Friday, December 13, 2013

சுயமுன்னேற்றம் - உங்களை நீங்களே சரிபார்க்க…

சுயமுன்னேற்றம் - உங்களை நீங்களே சரிபார்க்க…

தொழிலில் ஏற்படுகிற ஏற்றத்தாழ்வுகளால்
உங்கள் உறுதியும் தடுமாறுகிறதா?
உங்களை நீங்களே சரிபார்க்க…
இதோ சில அடிப்படை அவசியங்கள்!

வார்த்தைகளில் உண்மை:

சொன்ன வார்த்தைகளுக்கு உண்மையாக இருங்கள். சொன்ன நேரத்திற்கு எதையும் முடித்துத் தருவதில் உறுதியாய் இருங்கள்.

தவிர்க்க முடியாத தாமதங்களையும் முன் கூட்டியே கணித்து, முன்னதாகவே அறிவித்து, கூடுதல் அவகாசத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இது எப்போதாவது தான். எப்போதும் செய்யக் கூடியதல்ல. எந்த சமயத்திலும் நீங்கள் தந்த வார்த்தையின் தரத்தை தரைமட்டமாக்காதீர்கள்.

நேர மேலாண்மை:

நீங்கள் ஒப்புக்கொண்ட சந்திப்புகளுக்குத் தாமதமாக வருவது, சந்திப்பவர்களை அவமதிப்பது. நீங்கள் ஏற்பாடு செய்த சந்திப்புக்கு தாமதமாகச் செல்வது, உங்களை மதித்து வந்தவர்களை அவமதிப்பது. ஒவ்வொரு விநாடியும் மதிப்புள்ளது என்பதை உங்கள் செயல்பாடுகள் உணர்த்தும்போது வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.

கணக்குகள் சமர்ப்பித்தல்:

நீங்கள் உண்மையானவர், நியாயமானவர் என்று பிறர் உங்களை போற்றக் காரணமாக இருப்பவை கணக்குகள். இனிப்பென்று நினைத்து கடித்த பழம் புளித்தால் முகம் சுளிப்பதுபோல் தவறான கணக்குகள் தருபவர்கள்மீது மற்றவர்களுக்கு மனச்சுளிப்பை ஏற்படுத்தும்.

பழகுவதற்கு எளிமையாக இருங்கள்:

உலகின் ஒரு நிறுவனத்தின் வெற்றி அதன் தலைவர்கள் பழக எளிமையானவர்களாக இருக்கிறார்களா என்பதைப் பொறுத்தே அமைகின்றன என்று நிர்வாகவியல் ஆய்வுகள் சொல்கின்றன. நீங்கள் பழக எளிமையானவர்களாக இல்லையென்றால் உங்களுடன் வணிக தொடர்பு வைத்துக்கொள்ள பெரும்பாலோர் தயங்குவார்கள். உங்களுடன் பணியாற்றக்கூடிய யாவரும் தங்கள் நிலையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இயலாது. இது உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கும்.

கூட்டுமுயற்சி:

ஒரு நிறுவனத்தின் வெற்றி அதன் பின் இயங்குகிற ஒட்டுமொத்த குழுவை சார்ந்தே இருக்கிறது. தனி மனிதனின் திறமைகளைத் தாண்டி பிறரின் கருத்துகளுக்கு செவிசாய்த்து, மற்ற பணியாளர்களின் திறமைகளை அங்கீகரிக்கிற போது, நிறுவனத்தின் வெற்றி தானாகவே உயரும். இந்தக் கூட்டு முயற்சியின் மூலமாக சக பணியாளர்களிடையே நம்பிக்கை, பொறுமை, சிக்கல்களை எதிர்கொள்கிற விதம் என அத்தனை திறமைகளும் வளரும்.

செயலில் ஒழுக்கம்:

பலர், வேலை நேரங்களில் எந்நேரமும் வீண் பேச்சுகள் பேசி பொழுதைக் கழிப்பார்கள். அலுவலக உடைமைகளை தவறான வழியில் பயன்படுத்துவார்கள். புரளி பேசுவார்கள், உயர் அதிகாரிகளை விமர்சனம் செய்வார்கள். இது செயலொழுக்கம் இல்லாத சூழ்நிலை. இந்நிலையை மாற்ற ஒரு நிறுவனம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

துணிவு:

வெற்றியின் அடிப்படையே உங்கள் தடைகளை தகர்த்தெறிந்து செயலில் ஈடுபடுதல்தான். பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வித்தியாசமான அணுகுமுறை மூலம் தீர்வு காணுகிறபோது உங்கள் போட்டி நிறுவனங்களுக்கு உங்கள் மீது பயம் ஏற்படுவது நிச்சயம். நீங்கள் அசந்துவிடுகிற நொடியில் உங்கள் கண்களுக்கு எட்டாதூரம் நீங்கள் பெற்ற வெற்றியை கடந்து உங்கள் போட்டியாளர் ஓடிக்கொண்டிருப்பார்! எனவே துணிந்து செயல்படுங்கள். உங்கள் திறமைகளை உணர்ந்து செயல்படுங்கள்.

அழுத்தத்தை எதிர்கொள்ளுங்கள்:

அழுத்தம் இல்லாத எந்த துறையும், வேலையும் இன்றளவும் கண்டுபிடிக்கப்படவில்லை. உங்கள் வேலையில் அழுத்தம் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. நிலத்தில் அழுந்திப் பதிகின்ற பந்துகள் விண் நோக்கி எம்புவது போல், நீங்கள் எதிர் கொள்கிற வேலையின் அழுத்தம் உங்களை வெற்றியின் உயரத்திற்குக் கொண்டு செல்லும்.

நீங்கள் தற்பொழுது அடைந்து உள்ள நிலை மிகவும் சுகமானதாக, போதுமானதாக தோன்றும். ஆனால் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் நகர வேண்டும். தேடுதலை நிறுத்தினால் தேக்கம்தான். எனவே தொடர்ந்து செயல்படுங்கள்!

விவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள்
தவணை முறையில் வெற்றி காண்போம்.

சரியான நேரத்தில் எதையும் நிறுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இது பற்றி ஒரு பெரிய பட்டியலே தயாரிக்கலாம்.

பல விதமான முறைகளில் – பிறப்பு முதல் இறப்பு வரை, கவலையில் இருந்து தற்கொலை வரை – சிலர் தங்கள் துன்பத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள். வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சாப்பாட்டை நிறுத்தி விட வேண்டும், இல்லையேல் வயிறு பெருத்து சீக்கிரம் இறந்து விட நேரிடும்.

இது போலவே மதுபானம், பேச்சு போன்றவற்றையும் நிறுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.

பல உதாரணங்களைச் சொல்லலாம். இவைகள் போன்ற உடல் சம்பந்தப்பட்டவற்றை பழக்கத்தினால் நிறுத்தலாம். ஏனெனில் உங்கள் அறிவார்ந்த மனதுக்கு உடல் கட்டுப்படுகிறது. ஆகவே நிறுத்து என்றவுடன் தேவையற்றவைகளை நிறுத்த முடிகிறது.

உள்மனதில் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளை நிறுத்துவது சாத்தியமில்லை. உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருந்தால்கூட உணர்ச்சி மயமானதாக இருந்தால் அவற்றையும் உள்மனத்தால் கட்டுப்படுத்த முடியாது.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கையில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. பிரச்சினைகள் நிறைந்த இந்த உலகில் சங்கடங்களுக்கு முக்கிய காரணம் நிறுத்தத் தவறுவது தான். உணர்ச்சிமயமான பிரச்சினையைச் சமாளிக்க எப்படி நிறுத்துவது எப்பொழுது நிறுத்துவது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எதிர்மறை உணர்ச்சியை அதிகரிக்க விடாதீர்கள். குறை கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. குறை சொல்வதில் பயன் இல்லை. குறை சொல்லத்தான் வேண்டும் என்றால் அதிகம் உணர்ச்சி வசப்படாமல் கூறலாம். அதில் எரிச்சல், பழிவாங்குதல், வெடுவெடுப்பு, வெறுப்பு போன்ற எதுவும் தலைகாட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிருதுவாக, விசனம் இல்லாமல் நல்ல எண்ணத்தோடு நீங்கள் வழிகாட்டுவதாக உணர்த்திக் குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள். அத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

அது அவர்களுக்குத் தொல்லை தரும் வரை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.

சிறு சண்டையே காரசாரமான விமர்சனங்களுக்கு வழி செய்கிறது. உங்கள் விமர்சனம் எதுவரை செல்லுபடியாகும் என்பதைப் புரிந்து கொண்டு அத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். விவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள். அந்தப் பேச்சை அதற்குப் பின் எடுக்காதீர்கள்.

உங்கள் உணர்வுகள் பாதிக்கப்பட்டனவா? எல்லோருடைய மனதுக்கும் மூன்று விதமான ஆசைகள் உண்டு:

1) மற்றோர் மனதில் முக்கியமானவர்களாய் இருக்க வேண்டும்.
2) தம்மைப் பிறர் புகழ வேண்டும்.
3) பாராட்ட வேண்டும்.

இவைகளைப் புரிந்து கொள்ளாத சிலர் உங்களை அவமானப்படுத்தி இருக்கலாம். இதனால் உங்கள் உணர்வுகள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

இவைகளைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். அதை மீண்டும் மீண்டும் நினைத்துக் கவலையை அதிகரிக்காதீர்கள்.

நடந்தது நடந்து விட்டது, நிறுத்துங்கள்.

நடந்தவற்றை மாற்ற முடியாது. அதை நினைத்திருக்காதீர்கள். நிறுத்துங்கள்.

உங்களைப் போலவே மற்றவர்களுக்கும் கவலைகள் உண்டு. கவலையைப் போக்க என்ன செய்தால் என்று யோசித்தால் பலன் உண்டு, துன்பத்திலேயே தோய்ந்திருந்தால் என்ன லாபம்?

தொல்லை தரும் கவலையை, பிரச்சினைகளைத் தீர்க்க ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்கள். உங்கள் கவலைக்குக் காரணம் எதுவாக இருந்தாலும் நிறுத்திவிடுங்கள். நிறுத்துவது தொடர வேண்டும்.

எல்லோரும் எல்லோரையும் விரும்ப முடியாது. உங்களுக்கு சிலரைப் பிடிக்காமல் இருக்கலாம். அத்தோடு நிறுத்தி விடுங்கள்.

“எனக்குப் பிடிக்காதவரைப் பற்றி நான் நினைப்பதே இல்லை“ என்று ஐசன் ஹோவர் கூறினார்.

அந்த எண்ணங்கள் வந்தவுடன், அவனை/அவளை எனக்குப் பிடிக்காது. நிறுத்தவும். அவ்வளவு தான். அதன் பிறகு மனதில் வேறு எண்ணங்களைச் செலுத்தவும்.

யாருக்குத் தான் தொல்லைகள் இல்லை? அவைகளோடு கவலைகளைச் சேர்த்து துன்பம், பயம் என்று அதிகரித்துக் கொண்டே செல்வானேன்?

எதிர்மறை உணர்வுகளை அதிகரிக்காதீர்கள். முடியுமானால் தீர்வு காணுங்கள், இல்லையேல் நிறுத்தி விடுங்கள்.

விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கிறது. அதை நம்பலாம். நிறுத்தவும்.

மகத்தான நதி போல் செயற்படுங்கள்...! 

மகத்தான நதி தன்னுடைய புகலிடம் நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கிறது. அது அங்கு நிச்சயம் சென்றடையும். அது தன் வழியை வகுத்துக் கொண்டுவிட்டது.

நீங்களும் அது போல் செயற்படுங்கள்.

நீங்கள் போய் சேர வேண்டுய இடம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைக் குறிக்கோளை அடைய ஒரு வழியும் உங்களுக்குப் புலப்பட வேண்டும்.

மகத்தான நதியைப் போல் அந்த வழியிலேயே உங்கள் பயணம் முன்னேறட்டும்.

வெள்ளம் வந்து நதியின் போக்கை இலேசாக மாற்றலாம். ஆனால் வெள்ளம் வடிந்த பின்னர் நதி தன் வழியாகவே செல்லும். அது தன் இலக்கை நோக்கி ஓடிய வண்ணமே இருக்கும்.

நீங்களும் அவ்வாறே செயல்படுங்கள்.

உங்கள் வழியிலும் பல பிரச்சினைகள் தோன்றலாம். மகத்தான நதியைப் போல் மீண்டும் உங்கள் வெற்றிப் பாதைக்கு வந்து சேருங்கள். உங்கள் குறிக்கோளை நோக்கி நகர்ந்த வண்ணம் இருங்கள்.

நதியின் ஓட்டம் ஒரே சீராக இருக்காது, சில நேரம் வேகமாகவும், சில நேரம் மெதுவாக அமைதியாகவும் ஓடும். ஆனால் தன் புகலிடம் நோக்கி எப்போதும் ஓடியவாறே இருக்கிறது.

நீங்களும் அவ்வாறே செயல்படுங்கள்.

மெல்ல நகர்வது நதியின் ஓட்டத்தைப் பாதிப்பதில்லை, வேகம் முக்கியம் இல்லை. தொடர்ந்து உங்கள் குறிக்கோள் நோக்கிய பயணம் தான் முக்கியம். உங்கள் முன்னேற்றத்தை நதியின் ஓட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். தொடர்ந்து முன்னேறும் இயக்கத்தை உணருங்கள்.

உங்கள் வாழ்க்கை குறிக்கோள் நோக்கி வழிநடக்கட்டும். திட்டமிட்ட வழியிலிருந்து திசை திரும்பாதீர்கள். மகத்தான தடுத்து நிறுத்த முடியாத சக்தியை உங்களுக்குள் உணருங்கள்.உங்கள் குறிக்கோளை அடைவதில் உறுதி மனதில் ஆழமாகப் பதிந்திருக்கட்டும்.

தொடர்ந்து ஓடுவதான, தடுக்க முடியாத மகத்தான ஓர் இயக்கம் உங்கள் வாழ்க்கை சென்றடையும் வழி என்று உணருங்கள். 

இந்த அசையும் நதியின் உணர்வு சதா உங்களுக்குள் இருக்கட்டும்.

-காப்மேயர்

இன்று இப்பொழுது தான் நம்முடைய நேரம்
கடந்த காலம் கழிந்து விட்டது ! 

நீங்கள் நிகழ்காலத்தில் தான் வாழ முடியும்; கடந்தது கடந்தது தான். இந்த வாக்கியத்தை நீங்கள் நினைவில் நிறுத்தித் தொடர்ந்து கூறிவந்தால், அது உங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றியமைக்கும்.

நீங்கள் இறந்த காலத்தில் வாழ முடியாது. பழைய சுகங்களை அசை போட்டு அனுபவிக்கலாம். பழைய துக்கங்களை உங்களால் முழுவதும் மறக்க முடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் பழைய சுகங்களையும் துக்கங்களையும் பழைய நிகழ்ச்சியாகளாகவே பார்க்கவேண்டும்.

நினைவுகளாக அவை உங்கள் மனதில் நிற்கலாம், ஆனால் நிகழ்கால உணர்ச்சிகளாக அல்ல. 

புத்திசாலித்தனமாக, வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கு இது ஒரு முக்கியமான பாடமாகும். பழைய சுகங்களும் பழைய துக்கங்களும் மறைந்து விட்டன.

இறந்த காலம் கடந்து சென்றது. கதவை மூடிவிடுங்கள். 

பழைய சுகங்களும் பழைய துக்கங்களும் வெறும் நினைவுகளே. அவற்றை நிகழ்கால உணர்ச்சிகளாக மறு அவதாரம் எடுக்க வைக்காதீர்கள். இறந்த காலம் சென்று மறைந்தது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். நிகழ்காலம் கண் முன் இருக்கும் உண்மை. இறந்த காலத்தில் வாழவோ இல்லை அதை மாற்றவோ நம்மால் முடியாது.

உங்கள் கடந்த காலத் தவறுகளும் சென்று ஒழிந்துவிட்டன. அதன் விளைவுகள் சில நிகழ்காலத்திலும் உங்களுக்கு இடைஞ்சல் தரலாம். நிகழ்காலத்தில் அவற்றை எதிர் கொள்ள வேண்டி வரலாம். நடந்து முடிந்த தவறுகளைத் திருத்த முடியாது. அவற்றிலிருந்து உண்மைகள் உணரப்பட வேண்டும். உணர்வு பூர்வமாக அலசுங்கள் – உணர்ச்சி பூர்வமாக அன்று.

பழைய சோகங்கள், தவறுகள், எரிச்சல் இவற்றை நினைத்து உணர்ச்சி வசப்படுவோர் – நிகழ்காலச் சங்கடங்களை அதிகமாக்குகிறார்கள். மகிழ்ச்சியற்ற கடந்த காலத்தின் நினைவுகள் பற்றி உணர்ச்சி வசப்படும்போது நிகழ்காலம் மகிழ்ச்சியற்றதாகத்தான் இருக்கும்.

சென்றவை சென்று ஒழிந்தது, கதவைச்சாத்துங்கள். 

நிகழ்காலத்தில் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கும் கதவைத் திறந்து வையுங்கள். இன்று கைகொடுப்பவை நிகழ்கால வாய்ப்புக்கள் மட்டுமே.

இன்று இப்பொழுது தான் நம்முடைய நேரம். 

- காப்மேயர்

No comments:

Post a Comment