Wednesday, January 1, 2014

இந்தப் பதிவினால் உலகத்தை ஒன்னும் (ஏ) மாத்த முடியாது.

இந்தப் பதிவினால் உலகத்தை ஒன்னும் (ஏ) மாத்த முடியாது.

1.எல்லாமே இருக்கின்றது இந்த உலகில்  என்று சிந்திப்பவனுக்கு மட்டுமே  எல்லாமே இருக்கின்றது.எதுவும்  கிடைக்கும் என்று நம்புகின்றவனுக்கு எல்லாமே கிடைக்கின்றது.இப்படித்தான் பல சுயமுன்னேற்றச் சிந்தனைகள் நேர்மறை என்ணங்கள் ,சூழ்நிலைகளை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் என்று பாடம் கற்பிக்கின்றன.

2.இது ஒன்றும் பொய் இல்லை தான் ஆனால்  இலக்கை சரியாக அடைய பல வழி முறைகளையும் விளக்கிவிட்டும் ,அதன் தடைகளை களைவது பற்றி விளக்கி இருந்தாலும் தடைகளுக்கான விதையினை அடையாளம் காட்டாமலும் அதனைக் களைவது பற்றியுமான  ஒரு முக்கியமான செய்தியை விளக்க முடியாமல் பல சுயமுன்னேற்றப் பாடங்கள் முடிவடைந்துள்ளன.

3.நமது படைப்புகளும் செயல்களும் இயற்கையை பிரதி எடுத்து அதனுடைய போக்கில் செய்யப்பட வேண்டும்.இந்த வகையில் இயற்கையின் முக்கியமான விதியான ஒன்றினுக்குள் ஒன்றாக அதன் பிம்பமாக ,நிழலாக அதற்கு சரிசமமான எதிர் எண்ணங்களும் ஒடுங்கிய நிலையில் நமது நேர்மறை எண்ணங்களை இழுத்துக் கொண்டே இருக்கும் அது நிறைவேறாத வகையில்.

4.பிரபஞ்ச ஒளியினில் ஒன்று பொருளாகவும் அதன் நிழல் அதற்குள்ளேயே அதன் பொருளை எதிர்த்துக் கொன்டே இருப்பதனால் தான் பொருட்கள் இங்கு நிலையாக  இருக்கின்றன.அதனாலேயே எல்லாப் பொருட்களும்,தத்துவங்களும் ,முயற்சிகளும்  பழையதில் இருந்து புதியதாகப் படைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன  அதே நேரத்தில் புதிய பொருட்களும்,கொள்கைகளும் ,முயற்சிகளும் அது பிறந்த போதே அதற்குள் இருக்கும் எதிர் நிழலால்  பழையதாக ஆக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன அவை அழிக்கப்பட்டு வேறு ஒன்றாக மாற்றப்படும் வரை.

5.புதியவைகள் என்பவைகள் எதிர்காலத்தோடு தொடர்பு கொண்டு கற்பனையில் இயங்குகின்றன.பழையவைகள் என்பவைகள் கடந்தகாலத் தொடர்புகளை நினைவு படுத்தி கடந்த  கால நினைவுகளோடு வாழ்கின்றன .அவைகள் பொருட்களாக இருந்தாலும் சரி தத்துவங்களாக இருந்தாலும் சரி ,புதிய கண்டுபிடிப்புகளாக இருந்தாலும் சரி.நீங்கள் நிகழ்காலத்தில் படித்துக் கொண்டிருக்கும் இந்தப்  பதிவாக இருந்தாலும் சரி.அதனாலேயே பிறப்பும் இறப்பும் ,படைத்தலும் அழித்தலும் பிரபஞ்சத்தில் இயற்கையாக ஒரு தொடர் நிகழ்வாக  நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது.

6.ஒரு வெற்றியாளனின் வெற்றி தான் எப்போதும் நமது கண்ணுக்கு மினுமினுப்பாகத் தெரியும் .அந்த வெற்றியை அடைய அவன் மேற்கொண்ட வழிகள் எதுவும் நமக்கு தெரிவதில்லை.அந்த வெற்றியாளனே அதனை விளக்கமாகச் சொல்ல முனைந்தாலும் முடிவதில்லை.இது போலத் தான் எந்தப் பொருளையும் எந்த தத்துவத்தையும் பார்க்கும் போதோ உணரும் போதோ அதன் ஒடுங்கிய நிழல் நமக்குத் தெரிவதில்லை.நாம் அதன் ஓங்கு குனத்தை மட்டுமே உணரக் கற்றிருக்கின்றோம்.

7.அதன்  உண்மையான சொரூபத்தைக் காண வேண்டும் என்றால் அதனை நமது இயற்கை விதிகளால்  அளவிட வேண்டும்.அதாவது ஒவ்வொரு பண்புக்கும் பொருளுக்கும் உள்ளே அதன் எதிர் பண்பு  நிழல் ஒன்றும்  இயங்கி வருகின்றது என்ற விதியின் அடிப்படையில்  அளவிட வேண்டும்.அப்போது மட்டுமே அதன் உண்மையான ஒடுங்கு பண்பு  தெரிய வரும்  .அதே நேரத்தில் அதன்  ஓங்கிய பண்பும் அந்த ஒடுங்குதல் இல்லையென்றால் இல்லையென்பதையும்  உணர வேண்டும்.

8.இதில் இருந்து இயற்கையின் விருப்பத்தைப் புரிந்து கொள்ளலாம்.   படைப்பு  ஒவ்வொன்றும் அது பொருளோ தத்துவமோ எதுவாக இருந்தாலும் அது  ஒரே நிலையில் இருப்பதை இயற்கை விரும்புவதில்லை .அது மாறிகொண்டே இருக்க வேண்டும் என்பதை  மட்டுமே இயற்கை தனது  மாறாத விதியாகக் கொண்டுள்ளது.இந்த விதியும் கூட, விதிக்குள்  விதி  என்னும் அளவில் காணும் போது இந்த மாறாமை விதிக்குள்ளும்   தான் மாற்றம் என்னும் நிழலும் எதிர் நிலையில் இயங்கிக் கொண்டுள்ளதே.

9.இந்த பிரபஞ்சத்தில் இயக்கம் இல்லாமல் எதுவும் இல்லை அந்த இயக்கம் ஒரு பொருளில் இல்லையென்றால் ஒன்று அந்தப் பொருள் அழிந்து வேறு ஒரு இயக்கமாக ஆகிவிட்டது என்று பொருள்.ஆகவே நாம் ஒன்றை இறுதியாகப் புரிந்து கொள்ளலாம் ,நாம் செய்யும் எந்த ஒரு செயலாக இருக்கட்டும் நமது சிந்தனையாக இருக்கட்டும் எதுவாக இருந்தாலும் நாம் அதனை செயல் படுத்த முனையும் அந்த நொடியில் இருந்து அதற்குள் இருக்கும் எதிர் நிழலும் இயங்க ஆரம்பித்துவிடும் .

10.அந்த  இயக்கம் குறிப்பிட்ட  செயலையோ எண்ணத்தையோ அதனுள்  இருக்கும் எதிர்  முடிவை நோக்கி.ஆகவே எப்போது ஒரு செயலை நாம் ஆரம்பித்தாலும் அந்த செயலுக்குள் எந்த எதிர் நிழல் படிந்திருக்க வேண்டும் என்பதை நமது செயலின் வழியாக எதிர்பார்க்கும் முடிவை வைத்து கணித்திடல் வேண்டும்.அதன் பின்பு அந்த எதிர் நிழல் அந்த செயலின் வெற்றிக்கு ஒடுங்கு நிலையில் இருந்திடல் வேண்டும் என்பதனை கணித்தும் அதன் எதிர் நிலையை ஒடுங்கும் அளவிலும் நமது செயலினை வடிவமைக்க வேண்டும்

11.நமது செயலின் முடிவானது இந்த ஓங்கு செயல் வெற்றிக்கும், ஒடுங்கு எதிர் நிலைக்கும் நடுவில் இரண்டையும் சமன் செய்யும்படி அமைத்திடல் வேண்டும்.இந்த பதிவின் மூலம் நீங்கள் உணர்ந்த உணர்வை எப்படி சமன் செய்ய வேண்டும் என்று நான் இந்தப்பதிவில் தொடர்ந்து வலியுறுத்த வேண்டியதில்லை.ஆமாம் இந்தப் பதிவினால்  நாம்   உலகத்தை ஒன்னும்(ஏ)மாற்ற முடியாது தான் ஆனால் உலகில் இருக்கும் நம்மை,நமது கோணங்களை(ஏன்) மாற்றலாமே.

No comments:

Post a Comment