Friday, August 5, 2016

மனதை வலிமைப்படுத்துங்கள்

பெர்ஷியாவின் அரசர், ஜரதுஷ்டிரா என்ற ஒரு பெரும் ஞானியை சந்தித்தார். அவரிடம் ஞான வாக்குகளை கேட்டார் ஜரதுஷ்ரா, அரசரிடம் சில கோதுமை விதைகளைக் கொடுத்தார். அரசருக்கு அவமானமாக இருந்தது. செல்லும் வழியில் அதை தூக்கி எறிந்துவிட்டுச் சென்றார். பல காலம் சென்றது. மீண்டும் ஒரு நாள் ஞானி ஜரதுஷ்ராவுக்கு செய்தியனுப்பி தனக்கு ஞானவாக்குகளை வழங்கும்படி அரசர் கேட்டுக்கொண்டார். ஞானி திரும்பவும் அரசருக்கு கோதுமை விதைகளை கொடுத்தார்.

ஞானியின் வாக்குகளை புரிந்து கொள்ள தனக்கு ஞானம் போதாது என்று எண்ணிய அரசர், அந்த விதைகளை தன் பிரார்த்தனை கூடத்தில் வைத்தார். இதன்பின் அரசர் இந்தியாவைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவரை வரவழைத்து தனக்கு ஞானம் புகட்டி வழி நடத்தி செல்ல வேண்டினார்.

அந்த தத்துவ ஞானியோ, தான் அரசரின் அழைப்பை ஏற்று அங்கு வந்ததற்கு காரணமே, அங்குள்ள ஞானியான ஜரதுஷ்டிராவை காண வேண்டும் என்ற விருப்பத்தினால்தான் என்றார். அரசர் அவரை பிரார்த்தனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்று ஜரதுஷ்டிரா கொடுத்த கோதுமை விதைகளைக் காட்டினார். விதைகளைக் கண்ட தத்துவஞானி தன்னை மறந்து உரத்த குரலில் 'ஆஹா' என்ன அற்புதமான தத்துவம் என்று கூறினார். பிறகு தத்துவஞானி அரசரிடம் விளக்கமாக கூறினார். விதைகள் சிறியதாக இருந்தாலும் அதிலிருந்து செடிகள் வளரும் சாத்தியம் உண்டு. ஒரு விதை மரமாகும். மரம் மீண்டும் விதையாகும். இது தொடரும். இதுபோல்தான் நாமும் எல்லைக்குட்பட்டவர்கள் போல தோன்றினாலும், இந்த எல்லைகளைத் தாண்டி வளரும் ஆற்றல் கொண்டவர்கள். இரண்டாவதாக, விதை வளர அது தன்னுடைய விதைத்தன்மையை விடுவதற்கு தயாராக இருக்க வேண்டும். அதேபோல் நாமும் பழையவைகளை மறக்கவில்லையானானல், புதிய எதிர்க்காலத்தை காண்பது என்பது முடியாது. ஞானத்தோடு வாழும் கலை என்பதே இறக்கும் கலையாகும்.

கடைசியாக, ஒரு விதையை பூமியில் விதைக்கும் போது கண்ணுக்குத் தெரியாத சக்திகளான ஈரப்பசை, வெப்பம் மற்றும் காற்றும் இவையெல்லாம் விதை முளைக்க உதவுகிறது. இதற்கு தேவை நம்பிக்கை. அதுபோல வாழ்விலும் நல்லவைகளை நம்ப வேண்டும். அப்பொழுது கண்ணுக்குத் தெரியாத சக்திகள் ஒன்றிணைந்து நமக்கு வழிகாட்டும்.

No comments:

Post a Comment