Tuesday, December 10, 2013

நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி?

நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி?

மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வெற்றிகரமான முடிவுகளை எதிர்பார்க்கும் ஒரு சிறந்த அணுகுமுறையே நேர்மறை எண்ணங்கள் (positive thinking) எனப்படுகிறது. எல்லோரும் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா என்றால் பலரிடம் பதிலிருக்காது. வாழ்க்கையில் பல பேர் பத்து சதவிகிதமாவது எதிர்மறை எண்ணங்களை (negative thinking) கொண்டிருப்பர். எதிர்மறை எண்ணங்களை தொடர்ந்து வளர்த்துக் கொள்பவர்கள் பல்வேறு பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறுவர். ஆனால் நேர்மறை எண்ணங்கள் நம்பிக்கையை ஆதாரமாக பயன்படுத்தி மன அழுத்தத்தை போக்க பேருதவி புரிகிறது. நேர்மறை எண்ணங்களால் பல நல்ல விஷயங்கள் ஒருவரது வாழ்வில் நடைபெறுகின்றன. 

நேர்மறை எண்ணங்களால் ஆயுள் காலம் அதிகரிக்கிறது. மன அழுத்தம் குறைகிறது. துன்பங்களை தாங்கும் உந்துசக்தி கிடைக்கிறது. நல்வாழ்வு அமைகிறது. இதயநோயினால் ஏற்படும் இறப்பு ஆபத்து குறைகிறது. கஷ்டமான காலங்களில் கஷ்டங்களை தாங்கி, மன அழுத்தத்தை சமாளிக்கும் திறனை அளிக்கிறது. இப்படி நேர்மறை எண்ணங்களை பற்றி பல சிறந்த விஷயங்களை கூறிக்கொண்டே போகலாம். இனி எவ்வாறெல்லாம் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

1. நகைச்சுவை உணர்வை வெளிக்கொண்டு வரவும்: தினசரி நிகழ்வுகளில் ஒரு நகைச்சுவையான விஷயத்தை நாட வேண்டும். வாழ்க்கையில் சிரிக்க முடிந்த அளவில் சிரித்தால், குறைந்த மன அழுத்தத்தை உணர்வோம். 

2. நேர்மறை எண்ணங்களை கொண்ட மனிதர்களை அமைத்துக் கொள்ள வேண்டும்: வாழ்க்கையில் வரும் மனிதர்கள் நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு ஆதரவாக நல்ல பல அறிவுரைகளை தந்து, உங்களது கருத்துக்களை காது கொடுத்து பொறுமையுடன் கேட்பவராக இருப்பவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும். இதனால் அவர்கள் மூலம் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள முடியும். ஆனால் எதிர்மறை எண்ணங்களை உடையவர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால், அவர்கள் மூலம் மன அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்பை பெறுவீர்கள். இதனால் மனம் மற்றும் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிவிடும். 

3. சுய சிந்தனை மூலம் நேர்மறை எண்ணங்களை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்: நேர்மறை எண்ணங்களை சிந்திக்க சில வழிகளை பின்பற்றலாம். உதாரணத்திற்கு ‘இதற்கு முன் நான் இந்த செயலை செய்ததே இல்லை' என்று ஒரு விஷயத்தை யோசிப்பதை விட, ‘புதிதாக ஒரு விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது' என்று நேர்மறையாக சிந்திக்க வேண்டும். அதேபோல் ‘இந்த செயலை செய்ய மிகவும் கடினமாக இருக்கிறது' என்று எண்ணாமல், நேர்மறையாக ‘நான் வேறொரு கோணத்தில் இதை அணுகி சமாளிப்பேன்' என்று சிந்திக்க வேண்டும். இப்படி எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும். 

4. மற்றவர்களுக்கு உதவலாம்: மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், அதிலிருந்து விடுபட மற்றொரு நபருக்கு ஏதாவது நன்மை செய்ய முயற்சி செய்யலாம். இவ்வாறு செய்யும் போது உங்களது தவறான எண்ணங்களிலிருந்து கவனத்தை வேறு நல்ல விஷயத்தில் திசை திருப்ப முடியும். மற்றவருக்கு செய்யும் நன்மைகளால் மனத்திருப்தியும் ஏற்படும். இதனால் நல்ல எண்ணங்கள் மனதில் உருவாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். 

5.நேர்மறையான மேற்கோள்களை படிக்கவும்: நேர்மறையான மேற்கோள்களை உங்களது கணிணியில், பிரிட்ஜ் கதவுகளில் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடியில் காகிதத்தில் எழுதி ஒட்டி வைக்கலாம். இதனால் ஒவ்வொரு முறையும் இவற்றை பார்க்கும் போது அவற்றை படித்து நல்ல எண்ணங்களை மனதில் விதைக்கலாம். 

6. தியானம் செய்யவும்: மனதை அமைதிப்படுத்தி நல்ல எண்ணங்களை உருவாக்குவதில் தியான முறையை பின்பற்றலாம். அதற்கு அமைதியாக கண்களை மூடிக் கொண்டு ஒரு மணி நேரம் எந்த கவலை தரும் விஷங்களை பற்றி சிந்திக்காமல் ஒரே விஷயத்தை நேர்மறையாக சிந்திக்க வேண்டும். ஆரம்பத்தில் இது கடினமாக இருக்கும். ஆனால் தொடர்ந்து செய்து வர நேர்மறையான எண்ணங்களால் மனம் சூழப்பட்டு எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில் வாழலாம்.

No comments:

Post a Comment