Monday, July 20, 2015

வெற்றி பெற்றவர்கள் செய்யும் 9 விஷயங்கள்!

வெற்றி பெற்றவர்கள் செய்யும் 9 விஷயங்கள்!

வெற்றி பெற்றவர்களிடம், நீங்கள் எப்படி வெற்றிகளைக் குவிக்கும் மனிதனாக மாறினீர்கள், உங்களை வெற்றியடைய செய்தது எது? என்று கேட்டால் தடுமாறவே செய்வார்கள். அதனாலேயே பல ஆண்டு காலம் வெற்றி பெற்ற பல மனிதர்களை ஆராய்ச்சி செய்து அவர்கள் வெற்றிபெறக் காரணமான ஒன்பது முக்கிய விஷயங்களைக் கண்டுபிடித்து, அவற்றை இந்தப் புத்தகத்தில் விளக்கமாகச் சொல்லி இருக்கிறார் ஹெய்தி கிரான்ட் ஹால்வோர்சன். கொலம்பியா பிசினஸ் ஸ்கூலின் அசோசியேட்  டைரக்டராக இருக்கிறார் இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர். வெற்றி பெற்றவர்கள் வித்தியாசமாகச் செய்யும் 9 விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போமா?

1 குறிப்பிட்ட இலக்குகள்!

வெற்றி பெற்ற மனிதர்கள் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார்கள். எப்படித் தூங்குவீர்கள் என்று கேட்டால், சுமாராகத் தூங்குவேன் என்றெல்லாம் சொல்லமாட்டார்கள். இரவு 10 மணிக்கு நான் தூங்கப்போனால் காலை ஐந்து மணிவரை தூங்குவேன் என்று அழுத்தம் திருத்தமாய்ச் சொல்வார்கள்.

நம்மில் பலரிடம், உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன என்று கேட்டால், வேலையில் பதவி உயரணும், நிறைய சம்பாதிக்கணும், வசதியாக வாழணும் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வோம். வெற்றி பெற்றவர்களோ, எனக்கு 20 லட்சம் சம்பளம் வேண்டும்; ஜி.எம். பதவியை அடைய வேண்டும்; மூன்று பெட்ரூம் ஃப்ளாட் இந்தக் குறிப்பிட்ட ஏரியாவில் வாங்கி, இந்த பிராண்ட் காருடன் உலகில் வலம் வரவேண்டும் என்று தங்கள் இலக்கைப் பற்றித் தெளிவாகச் சொல்வார்கள் என்கிறார்.

புத்தகத்தின் ஆசிரியர் பல்வேறு நபர்களை ஆராய்ச்சி செய்தபோது, குறிப்பிட்ட இலக்குகளை அவர்கள் நிர்ணயிக்கும் போதுதான் வாழ்க்கையை சுவாரஸ்யத்தோடு வாழ முடிவதாகச் சொல்லி இருக்கிறார்கள். குறிப்பிட்ட இலக்குகள் நிர்ணயிக்காமல் செயல்பட்டால் வாழ்க்கை திக்குத்தெரியாமல் திரியும் கப்பல்போல ஆகிவிடும். தவிர, குறிப்பிட்ட இலக்குகளை மனதில் வைத்து செயல்படும்போதுதான் என்னென்ன தடைகள் வரும், அதை வெல்ல என்ன வழி என்பதைச் சரியாக கணிக்க முடியும் என்கிறார் ஆசிரியர்.

2 செய்ய வேண்டியதைச் செய்வது!

சரியான சமயத்தில் செய்ய வேண்டியதைத் தவறாமல் செய்வது. பொதுவாகவே மனிதர்கள் எல்லா காரியத்தையும் ஒத்திப்போடும் பழக்கம் உள்ளவர்கள். இந்த ஒத்திப்போடும் பழக்கத்தை விட்டொழிக்க வெற்றி பெற்றவர்கள் ஒரு முக்கிய வழியைக் கடைப்பிடிக்கிறார்கள். இது நடந்தால் - அதன் பின்னால் (if -then )என்ற வழிதான் என்று சொல்லும் ஆசிரியர், இந்த முறையைத் தெளிவான உதாரணங்களுடன் விளக்குகிறார்.

இந்த வேலையை லஞ்சுக்குள் முடிக்கவில்லை என்றால், லஞ்ச் முடிந்தவுடன் இந்த வேலையைத்தான் முதலில் முடிப்பேன் என்கிற உறுதி செய்துகொள்வது. ஆபீஸில் சக நண்பர்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்து வேலையில் கவனம் செலுத்த முடியவில்லையென்றால், நான் ஐந்து நிமிட நேரமே அவர்களுடன் பேசுவேன் என்ற கட்டுப்பாட்டை வகுத்துக்கொள்வது என்ற மற்றொரு உதாரணத்தையும் ஆசிரியர் சொல்கிறார். இப்படி பிரச்னைகளுக்கு நேரிடையான தீர்வுகளை வைத்திருக்கும் நபர்களே வெற்றி அடைகின்றனர் என்று சொல்கிறது ஆசிரியரின் ஆய்வு முடிவுகள்.

3 இலக்கை ஆய்வு செய்வது!

உங்கள் இலக்கைத் தொட இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது,  எவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறோம் என்பதை அவ்வப்போது கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளும் வழக்கத்தை உருவாக்கிக் கொள்வது முக்கியம். இதன்மூலம் கடந்துவந்த தூரத்தையும் கடக்கவேண்டிய தூரத்தின்  வேகத்தையும் பாதையையும் துல்லியமாகத் தீர்மானிக்க உதவியாக இருப்பதுடன், இலக்கை அடைவதற்கான உத்வேகத்தை அளிக்கும் என்கின்றார் ஆசிரியர்.

4 யதார்த்தமான நம்பிக்கை!

வெற்றி பெற்றவர்கள் எப்போதுமே யதார்த்தமான நம்பிக்கையோடு இருக்கிறார்கள். அது என்ன யதார்த்தமான நம்பிக்கை? தன்னம்பிக்கை பேச்சாளர்கள் பலரும் உங்களால் முடியும் என்று நம்புங்கள், நம்புங்கள் என்று திரும்பத் திரும்ப அவர்கள் தரும் பயிற்சிகளில் சொல்வார்கள். வெறுமனே எல்லாமே முடியும் என்று நம்புவதால் எதுவும் நடந்துவிடாது. நம்மால் எது முடியும், எப்படி முடியும் என்பதைக் கண்டறிந்து அந்த வழிகளை நம்பி நம்மை முழுமையான ஈடுபாட்டுடன் நடத்துவதே வெற்றிக்கு வழி.

5 முன்பைவிட நன்றாக இருக்கிறோமா?

நன்றாக (ரீஷீஷீபீ) இருப்பதைவிட பெட்டராக இருக்க முயலுங்கள். உங்கள் நிலைமையை, சுற்றியிருக்கும் மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதைவிட நீங்கள் முன்பு இருந்த நிலைமையிலிருந்து இப்போது முன்னேறி இருக்கிறீர்களா, உங்கள் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள். இப்படி ஒப்பிட்டு செயல்படுவதுதான் உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும் முக்கியமான விஷயமாக இருக்கும் என்கிறார் ஆசிரியர்.

6 மன உறுதி!

நீண்ட கால இலக்குகளையும் அதை அடையத் தேவையான மன உறுதியையும் கொண்டு விளங்குவதே வெற்றிக்கு வழி வகுக்கும். இன்றைக்கு நீங்கள் செய்துவரும் வேலையில் எதிலெல்லாம் உங்களால் சிறப்பாகச் செய்ய முடியாது என்று பட்டியலிடுங்கள். எவ்வளவு சிரமமாய் இருந்தாலும் அதில் சிறப்பாய் செயல்படத் தேவையான மன உறுதியைப் பெற முயலுங்கள் என்கிறார் ஆசிரியர்.

7 மன உறுதிக்கான பயிற்சிகள்!

உங்கள் மனவலிமையை (வில்பவர்) கூட்டுவதற்கான பயிற்சிகளை அவ்வப்போது செய்யுங்கள் என்கிறார் ஆசிரியர். அது என்ன பயிற்சி? பிடித்தமான ஓர் இனிப்பை ஒரேயடியாகச் சாப்பிடுவதை நிறுத்துவது போன்ற பிடித்த விஷயங்களைச் செய்யாமல் நிறுத்துவதும், பிடிக்காத விஷயங்களைச் செய்து பழகுவதும் மனவலிமையைக் கூட்டுவதற்கான பயிற்சிகள் என்கிறார். வில்பவர் என்பது ஒரு தொட்டியில் இருக்கும் தண்ணீர்போல. உபயோகிக்க உபயோகிக்க தீர்ந்துபோகும். அந்தத் தொட்டியை நிரப்ப இந்தவகை பயிற்சிகள் மிகவும் அவசியம் என்கிறார் ஆசிரியர்.

8 கவர்ச்சிக்கு ஆளாகாதீர்கள்!

கவர்ச்சிக்கு ஆளாகும் சூழலைத் தவிருங்கள்.  என்னதான் மனவலிமையைப் பெருக்கினாலும் அடிக்கடி கவர்ச்சி தரும் சூழலில் இருந்து கொண்டேயிருந்தீர்கள் என்றால், உங்கள் வில்பவர் தொட்டி நிரம்பிய நிலையில் இருந்து காலியாகிக்கொண்டேயிருக்கும். எனவே, கவர்ச்சியான சூழலை மொத்தமாகத் தவிர்க்க முயலுங்கள் என்கின்றார்.

9 செய்ய முடிந்ததையே செய்வது!

உங்களால் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதைக் கவனமாக ஆராய்ந்து முடிவெடுங்கள் என்கின்றார். முன்னேற்றப்பாதையில் செல்ல நிறைய இலக்குகள் இருக்கும். அந்த இலக்குகள் நெகட்டிவ்வாக இல்லாமல் பாசிட்டிவ்வாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும் ஆசிரியர், உதாரணமாக நிறையச் சாப்பிடமாட்டேன் என்று சபதம் எடுத்து வில்பவரை டெஸ்ட் பண்ணுவதைவிட அளவாய்ச் சாப்பிடுவேன் என்று எதைச் செய்ய வேண்டுமோ, அதை இலக்காகக் கொண்டால் வெற்றி நிச்சயம் வரும் என்கின்றார்.

முடிவாக, வெற்றி பெற்றவர்கள் எல்லோருமே உங்களால் செய்ய முடியாதது எதையும் புதிதாய்ச் செய்வதில்லை. உங்களாலும் அவர்கள் செய்வதைச் செய்ய முடியும். இப்போதைக்கு ஒரே ஒரு வித்தியாசம்தான். அவர்கள் அதைச் செய்துவிட்டார்கள். நீங்கள் அதைச் செய்ய முயலவில்லை. நீங்களும் முயன்றால் நிச்சயமாய் வெற்றிபெறலாம் என்று சொல்லி புத்தகத்தை முடிக்கின்றார் ஆசிரியர்.

ஒவ்வொரு வழியையும் எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதோடு, ஆராய்ச்சி சான்றுகளுடன் கூடிய, முன்னேற்றத்துக்கான வழிகளைச் சொல்லும் இந்தப் புத்தகம் தோல்வியைத் தவிர்க்க நினைக்கும் அனைவருக்கும் நிச்சயம் பயன்படும்!

No comments:

Post a Comment