Wednesday, March 5, 2014

மனதை ஒரு நிலை படுத்தி வெற்றி பெறு


மனதை ஒரு நிலை படுத்தி வெற்றி பெறு

ஒரு இளைஞனுக்கு மகானாக வேண்டும்என்ற ஆசை எழுந்தது. என்ன செய்தால் மகான் ஆகலாம் என யோசித்தான். நண்பர்களிடம் யோசனை கேட்டு பார்த்தான். அவர்கள் கேலி செய்தார்களே தவிர வழி சொல்வதாகத் தெரியவில்லை. எதற்கு வம்பு? ஒரு மகானிடமே கேட்டுவிட்டால், தன் கேள்விக்கு பதில் கிடைத்து விடுமென ஒரு சிறந்த மகானை நாடிப் போனான். காவியும், பட்டையுமாய் அமர்ந்திருந்த அவரிடம், சுவாமி! உங்களை மகான் என்று ஊரே புகழ்கிறது. உங்களது இந்த நிலைக்கு காரணம் என்ன? என்று கேட்டான். உண்கி...றேன், உறங்குகிறேன், தியானம் செய்கிறேன், என்றார் அவர். இளைஞன் சிரித்து விட்டான். ஏன் சாமி! இதைத்தான் ஊரில் எல்லாரும் செய்கிறார்களே! அப்படியானால் எல்லாரும் மகான் தானா? என்று சற்று நையாண்டியை குரலில் குழைத்துக் கேட்டான். தம்பி! எல்லாரும் அதைத் தான் செய்கிறார்கள். ஆனால், நான் உண்ணும் போதும், உறங்கும் போதும், தியானம் செய்யும் போதும் அதை மட்டுமே செய்கிறேன். மற்றதை பற்றி நினைப்பதில்லை. மனதை அந்தச் செயலில் மட்டுமே நிலைப்படுத்துகிறேன். ஆனால், சாதாரண மனிதர்கள் ஒன்றைச் செய்யும் போது, மற்றதில் மனதைத்திருப்புகிறார்கள். அதுதான் அவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம், என்றார். இப்போது தான் இளைஞனுக்குப் புரிந்தது. மனதை ஒருநிலைப்படுத்தி ஒன்றைச் செய்தால் தான் மகானாக முடியுமென்று! இப்போது புரிந்து கொண்டீர்களா! மனதை ஒருநிலைப்படுத்தி செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றியடையுமென்று!

No comments:

Post a Comment