Thursday, January 12, 2017

தோற்றவர்களின் கதை – சார்லி சாப்ளின்!

உலகிலேயே மிக அதிகமான மக்களை வயிறு குலுங்கச் சிரிக்கவைத்த மாபெரும் நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின். 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் அவரது நகைச்சுவைப் படங்களைப் பார்த்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் குதூகலிக்கிறார்கள். சிரிப்போடு கூடவே,  மனிதநேயச் சிந்தனையையும் பரிசளிப்பதே சார்லி சாப்ளினின் தனித்துவம். 

மற்றவர்களைச் சிரிக்கவைப்பதற்காக, தான் கடந்துவந்த வேதனைமிக்க பாதை பற்றி சார்லி சாப்ளின் சொன்ன வலி மிகுந்த வார்த்தைகள்: ‘‘நான் மழையில் நடந்துசெல்வதை விரும்புகிறேன். ஏனென்றால், மழைநீரில் நான் நடக்கும் போது, எனது கண்ணீரை மற்றவர்கள் பார்க்க முடியாது.’’

லண்டனில் 1889 ஏப்ரல் 16-ல் பிறந்தார் சார்லி சாப்ளின். தாயும் தந்தையும் நாடக நடிகர்கள். தந்தை குடிக்கு அடிமையாகி இறந்துவிட்டார். சாப்ளின், அவரது தாய் ஹன்னா, சகோதரர் சிட்னி மூவரும் குடியிருந்த வீடுகளிலிருந்து அடிக்கடி துரத்தப்பட்டனர். பல நாட்கள் நடைபாதைகளிலும், பூங்காக்களிலும் தூங்கி எழுந்திருக்கும் கடினமான வாழ்க்கை.

வறுமையின் பிடியில் இருந்தபோதும், தாய் ஹன்னா சாப்ளினை மிகுந்த பாசத்துடன் வளர்த்தார். ‘‘எதிர்காலத்தில் நீ உலகிலேயே அதிக புகழ்பெற்ற மனிதனாக இருப்பாய்’’ என்ற தன்னம்பிக்கை சிந்தனையை டன் கணக்கில் சார்லியின் தலையில் ஏற்றிவைத்தார்.

சிறுவன் சார்லிக்கு 5 வயதாக இருந்தபோது, ஒருநாள் அவனது தாய் ஹன்னா தனது மேடைப் பாடல் நிகழ்ச்சிக்கு சார்லியையும் கூட்டிச் சென்றிருந்தார். பார்வையாளர் கூட்டத்தின் முன் பாடிக்கொண்டிருந்த ஹன்னாவுக்கு திடீர் என தொண்டை கட்டிக்கொண்டது. வார்த்தைகள் வரவில்லை. கூட்டத்தினர் கூச்சலிட்டனர்.

குட்டிப் பையன் சார்லிக்கு கொஞ்சம் நடிக்கத் தெரியும் என்பதை அறிந்திருந்த நிகழ்ச்சி நிர்வாகி, சார்லியை கூட்டத்தின் முன் நிறுத்தி, ‘‘எப்படியாவது கூட்டத்தைச் சமாளி… என் மானத்தைக் காப்பாற்று’’ என்று கெஞ்சினார். எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் இருந்த சிறுவன் சார்லி, சமயோசிதமாக தனது தாய்க்குத் தொண்டை கட்டி அவர் பாடச் சிரமப்பட்ட சம்பவத்தையே நடித்துக் காட்டினான். ஒரே பாராட்டு… ஆரவாரம். கூட்டத்தினர் அவனை நோக்கிக் காசுகளை வீசி உற்சாகப்படுத்தினர். ‘‘கொஞ்சம் அமைதி’’ என்று கையைக் காட்டியவாறே, மேடையில் விழுந்திருந்த காசுகளைப் பொறுமையாகப் பொறுக்கி எடுத்துக்கொண்ட சார்லி, பின் சில பாடல்களைப் பாடியும் நகைச்சுவையாக நடனமாடியும் கூட்டத்தைக் கலகலப்பாக்கினான்.

வறுமையான சூழலில் இருந்து மீள்வதற்குள், சாப்ளினின் தாய்க்கு உடல்நிலை பாதிப்படையவே, அவர் மனநோய் மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார்.  ஹான்வெல் என்னும் ஆதரவற்றச் சிறுவர்களுக்கான இல்லத்தில் சாப்ளின் சேர்க்கப்பட்டார். விடுதிக் காப்பாளரிடம் அடிவாங்கி, நோயில் விழுந்து அவதியுற்ற சார்லிக்கு ஆறுதல் கூறுவதற்குக்கூட யாருமே இல்லை. ‘‘அந்தச் சூழலிலும்கூட, நான் உலகத்திலேயே சிறந்த நடிகர் ஆகப்போகிறேன் என்ற கற்பனை பிம்பம்தான் எனக்கு அசாத்தியமான தைரியத்தைக் கொடுத்தது’’ என்று பின்னாட்களில் சார்லி தன் மகனிடம் கூறியுள்ளார்.

சார்லி தனது 19-வது வயதில், ப்ரெட் கார்னோ கம்பெனியில் துணை நடிகராக வேலைக்குச் சேர்ந்தார். சார்லியின் ஒல்லியான உருவத்தைப் பார்த்த கம்பெனிக்காரர்கள் அவருக்கு பிச்சைக்காரன், குடிகாரன் போன்ற பாத்திரங்களையே கொடுத்தனர். எந்தப் பாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடிக்கிற பையன் என்ற பெயர் எடுத்தார். அமெரிக்காவுக்கு நாடகக் குழு ஒன்றை அனுப்ப வேண்டியிருந்தபோது, அந்தக் குழுவில் ஒருவராக சார்லி சாப்ளின் அமெரிக்கா அனுப்பி வைக்கப்பட்டார். 

கப்பல், அமெரிக்காவைச் சென்று சேர்ந்தபோது சார்லியுடன் சென்ற ஸ்டான் லாரல் என்பவர் அந்தக் காட்சியை இப்படி விவரிக்கிறார். ‘‘கப்பலில் இருந்து இறங்கியவுடன், அமெரிக்க நிலப்பரப்பைப் பார்த்துக் கை அசைத்த சார்லி சாப்ளின் நாடகப் பாணியில் இப்படிச் சொன்னார்: ‘அமெரிக்காவே உன்னை வெற்றிகொள்ள நான் வந்திருக்கிறேன். இன்னும் சில நாட்களில் இங்குள்ள ஒவ்வோர் ஆணும், ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு குழந்தையும் சார்லி சாப்ளின் என்ற எனது பெயரைச் சொல்வார்கள்.’ அவரது வார்த்தைகளில் தன்னம்பிக்கை நிரம்பியிருந்தது.”  

அவரது மேடை நாடகங்கள் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகின. 1914-ம் ஆண்டில் அவரைத் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்தது கீஸ்டோன் ஸ்டுடியோ. தனித்துவம் காட்டுவதில் நிகரற்றவரான சார்லி, நாடோடிக் கதாபாத்திரத்தை விரைவில் உருவாக்கிக் கொண்டார். தலையில் உயர்ந்த தொப்பி, கையில் வளைந்த தடி, இறுக்கமான சூட்டு, நறுக்கு மீசை, கோமாளி நடைகொண்ட நாடோடிக் கதாபாத்திரம் வெகுவிரைவில் உலகையே கவர்ந்துவிட்டது.

ஒரே ஆண்டில் 35 படங்களில் நடித்தார். ஸ்டுடியோக்கள் அவரை ஒப்பந்தம் செய்ய வரிசையில் நின்றன. 28 வயதில் உலக சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் தருவதாக அவருடன் ஒப்பந்தம் போட்டது மியூச்சுவல் ஸ்டுடியோ. விரைவில் உலகிலேயே அதிகப் பணக்கார நடிகர் ஆகிவிட்டார். ஆனால், அவர் பணக்காரராக  வாழவில்லை. சிறு வயதிலேயே பசி, பட்டினியோடு வளர்ந்தவரான சார்லி சாப்ளின், அடித்தட்டு மக்களின் மீதான தனது அளவுகடந்த அன்பினை வெளிப்படுத்தும் வகையில் பல படங்களை உருவாக்கினார்.

‘ஒரு நாயின் வாழ்க்கை’, ‘தி கிட்’, ‘தி சர்க்கஸ்’, ‘தி சிட்டி லைட்ஸ்’, ‘தி கோல்டு ரஷ்’ போன்ற படங்கள் சமூக அவலங்களை நகைச்சுவையுடன் சித்தரித்த குறுங்காவியங்கள். மனிதர்களை இயந்திரங்களாக மாற்றும் அவலத்தைக் கேலிசெய்து ‘மாடர்ன் டைம்ஸ்’ என்ற படம் தயாரித்தார் சாப்ளின். சர்வாதிகாரி ஹிட்லரை அம்பலப்படுத்தும் ‘தி கிரேட் டிக்டேட்டர்’ (மாபெரும் சர்வாதிகாரி) என்ற படமும் தயாரித்தார். இந்தப் படங்கள் சமூக அக்கறை மிக்க மகத்தான கலைப் படைப்புகள்.

இதுபோன்ற மனிதநேயம் மிக்க படங்களை உருவாக்கியதற்காக அவர் மீது அமெரிக்க உளவுத்துறை எதிர் பிரசாரத்தைத் தூண்டியது. 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்துவந்த சார்லி மீது அமெரிக்கக் குடியுரிமை பெறவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அவர் மீது அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் அவரது ‘யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்’ பட நிறுவனம் சரிந்தது. மீண்டும் தோல்விகள். ‘அயல்நாட்டானை அடித்துத் துரத்து’ என்று சார்லி சாப்ளினுக்கு எதிரான கோஷம் எழுப்பப் பட்டது. அவரைக் கம்யூனிஸ்ட் என்று தூற்றினார்கள். சாப்ளின் அஞ்சவில்லை. ‘‘நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல… ஒரு மனிதன்’’ என்று முழங்கினார்.

தனக்கு எதிரான அவதூறுப் பிரசாரம் உச்சத்தை அடைந்த நிலையில், சார்லி சாப்ளின் கடைசியில் அமெரிக்காவைவிட்டு வெளியேறினார். இங்கிலாந்து சென்றார். பின் சுவிஸ் நாட்டில் தங்கிவிட்டார். யுத்தவெறியை எதிர்த்துக் குரல்கொடுக்க அவர் எப்போதுமே தயங்கவில்லை, தவறவில்லை. சார்லி சாப்ளினை நாட்டை விட்டுத் துரத்தியது தவறு என்று 1970-களில் உணர்ந்துகொண்ட அமெரிக்கர்கள், அவரை மீண்டும் வரவழைத்து விருதுகள் வழங்கிப் போற்றிப் பாராட்டினார்கள். 

‘தி கிரேட் டிக்டேட்டர்’ படத்தின் இறுதிக் காட்சியில், ஓர் எளிய முடிதிருத்தும் தொழிலாளி கதாபாத்திரத்தின் மூலம் சாப்ளின் பேசுகிறார்: ‘‘ஒரு புதிய உலகைப் படைக்க நாம் அனைவரும் ஒன்று சேர்வோம். பேராசை, வெறுப்பு, சகிப்பின்மை இவற்றுக்கு முடிவுகட்டுவோம். அறிவார்ந்த உலகைப் படைப்போம். அறிவியலும், வளர்ச்சியும் மனிதகுல மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லட்டும். ஜனநாயகம் காக்க நாம் அனைவரும் ஒன்றுசேர்வோம்.’’

No comments:

Post a Comment