Tuesday, December 10, 2013

அலுவலகத்தில் உண்டாகும் டென்ஷனை குறைக்க எளிய வழிகள்

அலுவலகத்தில் உண்டாகும் டென்ஷனை குறைக்க எளிய வழிகள்

அலுவலகத்திற்கு செல்லும் பலருக்கும் அதிகப்படியான வேலைப்பளுவினால் உண்டாகும் டென்ஷனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது.
இத்தகைய மன அழுத்தத்தினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு வருவதோடு, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் தவிப்பார்கள்.

வேலைக்கு செல்வது என்று முடிவெடித்துவிட்டால், நிச்சயம் சிலசமயங்களில் அங்கு அதிகப்படியான வேலையை செய்ய வேண்டிவரும். அப்படி அதிகப்படியான வேலையைச் செய்யும் போது, மனமானது சோர்ந்துவிடுவதோடு, உடல்நலத்தையும் பாதிக்கும்.

அதுமட்டுமின்றி, இந்த மன அழுத்தமானது வேலைப்பளுவினால் மட்டுமின்றி சுவையில்லாத உணவுகள், எரிச்சலூட்டும் வகையில் உடன் பணிபுரிவோர் செய்யும் செயல்கள், எதற்கு எடுத்தாலும் குறை சொல்லும் பாஸ் போன்றவற்றால் மூளையானது அதிக அளவில் அழுத்தத்திற்கு உள்ளாகிறது.

இதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, உறவுகளிலும் விரிசலை ஏற்படுத்திவிடுகிறது.

ஆகவே எவ்வளவு தான் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் இருந்தாலும் செய்யும் வேலையை விரும்பி செய்தால் நிச்சயம் எவ்வளவு வேலை இருந்தாலும் மன அழுத்தத்தில் இருந்து எளிதில் வெளிவர முடியும்.

இங்கு அலுவலகத்தில் ஏற்படும் டென்சன் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து எளிதில் வெளிவர ஒருசில சிம்பிளான வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றுங்கள், நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து வெளிவருவதோடு, எவ்வளவு வேலைக் கொடுத்தாலும், சந்தோஷமாக செய்யலாம்.

ஆழ்ந்து சுவாசித்தல்

டென்சன் அதிகரிப்பது போன்று இருந்தால், உடனே சிறிது நேரம் கண்களை மூடி ஆழ்ந்து சுவாசிக்க ஆரம்பியுங்கள். இதனால் மனமானது அமைதி அடைந்து, அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுவது கட்டுப்படுத்தப்பட்டு, டென்சனால் எடுக்கப்படும் தவறான முடிவுகளைத் தவிர்க்கலாம்.

அமைதியாக இருக்கவும்

அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும் போது, பெரும்பாலானோர் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டுமென்று அமைதியை இழந்து, ஒருவித பதற்றத்துடன் வேலையை செய்வார்கள்.

ஆனால் அப்படி தான் இருக்கக்கூடாது. எவ்வளவு தான் வேலை அதிகமாக இருந்தாலும், மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறிது நேரம் தனியாகவோ அல்லது உடன் பணிபுரிவோருடனோ வாக்கிங் சென்று வாருங்கள்.

பாட்டு அல்லது பிடித்த வீடியோக்களை பாருங்கள்

மன அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமானால் அதற்கு முதலில் நன்கு சிரிக்க வேண்டும். ஏனெனில் சிரிப்பு ஒன்று தான் உடலுக்கும், மனதுக்கும் ஒரு நல்ல மருந்து. எனவே நல்ல குத்துப் பாட்டு கேட்பது அல்லது பிடித்த வீடியோக்களைப் பார்ப்பது, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.

காபியை தவிருங்கள்

அனைவரும் காபி குடித்தால் டென்சன் குறையும் என்று நினைத்து அவ்வப்போது காபி குடிப்பார்கள். ஆனால் உண்மையில் காபி குடித்தால் டென்சன் தான் அதிகரிக்கும்.

ஏனெனில் காபியில் உள்ள காப்ஃபைனானது மனதை அமைதிப்படுத்த உதவும் அடினோசைனை குறைக்கும். ஆகவே காபியை அதிகம் குடிக்காதீர்கள்.

தியானம்

மனமானது அமைதியிழந்து இருக்கும் போது தியானம் செய்தால் மனம் மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் தியானம் செய்யும் போது உடலில் இரத்த ஓட்டமானது அதிகரித்து மனமானது அமைதியடையும்.

நல்ல உணவுகள்

மனதை அமைதிப்படுத்துவதற்கு ஒருசில உணவுகள் உள்ளன. அத்தகைய உணவுகளை டென்சனாக இருக்கும் போது சாப்பிட்டால் அவை மனதை அமைதிப்படுத்து. அதிலும் பாதாம், ஆரஞ்சு, ப்ளூபெர்ரி போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்களாகும்.

வைட்டமின் சி அவசியம்

மன அழுத்தத்தை குறைப்பதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளான ஆரஞ்சு, கேரட் மற்றும் இதர சிட்ரஸ் பழங்களை வேலை செய்யும் போது சாப்பிடுங்கள்.

தண்ணீர்

டென்சன் மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். இதனால் சோர்வடைந்துள்ள தசைகளை நீரானது அமைதியடையச் செய்வதோடு, மனதையும் அமைதிப்படுத்தும்.

No comments:

Post a Comment