Tuesday, March 15, 2016

பணம் மட்டும் வாழ்க்கையா ? - 1

        நான் எழுதிய  “எங்கு நோக்கினும் பணம்” என்னும் பதிவிற்கு என் தோழி ஒருத்தர், பணம் இல்லாவிட்டால் உறவுகள், நண்பர்கள் இப்படி எல்லோரும் நம்மை உதாசீனப்படுத்துவர் என்று கருத்து தெரிவித்திருந்தார். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை அனைவரும் அறிவர். ஆனால், பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்பதை நானும் அறிவேன்.உயிர் வாழ பிராணவாயு தேவை. ஆனால், வெறும் பிராணவாயு மட்டும்போதுமா நாம் வாழ? சரி, நாம் உயிர் வாழ தண்ணீர் மிகவும் முக்கியம். சரி, நைல் நதியை உங்கள் பெயரில் எழுதி வைக்கிறேன், அந்த தண்ணீரை மட்டும் கொண்டு உங்கள் வாழ்க்கை வாழமுடியுமா. முடியாது.

        நாம் உயிர்வாழ பிராணவாயு முக்கியம். தண்ணீ முக்கியம். அதே போலத்தான் பணமும் முக்கியமே தவிர, பணம் மட்டுமே முக்கியம் அல்ல. சிறந்ததொரு எதிர்காலத்தை செதுக்கும் வேலையில் நாம் இன்று கிடைக்கும் நிகற்காலத்தை இனிதாய் வாழ மறக்கின்றோம். நாளை என்பது தினமும் வரத்தான் செய்யும். ஆனால் நாளை என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது. இன்று இருப்பது மட்டும்தான் நிஜம். அந்த உண்மையை உணர்ந்து இன்றைய பொழுதை மனதிற்கு சந்தோஷமாய் வாழவேண்டும். நாளைய பொழுதை சிறப்பாய் அமைக்க பாடுபடுகிறேன் என்பவர்கள் என்றுமே, நாளைக்குத்தான் உழைப்பார்களேயன்றி உழைத்து சம்பாதித்ததை எப்போது அனுபவிப்பது என்பதை மறந்துவிடுகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் ஒரு செய்தி படித்தேன். இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை ஒரு செய்தித்தாள் வெளியிட்டது. சென்ற வருடம் முதல் இடத்தில் இருந்தவர் இந்த வருடமும் முதலிடம் என்று. சிரித்தேன் நான். செய்தித்தாள் என்னும் காகித்ததில் தங்கள் பெயர் இடம்பெறத்தான் இவர்கள் உழைக்கிறார்கள் போல. எல்லோரும் ஒருநாள் கல்லைறையில் இடம்பெறத்தான் போகிறோம். பணம் சம்பாதிப்பதே செலவு செய்யத்தான் என்பதை அனைவரும் பல நேரங்களில் மறந்துவிடுகின்றனர். 

            எது எப்படியோ, என் கைகளால் எவ்வளவு தாங்க முடியுமோ அவ்வளவு மட்டும்தான் என்னால் தாங்க முடியும். அந்த அளவிற்கு ஈன்று, அதில் பாதியை செலவு செய்து, மிச்சத்தில் பாதியை சேவை செய்து, மிச்சமான கால் பகுதியை சேர்த்துவைத்து வாழ்வதுதான் என் பாதை.

No comments:

Post a Comment