Wednesday, January 1, 2014

உனக்குச்சரி எனக்குத் தவறு

1.மற்றவர்களின் தவறுகளில் இருந்து அறிவாளி பாடம் கற்றுக் கொள்கின்றான்.தான் தவறுகள் செய்யாமல் இருப்பதற்கு.தவறுகளே இல்லாத மனிதன்  உலகில்  கிடையாது .எல்லா சரிகளிலும் தவறு மறைந்திருக்கின்றது.அது போல எல்லா தவறுகளிலும் சரி மறைந்து கொண்டிருக்கின்றது.சரியும் தவறும் பார்ப்பவர்களின் கண்ணைப் பொறுத்துத்தான்.

2.இந்த மறைப்பு விதிகளைக் காண்பது தான் அறிவு.நாம் சரியானவைகளாகவே செய்து வந்து கொண்டிருந்தால் ஒருவரும் நாம் செய்த  நல்ல  செயல்களை  நினைத்துப்  பார்க்கமாட்டார்கள்.ஆனால் நாம் செய்த தவறுகளை நாம் மறந்தாலும் மற்றவர்கள்  மறப்பதற்குத்  தயாராக  இல்லை.

3.மூன்றாவது  கண்ணைத் திறவுங்கள்.அறிவுடையவனும் வாழ்க்கையை வாழத்தெரிந்தவனும் ஆன ஒருவன் ,ஒரு சரியான காரியத்தைச் செய்யத் தொடங்கும்  முன்பாக அதில் ஏற்பட இருக்கும் தவறுகளை தனது மூன்றாவது கண்  கொண்டு பார்க்கின்றான்.அது என்ன மூன்றாவது கண் ?ஒரு குறிப்பிட்ட விசயத்தில் ஒருவனுக்கு  அறிவு இருந்தால், அந்த அறிவு கொண்டு அவன் அந்த விசயத்தைக் காணும் போது அவன்  அந்த விசயத்தைப் பொறுத்து மூன்றாவது கண் உடையவனாகின்றான்.

4.பண்டைய அரசர்கள் உளவு என்னும் மூன்றாவது கண் மூலமாக எல்லா  விசயத்தையும் கண்டிருக்கின்றார்கள் . நாம்  மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியங்களிலும் அது பற்றிய விசய ஞானம் , அனுபவ ஞானம் மற்றும்  கேள்வி ஞானம் அதன் மூன்றாவது கண் எனப்படும்.சுருக்கமாகச் சொன்னால் மற்றவர்கள் பார்வையில் இருந்து ஒரு செயலை வேறுபட்ட கோணத்தில் செய்.மாத்தி யோசி நீ செய்யும் காரியங்களான வித்தைகளை அதிசயம் போல்  மற்றவர்களை உணர வை,அது தான் வித்தியாசம் .

5.தவறுகளைச்  சரியான நேரத்தில் செய்யும் போது தான் தவறுகள் ஆனது தவறுகளாகத் தெரிகின்றன.இந்த உலகத்தில் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அது முழுமையாக இருப்பதில்லை.முழு தவறான ஒரு செயலோ முழுவதும் சரியான ஒரு செய்கையோ கிடையவே  கிடையாது .

6.இயற்கையின் படைப்பில் ஒருசெயல் செயலாக இருக்க வேண்டும் என்றால் அதில் இரு வேறு வேறான எதிர் மறையான குணங்கள் பொதிந்திருக்க வேண்டும்.அந்த பொதிதல் என்பது ஐம்பது ஐம்பது சதவிகிதம் என்னும் அளவில் கிடையாது ஒன்று ஒடுங்கியும் ஒன்று மேலோங்கியும்.ஏன் என்றால் இந்தஒடுங்குதலிலும் மேலோங்கும் தண்மையிலும் இரண்டு தண்மைகளும்  அடங்கி இருப்பதால் தான்.

7.ஆனால் ஒரு விசயத்தை நாம் பார்த்தோம் என்றால் அதிக பட்ச தவறுகள் தான் சரியான செயல்களுக்கு மூலம் ,விதை.இரண்டு தவறுகள் எப்போதும் ஒரு சரியான காரியத்தைச் செய்ய முடியாது மூன்றாவதாக ஒன்றை முயற்சித்துப் பாருங்கள் என்று தவறுகளைப் பற்றிச் சொல்லுவதுண்டு.நமது வாழ்க்கையில்  நாம் செய்யும்  ஒவ்வொரு செயலிலும் தவறுகளும் சரிக்களும் அடங்கி இருக்கும் போது நாம் எந்த செயலைச் செய்தோம் என்ன விளைவை அடைந்தோம் என்பது தான் முக்கியம்.

8.நாம் எத்தகைய தவறான செயல்களைச் செய்ய வாய்ப்பிருந்தும் செய்யவில்லை என்பது நாம் யார் என்பதை  உலகிற்குக் காட்டுகின்றது.நாம் தவறுகளைச் செய்யும் போது அதன் முடிவு கண்டிப்பாகச் சரியாக  இருக்க முடியாது  ஆனால் ஒரு விசயத்தை சரியாகத்தான் செய்கின்றோம் என்று எண்ணும் போதே அதில் தவறும் வந்துவிடுகின்றது.

9.ஒரு விசயத்தைத் தவறு என்று நிரூபணம் செய்வது மிகுந்த கடினமான காரியம் ஏன் என்றால் , நாம் ஒரு காரியத்தைச் சரியாக செய்து அதற்கு மாறாக ஒரு காரியத்தைத் தவறாக செய்த நபரானவர் சரியாகச் செய்ததைத் தவறு என்று நிரூபணம் செய்து தான் செய்த தவறை சரி என்று நிரூபனம் செய்வார் .சுருக்கமா புரிகின்ற மாதிரிச் சொன்னால் தப்பை தப்பாச் செய்தால் தப்பு தப்பே இல்ல. இது  சரியைச்  சரியாகச் செய்யுறவங்களுக்கு மட்டும் தான் புரியும் சரியா?

10.தவறுகளைச் செய்யும் நபர்கள் தான் வாழ்க்கையின் சரியான பாடங்கள்  எது என்பதை எல்லோருக்கும் போதிக்கின்றார்கள்.இந்தப் பதிவின் மூலம் ஒரு சரியான விசயத்தை சொல்லுகின்றோம் என்று நான் நினைத்தாலும்  இதில் உள்ள தவறுகளையும் நீங்கள் பார்க்கின்றீர்கள் என்பது தான் சரி .

11.தவறுகளும் சரிக்களும் தனித் தனியாகப் பிரிக்க முடியாமல் தான் படைக்கப்பட்டிருக்கின்றன  .தவறுகளை யார் செய்தாலும் அதில் உள்ள சரிக்களைத் தனியாகப்  பிரித்துப் பார்க்கும் வல்லமையையும் ,சரிக்களை யார் செய்தாலும் அதிலும் உள்ள தவறுகளைத் தனியாகப் பிரித்துப்  பார்க்கும் திறமைகளையும் பெறுவோம்.

No comments:

Post a Comment