Tuesday, December 10, 2013

நான் ஏன் பிறந்தேன் ? - திருமூலர்

நான் ஏன் பிறந்தேன் ? - திருமூலர்

திருமூலர் திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை. தமிழர்க்கு முத்தான பொதுமறை. அதில் வரும் ஒரு பாடல், விளக்கத்துடன்.

பாடல் எண்: 81...

பின்னை நின்று என்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவம் செய்கிலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.

விளக்கம் :

பிறவி துன்பம் தருவது.
இருந்தும் மீண்டும் மீண்டும் ஏன் பிறக்கிறார்கள் ? பிறவி தொடர்வது ஏன் ?
இப்படி மீண்டும் மீண்டும் பிறப்பவர்கள் எல்லாம், முன் பிறப்பில் முறையாகத் தவம் செய்யாதவர்கள்தான். தவம் செய்யத்தவறியவர்களுக்குத்தான் பிறவி தொடரும்.
ஆனால், நான் பிறந்திருக்கிறேனே ! எப்படி ?

நான் பிறக்கவில்லை. இறைவனால் பிறப்பிக்கப்பட்டேன்.
மோன நிலையில்(மொழி கடந்த நிலையில்) இறைவனால் எனக்கு உணர்த்தப் பட்டதை நன்றாகத் தமிழ்ப் பாக்களால் பாட இறைவன் என்னைப் படைத்துள்ளான்.
அதற்காகத்தான் இறைவன் இந்தப்பிறவியைத் தந்துள்ளான்.

No comments:

Post a Comment