Thursday, October 2, 2014

முன்னேற முத்தான 11 வழிகள்

முன்னேற முத்தான 11 வழிகள்

சுய முன்னேற்ற நூல்கள் நூற்றுக்கணக்கான பக்கங்களில் வளவள என்று என்ன சொல்கின்றன? அத்தனை பக்கங்களைப் படித்து முடிப்பதிலேயே நமது முன்னேற்றம் சில நாட்களுக்குத் தடை பட்டு விடும் போலிருக்கிறது.

இதோ எந்தவொரு நூலை எடுத்தாலும் கீழ்கண்ட 11 பாயிண்ட்களில் ஒன்றாகத் தான் இருக்கும்.

இலக்கு

இலக்கு வைப்பது எப்போதுமே அடைவதற்காக மட்டுமேயல்ல.ஆச்சரியமாக இருக்கிறதா? ஆமாம், எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதை இலக்காக வைத்து பயணம் செய்யலாம். அதனால் உச்சியை அடைவது தானே இலக்கு. எனவே போகும் வழியை ரசிக்காமலேயே கண்ணை மூடிக்கொண்டு ஒரே மூச்சில் உச்சியை அடைவோம் என்று இலக்கு வைப்பதினால் என்ன பயன்?

வளைந்து கொடுத்தல்

சூறைக்காற்று வீசினால் கூட முதலில் முறிவது முறுக்கேறி நிற்கும் பெரிய மரங்கள் தான். வளைந்து கொடுக்கும் தன்மையுடைய மூங்கில் போன்ற மரங்கள் எளிதில் தப்பித்து விடுகின்றன.உலகில் சந்தோஷமாக இருக்கும் பெரும்பாலான மனிதர்கள் இந்த மாதிரி வளைந்து கொடுக்கும் தன்மையுடையவர்கள் தான். என்ன இருக்கிறதோ, என்ன கிடைக்கிறதோ அதை வைத்து சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்பவனே மிக சந்தோஷத்துடன் வாழ்க்கையை அனுபவிக்கிறான்.

 நேரம்

வாழ்க்கையை நேசிப்பவரா நீங்கள்? எனில் நேரத்தை வீணடிக்காதீர்கள்.நேரம் பொன் போன்றது என்று சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்? ஒவ்வொரு நொடிப் பொழுதும் உபயோகமாக ஆக்கவே வாழ்க்கை படைக்கப்பட்டிருக்கிறது.சும்மாவே இருப்பதற்கு பதில் தடாலடியாக உங்கள் குறிக்கோளை நோக்கி செயல்பட்டுக் கொண்டே இருங்கள். தடங்கல்களும், தோல்விகளும் வரலாம். ஆனாலும் அசர வேண்டாம். வெற்றி விரைவில் வசப்படும்.

சேவை

சந்தோஷத்திலே பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப் படுத்திப் பார்க்கிறது தான். நம்மால் முடிந்தவரை அடுத்தவரை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவது நமக்கு நாமே மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் வழிமுறையாகும். உடல் உழைப்போ, பொருள் செலவோ மட்டுமே சேவை அல்ல. மனதார அடுத்தவரை நேசிப்பதும் ஒரு வகையில் சேவை தான்!

ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு

எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுங்கள். நீ சொன்னது தப்பு, நான் சொன்னது தான் சரி என்பது போன்றவற்றையெல்லாம் பெரிது படுத்திக் கொண்டிருக்காமல், தவறு நம் பக்கம் என்றால் நாமே ஏற்றுக் கொண்டு விட்டால், வாழ்க்கை சுகமாகவே இருக்கும்.

ஒற்றை மனப்பான்மை

10,000 விதமான சண்டைகளைக் கற்றிருக்கிறேன் என்று சொல்லி சண்டைக்கு வருபவனை விட, ஒரே ஒரு சண்டையை 10,000 முறை கற்றுப் பழகியிருக்கிறேன் என்பவன் தான் மிகவும் பலசாலி.ஒரு விஷயத்தில் ஊன்றி, அதிலேயே வெற்றி பெற வேண்டும் என்று ஒற்றைக் குறிக்கோளோடு செல்லாமல், பல விஷயங்களையும் இழுத்துப் போட்டுக் கொண்டு, அதில் ஏதாவது ஒன்று ‘க்ளிக்’ ஆகும் என்று மல்லாக்கப் படுத்து யோசிப்பது எதிலுமே வெற்றியைக் கொண்டு வராது.

படைப்பாற்றல்

சான்ஸே இல்லை என்று சொல்லப்பட்டால் அதிலும் ஒரு சான்ஸ் இருக்கிறது என்று முடிவு செய்யுங்கள்.அப்படிச் சொன்னவரும் நம்மைப் போன்ற மனிதர் தான். அவர்களால் முயன்று முடியாதது உங்களால் முடியலாம்.உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை செயல்படுத்தப் பாருங்கள்.

எளிமை

எப்போதுமே எளிமையாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். ஆடம்பரங்களே வாழ்க்கை இல்லை.எளிமையாக இருந்தால் வெற்றியும், மகிழ்ச்சியும் தானே தேடி வரும்.

வழியைத் தேர்ந்தெடுங்கள்

உங்களுக்கான வழியை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போது தான் வெற்றியை நீங்கள் நுகர முடியும். உணர முடியும்.ஆரம்பத்தில் எப்படியெல்லாம் தோன்றுகிறதோ அப்படியெல்லாம் செல்லுங்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு உங்களுக்கே தெரிந்து விடும், எப்படியெல்லாம் செல்லக்கூடாது என்று! பிறகென்ன? வெற்றி வழியில் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டியது தானே?!

செயல்படு

எல்லாம் தெரியுது. எல்லாத்தையும் படிச்சாச்சு. எல்லாத்தையும் புரிந்து கொண்டாயிற்று. போதுமா? வெற்றிக் கோட்டை தொட்டு விட முடியுமா?செயல் பட வேண்டும். எல்லாமே தெரிந்து, புரிந்து, படித்ததால் வெற்றி சுலபமாக கிடைத்து விடாது தான். அதை நோக்கி செல்லும் போது தான் அதில் உள்ள லாப, நஷ்ட சிரமங்கள் தெரியும்.கஷ்டமே படாமல் காரியம் நடக்க வேண்டும் என்று நினைத்தால் மூச்சு கூட விட முடியாது தான்!

ஈகோ

‘நான்’ என்ற அகங்காரம், அகம்பாவத்தை விட்டொழியுங்கள். அதுவே பல வெற்றிகளை அள்ளித் தரும்.

சரி.. இதையெல்லாம் நாங்களாவே சொன்னோம் என்று சொன்னால் கண்டு கொள்ளவே மாட்டீர்கள் என்று நன்றாகவே தெரியும். Henri Junttila என்ற மேலை நாட்டு கணினி எழுத்தாளர் நடிகர் புரூஸ்லீயின் வாழ்க்கை வரலாறைப் படித்து யோசித்து எழுதியது.

பின்பற்றிப் பாருங்களேன்!

No comments:

Post a Comment