பலன் தரும். மனம் மிகத் தூய்மையுடன் இருப்பதால், இந்தநேரத்தை, “பிரம்ம முகூர்த்தம்’ என்றும் குறிப்பிடுவர். கோதூளி லக்னத்தில் கோயில்களில் விஸ்வரூபதரிசனம் நடத்தி சுவாமிக்கு முன் கோபூஜை நடத்துவர்.

எனவே மேற்கூறிய நல்ல நேரத்தில் எழுந்தவுடன் நமது நாவிலிருந்து வரும் முதல் சொல், இறைவனின் நாமமாக இருக்கவேண்டும்.

காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ?தம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.

எழுந்தவுடன் காலைக்கடன்களை பல்துலக்குதல் உள்ளிட்ட காலைக்கடன்களை முடித்துவிட்டு  (இது ஆரம்பத்தில் சற்று கஷ்டமாக இருக்கும் போகப் போக சரியாகிவிடும். உங்களாது செயல்பாடுகளுக்கேற்ப உடல் தன்னுடைய செயல்பாட்டை மாற்றிக்கொண்டுவிடும்) உடற்பயிற்சியோ அல்லது யோகாசனமோ அவரவர் விருப்பப்படி செய்யலாம். ஜிம்முக்கு செல்பவர்கள் செல்லலாம்.

உடற்பயிற்சி முடிந்த பின்னர் சிறிது நேரம் கழித்து குளித்து முடித்து, அவரவர் வழக்கப்படி திருநீற்றையோ திருமண்ணையோ அணிந்து கொண்டு, இறைவனின் படத்துக்கு முன்னர் திருவிளக்கேற்றுவது அவசியம். பெண்கள் தான் விளகேற்றவேண்டும். ஆண்கள் ஏற்றவேண்டியதில்லை என்றெல்லாம் நியதி எதுவும் கிடையாது. ஆண்களும் விளக்கேற்றலாம்.

ஆரம்பத்தில் ஒரு ஒழுங்கீனம் அனைத்திலும் தென்படும். சில நாட்கள் கழித்து அவை ஒரு கட்டுக்குள் வந்துவிடும்.

அப்போது உங்களுக்கு பிடித்த சுலோகங்கள் எதுவேண்டுமானாலும் சொல்லலாம். கந்த சாஸ்தி கவசம், விநாயகர் அகவல், விஷ்ணு சகஸ்ரநாமம்… இவைகளில் எதுவேண்டுமானாலும் சொல்லலாம். அவரவர்க்கு இருக்கும் நேரம் மற்றும் சௌகரியங்களை பொறுத்து இதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

முறையாக திட்டமிட்டால் இவை அனைத்தும் சரியாக காலை 6.30 க்குள் முடித்துவிடலாம். அப்புறம் உங்கள் வழக்கமான் பணிகளை துவக்கலாம்.

அனைவருக்கும் 24 மணிநேரம் என்றிருக்க உங்களுக்கு மட்டும் (அதிகாலை எழும் பழக்கத்தால்) சற்று கூடுதல் நேரம் இருப்பது போல தோன்றும். எவ்ளோ பெரிய விஷயம் இது!

பணிச் சூழல் காரணமாக இதை கடைபிடிக்க முடியாதவர்கள் அதாவது நைட் ஷிப்ட்களில் பணிபுரிபவர்கள் மற்றும் பி.பி.ஒ.க்களில் பணிபுரிபவர்கள், தாங்கள் தூங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்திகொள்ளவேண்டியது அவசியம். அவர்கள் பணி முடிந்து இல்லத்திற்கு திரும்பி, உறங்கியவுடன் மறுபடியும் எழுந்திருக்கும் நேரத்தை அந்த நாளின் தொடக்க நேரமாக கருதி இவற்றை செய்யலாம். தவறே அல்ல! அதில் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை உரிய நேரத்தை தேர்ந்தேடுத்து செய்யவேண்டும். மற்றபடி மனமிருந்தால் மார்க்கமுண்டு!

(முன்பெல்லாம் நான் இரவு விழித்திருந்து எழுதுவது, டி.வி. பார்ப்பது வழக்கம். நேரத்திற்கு எதையும் நான் செய்வதில்லை. மிகவும் கஷ்டப்பட்டு எனது பழக்கங்களை மாற்றிக்கொண்டு, நான் கடைபிடிக்க ஆரம்பித்து உங்களுக்கு இப்போது சொல்கிறேன். RIGHTMANTRA.COM துவக்கியதன் மிகப் பெரிய பலன் இது. தற்போது காலையில் சீக்கிரம் விழித்து வருகிறேன். அதன் மூலம் எழுத நேரம் கிடைப்பது ஒரு பக்கம், நான் நீண்ட நாட்களாக படிக்காமல் வைத்திருந்த நல்ல நூல்களை படிக்க முடிகிறது!)

சாஸ்திர ரீதியாக மட்டுமல்ல அறிவியல் ரீதியாகவும் ஆராய்ச்சி ரீதியாகவும் கூட அதிகாலை எழுந்திருப்பது நலம் பயக்கும். நம்ப முடியவில்லையா? கீழ்கண்ட லின்க்கை செக் செய்யுங்கள்.

http://www.telegraph.co.uk/health/healthnews/8763618/Early-risers-get-ahead-of-the-game.html

அதிகாலை எழும் பழக்கத்தை ஒரு மூன்று மாதங்களுக்கு செய்து பாருங்களேன். அப்புறம் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றத்தை கண்கூடாக பார்ப்பீர்கள்.

“No one who can rise before dawn 360 days a year fails to make his family rich.” – Chinese proverb

No comments:

Post a Comment