Sunday, February 24, 2013

உயிரோட்டம் உள்ளதா வாழ்க்கையில்?


எல்லோருமே வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தேடுகிறோம், ஒரு அர்த்தத்தைத் தேடுகிறோம், வெற்றியடைய ஆசைப்படுகிறோம். மகிழ்ச்சியும், அர்த்தமும், வெற்றியும் எது எது என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும் விஷயங்கள் என்றாலும் எல்லோருடைய தேடலும் அவற்றை நோக்கியே இருக்கின்றன. என்றேனும் ஒரு நாளில் வெற்றியடைவோம், வாழ்வில் அர்த்தம் கண்டு பிடிப்போம், மகிழ்ச்சியடைவோம் என்ற எதிர்பார்ப்பில் தினசரி வாழ்க்கையைக் கோட்டை விடும் முட்டாள்தனம் பலரிடம் இருக்கிறது. 

பலருடைய தினசரி வாழ்க்கை எந்திரத்தனமாக இருந்து விடுகிறது. என்றோ வாழப்போகும் நல்லதொரு வாழ்க்கைக்கான ஓட்டப்பந்தயமாக இருந்து விடுகிறது. வாழ்கின்ற வாழ்க்கை சரிதானா என்ற சந்தேகம் அடிக்கடி வர அடுத்தவர்களைப் பார்த்து அவ்வப்போது மாற்றிக் கொள்கிறதாகி விடுகிறது. இயற்கையான ஆரம்ப இலக்குகள் மாறி பணம், புகழ், படாடோபம் என்ற இலக்குகள் பெரும்பாலானவர்களின் இலக்குகளாகி விடுகின்றன. இந்த இலக்குகளில் மகிழ்ச்சியும், அர்த்தமும், வெற்றியும் தேடும் போது பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

உண்மையான மகிழ்ச்சி, அர்த்தம், வெற்றி இருக்கிறதா என்பதை அறிய ஒரு மனிதனின் தினசரி வாழ்க்கையைப் பார்ப்பது மிகச்சரியாக இருக்கும். காலத்தை மறந்து, செய்கின்ற வேலையில் ஐக்கியமாவது உண்டா? பெரிய செலவில்லாமல் ரசிக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் உண்டா? அடுத்தவர் பார்வைக்கு எப்படி இருக்கிறது என்று கவலைப்படாமல் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காகவே ஈடுபடும் விஷயங்கள் உண்டா? பெரும்பாலான நாட்களில் உற்சாகமாக எதிர்பார்க்கவும், செய்யவும் ஏதாவது புதுப்புது முயற்சிகள் உண்டா? இதில் ஓரிரண்டு கேள்விகளுக்காவது பதில் ஆம் என்று இருந்தால் உங்கள் வாழ்க்கை உயிரோட்டம் உள்ள வாழ்க்கை. உங்கள் வாழ்க்கை அர்த்தத்தோடும், மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் போய்க் கொண்டிருக்கிறது என்று பொருள். 

அதற்கு எதிர்மாறாக உங்கள் தினசரி வாழ்க்கை இருந்து வந்தால் உங்கள் வாழ்க்கையில் உண்மையான உயிரோட்டம் இல்லை என்று பொருள். கேளிக்கைகளில் ஈடுபட்டால் தான் மகிழ்ச்சி கிடைக்கிறதா? தினசரி குடித்தால் தான் நிம்மதி கிடைக்கிறதா? அடுத்தவர்களைப் பற்றி வம்பு பேசி தான் பொழுது போகிறதா? அடுத்தவருடன் ஒப்பிட்டுப் பார்த்து மிஞ்ச முனைவதில் தான் தினமும் அதிக நாட்டம் செல்கிறதா? பொருளாதார இலாபம் இல்லா விட்டால் உங்களுக்கு மிக ஆர்வமுள்ளவற்றில் கூட கவனம் செலுத்த மறுக்கிறீர்களா? இதில் சிலவற்றிற்கு பதில் "ஆம்" என்றால் உங்கள் வாழ்க்கையில் ஓட்டம் இருக்கலாம், ஆனால் உயிர் இல்லை என்று பொருள். 

உயிரோட்டமுள்ள வாழ்க்கைக்கு சில உதாரணங்கள் பார்ப்போம். எடிசன், ஐன்ஸ்டீன் போன்ற விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சிகளில் மூழ்கி விடும் போது உலகத்தையே மறந்து விடுவார்களாம். கொண்டு வந்து வைக்கப்படும் உணவை உண்ணக் கூட மறந்து விடுவது சகஜமாம். லியார்னாடோ டாவின்சி, மைக்கேல் ஏஞ்சலோ போன்ற ஓவிய மேதைகளும் அப்படியே தங்கள் படைப்பில் மூழ்கி விடுவார்களாம். அப்படியே தான் எல்லாத் துறை மேதைகளையும் சொல்லலாம். அந்த நேரங்களில் செய்யும் வேலையின் சிரமங்களோ, வரப் போகும் லாபங்களோ, கிடைக்கப் போகும் புகழோ அவர்கள் கவனத்தில் இல்லை. அந்தத் தருணங்கள் மிக அழகானவை. உயிரோட்டமுள்ளவை. செய்யும் செயல் முழுமை பெறப் பெற அவர்கள் அடையும் சந்தோஷம் வார்த்தைகளில் அடங்காதது. அதே நேரத்தில் அது அர்த்தமுள்ளதாகவும் அமைந்து வெற்றியையும் அளித்து விடுகிறது. அந்த அளவு தனித்திறமை இல்லா விட்டாலும் எத்தனையோ பேர் தங்கள் இயல்புக்கு ஏற்ப உயிரோட்டமான உபயோகமான வாழ்க்கை வாழ்வதை நாம் பல இடங்களிலும் பார்க்கலாம். 

மனதுக்குப் பிடித்ததே வேலையாகவோ, தொழிலாகவோ அமையும் பாக்கியம் ஒருசிலருக்கே வாய்க்கிறது. பலருக்கு அப்படி அமைவதில்லை. அமைகின்ற வேலை உற்சாகமாக இல்லாத போது பொழுது போக்கு ஒன்றையாவது உற்சாகமாகவோ, உபயோகமாகவோ வைத்துக் கொள்வது மிக புத்திசாலித்தனமான அணுகுமுறை. வருமானத்திற்கு ஒரு தொழிலும், மனதிற்கு பிடித்ததாய் ஒரு நல்ல பொழுது போக்கும் அமைத்துக் கொண்டு உயிரோட்டம் உள்ள வாழ்க்கை வாழ்பவர்கள் நிறைய இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சிறிய அரசாங்க வேலையில் இருக்கிறார். அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை உடையவர். அவர் இது வரை ஆயிரம் மரக்கன்றுகளுக்கு மேல் நட்டுள்ளார். அப்படி நடும் போதும் அதைப் பற்றி பேசும் போதும் அவர் முகத்தில் பொங்கும் பெருமிதம் பார்க்கவே அலாதியாக இருக்கும். இப்படி சிலர் சமூக சேவை எதிலாவது முழு மனதுடன் ஈடுபட்டு உயிரோட்டமாய் வாழ்க்கையை வைத்துக் கொள்கிறார்கள்.

வேலைக்குப் போகாத ஒரு குடும்பத் தலைவி தோட்ட வேலைகளில் மிகவும் ஈடுபாடுடையவர். நடும் செடிகளில் தளிர்க்கும் ஒவ்வொரு இலையிலும், பூக்கும் ஒவ்வொரு பூவிலும் ஆனந்தம் காணும் தன்மை அவரிடம் உண்டு. இன்னொரு மனிதர் புத்தகப்பிரியர். புத்தகம் ஒன்று கிடைத்து விட்டால் உலகையே மறந்து அதில் ஆழ்ந்து விடுவார். அவருடைய வேலை எந்திரத்தனமாக அமைந்திருந்தாலும் பிடித்த புத்தகங்கள் படித்து வாழ்க்கையில் உற்சாகம் குன்றாமல் அவர் பார்த்துக் கொள்கிறார். இப்படி பலர் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பிடித்த ஒன்றில் ஆர்வமாக ஈடுபட்டு வாழ்க்கை எந்திரத்தனமாக மாறி விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சாதனை புரியவோ, சரித்திரம் படைக்கவோ முடியா விட்டாலும் வாழ்க்கை உயிரோட்டமாக இருக்கும்படி இப்படிப் பட்டவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். 

இப்படி உயிரோட்டமான வாழ்க்கை வாழ்பவர்கள் பெரும்பாலும் உபயோகமான வாழ்க்கை வாழ்கிறார்கள். இல்லா விட்டாலும் கூட மற்றவர்களுக்கு உபத்திரவமாக என்றும் மாறுவதில்லை. தங்கள் வாழ்க்கையில் தங்கள் வழியில் நிறைவு காண்பவர்கள் அடுத்தவர்கள் வாழ்க்கையில் அனாவசியமாகக் குறுக்கிடுவதில்லை. அடுத்தவர்களை நோகடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளையும், துக்கங்களையும் சமாளித்து சீக்கிரமே மீண்டும் விடுகிறார்கள். 

அப்படி உயிரோட்டமில்லாத வாழ்க்கை வாழ்பவர்களோ அதிகமாக அடுத்தவர்களைப் பார்த்தே வாழ்கிறார்கள். பொருளாதார நிலையே மிக முக்கியம் என்று நம்பி சம்பாதிக்கும் முனைப்பில் தனிப்பட்ட இயல்பான திறமைகளையும், ஆர்வங்களையும் பலி கொடுத்து விடுகிறார்கள். பணம், பொருள், சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டே போகும் அவர்கள் வாழ்வில் முன்பு சொன்னது போல ஓட்டம் இருக்கிறது. உயிர் இருப்பதில்லை. ஒரு வெறுமை என்றும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வெறுமையை நிரப்ப சிலர் போதையை நாடுகிறார்கள், சிலர் கேளிக்கைகளில் அதிகம் ஈடுபடுகிறார்கள், சிலர் பதவி அதிகாரம் தேடி அடைகிறார்கள். வெளிப்பார்வைக்கு அந்த வாழ்க்கை வெற்றியாகவும், மகிழ்ச்சியாகவும் தோன்றினாலும், நிரப்ப முடியாத வெறுமையாகவே அப்படிப்பட்ட வாழ்க்கை இருந்து விடுவது தான் சோகம். 

எனவே உங்கள் வாழ்க்கையில் உயிரோட்டம் உள்ளதா என்பதை சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். மாற்றம் தேவையானால் மாற்றிக் கொள்ளுங்கள். அடுத்தவர் பார்வைக்கு வெற்றிகரமான வாழ்க்கையாய் தெரிந்து உள்ளுக்குள் வெறுமையை உணரும் வாழ்க்கையாக இருக்கும் அவலம் மட்டும் வேண்டவே வேண்டாம். 

தன்னாளுமை என்னும் மண்ணாளும் மகத்துவம்


முதல் சதுரம்

நம்மை நமக்குக் காட்ட உதவும் உன்னதம்

நமக்கு என்னென்னவோ தெரியும். பொது அறிவிலிருந்து, புது அறிவு வரை எல்லாம் தெரிகிறது. எத்தனையோ இயல்கள் எத்தனையோ இசங்கள் எத்தனையோ புத்திகள் எத்தனையோ தத்துவங்கள் எத்தனையோ மொழிகள் – எல்லாம் அத்துப்படி.

ஆனால் நமக்கு ஒன்று மட்டும் – உறுதியாகப் பிடிபடுவதில்லை. அதென்ன கடவுளா? – இல்லை. நம்மைத் தெரிவதில்லை நமக்கு. நமக்கே நம்மைத் தெரியாத நிலைதான் மிகவும் பரிதாபத்திற்குரியது. நமக்கு உலகத் தலைவர்களைத் தெரியும், உலக விஞ்ஞானிகளைத் தெரியும், உலகக் கலைஞர்களைத் தெரியும், உலக ஞானிகளைத் தெரியும். ஆனால் நம்மிடமே இருக்கும் நம்மை மட்டும் தெரியாது. நமக்கு நம்மைக் காட்டும் கண்ணாடியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.

நம்மை எப்படி நமக்குத் தெரியாமல் போனது? “எனக்கு நன்றாகத் தெரியும்” – என விவாதிக்க நம்மில் பலர் காத்துக் கொண்டிருக்கலாம். முதலில் அவர்களின் துணிவுக்கும், நம்பிக்கைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். “என்னை எனக்குத் தெரியும்” – என்று சொல்லத் தேவையான துணிவை விட பன்மடங்கு துணிவு என்னை எனக்குத் தெரியவில்லை – என்று ஒத்துக்கொள்ளத் தேவைப்படுகிறது என்பதுதான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதிசயமாகும்.

நண்பர்களே... நம்மை நாமே அறிய உதவும் ஒரு சதுரத்தை – முதல் சதுரமாய் இப்போது காண்போம். வெறும் சதுரத்தையா காணப்போகிறோம். நம்மையே நாம் காணப்போகிறோம். உங்களுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கிறதா இல்லையா? உற்சாகமும், ஊக்கமும் பிறக்க வேண்டும். ஏனெனில் நம்மில் பலருக்கும் நம்மைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.

வாருங்கள்… அந்தச் சதுரத்தைக் காண்போம். இது நான்கு சதுரங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய சதுரம். இது ஒரு ஜன்னல் மாதிரி. நான்கு கதவுகள் இதற்கு உண்டு. இந்த ஜன்னல் வழியாக நாம் புறத்தைக் காணப் போவதில்லை. நம் அகத்தைக் காணப் போகிறோம். ஆமாம். நம் மனதைக் காணப் போகிறோம்.

மனமென்பது உருவமோ அல்லது வடிவமோ இல்லாதது. அதை எப்படி ஒரு ஜன்னலின் வழியாகக் காண்பது என்னும் வியப்பு – ஒரு பெரும் வினாக்குறியாக நம் மனதில் விழக்கூடும்.

சற்றே கீழ்காணும் சதுரத்தை உற்று நோக்குங்களேன்.

மனம்

ஒன்றாம் சதுரம் நம் மனதின் – திறந்த பகுதியை அடையாளங்காட்டுவது.

இரண்டாம் சதுரம் நம் மனதின் – மறைந்த பகுதியை அடையாளங்காட்டுவது.

மூன்றாம் சதுரம் நம் மனதின் – குருட்டுப் பகுதியை அடையாளங்காட்டுவது.

நான்காம் சதுரம் நம் மனதின் – இருண்ட பகுதியை அடையாளங்காட்டுவது.

அதென்ன திறந்த பகுதி, மறைந்த பகுதி, குருட்டுப் பகுதி – என்கிறீர்களா? நல்ல கேள்வி. இவை நான்கும் – நம்மை நமக்குக் காட்டப்போகும் கதவுகளாகும்.

திறந்த பகுதி என்பது – திறந்து கிடக்கும் வீடு மாதிரி, உள்ளிருப்பவை வெளியில் தெரியும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நிலையிலிருக்கும் ஒரு பகுதி. தன்னைப்பற்றித் தனக்கும் தெரிந்திருக்கும் – தன்னோடு பழகும் பிறருக்கும் தெரியும்.

மறைத்த பகுதி என்பது – தன்னைப் பற்றித் தனக்குத் தெரிந்த சில விஷயங்கள் பிறருக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் பகுதி. விரும்பியோ அல்லது விரும்பாமலோ வெளிப்படுத்தப்படாமல் இருக்கும் பகுதி.

குருட்டுப் பகுதி என்பது – தன்னைப்பற்றி பிறருக்கெல்லாம் தெரிந்தாலும் தனக்கு மட்டும் தெரியாதிருக்கும் – பகுதியைக் குறிக்கிறது. (நம் செயல்பாடுகள் பிறருக்குத் தெரியும் ஆனால் நாம் அதனை உணராதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருப்போம்).

இருண்ட பகுதி என்பது – தன்னைப்பற்றி தனக்கும் தெரியாமல், பிறருக்கும் தெரியாமல் மர்மமாய் இருக்கும் மனப்பகுதி. இங்குதான் வாழ்வின் எதிர்காலம் புதைந்து கிடக்கின்றது. தோண்டித் துருவி எடுத்து மேம்படுத்தப்பட வேண்டிய கற்பக விருட்சமோ, அட்சய பாத்திரமோ இதனுள்தான் இருக்கிறது.

மேற்கண்ட 4 பகுதிகளில் எந்தப் பகுதி சிறந்த பகுதி? எந்தப் பகுதி அதிகமாக இருந்தால் வாழ்க்கை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்? மனதின் திறந்த பகுதி அதிகமாக இருந்தால் மகிழ்ச்சி தானே வரும். மறைந்தும் குருடாகியும் இருண்டும் கிடக்கும் மனதால் எவ்விதப் பயனுமில்லை. எனவே நான்காய் பிரிந்து கிடக்கும் மனதை திறந்து கொண்டு ஒரு பெரிய மனதாய் மாற்றியமைக்க வேண்டும். அதற்கு மற்ற மூன்று பகுதிகளையும் சிறிது சிறிதாய் குறைக்க வேண்டும்.

சரி… அதை எப்படிச் செய்வது எனக் காண்போம். முதலில் மறைத்த பகுதியைக் குறைக்க பிறரோடு நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்க வேண்டும். மிகவும் நெருங்கியவர்களிடமாவது நமது மனதைத் திறந்து “பேச” முற்படவேண்டும். உண்மை பேச வேண்டும். பேசப்பேசத் தான் மறைத்த மனது குறையத் தொடங்கும். மனதின் பாரம் குறைந்து விடும். மனம் லேசாகும்.

அடுத்த பகுதியாகிய குருட்டுப் பகுதியைக் குறைக்க வேண்டுமெனில் நம்மிடம் அக்கறை கொண்ட பிறரைப் பேச அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமல்ல அவற்றைக் காது கொடுத்தும் கேட்கவும் வேண்டும். பிறர் சொல்லை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் கேட்டுக் கொள்ளவும், கவனிக்கவும் தயக்கம் காட்டக்கூடாது. அப்போதுதான் நம்முடைய குறைபாடுகள் நமக்குத் தெரியவரும். நமது குறைபாடு நமக்குத் தெரிந்து விட்டால் – அவற்றை மாற்றிக்கொள்ள நாம் முயற்சி மேற்கொள்ளலாம். அப்போது நம் வாழ்வில் மேம்பாடு நிகழும்.

அடுத்ததாக இருண்ட பகுதியைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டுவதெல்லாம் “தேடல்” தான். நம்மிடமுள்ள திறமைகள் என்ன? நமது ஆர்வம் அல்லது விருப்பமென்ன? நமது இலக்கு என்ன? நமக்கான வாய்ப்புகள் என்னென்ன? நமக்கான தடைகளை எப்படித் தகர்த்து முன்னேறுவது – எனத் தொடரும் “தேடல்” மூலம் இந்த இருண்ட பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் கொணர முடியும்.

மேற்கண்ட முயற்சிகளால் – நம் மனதை நன்றாகத் திறந்துகொள்ள முடியும். மனம் திறந்து கொண்டால் மற்றவர்கள் நம்மை புரிந்து ஏற்றுக் கொள்வார்கள், நம்மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். அதனால் நமது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மனம் திறக்க திறக்க நமது வெற்றிக்கான மார்க்கமெல்லாம் புலப்படத் தொடங்கும்.

அதனால் மனதில் நிம்மதியும் ஆனந்தமும் நிரந்தரமாய் தங்கிவிடும்.

விளைவு: நம் சிந்தனையும், முடிவுகளும், செயல்பாடுகளும் சிறப்பாய் அமையும்.

காலத்தின் அருமையை உணர்ததும் உன்னதம்

மூன்றாவது சதுரம் மிகவும் முக்கியமான காலத்தை உணர்த்துவது. காலம் மிகவும் அற்புதமானது. காலம் என்பது கடந்துவிட்டால் மீண்டும் கிடைக்காதது. காலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. காலம் என்பது ஒவ்வொருவர் கையிலும் கிட்டியிருக்கும் பொக்கிஷமாகும். மனிதவளம் என்பது – இந்தப் பிரபஞ்சத்தின் மூலதனம் என்றால் காலமானது – இந்த மனிதவளத்தின் மூலதனம் என்பது மறுக்க முடியாததாகும். இந்த மூலதனத்தை முறையாகப் பயன்படுத்தும் மார்க்கம் தெரியாததால் நம்மில் பலரும்

வாழ்வின் மிக முக்கியமான அம்சங்களை இழந்து நிற்கிறோம். பலவற்றை இழந்த பிறகே – பலருக்கும் இந்தக் காலத்தின் அற்புதம் புரிய வருகிறது. இந்நிலை ஏற்படாமல் தடுத்து இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் பொருட்டு நாம் இந்த சதுரத்தைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டியிருக்கிறது.

உற்று நோக்கினால் மேற்கண்ட நான்கு சதுரங்களில் காலம் சதுரங்கம் ஆடுவதைக் காணலாம். மேற்கண்ட பெரிய சதுரத்தின் மீது கவனத்தைக் குவியுங்கள்.

சதுரம் – 4 ல் குறிப்பிட்டுள்ள காரியங்கள் யாவும் எந்தவித அவசரமோ, அவசியமோ அற்றவையாகும். இவை குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையே இல்லை. ஆனால் நமது அன்றாடச் செயல்பாடுகளில் பலவும் இத்தகைய வகையைச் சேர்ந்ததே ஆகும். எடுத்துக்காட்டாக கூறவேண்டுமெனில் எந்தவித தேவையுமற்ற தொலைபேசி உரையாடல்கள், வெற்று அரட்டைகள், வெறும் கேளிக்கைகள், எந்த நோக்கமுமற்ற பொழுதுபோக்குகள் இவையாவும் – அவசரமோ, அவசியமோ அற்ற செயல்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும், இவற்றை நாம் அடையாளம் காண வேண்டும். அடையாளம் கண்டு அவற்றைத் தவிர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும். முனைப்புடன் செயல்பட வேண்டும்.

சதுரம் – 3 : இதில் அவசியமற்ற ஆனால் அவசரமான செயல்களை உள்ளடக்கிய சதுரமாக இது விளங்குகிறது. நம்மைத் தொந்தரவு செய்யும் வேண்டாத சில தொலைபேசி அழைப்புகள், எதிர்பாராத சில விருந்தாளிகளின் வருகை, சில கூட்டங்கள், சில மனுக்கள் தயாரித்தல், சில கடிதங்கள் எழுதுதல் போன்றவை அவசியமாய் இருக்க மாட்டா. ஆனால் அவசரமாய் செய்தாக வேண்டியவையாய் இருக்கும். இவை பெரும்பாலும், பிறருக்காகச் செய்யப்படும் செயல்களாக இருக்குமே அன்றி, நமது குறிக்கோளை அடைவதற்கான காரியங்களாக இருக்கமாட்டா என்பதை உணர்தல் அவசியமாகும்.

மேற்கண்ட சதுரம் – 4 மற்றும் சதுரம் – 3 – இவை இரண்டையும் ஊன்றி நோக்கினால் ஒன்றை உணரலாம். இவை இரண்டிலும் அதிக நேரத்தைச் செலவிடுபவர்கள் எதற்கும் அதிகமாக அலட்டிக் கொள்ளாதவர்களாகவும், பெரும் பொறுப்பு எதையும் ஏற்றுச் செய்யாதவர்களாகவும் இருப்பார்கள். பொழுதுபோக்கும் முகமாக – பிறரின் காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்கள்.

செயல்திறனும், செய்நேர்த்தியும் மிக்கவர்கள் இந்த இரண்டு சதுரங்களுக்குள் சிக்கிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில், அவசரமாய் இருந்தாலும் அவசியமில்லை என்பதால் அவசியமற்றதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள். எனவே நாமும் செய்நேர்த்தி மிக்கவர்களாக வாழ வேண்டுமெனில் அவசியமற்றவற்றை ஒதுக்கிவிட்டு நேரத்தை முறையாகப் பயன்படுத்தப் பழக வேண்டும்.

இப்போது, முதல் சதுரத்தைப் பாருங்கள். அங்கே குவிந்து கிடக்கும் காரியங்கள் யாவும் அவசரமாகச் செய்து முடிக்கப்பட வேண்டிய நிலையிலும், அவசியம் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருப்பதை நம்மால் உணர முடியும். பெரும்பாலான சமயங்களில் நமது செயல்பாடுகள் இப்படித்தான் உள்ளன.

எல்லாச் செயல்பாடுகளையுமே, இப்படி ஒரு நெருக்கடி காலச் செயல்களாக மாற்றிக்கொண்டு அவதிப்படுகிறோம். அவற்றை எப்போது செய்து முடித்திருக்க வேண்டுமோ அப்போது அவற்றைச் செய்து முடிக்க முனைவதில்லை. ஒத்திப் போடுதல் என்னும் மனோபாவம் நம்மை உதறிப் போட்டு விடுகிறது.

“வேலை இல்லை வேலை இல்லை” – என அங்கலாய்க்கும் இளவட்டங்கள் கூட தங்கள் வேலைக்கான மனுவை உரிய நேரத்தில் அஞ்சலில் சேர்க்காமல், இறுதி நாளில் அதை எடுத்துக்கொண்டு, அடுத்த நாளே சேர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமெனப் பலரிடமும் கேட்டுத் திரிவதைக் காண முடியும். “ஏன்? இத்தனை நாளாய் என்ன செய்தாய் என்று கேட்டுப் பார்த்தால்; இன்னும் நாள் இருக்கிறதே என்று தள்ளிப் போட்டேன். கடைசியாய் பார்த்தால், தாசில்தார் ஊரில் இல்லாமல் போய், சாதிச்சான்றிதழுக்காக ஒரு வாரம் காத்திருக்க வேண்டியதாயிற்று” – என்பார் அந்த இளைஞர்.

ஏன் இந்த நிலைமை? காலத்தின் அருமையை உணராமைதான் காரணம். சோம்பலும், எது முக்கியம் அல்லது எது அவசரம் எனப் புரியாமையுமே – இதற்குக் காரணம். ஒரு நொடி தாமதிப்பதால் ஏற்படும் இழப்பை – முதலாவதாய் வந்து தன் முத்திரையைப் பதிக்க முடியாமற்போகும் ஒரு விளையாட்டு வீரன் உணர்வான்! இழந்தபின் அழுது என்ன பயன்? ஆகவே காலத்தின் அருமையை அறிந்து உணர்தல் அவசியம். நேரத்தின் அவசியத்தை உணர வேண்டுமெனில் நமது அன்றாடப் பணிகளைப் பட்டியலிட வேண்டும். பிறகு அவசியமானவற்றையும் அவசரமானவற்றையும் அடையாளம் காண வேண்டும்.

மாறாக சதுரம் – 2 ஐக் கவனியுங்கள். அங்கே “அவசரமற்ற ஆனால் அவசியமான” – காரியங்கள் மட்டுமே மிஞ்சும். இந்தச் செயல்களை உடனடியாக முடிக்க வேண்டிய அவசரமில்லை. ஆனால் அவசியம் முடித்தாக வேண்டும் என்பவை இவை. இவற்றில்தான் நாம் நமது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் நமக்கும் அவசரமோ, ஆத்திரமோ இல்லாமல் நிதானமாகத் திட்டமிட்டு தீர்க்கமாக வெற்றிகரமாக நமது காரியங்களைச் செய்து முடிக்க முடியும். அத்தகைய காரியங்களே நம்மை செய்நேர்த்தி மிக்கவர்களாக உலகுக்கு அடையாளம் காட்டும்.

வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் அவர்களெல்லாம் சதுரம் – 4 மற்றும் சதுரம் 3 இரண்டையும் புறக்கணித்து விட்டவர்களாகவும், சதுரம் – 1ஐ ஏறிட்டும் பார்க்க வேண்டிய அவசியமில்லாத வர்களாகவும் திகழ்வார்கள்.

காரணம் என்னவெனில் அவர்களின் கவனமும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் சதுரம் -2 லேயே குவிந்திருக்கும்.

அவர்களுக்கு “எது அவசியம்” – என்பது புரிந்திருக்கும். அதுமட்டுமல்ல அவசரமானாலும் கூட அவசியமற்றதென்றால் அவர்கள் அதனைப் புறக்கணித்துவிடத் தயங்காத உறுதியான உள்ளம் படைத்தவர்களாகவும் திகழ்வார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் எல்லாம் தங்களுக்கென சில இலக்குகளை முன்வைத்து இயங்கிக் கொண்டிருப்பதால் அவசியமில்லாமல் பிறரின் செயல்பாடுகளில் மூக்கை நுழைத்து தமது காலத்தை வீணடிக்கும் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

என்ன? – இனி நாமும் நமது அன்றாடச் செயல்களை மேற்கண்ட நான்கு சதுரங்களாக வரையறுத்து – இரண்டாம் சதுரத்தில் நமது மனதை ஒருமுகப்படுத்தி வெற்றி காண்போமா?

அணியணியாய் இணைய உதவும் அழகிய சதுரங்கம்

நான்காவது சதுரம் நம்மைப் பிணைக்கும் சதுரம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுதலின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் ஒற்றுமைச் சதுரம்.

கீழ்காணும் சதுரத்தை உற்று நோக்கிடுங்கள். அது என்ன சொல்கிறது என்பது நமக்குப் பிடிபடும். அந்தச் சதுரத்தின் கிடைக்கோடு நமது தைரியத்தைக் குறிப்பதாகக் கொள்வோம். செங்குத்துக் கோடு நமது கருணையைக் குறிப்பதாக கொள்வோம். இந்த இரண்டு கோடுகளை அடிப்படையாகக் கொண்டுஅமையும் நான்கு சதுரங்களை நன்கு கவனிப்போம்.

முதலில் “வெல்ல …. தோற்க….” – என்னும் முதலாம் சதுரத்தை எடுத்துக்கொள்வோம். இதன் பொருள் என்னவெனில் “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்” -என்கிற அடிப்படையில் தொடங்கப்படும் முயற்சியை அல்லது நடவடிக்கையைக் குறிக்கும். இத்தகைய மனோபாவம் – விளையாட்டின் போதும், போரின் போதும் காணப்படக் கூடியதாகும். வாழ்க்கைக்கோ, வர்த்தகத்துக்கோ, உறவுமுறைக்கோ ஒத்துவராததாகும். “நான் வெல்ல வேண்டும் நீ தோற்க வேண்டும்” – என்று முனைகிறபோது, அவரிடம் தைரியம் அதிகமாகவும் கருணை மிகவும் குறைவாகவும் உள்ளதென்று பொருள். அதாவது முரட்டுத் தனம் மிகுந்து காணப்படும். வேகம் இருக்கும். ஆனால் விவேகம் இருக்காது. – இத்தகைய நிலை வாழ்க்கையை வசப்படுத்தவும் தலைமை தாங்கவும் உதவாது. “வெட்டு ஒன்று துண்டு ரெண்டு” என நடந்து கொள்ளும் இவர்களைப் பெரும்பாலானோர்க்குப் பிடிக்காமற்போகும். அவரது பேச்சில் பக்குவம் இருக்காது. இவர்களது செயலில் நிதானம் இருக்காது.. இதனால் உறவுகள் இனிமையாய் இருக்காது. இது அதிகாரம் தொனிக்கும் நிலைமையைக் குறிக்கும். “தானே முக்கியமானவன்” – என்னும் தன்மை தொனிக்கும்.

இரண்டாம் சதுரம்: “நான் தோற்கிறேன் நீ வெல்ல” என்பதாகும். அதாவது, “நான் விட்டுக் கொடுக்கிறேன் நீ வெல்ல” – என்னும் மனோபாவத்தைக் குறிக்கும் சதுரமாகும். இப்படிப்பட்ட மனோபாவம் யாருக்கு வாய்க்கும் எனப் பார்த்தால் – யாரிடம் தைரியம் குறைவாகவும் கருணை அதிகமாகவும் இருக்குமோ – அவர்களால் மட்டுமே இப்படித் தன்னைத்தானே விட்டுக்கொடுத்து பிறர் வெல்ல – ஏதுவாக இருக்க முடியும். இது ஒருவரது பலவீனத்தைக் காட்டும் தன்மையாகும். இந்த நிலையில் உறவு ஆரம்பத்தில் இனிப்பது போலத் தோன்றினாலும், நாளாக ஆக, இப்படிப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவர். இவர்களின் மதிப்புக் குறைய நேரும். பிறகு யாருமே கவனிக்கவில்லை, எனக்கென்று யாருமில்லை, என்னால் முன்னேற முடியவில்லை எனப் புலம்ப நேரிடும்.

மேற்கண்ட இரண்டு சதுரங்களையும் சற்றே உற்று நோக்கினால் ஒரு விபரீதம் புரியும். உறவில் சம்பந்தப்பட்ட இருவருள் ஒருவர் – முதல் சதுரத்துக்குச் சொந்தக்காரராகவும், மற்றவர் இரண்டாம் சதுரத்திற்குச் சொந்தக்காரராகவும் இருந்தால் – நடப்பதை யூகித்துப் பாருங்கள்….. அவர், “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்” என்று களத்தில் இறங்குவார். இவர், “நான் தோற்பேன்…. நீ வெல்வாய்” என்று களத்தில் இருப்பார்.விளைவு என்னாகும்? எந்த வித சுவாரசியமும் இல்லாமல் ஒருவர் வெல்ல மற்றவர் தோற்றுக்கொண்டே இருப்பார். இது ஒருவித (துஷ்பிரயோக நிலைக்குச் சமமாகும்) மிகைப்படுத்துதலுக்குச் சமம்.

மூன்றாவது சதுரம்: “நானும் தோற்பேன் நீயும் தோற்க வேண்டும்” – என்னும் மிகவும் மோசமான மனோபாவத்தைக் குறிக்கிறது. “தனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை. அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்” – என்னும் பழிவாங்கும் மனோநிலையைக் குறிக்கிறது.

இந்த நிலையை யார் அடைவர் என்றால், இந்த உறவில் சம்பந்தப்பட்ட இருவரும் சதுரம் – 1ல் கூறப்பட்டிருக்கும் “நான் வெல்வேன் நீ தோற்கவேண்டும்” என்னும் நிலையில் இயங்குபவராய் இருப்பர். இறுதியில் இருவருமே தோற்றுப்போகக் கூடும். இவர்களிடம் ஆணவமும், அதிகாரமும், ஆதிக்க மனோபாவமும் மிகுந்து காணப்படும். இவர்களைப் பொறுத்தவரை – எதிரியின் தோல்வியே முக்கியமானது. இவர்களின் தோல்வி என்பது வெகு சாதாரணமாகிப் போகும். இந்த நிலையின் கொடுமையைக் கொஞ்சம் யூகித்துப் பாருங்கள். இந்த நிலை தேவையா என்று எண்ணிப்பாருங்கள்.

நான்காவது சதுரமானது: “நானும் வெல்வேன் நீயும் வெல்வாய்”-என்னும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருக்கும் உன்னதமான உறவுநிலை. இந்நிலை – ஒத்துழைப்பு நிலையைக் குறிப்பதாகும். இந்நிலை வாழ்வை ஒரு போட்டியாகக் கருதாமல், உடன்பாடாகவும், கூட்டுறவாகவும் கருதும் நிலையாகும். மேற்கண்ட மற்ற நிலைகளெல்லாம் அந்தஸ்து மற்றும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஆனால் இந்த நிலை “எல்லோர்க்கும் எல்லாமும் பொது” என்னும் பரந்த மனப்பான்மையின் அடிப்படையிலமைந்த பொது உடைமையைக் குறிக்கும் நிலையாகும்.

ஒருவர் வெற்றிபெற வேண்டுமானால் மற்றவர் தோற்றாக வேண்டும் என்னும் எண்ணமற்ற நிலை இது. இது உனது வழியோ எனது வழியோ அல்ல. “இது நமது வழி” என்னும் சமத்துவத்தை சகோதரத்துவத்தை நிலைநாட்டும் உன்னத நிலை!

கூடிவாழ்தல் என்பது சமூக நிலையில் உயர்ந்த நிலை. யாரையும் சார்ந்து வாழும் அடிமை நிலையிலிருந்து விடுபட்டு – இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து, ஒருவரின் திறமையை ஒருவர் மதித்து ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையையோ வர்த்தகத்தையோ இணைந்து நடத்தும் மகத்தான நிலை. இந்நிலையில் ஈடுபட்டிருக்கும் யார்க்கும் ஆனந்தமே மிஞ்சும்.

இவர்களுக்கு தைரியமும் அதிகமாய் இருக்கும். கருணையும் அதிகமாய் காணப்படும். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாது. இவர்களின் மனம் பக்குவப்பட்டதாய் இருக்கும். ஒருவரால் எப்பொழுது, தனது உணர்வுகளையும், எண்ணங்களையும் தைரியமாக வெளிப்படுத்தும் அதே நேரத்தில் பிறரின் உணர்வுகளையும், மன உறுதியையும் கேட்டுப்புரிந்து கொள்ளும் கருணை உணர்வும் கொண்டிருந்தால் அதுவே பக்குவநிலை எனப்படும். அதுவே மிக உயர்ந்த நிலையும் ஆகும்.

இதில் காணப்படும் “தைரியம்” – என்பது பொன்முட்டைக்கு உத்திரவாதம் தருவதெனினும், “கருணை” – என்பது தொலைநோக்குப் பார்வையில், சம்பந்தப்பட்ட அனைவருக்குமான வளத்துக்கும் வழிவகுக்கும் குணமாகும். இந்த இரண்டின் அடிப்படையில் அமையும் தலைமையானது – அனைவரின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தவல்லது என்பதில் ஐயமேதுமில்லை.

ஆகவே நாமெல்லோருமே “நானும் வெல்வேன் நீயும் வெல்வாய்” – என்னும் பொது வெற்றியை நோக்கிப் புறப்படுவோம். விரைவில் நம் தேசத்தை வல்லரசாக்கும் இந்த வழியில் நடந்து நம் கனவை நாமே நனவாக்குவோம்.

முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கும் உடன்பாட்டு உன்னதம்

கீழ்காணும் சதுரத்தைக் கூர்ந்து நோக்குங்கள்

(நான்) நெருங்க
(நீ) விலக
(1) (நான்) நெருங்க
(நீயும்) நெருங்க
(2)
(நான்) விலக
(நீயும்) விலக
(3) (நான்) விலக
(நீ) நெருங்க
(4)

வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் ஒருவருக்கு மேற்பட்ட நபர் இணைந்து செயல்படும் எந்தச் சூழ்நிலையானாலும் சரி. (அது குடும்பமாக இருக்கலாம், அலுவலகமாக இருக்கலாம், பொது இடமாக இருக்கலாம், சமூகமாக இருக்கலாம், நிறுவனமாக இருக்கலாம், தொழிற்கூடமாக இருக்கலாம்) அங்கெல்லாம் இருவருக்கிடையிலோ, பலருக்கிடையிலோ கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்கள் பற்பல. வயது வேறுபடலாம், அனுபவம் வேறுபடலாம், விருப்பம் வேறுபடலாம், தேவையும் இலக்கும் வேறுபடலாம். மொழி, மதிப்பீடு, நம்பிக்கை வேறுபடலாம். அணியாக இயங்கும்போது அப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகள் தோன்றுதல் தீர்க்கப்படாவிடில் அந்தக் கருத்து வேறுபாடு விசுவரூபம் எடுத்து – அணியின் செயல்பாடுகளுக்கே பங்கம் விளைப்பதாக ஆகி விடும்.

கருத்து வேறுபாடுகள் நீடிக்குமானால் நாளடைவில் அது பூதாகாரமாக வெடித்து – குடும்ப உறவுகள் சிதைந்து போகவோ, நிர்வாக உறவு சீர்கேடு அடையவோ, ஒரு விளையாட்டு அணியின் செயல்வேகம் பாதிக்கப்படவோ, ஒரு இசைக்குழுவின் திறமை வெளிப்படாமல் போகவோ வாய்ப்புகள் உண்டு. அது மட்டுமல்ல – இவர்களின் இலக்குகளை எட்ட முடியாமலும் இலட்சியத்தை அடைய முடியாமலும் போவதோடு – மனித உறவுகளும் சின்னா பின்னமாகிப் போய்விடக் கூடும்.

இப்படிப்பட்ட நிலை வருமுன்னர் காப்பதுதான் – மனிதவளத்தின் மேம்பாட்டுக்கு உதவும் உயரிய செயலாகும். அதுவே நமது வாழ்நிலை மேம்பாட்டுக்கான அடிப்படைத் தேவையுமாகும்.

முதல் சதுரத்தைக் காண்போம்: கருத்து வேறுபாடு கொண்ட இருவரோ அல்லது இரு குழுவோ இப்படி செயல்படக்கூடும். ஒரு சாரார் (ஒருவர்) இணக்கத்தை நாடி வரும்போது மறுசாரார் (மற்றொருவர்) பிணக்கம் கொண்டு உறவை மறுக்கும் சூழ்நிலையை – இது குறிக்கிறது. ஒருவர் அனுசரிக்கும்போது மற்றவர் வீம்பு செய்து விலகிச் செல்லும் நிலை. இதைத்தான் தமிழில் “கெஞ்சினால் மிஞ்சுவது” – என்பார்கள். ஒருவர் அனுசரிக்க மற்றவர் ஆணவத்தோடு விலகும் நிலை – கருத்து வேறுபாட்டை வளர்த்து உறவின் முறிவுக்கு இட்டுச்செல்லும். இந்த அவலநிலை தவிர்க்கப்பட வேண்டியதாகும்.

இரண்டாம் சதுரம்: ஒருவர் விலகிச் செல்லச் செல்ல மற்றவர் நெருங்கி நெருங்கி வந்து இணக்கத்தை உருவாக்க முயலும் நிலை. ஒருவர் விட்டுக்கொடுக்கும் இந்நிலை நல்லது என்றாலும் இதுவும் நிலைபெறாது. பிறரை வசப்படுத்துவதுதான் சிரமமான காரியம். நாமே வம்பு செய்து கொண்டிருந்தால் – நமது கருத்து வேறுபாட்டை வேறு யார் வந்து தீர்ப்பர்? எனவே கருத்து வேறுபாட்டால் ஏற்படவிருக்கும் அவல நிலையை உணர்ந்து நாம் நமது அபரிதமான தன் முனைப்பை , ஆணவத்தை சற்றே ஒதுக்கிவிட்டுப் பிறரின் கருத்துக்குக் காது கொடுக்கத் தயாராகி விட்டாலே மனதை ஆட்டுவிக்கும் கருத்து வேறுபாடு குறையவும் – உறவுநிலை மேம்படவும் வாய்ப்பு பிரகாசமாகும். அதை விடுத்து – நமது ஆணவத்தின் காரணமாய்ப் பிறருக்குப் புத்திபுகட்ட நினைத்தால் – இழப்பு நமக்குத்தான். மாறாக விட்டுக் கொடுத்து உறவாடினால் பலன் இருவருக்கும் ஏற்படும் என்பதை மறக்கக்கூடாது. இருவருக்கும் இன்பம் உண்டாகும் நிலையே உயர்நிலை.

மூன்றாம் சதுரம்: “ஒருவர் விலகிச் செல்ல, அடுத்தவரும் விலகி செல்வது!” இந்தச் சதுரத்தில் குறிப்பிடப்படுகிறது. இருவருமே விலகிச் செல்லும் மனோபாவம் – இணக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அடியோடு தகர்த்துவிடும். இந்த நிலை ஒரு அணியில் முழுவதும் விரும்பத் தகாத நிலை. சம்பந்தப்பட்ட இருவரில் யாரேனும் ஒருவருக்காவது நெருங்கும் விருப்பம் இருந்தால் மூன்றாம் நபரின் தலையீட்டால் இணக்கம் ஏற்படும் சூழலை உருவாக்க முடியும். ஆனால் இருவரும் விலகிச் செல்ல முற்படும்போது அதுவே முரண்பாட்டின் மொத்தமாகக் காட்சியளிக்கும். உடன்படுவதற்கான வாய்ப்பை இது முழுவதுமாகக் கெடுத்துவிடும். எனவே இந்நிலை தவிர்க்கப்பட வேண்டியதாகும். இன்னும் சொல்லப் போனால் இத்தகைய நிலையே ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதுதான் உகந்தது.

நான்காம் சதுரமாகிய “நெருங்க….. நெருங்க….” – என்றும் நிலை மிகவும் மேம்பட்ட நிலை, உன்னத நிலை. இது இருவரின் பக்குவ நிலையைப் பறை சாற்றும் நிலையாகும். ஏதோ ஒரு சூழலால் அல்லது சந்தர்ப்பத்தால் – மனதளவில் – முரண்பாட்டுக்கு ஆளான இருவரும், பிறகு சிறு கால அவகாசத்தில், அதற்கும் மேலே ஒரு படிபோய்… “நான் நெருங்கி வருகிறேன்…” என்று இருவரும் இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு உறவுப் பிணைப்புக்கான – பாலத்தை உருவாக்குதலில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வர். இத்தகையவர்களால் ஒரு குடும்பமோ, நிர்வாகமோ, இயக்கமோ – தனது இலக்கை அடையும் திசையில் பீடு நடைபோட்டு மகத்தான வெற்றியடையும். அந்த அணியில் எப்போதும் உள்ளார்ந்த மகிழ்ச்சியும் ஊக்கமும் உற்சாகமும் நிலைத்திருக்கும்.

எனவே வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் முன்னர் குறிப்பிட்ட 1, 2, 3 என்னும் மற்ற மூன்று சதுரங்களும் ஒத்துழையாமைக்கும், ஒற்றுமையின்மைக்கும் வழி வகுத்து – தனது நோக்கத்திலிருந்து ஓர் இயக்கம் வழுவி விடுவதற்கான கூறுகளை உள்ளடக்கிக் கொண்டிருப்பவை. விரும்பத்தகாதவை.

மாறாக, நான்காம் சதுரமாகிய “நெருங்க…. நெருங்க….” – என்னும் சதுரமோ – அனைவரும் ஒருங்கிணைந்து – ஒட்டுமொத்த சக்தியையும் பிணைத்து – பொது இலக்கை நோக்கி – ஒருமனதாக இயங்கி, குறித்த காலத்தில், குறித்த செலவில், பயணித்து வெற்றிக் குறியீட்டை எட்டுவதோடு – அனைவரின் ஒட்டுமொத்த தன்னம்பிக்கைக்கும் – உயர்வுக்கும், மனிதகுல மேம்பாட்டுக்கும் உதவிடும் ஒப்பற்ற- உயரிய – பக்குவ நிலையாகும்.

இந்நிலையே இனிய நிலையாகும். இதுவே கூடிவாழும் – குடும்பமும், நிறுவனமும், தொழிலகமும், எந்த அணியும் – வெற்றிபெறப் பேருதவி புரியும் அற்புதமான நிலையாகும்! முயன்று – இந்நிலை பெற்று இனிமை காணலாமே!

எழுச்சிமயமான நிலையை எடுத்தியம்பும் சதுரம்

நம் குடும்பத்திலோ, நிறுவனத்திலோ, இயக்கத்திலோ – நம்மோடு இணைந்து இயங்கும் நபர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து – அவர்களின் செயல்திறன் முழுமையாக வெளிப்படவும், செய்நேர்த்தி மேம்படவும் – நாம் புரிந்துகொள்ள வேண்டிய கூறுகளை இந்த ஆறாம் சதுரம் எடுத்து முன்வைக்கிறது.

பெரிய சதுரத்தின் உள்ளே நான்கு சிறிய சதுரங்களைக் காண்கிறீர்கள் அல்லவா…. அவற்றை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகிறேன்.

சதுரம்:

1 திறமை இருந்து – அதனை வெளிப்படுத்தும் விருப்பமும் கொண்டு, செயலாற்றும் நபர்களை உள்ளடக்கிய சதுரம் இது. இப்படிப்பட்டவர்கள் நிறைந்த சூழல்தான் செய்நேர்த்தி மிக்கதாக அமைந்திருக்கும். இவர்களின் உற்பத்தித் திறன் முழுமையாக வெளிப்படும். இவர்கள் நிறைந்த இடத்தில் வேலைகள் எளிதில் நிறைவேறும். குழப்பமோ குதர்க்கமோ இருக்காது. மனித உறவுகள் மேம்பட்டு மகிழ்ச்சி நிறைந்த இடமாக இது காட்சியளிக்கும். இன்னும் சொல்லப் போனால் மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொள்ளும் இடமாக இது ஒளிரும்.

இதை “ஆக்கநிலை” என்பேன். இது மயக்கமோ, தயக்கமோ, தேக்கமோ இல்லாத நிலையே ஆகும். இதுவே அனைவராலும் விரும்பத்தகுந்த உன்னத நிலையாகும்!

சதுரம்: 2

இந்த சதுரத்திற்குள் இடம் பிடிப்பவர்கள் விருப்பமுள்ளவர்கள். ஆனால் திறமைக் குறைபாடுள்ளவர்கள். இவர்கள் கவலைக் கிடமானவர்கள் அல்ல. காரணம் – இவர்களின் மனோபாவம் தயார் நிலையில் உள்ளது. தடையாக இருப்பது போதுமான பயிற்சியின்மைதான். இவர்களின் திறமை பளிச்சிட வேண்டுமெனில், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்க வேண்டும்.

இவர்கள் விருப்பமுள்ளவர்களாக விளங்குவதால், பயிற்சி பெற்றுத் தேர்வதில் வேறு எந்தச் சிக்கலும் இருக்காது. இவர்கள் போதிய பயிற்சி எடுத்துக் கொண்டால் தேக்கநிலை மாறி – உற்பத்தித்திறன் உயரும்.

ஊக்கம் மிகுந்த இவர்களுக்கு – உரிய பயிற்சிகளை மட்டும் முறையாகக் கொடுத்து விட்டால் – அவ்விடத்தின், அத்தொழிலின், அவ்வுறவின் மதிப்பு உயரும்.

சதுரம்: 3

இந்தக் குட்டிச் சதுரத்தில் குவிந்திருப்பவர்கள் திறமையுள்ளவர்களாக இருப்பார்கள், திறமைக்கான போதிய பயிற்சியைப் பெற்றிருப்பார்கள். அந்தத் திறமையில் தேர்ச்சியும் பெற்றிருப்பார்கள் இருந்தும் அதனை வெளிப்படுத்தி – பயன் விளைக்கத் தயாராய் இருக்க மாட்டார்கள். காரணம் என்னவெனப் பார்த்தால் அவர்கள் மனதில் செயலாற்றும் விருப்பம் இருக்காது. விருப்பமின்மை ஏன் ஏற்படுகிறது என்பது பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய விஷயமாகும். போதிய சம்பளமோ, போதிய பாராட்டோ, போதிய அங்கீகாரமோ, போதிய இட வசதியோ, போதிய வெளிச்சமோ, போதிய காற்றோட்டமோ போதிய உபகரணமோ – பல நாட்களாக சரிசெய்யப்படாத மனித உறவோ ஒருவரின் விருப்பமின்மைக்குக் காரணிகளாக அமையலாம். அவற்றை அறிந்து, பட்டியலிட்டுப் பகுத்துப் பார்த்து ஆய்ந்து – நிவர்த்திசெய்ய முற்பட்டால் அத்தகைய நபர்களின் மனக்குறையை நீக்கி, அவர்களை பயன்மிக்க உற்பத்தியாளர்களாக மேம்படுத்திக் காட்டமுடியும். அவர்கள் பயன்பாடு மிக்கவர்களாக மாறுகிறபோது அவர்களின் மதிப்பு மட்டுமல்ல அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மதிப்பும், சமூக மதிப்பும் கூடி விடுகிறது என்பதுதான் உண்மை.

விருப்பம் இல்லையென்றால் செயலில் மனம் வைக்க மாட்டார்கள். இந்நிலை உயர்வுக்கு உதவாது. இந்தத் தயக்க நிலையை உணர்ந்து தீர்வு காண முயல வேண்டும். நமது கவனம் அந்தச் சதுரத்தில் குவிய வேண்டும். ஏனெனில் இப்படிப்பட்டவர்களால் மற்ற நபர்களின் மனமும் பாதிக்கப்படும். விளைவு அனைவரின் செயல்பாடும் குறைந்து – நோக்கம் வீழ்த்தப்படும்… விளைவுகள் விபரீதமானவையாய் மாறும்.

சதுரம்: 4

இந்தச் சதுரம் ஒரு சதுப்பு நிலம் மாதிரி. இவர்களிடம் திறமையும் இருக்காது. திறமையை வளர்த்துக் கொள்ளவோ, வெளிப்படுத்தவோ மனதில் விருப்பமும் இருக்காது. திறமையோ, விருப்பமோ – இரண்டும் இல்லாது போனால் ஒருவனால் எப்படி இயங்க முடியும்? அவனது வாழ்க்கை எப்படி இனிக்கும்? – இந்த நிலை மயக்க நிலையாகும். இவர்களின் மயக்க நிலை நீங்க வேண்டுமெனில் நாம் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நேர்மறையான எண்ணங்களை இவர்களின் நெஞ்சில் வளர்த்து போதுமான ஊக்க உணர்வுகளைப் புகட்டி தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்கத் திட்டமிட்டால் இவர்களும் பயன்பாடுமிக்கவர்களாக, நிறுவனத்தின் மதிப்பை மேலும் உயர்த்துபவர்களாக மாறுவார்கள். மனிதவளமென்பதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட இனிமையான அனுபவமும் நமக்குக் கிடைக்கும். அல்லது இவர்கள் பட்ட மரங்களாகவும் இவர்கள் வாழும் இடம் சதுப்பு நிலங்களாகவும் மாறிவிடக் கூடும். அன்பு காட்டிப் பயிற்சி கொடுத்தால் நாளடைவில் நலம் விளையும்.

மேற்கண்ட சதுரங்களில் – எந்த சதுரத்திற்குள் இடம் பிடித்தால் மனிதர்கள் மேன்மை மிகு சூழலுக்கு உதவுவார்கள் என்பது உற்றுநோக்கத்தக்கது.

முதல் சதுரமே முத்தாய்ப்பான சதுரம். ஏனெனில் அது ஆக்கும் வல்லமை பொறுத்தது.

இரண்டாவது சதுரமோ ஊக்கமிருந்தும் தேக்க நிலையிலிருப்பது. பொருத்தமான பயிற்சியின் மூலம் இந்தத் தேக்க நிலையை மாற்றி ஆக்க நிலைக்குக் கொணர முடியும். கொணரவும் வேண்டும்.

மூன்றாவது சதுரமோ திறமையிருந்தும் விருப்பமின்மையால் இது தயக்க நிலைக்கு வித்திடும். இந்நிலை தவிர்க்கப்பட வேண்டுமெனில், போதுமான ஊக்க சக்தி புகட்டப்பட வேண்டும். உளவியல் ரீதியான அணுகுமுறைகளின் மூலம் மனோபாவ மாற்றத்திற்கு அடிகோல வேண்டும்.

நான்காவது சதுரமோ இயக்கமற்ற மயக்கநிலையைக் குறிப்பதாகும். இவர்களுக்குத் தேவை விழிப்புணர்வு. முறைப்படியான உளவியல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளின் மூலம் மட்டுமே இவர்களைக் கடைத்தேறச் செய்ய முடியும்.

இப்படி வகைப்படுத்திப் பார்த்தால் – மனித வளத்தைப் பொருத்தமாக, துரிதமாக, துல்லியமாகப் பயன்படச் செய்து மானுட மதிப்பை மேம்படுத்தப் பெரிதும் துணைபுரிவதாய் இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமில்லை.

இலக்கை அடைய வைக்கும் எளிய சதுரம்

ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவிருக்கிறது. அல்லது இருப்பது அவசியம். கனவென்பது வேறல்ல அது ஒரு தொலைநோக்கு. ஆமாம் அது ஒரு தொலைக்காட்சி. நாளை நடக்க இருப்பதை இன்றே மனதில் காணும் காட்சி. இதைத்தான் ஆங்கிலத்தில் “ Vision “ என்றும் “Picture” என்றும் “Dream” என்றும் குறிப்பிடுகிறார்கள்.

“ Begin with the end in mind “ என்று ஒரு மேலாண்மை கோட்பாடு கூறுகிறது. “முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு ஒரு செயலை தொடங்க வேண்டும்” என்பது இதன் பொருள். அந்த இறுதிக்கட்டத்திற்குப் பெயர் தான் “ Vision”. இந்த “ Vision” ஐ அடைவதற்கு ஒருவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், பல்வேறு படிநிலைகளைக் கடக்க வேண்டும், பல நாட்கள் காத்திருக்க வேண்டும்.

கனவை நினைவாக்குதல் என்பது கடைசி நிலை. அந்த கடைசி நிலையை அடைய வேண்டுமென்றால் பல இடைநிலைகளைக் கடந்தாக வேண்டும். அந்த இடைநிலைகளை மைல்கற்களால் அடையாளம் காட்டலாம். அந்த மைல்கற்களே “இலக்குகள்” எனப்படும்.

“இலக்கில்லா வாழ்க்கை கிழக்கில்லா வானுக்குச் சமம்” – என்பேன். இலக்குகள் தான் மனிதனை சிறிது சிறிதாக முன்னேறச் சொல்வது. இலக்கு இருக்கும் போதுதான் மனித மனம் ஓரிடத்தில் குவிகிறது. இல்லையென்றால் அது சிதறிப் போகிறது. கவனம் சிதறிவிட்டால் மனிதனால் உயரங்களை எட்ட முடியாது. இலக்கே இல்லாமல் இருவரால் தான் இருக்க முடியும். ஒருவர் மெய்ஞானி மற்றொருவர் அஞ்ஞானி. எல்லாம் அறிந்த ஞானியருக்கு இலக்குகள் எதுவும் தேவையில்லை, அவர்கள் இலக்குகளை கடந்த நிலையை எய்தியிருப்பார்கள். அவர்கள் மனமற்றதன்மையை அடைந்திருப்பார்கள். அதே போன்று ஏதும் அறியாது அறியாமையில் முடங்கி கிடப்போரிடமும் இலக்குகள் இருக்காது. இந்த இரண்டு நிலைக்கும் இடையில் ஆட்பட்டு மனித நிலையில் வாழ்வோர்க்கு இலக்குகள் தான் ஏணிப்படிகள். அப்படிப்பட்ட இலக்குகளை அடைவதற்கு நான்கு முறைகொண்ட ஒரு சுழற்சி வட்டத்தை இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

மேலிருக்கும் சதுரத்தை உற்று கவனியுங்கள்

குறித்த இலக்கை குறித்த நேரத்தில் அடைவதற்கு முறையான ஒரு வழிமுறையை கடை பிடித்தல் அவசியம். இல்லையென்றால் அந்த இலக்கை அடைவது கடினம்.

அந்த வழிமுறைநான்கு நிலைகளைக் கொண்டது

1. திட்டமிடுதல் - Plan
2. செயல்படுதல் - Do
3. சரிபார்த்தல் - Check
4. சரிசெய்தல் - Act

முதலாவதாக “திட்டமிடுதலை” பார்ப்போம். நம்மில் எத்தனைபேர் திட்டமிடுகிறோம்? நம்மில் எத்தனைபேரிடம் இலக்கிருக்கிறது? நம்மில் எத்தனை பேரிடம் கனவிருக்கிறது? (சற்றே உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இவை). ஒருவரிடம் உள்ள கனவுதான் அவர்கள் வாழ்க்கைக்கு பொருள் சேர்க்கிறது. கனவுகளே இல்லாத இலக்குகள் முழுமை பெறாது. அதேபோன்று இலக்குகள் ஈடேற வேண்டுமென்றால் திட்டம் அவசியம்.

எது திட்டம்?

எது - அது?
எவர் - அவர்?
எப்பொருள் - அப்பொருள்?
எவ்விடம் - அவ்விடம்?
எப்பொழுது - அப்பொழுது?
எம்முறை - அம்முறை?
எவ்வளவு - அவ்வளவு?

- என்று தீர்மானித்துக் கொள்வதையே “திட்டம்” என்கிறோம். செய்யவிருக்கும் செயல் எது? அந்தச் செயலை யார்யாரைக் கொண்டு செய்யப் போகிறோம்? அந்தச் செயலைச் செய்து முடிக்க எவ்வளவு பொருள் தேவைப்படுகிறது? அந்தச் செயல் செய்வதற்கு பொருத்தமான இடம் எது? அந்தச் செயலை மேற்கொள்வதற்கு உரிய நேரம் எது? அந்தச் செயலை எந்த முறையில் செய்ய விரும்புகிறோம்? செய்ய விரும்பும் அந்தச் செயலின் அளவு (Size of the project) எவ்வளவு? – என்பதையெல்லாம் தீர்மானிப்பதற்குப் பெயர்தான் திட்டமிடுதல் ஆகும்.

வீட்டின் வரவு செலவுத் திட்டம், ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதற்கான திட்டம், ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதற்கான திட்டம், ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கான திட்டம் – என செய்ய விரும்பும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் திட்டமிடமுடியும். அதை காலத்தின் அடிப்படையிலும் வரையறைசெய்யலாம். ஒரு வாரத்திட்டம், ஒரு மாத கால திட்டம், ஓர் ஆண்டுத் திட்டம், மூவாண்டுத் திட்டம், ஐந்தாண்டு திட்டம், பத்தாண்டு திட்டம், 20 ஆண்டு காலத் திட்டம் என குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களாகவும் செயலுக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.

இரண்டாவதாக நாம் மேற்கொள்ள வேண்டியது “செயல்படுதல்”. செயல்படுதல் என்பது நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல எளிதானது அல்ல. முதலில் அதற்கொரு திட்டம் தேவை. திட்டமற்றசெயல்பாடு பெரும்பாலும் தோல்வியில் முடியக்கூடும். அது மட்டும் அல்ல நேரமும், பொருளும், மனித ஆற்றலும் விரையமாகக் கூடும். அப்படிப்பட்ட செயல்களால் ஏற்படும் பயனைவிட இழப்புக்களே அதிகம். எனவே எந்த ஒரு செயலையும் திட்டமிட்டுத் தொடங்கினால் வெற்றி நிச்சயம். திட்டமிட்டு தொடங்கும் செயல் 50 விழுக்காடு வெற்றி பெற்றதாகவே பொருள் படும்.

திட்டமிடுதலுக்கும் செயல்படுத்தலுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. திட்டமிடுதலும் ஒரு செயல் தான் என்றாலும் அது மனம் சார்ந்தது. ஆனால் செயல் என்று வரும்போது அது உடல் உழைப்பையும் பிறரோடு உறவாடும் திறமைகளையும் சார்ந்து இருக்கிறது. மேலும் ஒவ்வொரு செயலையும் செய்வதற்கென்று ஒரு செய்முறைஉண்டு. அதன்படி செய்தால் தான் அந்த செயல் முழுமை பெறும்.

“வெல்டிங்” செய்வதற்கென ஒரு முறைஉண்டு. சமையலுக்கென ஒரு முறைஉண்டு. ஓவியம் வரைவதற்கென்று ஒரு முறை, கட்டிடம் கட்டுவதற்கென்று ஒரு முறை. விமானம் ஓட்டுவதற்கென ஒரு முறைஉண்டு. விவசாயம் செய்வதற்கென்று ஒரு முறைஉண்டு. இப்படிச் செய்தொழில் ஒவ்வொன்றும் வெவ்வேறு முறைகளை கொண்டிருக்கிறது. ஒன்றைச் சிறப்பாகச் செய்பவரால் மற்றொன்றைச் சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். இது இயற்கையானது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள அஷ்டாவதானிகளும், தஸாவதானிகளும் – பல செயல்களை ஒரே நேரத்தில் சரியாகச் செய்ய பழகியிருப்பர்.

எனவே ஒரு முறையாகச் செயல்பட வேண்டுமெனில், சோம்பல் கூடாது. அலட்சியம் கூடாது; அவசரம் கூடாது. ஒருவரைப் பார்க்க உகந்த நேரம் எது? முடியாது எனச் சொல்லும் ஒருவரிடம் சம்மதம் பெறுவது எப்படி? ஒருவரைச் சந்திக்கச் செல்லும் போது அவர் அங்கு இல்லையென்றால் அடுத்து என்ன செய்வது? நேரத்தை எப்படி முறையாகப் பயன்படுத்துவது? – போன்றபற்பல கலைகளிலும் தேர்ச்சிபெற்றால்தான் செயல்பாட்டில் வெல்ல முடியும். பலரின் முயற்சிகள் தோற்பதன் காரணம் – இந்தக் கலைகளில் தேர்ச்சி இன்மையே.

கூடுதல் உழைப்பு, நேர்மை, பிறரைப் புரிந்துகொள்ளுதல், பொறுமை – போன்றபல நற்பண்புகள் இருந்தால் செயல்பாட்டில் சிறக்க முடியும்.

மூன்றாம் நிலை “சரிபார்க்கும்” நிலையாகும். சரி பார்ப்பதற்கென நேரம் ஒதுக்க வேண்டும். திட்டமும் செயலும் ஒத்துப்போகிறதா எனப் பார்க்க வேண்டும். வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ சரிபார்க்க வேண்டும். தினமும் கூட அதைச் செய்யலாம். திட்டத்தின்படி செயல் நடைபெறவில்லையென்றால் காரணங்களை ஆய்ந்து அறிய வேண்டும். ஒரு செயல் – குறித்த நேரத்தில் முடியாவிட்டால் – அது எதனால் நேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் நாம் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்பதை அறிய முடியும். அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட பரிசீலனைதான் நமது முன்னேற்றத்தைத் துரிதப்படத்த உதவும்.

நாம் தற்சோதனை செய்து கொள்ளாவிட்டால், நம்மை நாமே தணிக்கை செய்து கொள்ளாவிட்டால், நாம் எங்கிருக்கிறோம்! என்னும் நிலையே தெரியாமல் போய்விடும். விளைவு, நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும். எனவே… நம்மை நாம் அறிந்து கொள்ள உதவும் கட்டம் தான் “சரிபார்க்கும்” கட்டம்.

திட்டத்திற்கும் – செயலுக்கும் இடையில் உள்ள இடைவெளிகளை, நிறைகுறைகளைக் கண்டறிந்துவிட்டால் அவற்றைப் பட்டியலிட்டு, ஒவ்வொன்றாகச் சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய முயற்சிகளை உடனுக்குடன் மேற்கொண்டுவிட்டால் பெரிய தாமதங்களையும் – அதனால் ஏற்படும் இழப்புக்களையும் தவிர்த்துவிடலாம்.

இப்படிச் சரிபார்க்கும்போதுதான் – நாம் இட்ட திட்டத்தின் குறைபாடுகளும் நமக்குப் புரியும். அனுபவக் குறைவால் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகளும் நமக்குத் தெரிய வரும். எனவே இந்தப் புள்ளிவிபர அடிப்படையில் – நமது திட்டத்தையே மறுபரிசீலனைக்குட்படுத்தி உரிய மாற்றத்தைச் செய்து கொள்ளலாம். திட்டத்தில் உரிய மாற்றம் செய்து கொண்டால் – அதனை நிறைவேற்றுவதில் முரண்பாடு இல்லாமல் முறையாக , முழுமையாக நிறைவேற்றமுடியும்!

இப்படியாக இந்த நான்கு நிலைகளைக் கொண்ட வட்டத்தை, நாம் எடுத்துக்கொண்ட இலக்கு நிறைவேறும் வரை அடிக்கடி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் சரிபார்த்து, நிலைமை சரிசெய்யப்பட வேண்டும். அப்படி இடைவிடாமல் பரிசோதனை செய்து கொண்டால் திட்டத்திற்கும் – செயல்பாட்டிற்கும் இடைவெளி நேராமல். குறித்தபடி இலக்குகளை எட்ட முடியும்…. அது தானே நமது நோக்கமும் கூட.

ஊக்கத்திலிருந்து ஞானத்திற்கு

டீக்கடை பெஞ்ச்சிலும் சரி பாராளுமன்றத்திலும் சரி பேசப்படும் செய்திகளை கூர்ந்து நோக்கினால் ஒன்று தெளிவாகப் புலப்படும். நம் நாட்டின் நிலவரம் சரியில்லை என்பதுதான் அது! ஒரு புறம் அரசியல்வாதிகளின் போக்கு சரியில்லை என்கிறார்கள். மறுபுறம் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சரியில்லை என்கிறார்கள். மற்றொருபுறம் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி செயல்படுவதாக குற்றம் சுமத்துகிறார்கள். மேலும் பல விவாத மேடைகளில் பெற்றோர்களும் பிள்ளைகளும் குற்றம் சுமத்தப்படுகிறார்கள். இளைஞர்களும் யுவதிகளும் பழிக்கப்படுகிறார்கள்.

ஒட்டு மொத்தமாகச் சொல்வதென்றால் நம்மை நாமே குறைகூறிக் கொண்டிருக்கின்றோம்! என்னுடைய கேள்வி என்னவென்றால் “நாம் எல்லோருக்குமே குறைகள் தெளிவாகத் தென்படுகின்ற போதும் நம்மால் ஏன் அவற்றை நிறை செய்ய முடியவில்லை?” என்பதுதான்!

மகான்களும் பெரிய தலைவர்களும் காலம்காலமாக சரியான செய்திகளை நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இருந்தும் நம் மக்களின் வாழ்வில் ஏன் விரும்பத்தகுந்த மாற்றங்கள் விரைவாக நிகழவில்லை என்பது நியாயமான ஆதங்கமாகவே இருந்து வருகிறது.

இதற்கான காரணத்தையும், நாம் செய்ய வேண்டிய காரியத்தையும் இந்த படிநிலைகள் தெளிவாக்கவிருக்கின்றன. வாசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றம் காண்பீர்கள்.

மாற்றத்தை விரும்பும் யாரும் கீழ்க்காணும் நான்கு நிலைகளை கடந்தே ஆகவேண்டும். இந்த நிலைகளை காணாதவர்களால் – கடக்காதவர்களால், மாற்றத்தை காண முடியாது. ஆனால் ஒருவர் எவ்வளவு விரைவில் இந்த நான்கு நிலைகளுக்கு ஆட்படுகிறாரோ, அத்தனை விரைவில் அவரது ஏற்றம் தரும் மாற்றம் நிகழ்ந்தே தீரும்.

அந்த நான்கு நிலைகள்:

1. அறிதல் 2. புரிதல் 3. உணர்தல் 4. தெளிதல்

முதலில் அறிதலைப் பார்ப்போம்

எந்த ஒரு புதிய தகவலோ கருத்தோ செய்தியோ பொருளோ ஒருவருக்கு வெளியிலிருந்துதான் முதலில் அறிமுகமாகின்றது. ஒரு மனிதர் மூலமாகவோ. காட்சி மூலமாகவோ. சம்பவத்தின் முலமாகவோ. செய்தித்தாள், புத்தகம், தொலைக்காட்சி, கடிதம், இணையதளம், வானொலி, கருத்தரங்கம் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாகவே ஒன்றை நாம் அறிய நேருகிறது. சுருக்கமாகச் சொன்னால் அறிதல் என்பது வெளியிலிருந்து பெறப்படுவது. இப்படி வெளியிலிருந்து பெறப்படும் ஒன்றால் மனித மனதில் மாறுதல் உடனடியாக நிகழ்ந்துவிடுவதில்லை. ஏனென்றால் யாரோ சொன்னதலிருந்தும் எங்கோ கேட்டதிலிருந்தும் நமக்குள் ஏற்படும் தாக்கங்கள் அழுத்தமாகவோ ஆழமாகவோ பதிவதில்லை. எனவே இந்நிலையில் மாற்றங்கள் நிகழ்வது அரிதுÐ

இரண்டாம் படியாகிய “புரிதலை” எடுத்துக் கொள்வோம்.

மேற்கண்ட பல வழிகளின் மூலம் நாம் பெற்ற அறிவை நமக்குள் சுழலவிட்டுச் சிந்தித்துப் பார்ப்பதையே நாம் “புரிதல்” என்கிறோம். “எண்ணிப் பார்த்தல்” என்றும், “யோசித்தல்” என்றும், “அலசி ஆராய்தல்” என்றும், நடைமுறையில் கூறப்படுவதையே “சிந்தித்தல்” என்கிறோம். ஒரு கணிப்பொறியைப் பற்றி நாம் அறிந்து கொண்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த கணிப்பொறி எனக்கு எந்தெந்த வகையில் பயன்படும்? அது இப்போது எனக்கு தேவையா? அதை வாங்கிக் கொள்ள எவ்வளவு பணம் தேவை? அதை வாங்குவதால் உடனடி இலாபம் உண்டா? என சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவதையே “புரிதல்” என்கிறோம்.

சுருக்கமாக சொன்னால் “புரிதல்” என்பது உள்ளுக்குள் நிகழ்வது. ஒரு நபரின் மனதுக்குள் நிகழ்வது. ஒரு மாற்றத்தை உருவாக்குவதில் புரிதல் என்பது இரண்டாம் நிலையை வகிக்கிறது. ஒன்றை அறிந்த நிலையைக் கடந்து, புரிந்த நிலைக்கு வரும் போது ஓரளவு மாற்றங்கள் நிகழக்கூடும். ஆனாலும் மாற்றம் கட்டாயம் நிகழ்ந்துவிடும் என்று சொல்வதற்கு இல்லை. ஏனென்றால் அன்றாட வாழ்வில் எத்தனையோ கருத்துக்களை புரிந்து கொண்டவர்கள் கூட நடைமுறையில் மாறுவதில்லை!

புகைப்பது தவறு புகைப்பதால் புற்று நோய் வரும் சாத்தியக் கூறு அதிகம் என்பதை புரிந்து ஏற்றுக் கொள்பவர்களால் கூட புகைப்பதை நிறுத்த முடிவதில்லை என்பது கண்கூடு. எனவேதான் புரிதலையும் கடந்து, அதற்கு நாம் அடுத்த நிலையை நோக்கி நகர வேண்டும்.

மூன்றாம் படியாகிய “உணர்தல்” பற்றி அறிவோம்.

ஒன்றை அறிந்து கொண்டு அதைப் புரிந்து கொண்ட பின்னர் அதைச் செயல் வடிவில் செய்து பார்த்து, அதனால் கிடைக்கும் அனுபவத்திலிருந்து பெறப்படுவதையே உணர்தல் என்கிறோம்.

சர்க்கரை என்று பிறர் சொல்லக் கேட்பது “அறிதல்” ஆகும். இதை உண்டால் இனிய சுவை கிடைக்கும் என்று சிந்தித்தால் அதை “புரிதல்” என்கிறோம்.

அந்த சர்க்கரையை எடுத்து நாவில் வைத்து ருசித்துப் பார்த்தால் கிடைக்கும் அனுபவத்தையே “உணர்தல்” என்கிறோம். அதே போன்று ஒரு கருத்தை (அ) கோட்பாட்டை நடைமுறைப் படுத்திட அதனால் கிடைக்கும் அனுபவம் நமக்குள் அழுத்தமான பதிவை ஏற்படுத்தும். ஒரு சிலரால் நடைமுறைப்படுத்தி பார்க்காமலே கூட கற்பனையாலேயே அடுத்து வரவிருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு கணிப்பொறியை அறிந்து கொள்வதோடு விட்டுவிடாமல் அதனைப் பற்றிய புரிதலோடு அதை இயக்கத்தைப் பார்த்து அதன் முழுப் பரிமாணத்தையும் அனுபவித்து உணர்ந்து கொள்ளும் போது அது ஏற்படுத்தும் தாக்கம் நிரந்தரமாக இருக்கும். எனவே நமக்குள் உணர்தல் ஏற்பட்டுவிட்டால் அதுவே மிகப்பெரிய உந்துசக்தியாகிவிடும். எனவே மாற்றமானது எளிதில் நடந்துவிடும்.

நான்காவது படியாகிய “தெளிதல்” என்பது ஞானத்தைக் குறிப்பதாகும்.

ஒன்றை மீண்டும் மீண்டும் கற்பனையில் ஆழ்ந்தோ நடைமுறைப் படுத்தியோ நம் அனுபவம் முழுமையானதாகும். இத்தகைய தெளிவு ஏற்படும் போது யானை நமக்கு யானையாகவே தெரியும். அப்படியில்லாமல் ஒருமுறை உணர்ந்த நிலையிலோ (அ) புரிந்த நிலையிலோ (அ) அறிந்து கொண்ட நிலையிலோ நின்றுவிட்டால் யானையின் சில பகுதிகளை மட்டும் பார்த்தவர்களாக இருப்போம். அதுமட்டுமல்ல... வாழ்நாள் முழுவதும் அந்தப் பகுதி மட்டுமே யானை என்றும் அடம் பிடிப்போம். முழுமையைக் காணும் முயற்சியின்றி உண்மையை உணராமலே வாழ்ந்து முடித்துவிடக் கூடும்.

முழுமைபெறாத இத்தகைய நிலையில் மாற்றங்கள் நிகழ்வதில்லை. திருவள்ளுவர், புத்தர், விவேகானந்தர், ஏசுநாதர், நபிகள்நாயகம் போன்ற சான்றோர்களும் காந்தி, ஆப்ரகாம்லிங்கன், மார்டின் லூதர்கிங், காரல் மார்க்ஸ், லெனின், சர்ச்சில் போன்ற உலகம் போற்றும் அரசியல் தலைவர்களும், தாகூர், பாரதியார், வேர்ட்ஸ் வொர்த், ஷெல்லி, கீட்ஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா போன்ற இலக்கிய – தத்துவஞானிகளும், ஐன்ஸ்டீன், நியூட்டன், எடிசன், ஆர்க்கிமிடிஸ், சர்.சி.வி.ராமன், மேரிகியூரி, இராமானுஜம் போன்ற அறிவியல் – கணித மேதைகளும் கொலம்பஸ், வாஸ்கோட காமா போன்ற புவியியல் கண்டுப்பிடிப்பாளர்களும். ஹென்றி போர்டு, ஜி.டி நாயுடு போன்ற தொழில்நுட்ப வர்த்தக மேதைகளும் இத்தகைய தெளிவைப் பெற்றிருந்தார்கள். இன்றும் சிலர் இந்நிலையை (தெளிவு பெற்ற நிலையை) அடைந்திருக்கிறார்கள் என்றாலும் நம்மில் பலர் அறிந்தும், ஆனால் புரியாமலும், புரிந்தும் ஆனால் உணராமலும், உணர்ந்தும் ஆனால் தெளிவு பெறாமலும் பல்வேறு நிலைகளில் இருந்து வருகிறார்கள். எல்லோருமே உயர்ந்த நிலையாகிய தெளிவினை அடைய வேண்டும். அப்போதுதான் மாற்றங்கள் உடனுக்குடன் நிகழும்! உன்னதம் நிலை பெறும்! இந்த நான்கு நிலைகளும் ஒருவரை அறியாமையிலிருந்து ஞானத்தை நோக்கி இட்டுச் செல்வதற்கான நான்கு படிக்கட்டுகள். இதனை உணர்வோம், தெளிவோம், ஏற்றமிகு மாற்றத்தை விரைவில் காண்போம்!

சில நல்ல அறிவுரைகள்


மனிதன் வெறுப்பு கொள்வது அதிசயமல்ல. அவன் எதையாவது வெறுத்துதான் தீர வேண்டும்
.
கோபத்தோடு எழுகிறவன் நட்டத்தோடு உட்காருவான்.

விழுவது இயற்கை; எழுவதே வாழ்க்கை.

நடுக்கடலில் கப்பல் மாலுமிக்குத்தான் சொந்தம்.

அடுத்த வீட்டுக்காரனுடன் நட்பாயிரு. அதற்காக இடையில் உள்ள சுவற்றை எடுத்துவிடாதே.

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.

பிறர் தவறுகளில் இருந்து கற்பவன் புத்திசாலி.பள்ளியில் போய் முட்டுவதால் படிப்பு வருவதில்லை.முடியுமானால் பிறரைவிட அறிவாளியாய் இரு. ஆனால் அவர்களிடம் மட்டும் கூறாதே.

தோல்வி என்பது அடுத்த செயலுக்கான எச்சரிக்கை.அவதூறை அடக்குவதற்கு அதை அலட்சியம் செய்வதே நல்லது.

பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.வயதில் இளைஞனாக அறிவில் முதியவனாய் இரு.எதை நீ இழந்தாலும் உனக்கு எதிர்காலம் இருக்கிறது.தற்பெருமை மடமையின் மிகத் தெளிவான அடையாளம்.

நான் ஏன் இரண்டும்கெட்டானாய் வாழ்கிறேன்?

சிலநேரம் வாழ விரும்புகிறேன், சிலநேரம் வாழ்வையே வெறுக்கிறேன் ஏன்?இரண்டுக்கும் காரணம் ஒன்றுதான்.எது? ஆசைகள்.ஆசைகளா? ஆம்.ஆசைகள் நிறவேறும்போது, வாழ்க்கையில் விருப்பங்கொள்வீர்கள்.அவை நிறவேறாதபோது, வெறுப்புக் கொள்வீர்கள். 

1.ஒருபோதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்ய மாட்டான்.

2.எல்லா விசயங்களிலும் நல்ல அம்சத்தைக் காண முயலவேண்டும்.

3.ரோஜா செடியிலே முள் இருப்பதை நினைத்து வருத்தப்படாதே, முள் செடியில் மலர் இருக்கிறதே என்று சந்தோசப்படு.

4.உண்மையான செல்வம் பணமன்று; குணம்.

5.செல்வமும் சரி, சாமர்த்தியமும் சரி, முறையாக உபயோகித்தால்தான் பெருமை தரும்.

6.வாழ்க்கையில் மிக முக்கியமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய விசயம் எப்படி வாழ்வது என்பதே.

7.கற்பது கடினம், கற்றதை மறப்பது அதைவிட கடினம்.

8 கொள்கையில் நம்பிக்கை வேண்டியதுதான். ஆனால், அது குருட்டுத்தனமாய் இருக்கக் கூடாது.

9.பிறர் செய்த உபகாரம் உன் கையில் அதிகமாகி தங்கி விடாமல் பார்த்துக் கொள்.

10.யாராவது குறை கூறி னால், அது உண்மையாய் இருப்பின் திருந்தி விடு; பொய்யானால் நகைத்துவிடு.

11.உண்மை ஒரு தீவத்தி, அருகில் செல்ல பயந்து, கண்களைச் சிமிட்டிக் கொண்டே அதை கடந்து செல்கிறோம்.

12.உண்மை மனிதனுக்குச் சொந்தம், பிழை அவனுடைய காலத்துக்கு சொந்தம்.

13.எதை நாம் அறியவில்லையோ, அது நம்முடைய தவறு.

14.உன் கடமையைச் செய்ய முற்படு. அப்போதே உன் தகுதியை அறிந்து கொள்வாய்

15.முட்டாள் எல்லா விசயத்திற்கும் சிரிப்பான்.

16.வறுமையினால் பெரிய துன்பமுமில்லை; செல்வத்தினால் உயர்ந்த நன்மையுமில்லை

17.எதிரியின் கர்வத்தை மாற்ற, நாம் பயன்படுத்தக் கூடிய மருந்து அன்பு ஒன்று தான்.

18.தன்னம்பிக்கை ஒன்று-தான் மனிதனுக்கு நேரும் சகல நோய்களுக்கும் ஒரே மருந்து.

19.முடியுமானால் பிறரை விட அறிவாளியாக இரு. ஆனால், அதை அவர்களி டம் கூறாதே.

20.ஏளனம் என்பது கீழ்மக்கள் உள்ளத்தில் எழுகிற நச்சுப் புகை.

தந்திரம்.

21.உண்மையை மறுப்பதற்கோ, பொய்மையை நிலைநாட்டுவதற்கோ தந்திரம் செய்வது. இது தடை செய்யப்பட்டதாகும்.

22.உண்மையை நிலைநாட்டுவதற்கோ, பொய்மையை அழிப்பதற்கோ தந்திரம் செய்வது. இது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.

23.வெறுக்கப்பட்ட செயலில் இருந்து தப்பிப்பதற்காக தந்திரம் செய்வது. இதுவும் அனுமதிக்கப்பட்டதாகும்.

24.விரும்பத் தகுந்த செயலைக் கைவிடுவதற்காக தந்திரம் செய்வது. இது வெறுக்கப்பட்டதாகும.

நிதானம்

வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும் என்றால் நாம் பல விஷயங்களில் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். பிரச்சினைகளை கண்டு பயப்படுவது கோழைத்தனம்.

புத்திசாலிகள் பிரச்சினைகளை எதிர்கால வாய்ப்பாக மாற்றி கொள்கிறார்கள்.பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் என மண்டையை போட்டு புரட்டிக் கொண்டிருப்பதைவிட புதிதாக என்ன செய்யலாம் என்று சிந்திப்பது புதிய வாய்ப்பை உருவாக்கி கொள்ள வசதியாக இருக்கும்.

ஒவ்வொரு வழியிலும் பிரச்சினைகளை சமாளிக்க புதிய வழிகளை கண்டுபிடிப்பது இன்றைய உலகில் மிகவும் அவசியம் ஆகிறது.

முதலில் செய்ய வேண்டியது என்ன? அவை முக்கியத்துவம் வாய்ந்ததா? அதே நேரத்தில் அது அவசியமானதா என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிலர் எப்போதும் எதிலும் அவசரம் காட்டுவார்கள். ஆனால் அவர்கள் முக்கியமான வேலையை மறந்து விடுவார்கள். ஒவ்வொரு பிரச்சினையையும் வரிசையாக சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும். திட்டமிட்டு எந்த ஒரு வேலையையும் செய்தால்தான் அதில் வெற்றி பெற முடியும். எதையும் அவசரப்பட்டு செய்யக் கூடாது. நிதானமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.

உணர்ச்சி வசப்படுகிறவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சிறிய விஷயங்களில்கூட நாம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களிடம் அன்பு செலுத்துவது, மரியாதையுடன் நடந்து கொள்வது போன்றவை நமக்கு மற்றவர்களிடம் நல்ல மதிப்பை தரும்

. நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது நிச்சயம் கவனம் தேவை. நல்ல நண்பர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் சந்திக்கும் அனைவரையும் நண்பர்களாக தேர்ந்தெடுக்க கூடாது. விரோதி என்று தெரிந்த பின்னர் அவருடன் எந்த உறவும் வைத்துக் கொள்ள கூடாது.

எந்த ஒரு விஷயத்திலும் நிதானமாக செயல்பட்டோம் எனில் அதை எளிய முறையில் முடித்துவிட முடியும்.நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையை புரிந்து கொண்டு வாழ வேண்டும்.வாழ்க்கையை தெரிந்து கொண்டவர்கள் மிக மிகக் குறைவு.பிரச்சினைகள் - சிக்கல்கள் - தடைகள் - தோல்விகள் வரும்போது மனம் தளர்வடைகிறது. தடுமாறுகிறது. அந்த நேரத்தில் ஏன் இப்படி ஆனது? இனி செய்ய வேண்டியது என்ன? என்பதை ஒரு நிமிடம் நிதானமாக யோசித்து செயல்பட்டால் நம் பிரச்சினை சூரிய ஒளிப்பட்ட பனித்துளிபோல் கரைந்து போகும்.

ஒழுக்கம், தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, சாதனைத்திறன், தலைமைப்பண்பு போன்ற குணங்கள் இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்
______

உங்களால் எதையும் சாதிக்க முடியும்


யாரைக்கண்டும் நீங்கள் பயப்படாதீர்கள்

வாழ்க்கை என்பது ஒரு அழகான பூந்தோட்டம். வண்ண மலர்கள் உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி உங்கள் மனதிலே இருக்கின்றசுமைகளை இறக்கி வைத்து ஆனந்தக் களிப்பிலே உங்களை வாழ்த்துகிறது. வாழப்பிறந்த நீங்கள் கவலையில்லாமல் மகிழ்வோடு இருந்துவிட்டுப் போங்கள். உங்களுடைய நோக்கங்கள், உங்களுடைய செயல்கள், உங்களுடைய கடமைகள் ஆகியவைகளை நீங்கள்தான் நிறைவேற்றவேண்டும். மற்றவர்கள் உங்கள் பாதையில் குறுக்கிட அனுமதிக்காதீர்கள். மற்றவர்கள் நம்மைப் பற்றித் தவறாக எண்ணி விடுவார்களோ என்று ஏன் நினைக்கின்றீர்கள்? அப்படி நீங்கள் நினைக்கும்போதே உங்களுடைய மனம் கனத்துப் போய்விடுகிறது. இனம் தெரியாத அச்சத்தில் நீங்கள் மூழ்கிவிடுவதால் தேவையில்லாமல் கவலையை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள் இது நியாயந்தானா? மற்றவர்களைக் கண்டு நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்? மற்றவர்கள் உங்களைக் கண்டபடி விமர்சனம் செய்யட்டும், அறநெறி பிறழ்ந்தவர்கள் அனைவரும் கூடி உங்களுக்கு அர்ச்சனை செய்யட்டும். நீங்கள் ஒழிய வேண்டும் என்று கர்ஜனை செய்யட்டும். தகாத வார்த்தைகளால் உங்களை மறைமுகமாகத் திட்டட்டுமே. இதனால் உங்கள் கௌரவம் பாதிக்கப்பட்டுவிடுமா? எப்படி வாழ வேண்டும் என்றகொள்கையும், அதன்படி செல்கின்றஉரிமையும் நமக்கு மட்டுமே இருக்கிறது. இதில் மற்றவர்கள் நம்மைவந்து பரிகாசம் செய்வதற்கும், கிண்டலாகப் பேசி நம்மை மட்டம் தட்டுவதற்கும் அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? மற்றவர்களைப் பற்றிய அர்த்தமில்லாத பயம் உங்களுக்குத் தேவையில்லாதது. எனவே யாரைக் கண்டும் பயப்படாதீர்கள்.

உங்களுக்கு ஏற்படும் மனச்சோர்வை விரட்டுங்கள்

உங்களுக்குப் பல வகையிலும் துன்பங்கள் வந்துசேரும். இதை நீங்கள் தவிர்க்க முடியாது. உங்களுடைய மனைவி உங்களைக் ‘காய்ச்சும்’ போது உங்களுக்குப் பல கவலைகள் வந்து சேரும். உறவினர்களால் பல உபத்திரவங்கள் உங்களுக்கு உற்பத்தியாகிக் கொண்டிருக்கும். நண்பர்கள் அருகில் இருந்துகொண்டு உங்களுக்கு அழகாகக் குழி பறிப்பார்கள். உங்களைப் பிடிக்காதவர்கள் உங்களைப் பலவாறு உங்களை ‘மட்டம்’ தட்டிப் பேசுவார்கள். அலுவலகத்தில் உங்களுடைய மேலாளர் எதற்கெடுத்தாலும் உங்களைத் திட்டிக்கொண்டே இருப்பார். உங்களைப் பிடிக்காத சிலர் உங்கள் மேல் எரிந்து விழுவார்கள். எது நடந்தாலும் நடக்கட்டும், எனக்குக் கவலையில்லை என்றமனோதிடத்துடன் உங்கள் கடமையில் கண்ணாய் இருந்து பிழையில்லாமல் செயலாற்றுங்கள். நீங்கள் மனச்சோர்வில்லாமல் மகிழ்வோடு இருக்கலாம்.

எப்பொழுதும் சிரித்தபடி இருங்கள்

எப்பொழுதும் சிரித்தபடி வாழ்கின்றவர்களுக்கு வாழ்நாள் நீண்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. மனதிலே கவலையை ஏன் ஏற்றிக்கொண்டு துன்பப்படுகிறீர்கள்? கவலையை நீங்கள் துரத்தியடியுங்கள். மகிழ்வை மற்றவர்களிடம் நீங்கள் பகிர்ந்து கொள்ளும்போது, அதில் பெறுகின்றஇன்பம், கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காது. மகிழ்வோடு இருப்பவர்களிடம் நாம் பேசுவதற்குத் துடிக்கின்றோம். என்றைக்கும் கவலையோடு இருப்பவர்களைக் கண்டால் அவரை விட்டு விலகிஓட எண்ணுகின்றோம். அவர்களிடமுள்ள அந்தக் கவலை அலைகள் நம்மையும் வந்து தாக்கக்கூடாது என்றகவலை நமக்கு வந்துவிடுகிறது. எனவே நீங்கள் எப்பொழுதும் சிரித்தபடி கலகலப்போடு இருங்கள். வாய்விட்டு, மனம்விட்டு நீங்கள் சிரிக்கின்றசிரிப்பு, உங்களுடைய சிந்தனைகளைப் பெருக்குவதோடு, உங்கள் வாழ்நாளையும் கூட்டும் என்பதில் ஐயமில்லை. “சிரித்து வாழ வேண்டும்… பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே…” இது எவ்வளவு பெரிய உண்மை. வாழத் தெரிந்தவன் சிரிக்கும் கலையிலே தேர்ச்சி பெற்றவனாக விளங்குவான். நீங்கள் மிகவும் சோர்வோடு வீட்டுக்குச் செல்லும்போது, உங்கள் மனைவி புன்னகையோடு உங்களை வரவேற்கும்போது உங்கள் மனம் காஷ்மீரின் எல்லைக்கே போய்விடும். புன்னகையால் சாதிக்க முடியாத காரியம் எதுவுமே இல்லை. 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை நிகழ்த்திய இலங்கையின் கிரிக்கெட் வீரர் முரளீதரன் முத்தையா, எப்பொழுதும் சிரித்த படியே இருப்பார். சாதிக்கப் பிறந்த நீங்கள் புன்னகை மன்னனாக விளங்குங்கள். சிரிக்கத் தெரிந்தவன் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருப்பான். மகிழ்ச்சி இருந்தால் ஆனந்த மயமான வாழ்க்கைக் கப்பலில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கலாம்.

என்றைக்கும் அசைக்க முடியாத நெஞ்சுறுதியோடு வாழ வேண்டும்

மனதில் உறுதி இருந்தால் உங்களுக்கு மலை கூடக் கடுகாகக் காட்சியளிக்கும். மனதில் உறுதி இல்லாதவர்கள்தான் மரண வேதனையைக் கட்டித் தழுவ விழைகிறார்கள். மனதில் நீங்கள் உறுதியைக் கொண்டுவிட்டால், உங்கள் முன் இருக்கும் எந்தப் பிரச்சனையையும் நீங்கள் வெகு எளிதாகச் சமாளித்து விடுவீர்கள். “என்னால் எதையும் சாதிக்க முடியும்” என்று நூறுமுறைவாய்விட்டுச் சொல்லுங்கள். காலைக் கடன்களை முடித்துவிட்டு, உங்கள் வாழ்வை வளப்படுத்தக்கூடிய இந்த மந்திரத்தை மனஉறுதியோடு சொல்லுங்கள். இந்த மந்திர அலைகள் உங்கள் உடம்பில் இயங்கிக் கொண்டிருக்கின்றநாடி நரம்புகளில் பாய்ந்து உங்களுக்குப் புத்துணர்வை எப்பொழுதும் நல்கிக் கொண்டே இருக்கும். உறுதியில்லாத கட்டிடம் எதுவும் நிலைத்து நிற்பதில்லை. உறுதியில்லாத மனமும், பாசியும், அழுக்கும், சேறும் நிறையப் பெற்று துர்நாற்றம் மிகுந்த குளமாகக் காட்சியளிக்கும். இந்தக் குளத்தினால் யாருக்காவது பயன் உண்டா? அதுபோலத்தான் உறுதியற்றமனமும். உறுதியற்றமனம் இருக்குமானால் அது உங்களுக்கே பயன்படாதே. எனவே மனதில் உறுதியோடு இருங்கள்.

எவரையும் பழித்துப் பேசாதீர்கள்

“இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஏதேனும் ஒரு வகையில் ஆற்றல் இருந்தே தீரும். இந்த ஆற்றலை நாம் பயன்படுத்தாத காரணத்தால் நாம் வீணாகி வீழ்கிறோம். நீங்கள் எவரையும் இழிவாக நினைக்காதீர்கள். அவர்களைப் பழித்தும் பேசாதீர்கள். மற்றவர்களைப் பேச நமக்கு என்ன உரிமை இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மற்றவர்களைப் பழித்துப் பேசுவதன் மூலம், நாம் நம்முடைய பொறாமை எண்ணங்களை இந்த உலகத்திற்குப் பறைசாற்றுகிறோம். மற்றவர்கள் மேல்கொண்ட காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறோம். மற்றவர்களை நமக்குப் பிடிக்கவில்லை என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறோம். மற்றவர்களை நீங்கள் கேவலமாகப் பேசுவதன் மூலம் உங்களுக்குள்ளே உரிமையோடு திரிந்து கொண்டிருந்த பண்பையும், அன்பையும், மனிதநேயத்தையும் நீங்கள் உங்களது மனமாகிய வீட்டைவிட்டே துரத்தியடிக்கின்றீர்கள். நீங்கள் இவ்வாறு செய்யலாமா? எனவே எவரையும் இழிவாகப் பேசாதீர்கள்.

எவரிடமும் தற்பெருமை பேசாதீர்கள்

“இந்த ஊரில் எனக்குச் செல்வாக்கு அதிகம், என்னைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது” என்று சிலர் தங்களைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்வார்கள். நீங்கள் அவ்வாறு தற்பெருமை பேசிக் கொண்டு திரிய வேண்டாம். தற்பெருமை பேசுவதன் மூலம் உங்களுடைய தகுதியை நீங்கள் இழந்து விடுகிறீர்கள். அடக்கம் என்று சொல்லக்கூடிய மிக உயர்ந்த குணம், நீங்கள் தற்பெருமை பேசுவதன் மூலம் உங்களை விட்டு விலகி ஓடும். அடக்கம் போனபின் உங்கள் வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடுமே. மற்றவர்களை நீங்கள் மனதாரப் புகழுங்கள். உங்களை நீங்களே புகழ்ந்து கொள்ளாதீர்கள். “என்னால் முடியும்” என்று சொல்வது தன்னம்பிக்கை, “என்னால் மட்டுமே முடியும்” என்று சொல்வது தற்பெருமை. ஆணவத்திற்குச் செல்லக்கூடிய கரடுமுரடான பாதைதான் தற்பெருமை.

எல்லோரும் உங்களை மதிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள்

“எவரும் என்னை மதிக்க மாட்டேன் என்கிறார்கள்” என்று நீங்கள் வருத்தத்துடன் கூறுகிறீர்கள். மற்றவர்கள் உங்களை மதித்தால் என்ன, மதிக்காவிட்டால் என்ன? மற்றவர்கள் உங்களை மதித்து உங்களுக்கு கிடைக்கப் போவதென்ன? தன்னம்பிக்கையோடு தளராத நெஞ்சத்தோடு நீங்கள் இடைவிடாமல் முயற்சி செய்து உழைத்துக் கொண்டே இருங்கள். எவரைப் பற்றியும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். நல்ல வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு, பெரும் பணக்காரராக நீங்கள் ஆகும்போதும், செய்வதற்கரிய செயல்களைச் செய்து சிறந்த புகழைப் பெற்றுப் புகழின் உச்சிக்கே நீங்கள் செல்லும்போதும், அனைவருடைய கவனமும் உங்கள் பக்கம் திரும்பும். எல்லோரும் உங்களை மதிப்பார்கள். உங்களை இந்திரன் என்றும், சந்திரன் என்றும் வானளாவப் புகழ்ந்து பேசும்போது நீங்கள் உணர்ச்சியற்றஜடமாக மாறிவிடுங்கள். ஒருவர் உங்களைப் புகழும்போதோ, அல்லது உங்களை இகழும்போதோ உங்கள் மனம் உணர்ச்சியலைகளால் தடுமாறித் தத்தளிக்கிறது. நீங்கள் பக்குவப்பட்ட நிலைக்கு வந்துவிட்டால் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் உங்களுக்கு ஒன்றுதான். இந்தநிலை எல்லோருக்கும் கிட்டாது. தன்னம்பிக்கை உடையவர்களுக்கு மட்டுமே இந்தப் பக்குவநிலை கிட்டும்.

துணிந்த பின் மனமே துயரம் கொள்ளாதே

நீங்கள் நினைத்த காரியங்கள் எல்லாமே வெற்றி பெறவேண்டும் என்று நினைக்கின்றீர்கள். வெற்றி பெற்றால் மகிழ்ச்சியினாலே துள்ளிக் குதிக்கின்றீர்கள். தோல்வி ஏற்பட்டால் உடனே துவண்டு போய்விடுகிறீர்கள். இது சரியா என்பதை எண்ணிப்பாருங்கள். தோல்வியடையாதவர் எவருமே வெற்றி பெற்றதாகச் சரித்திரமே இல்லை. நீங்கள் அடைகின்றதோல்விகளைத் துணிந்து ஏற்றுக் ùôகள்ளுங்கள். அவைகளின் மூலம் நீங்கள் நல்ல அனுபவத்தைப் பெறுவதோடு, எவராலும் சிதைக்க முடியாத மனோதிடத்தைப் பெறுவீர்கள். “தோல்வி அடைந்து விட்டோம்” என்று கவலைப்படாதீர்கள். வள்ளுவரும் “இடுக்கண் வருங்கால் நகுக” என்று கூறியிருக்கின்றார். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ, அந்தச் செயலில் கருமமே கண்ணாக இருந்து முடித்துவிடுங்கள். பலனை எதிர்பார்க்காமல் நீங்கள் கடுமையாக உழைக்கும்போது, அற்புதமான பலன்கள் உங்களுக்குக் கிடைத்து உங்களை ஆச்சரியப்பட வைக்கும் “நான் மிகக் கடுமையாகச் செயலாற்றுகிறேன். பலன்களை, நினைத்து நான் கவலைப்படுவதே இல்லை” என்கிறார் ஹென்றி போர்டு. எனவே ஒரு செயலைத் துணிந்து செய்துவிட்ட பிறகு, பின் விளைவுகள் எதுவாக இருந்தாலும் அவைகளைப் பக்குவ நெறியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். தோல்வி வந்துவிட்டதே என்று துயரம் கொள்ளாதீர்கள். வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தன்னம்பிக்கையுடன் அயராது பாடுபடுங்கள். நீங்கள் வெற்றிக் கனியை அடைவது உறுதி.


ஜெயிப்பது நிஜம்


வெற்றியாளர்களின் மிக முக்கியமான 12 சூத்திரங்கள்

1. வெற்றியாளர்கள் உலகின் மிகப்பெரிய, அறிவு சார்ந்த சொத்தான, மூளையை (Intellectual Property Brain) பயன்படுத்தி, அதாவது சிந்தித்து, பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்னர்.

2. வெற்றியாளர்கள், கடந்த கால தோல்விகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. எதிர்காலத்தைப் பற்றி பயப்படுவதும் இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் வாழுகிறார்கள். தோல்வியின் மூலம் ‘எதைச் செய்யக்கூடாது’ என்றஅனுபவத்தையும், வெற்றியின் மூலம் ‘எதைச் செய்ய வேண்டும்’ என்றவெற்றியின் சூத்திரங்களையும் (Success Formulae) கண்டுபிடித்து, பயன்படுத்தி வெற்றி வாகை சூடுகின்றனர்.

3. வெற்றியாளர்கள், தோல்வி அடைந்தால், பிறரை பற்றி குறைகூறுவதில்லை (Finding Fault). நொண்டிச்சாக்கு (Lame Excuse) சொல்வதில்லை. செய்த தவறைநியாயப் படுத்துவதில்லை (Justification) தோல்விக்கு தானே காரணம் என ஒத்துக்கொண்டு, தன்னைத் திருத்தி, சீர்படுத்தி, நேர்மறையாகச் சிந்தித்து, செயலில் ஈடுபட்டு வெற்றி அடைந்துள்ளனர்.

4. வெற்றியாளர்கள், சுயபரிசோதனை (Self Analysis) செய்து அவர்களுடைய பலங்கள் (Strengths), பலவீனங்கள் (Weaknesses), வெற்றி வாய்ப்புக்கள் (Opportunities), எதிர்கால பயங்கள் (Threats) போன்றவற்றைஅலசி ஆராய்ந்து குறிக்கோள் (Goal) நிர்ணயம் செய்கின்றனர். பின்பு திட்டமிட்டு (Plan) குறிக்கோளுக்கு, கால நிர்ணயம் (Target Date) செய்து, தங்களுடைய அறிவைப் (Knowledge) பெருக்கித் திறமையை (நந்ண்ப்ப்) வளர்த்து, நேர்மறைமனோபாவத்துடன் (Positive Attitude), தங்களை உற்சாகப்படுத்தி (Self Motivation) குறிக்கோளை அடைகின்றனர்.

5. வெற்றியாளர்கள், குறிக்கோளை அடைய நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். புதிய மேலாண்மை யுக்திகளை, நவீன தொழில் நுட்பங்களைக் கையாளுபவர்கள். வெற்றியாளர்கள் வெற்றி வாய்ப்புகளை தேடி அல்லது உருவாக்கிப் பயன்படுத்துவார்கள். ஐம்புலன்களையும் (Five Senses) சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். குறிப்பாக தொடர்பு கொள்ளுதல், வாசித்தல், எழுதுதல், பிறரது உடல்மொழியைக் கண்டுபிடித்து எடை போடுதல், உற்றுக் கவனித்தல், கண்காணித்தல், பிறரிடம் பழகும் தன்மை தலைமைப்பண்பு (Leadership) போன்றவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி, வெற்றி அடைந்துள்ளனர்.

6. வெற்றியாளர்கள் நீர்வளம், நிலவளம், எண்ணெய்வளம், கனிமவளம், இயற்கைவளம் (Water, Land, Oil, Mineral, Natural Resources) போன்றவளங்களை பயன்படுத்தி வெற்றி அடைந்துள்ளனர். போட்டி நிறைந்த இந்த பொருளாதார உலகத்தில் மனித வாழ்க்கையைச் (Human Resources) சிறப்பாகப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.

7. வெற்றியாளர்கள் மனிதர்களை நிர்வாகம் (HRM Human Resource Management) செய்வதில் கெட்டிக்காரர்கள். மனிதர்களை முன்னேறச் (HRD Human Resource Development) செய்வதில் நல்லவர்கள். அது தவிர நேரத்தையும், தன்னையும் (Time Management and Self Management) நிர்வாகம் செய்வதில் வல்லவர்கள்.

8. வெற்றியாளர்கள் கடினமாக உடல் உழைப்புடன் (Physical Hardwork), புத்திசாலித்தனமான மூளை உழைப்புடன் (Smart Mental Work), தொழிலாளிகள், வாடிக்கையாளர்கள் … ஆகியோர்களின் கூட்டு உழைப்புடன் (Team Work), தங்களை முழுமையாக அர்பணித்து (Commitment) குறிக்கோளை அடையும்வரை, திட்டமிட்டபடி, விடாமுயற்சி (Endurance) செய்து, வெற்றி அடைந்துள்ளனர். தன்னம்பிக்கை அவர்களின் தாரக மந்திரம்.

9. வெற்றியாளர்கள் மாற்றத்தை விரும்புபவர்கள், மாற்றம் ஒன்றேநிலையானது என்று நம்புபவர்கள். நேர்மறைமனோபாவத்துடன் (Positive Mental Attitude) பிரச்சனைகளை வெற்றி வாய்ப்புகளாக மாற்றுபவர்கள். தடைக்கற்களை, படிக்கட்டுகளாக மாற்றுபவர்கள். பலவீனங்களை பலமாக மாற்றுபவர்கள். மொத்தத்தில் சோதனையைச் சாதனையாக மாற்றுபவர்கள். துன்பத்தை இன்பமாக மாற்றுபவர்கள்.

10. வெற்றியாளர்கள் செய்யும் தொழிலே தெய்வம் (Work is worship) என போற்றி வழிபடுபவர்கள். வாடிக்கையாளர் களுக்குத் தரமான சேவை செய்து மகிழ்ச்சி அளிப்பவர்கள் மொத்தத்தில் செய்யும் தொழிலை கஷ்டப்பட்டு செய்யாமல், இஷ்டப்பட்டு விரும்பி செய்பவர்கள். வெற்றியை அடைய செயலில் ஈடுபடுபவர்கள். வெற்றியாளர்கள் தான் மட்டுமின்றி பிறரும் வெற்றியடைய விரும்பி செயல்படுவார்கள்.

11. வெற்றியாளர்கள், அவர்களுக்கு எது தேவையோ (Need), எது (Want), அதை மற்றவர்களுக்கு அதிகமாகக் கொடுக்கின்றனர். அன்பை (Love) பொழிகின்றனர். சரியான நபருக்கு சரியான நேரத்தில் உதவி (ஏங்ப்ல்) செய்கின்றனர். தியாகம் செய்கின்றனர். மற்றவர்களுக்கு வழி காட்டுகின்றனர். பிரபஞ்சத்தில், தங்களுக்குத் தேவையானவற்றை கேட்டுப் பெறுகின்றனர்.

12. வெற்றியாளர்கள், மனம் என்னும் மந்திரச் சாவியை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். ஆன்மிக முறைப்படி அல்லது விஞ்ஞான முறைப்படி மனத்தை கையாண்டு வெற்றி அடைந்துள்ளனர். வெற்றியாளர்கள் குறிக்கோளை அடைய லட்சியக் கனவை அடிக்கடி (Creative Visualization) காணுபவர்கள். ஆழ்மனத்திற்கு (Sub Conscious Mind) கட்டளையிடுபவர்கள் (Auto Suggestion).

மேற்கண்ட 12 வெற்றி சூத்திரங்களை, வாழ்க்கையில் பின்பற்றினால் உங்கள் வெற்றி நிச்சயம்! ஜெயிப்பது நிஜம்.

வெல்ல முடியாததை வெல்வது எப்படி?


உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் இந்தியாவிலும் உருவாக முடியும் என்ற
ஆழமான நம்பிக்கையை மாணவர் சமுதாயத்தில் விதைத்து வருகிறார் டாக்டர் அப்துல் கலாம்.

இந்தியாவின் ஒவ்வொரு இடமும் அறிவு மையமாக வேண்டும் என்று கருதும் அவர் தினந்தோறும் சுற்றுப் பயணம் செய்து அறிவு புரட்சி ஏற்படுத்தி வருகிறார். மாணவர், இளைஞர்களுக்காக இங்கு தன் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார்...

மாணவர்களே உங்களுடன் நான் அறிவு தொடர்பாக சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அறிவுதான் உங்களை மிகப் பெரியவர்களாக்கும்.

அறிவுதான் வெல்ல முடியாதது என்று கருதப்படுவதை வெல்லக்கூடியது. இந்த அறிவு நான்கு அம்சங்களைக் கொண்டது.

1. கற்பனைத் திறன்

2. நேர்மை

3. துணிவு

4. வெல்ல முடியாத சக்தி

இந்த நான்கும் ஒன்று சேர்ந்த குணங்களைக் கொண்டவர்கள் அறிவில் சிறந்த குடிமகன்களாக திகழ்வார்கள்.

கற்பனைத்திறன் பற்றி கூற வேண்டுமானால்...

கற்றல் தருவது கற்பனைத்திறன்...

கற்பனைத்திறன் தூண்டுவது சிந்தனையை...

சிந்தனை அளிப்பது அறிவு...

அறிவு உங்களை மிகச்சிறந்தவராக்கும்...

நேர்மையின் தெய்வீக அம்சங்கள் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அவை...

நீதி நேர்மை குடியிருக்கும் இதயங்களின் நடத்தையில் அழகு மிளிர்கிறது...

நடத்தையில் அழகு மிளிர்கிற இல்லங்களில் நல்லிணக்கம் மலர்கிறது...

நல்லிணக்கம் மலர்கின்ற இல்லங்கள் நிறைந்த தேசத்தில் ஒழுங்கு நிலவுகிறது...

ஒழுங்கு நிலவுகிற தேசங்கள் நிறைந்த உலகத்தில் அமைதி தவழ்கிறது...

இதயம், நடத்தை, தேசம் மற்றும் உலகம் ஆகிய நான்குக்கும் ஓர் அழகான இணைப்பு, தொடர்பு உள்ளது. ஒருநாட்டில் உள்ள அனைவருக்கும் நேர்மை பொதுவானாதாக இருக்க வேண்டும். குடும்பத்தில், கல்வியில், சேவையில், தொழிலில் மற்றும் வர்த்தகத்தில் நேர்மை இருக்க வேண்டும்.

நிர்வாகம், அரசியல், அரசு, நீதித்துறை ஆகிய அனைத்திலும் நேர்மை நிலை கொண்டு இருக்க வேண்டும். வெல்ல முடியாத ஒரு சக்தியை அளிக்கவல்ல இந்த நேர்மைதான் இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கான வல்லமை அளிக்கும்.

துணிவு பற்றியும் நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வித்தியாசமாக சிந்திக்கும் துணிவு

கண்டுபிடிக்கும் துணிவு

இதுவரை யாரும் செல்லாத பாதையில் செல்லும் துணிவு

முடியாதது எது என்பதை அறியும் துணிவு

சிக்கல்களை தீர்க்கும் துணிவு

இவையே இளைஞர்களின் உயிர்மூச்சாக இருக்க வேண்டும்... அவர்கள் வெற்றி பெற வேண்டும்...

மாணவர்களின் முதல் குறிக்கோள் அவர்கள் தங்கள் படிப்பில் சிறந்து விளங்குபவர்களாக இருக்க வேண்டும். நாட்டுக்கான அவர்களது முதல் சேவை இதுதான்.

படிக்கும் காலத்தில் கேள்வி கேட்கும் தன்மை, கற்பனைவளம், தொழில்நுட்ப அறிவு, தொழில்முனையும் திறன் மற்றும் அறவழியிலான தலைமைப்பண்பு ஆகியன அவரிடத்தே உருவாகியிருக்க வேண்டும். இவை ஐந்தையும் பெற்ற ஒரு மாணவர் தன்னிச்சையாக கற்றுக் கொள்ளக் கூடிய ஒரு மாணவராக வளர்ந்து நிற்பார்.

தன்னைத் தானே இயக்கிக் கொள்ளக்கூடிய, தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடிய கற்றுக் கொள்பவராக அவர் உருவாவார். அதிகாரம் பெற்றவரை மதிக்கத் தெரிந்தவராக அவரிடம் முறைப்படி கேள்வி கேட்க தெரிந்தவராக இருப்பார். இவர்களைப் போன்றவர்கள் சேர்ந்துதான் வளமான இந்தியாவை உருவாக்க முடியும்.

இளம் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்கள்தான் சரியான பாதையில் அவர்களை இட்டு செல்லும். ஐன்ஸ்டீன் வாழ்க்கையில் அவர் தந்தை வாங்கித் தந்த காம்பஸ்தான் அவரை சிந்திக்க தூண்டியிருக்கிறது. அவரது 12 வயதில் பரிசளிக்கப்பட்ட புத்தகம்தான் அவருக்கு இரண்டாவது அற்புதமாக விளங்கியது. பெரிய ஆய்வுக்கூடமோ அதிக செலவு பிடிக்கும் கருவிகளோ இன்றி, இந்த பிரபஞ்சத்தின் உண்மைகளை தனது கணித அறிவால் கண்டறிந்தார்.

வெல்லமுடியாத சக்தி பற்றி சர்.சி.வி.ராமன் தனது 82 வது வயதில் உரை நிகழ்த்தினார். அது இன்றும் என் ஞாபகத்தில் உள்ளது: என் முன்னே உள்ள இளைஞர்களே! பெண்களே... நான் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்... எப்போதும் நம்பிக்கையையும் துணிவையும் இழந்துவிடாதீர்கள்.

உங்கள் முன் உள்ள சவாலை துணிச்சலான ஈடுபாட்டின் மூலமாகத்தான் வெற்றி பெற முடியும் என்று என்னால் உறுதிபட சொல்ல முடியும். இந்தியர்களின் சிந்தனை ஜெர்மன், வட ஐரோப்பியர்களுக்கு கொஞ்சமும் குறைந்தது அல்ல. நம்மிடம் இல்லாதது துணிச்சல் மட்டும்தான்.

நம்மை இயக்கும் சக்தியை பெற நாம் தவறிவிடுகிறோம். அது இருந்தால் நம்மை எங்கோ கொண்டு சென்றுவிடும். நமக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருப்பதாகவே நான் கருதுகிறேன். இப்போது இந்தியாவுக்கு தேவைப்படுவதெல்லாம் நம்மை தோற்கடிக்கும் இந்த சக்திகளை அழிப்பதுதான். நமக்கு வெற்றிக்கான சக்தி வேண்டும்.

நம்மை சரியான இடத்துக்கு எடுத்து செல்கின்ற பாதை தேர்வு செய்கின்ற சக்தி வேண்டும்.இந்த பூமியில் மிகச்சிறந்த இடத்தை பெறக்கூடிய பெருமைமிகு நாகரிகத்தை சேர்ந்தவர்கள் என்று அங்கீகரிக்கும் சக்தி தேவை. இந்த வெல்ல முடியாத சக்திகளே நம்மை சரியான பாதைக்கு அழைத்து செல்லும் என்றார் ராமன்.

எனவே நண்பர்களே அறிவு என்பது

அறிவு = கற்பனைத்திறன் + நேர்மை + துணிச்சல் + வெல்லமுடியாத சக்தி

மாணவப் பருவத்திலேயே இந்தகுணாதிசயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் கல்வியாளர்களும் உண்மையான அறிவு மாணவர்களிடம் சென்று சேர வேண்டும் என்று விரும்ப வேண்டும்.

Thursday, February 21, 2013

நீங்கள் வேலைபார்க்கும் நிறுவனத்தில் தலைவராகத் தயாராகுங்கள்..!!


இந்தக்கதை உங்கள் கதையாக இருக்கக் கூடாது என்ற பிரார்த்தனையோடு படிக்கத் துவங்குங்கள்.

தமிழ்நாட்டிலிருந்து டெல்லி செல்லும் அந்த ரயிலில்தான் திருவாளர் டென்ஷன் அமர்ந்திருந்தார். அவரைப்பற்றி தெரியாததால் அவரோடு பயணம் செய்த எல்லோரும் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார்கள்.

விக்கல் எடுத்த ஒருவர், திருவாளர் டென்ஷன் மினரல் பாட்டில் வைத்திருப்பதை பார்த்துவிட்டு, “சார் கொஞ்சம் தண்ணீர் கொடுங்களேன்” என்றார். “பைப்ல வரும் போய் குடிச்சிக்க” என்று பதில் வந்தது, வழக்கமான டென்ஷனோடு. கேட்டவருக்கு விக்கல் நின்று விட்டது.

>மேலும்…” />

அடுத்தொருவர் திருவாளர் டென்ஷன் படித்துவிட்டு ஓரமாக சுருட்டி வைத்திருந்த தினசரியைப் பார்த்துவிட்டு, “சார் கொஞ்சம் பேப்பர் கொடுங்களேன். படிச்சிட்டு தர்றேன்” என்றார். “ஓசி பேப்பர் படிக்கிறதுக்கின்னே ரயில்ல வருவீங்களாய்யா. காசு கொடுத்து பேப்பர் வாங்கிற பழக்கமெல்லாம் கிடையாதோ..” என்றவாறே ஜன்னல் பக்கம் திரும்பிக்கொண்டார்.

இரண்டு நாள் பயணத்தில் இது போல நிறைய நடந்தது.
திருவாளர் டென்ஷன் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்தது. தனது பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு ரயிலை விட்டு இறங்கி இரண்டடிதான் நகர்ந்திருப்பார், அப்போது ரயிலில் அமர்ந்திருந்த ஒருவர் அவசரமாய் அழைத்தார், ‘சார் சார், விட்டுட்டுப் போறீங்களே’

திருவாளர் டென்ஷன் சட்டென்று தனது லக்கேஜ்களை பார்த்தார். எல்லாம் சரியாகத்தான் இருந்தது. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தார், அங்கேயும் எதையும் காணோம். எதையும் விட்டுவிடவில்லை. பிறகு எதற்காக அழைத்தீர்கள் என்பதுபோல கேள்விக்குறியோடு பார்த்தார், திருவாளர் டென்ஷன்.

கூப்பிட்டவர் சொன்னார், “உங்களைப் பற்றிய தவறான அபிப்ராயத்தை எல்லோர் மனதிலும் விட்டுவிட்டுப் போகிறீர்களே”.

திருவாளர் டென்ஷனுக்கு கன்னத்தில் அறைந்தது போல இருந்தது. இரண்டு நாட்கள் எல்லோருடனும் பயணித்தேன். இந்த நாட்களில், ‘என்னைப்பற்றி எப்படிப்பட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்தி இருக்கிறேன்?’ என்று யோசிக்கத் தொடங்கினார்.

தலைவராக விரும்புகிறவர்கள் முதலில் முடிவு செய்ய வேண்டிய ஒன்று, என்னைப்பற்றி எப்படிப் பட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்தப் போகிறேன்?
ஏனென்றால் நீங்கள் ஏற்படுத்தப் போகும் அபிப்ராயத்தை பொறுத்துத்தான் இந்த உலகம் உங்களை நோக்கி வருவதும் அல்லது உங்களை விட்டு விலகி ஓடுவதும் இருக்கிறது.

எனவே இப்பொழுதிலிருந்து யோசியுங்கள், ‘என்னைப்பற்றி எப்படிப்பட்ட அபிப்ராயத்தை ஏற்படுத்தப் போகிறேன்?’

உங்கள் நிறுவனத்தின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்களிடம் என்ன அபிப்ராயத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள்? இவரிடம் எந்த வேலை கொடுத்தாலும் ரிசல்ட்டோடு வருவார் என்றா? இவரிடம் எந்த வேலை சொன்னாலும் நடக்காது என்றா? உங்களோடு இணைந்து பணியாற்றுகிற வர்களிடம் என்ன அபிப்ராயத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள்?

இவரிடம் சந்தேகம் கேட்டால் சிறப்பாக வழி காட்டுவார் என்றா? போய் நின்றால் எரிந்து விழுவார். இவர் பக்கமே தலை வைத்துப் படுக்கக் கூடாது என்றா? உங்கள் கீழ் பணிபுரிபவர் களிடம் என்ன அபிப்ராயத்தை ஏற்படுத்தப் போகிறீர்கள்? ‘நல்ல ஒரு தலைவரின் கீழ் பணியாற்றுகிறேன் என்ற பெருமிதத்தையா?’, ‘எப்ப இந்த ஆள மாத்துவாங்கன்னு தெரியலையே?’, என்ற ஆதங்கத்தையா?

நீங்கள் திட்டமிட்டுவிட்டால் எப்படிப் பட்ட அபிப்ராயத்தையும் ஏற்படுத்திவிட முடியும். தேவை, சிறு ஒத்திகை மட்டுமே.