Tuesday, June 16, 2015

எது சிறந்த வழி!

எது சிறந்த வழி!

ஒவ்வொருவனும் தன்னுடைய வழிதான் சிறந்தது என்று நினைக்கிறான். மிகவும் நல்லது. ஆனால் உனக்கு வேண்டுமானால் அது நல்லதாக இருக்கலாம் என்பதை நீ நினைவில் வைக்க வேண்டும். ஒருவனால் சிறிது கூட ஜீரணிக்க முடியாத ஓர் உணவு, மற்றொருவனுக்கு எளிதல் ஜீரணமாகக் கூடியதாக இருக்கும். உனக்குப் பொருத்தமாக இருப்பதனாலேயே ஒவ்வொருவனுக்கும் அது தான் வழி, சங்கரனுக்குப் பொருத்தமான சட்டை சந்திரனுக்கும் சங்கரிக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்ற முடிவிற்குத் தாவிவிடாதே. கல்வியறிவில்லாத, பண்பாடற்ற, சிந்தனையில்லாத ஆண் பெண் அனைவரும் இத்தகைய குறுகலான சட்டைக்குள் புகுத்தப்பட்டிருக்கிறார்கள்!

நீயாகவே சிந்தித்துப் பார். நாத்திகனாக இருந்து விட்டுப் போ! இந்த உலகமே பெரிது என்று நினைக்கும் இலெகிகனாக இருந்துவிட்டுப் போ! அது கூட எவ்வளவோ பராவாயில்லை – மனதைப் பயன்படுத்திச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த மனிதனுடைய வழி தவறானது என்று சொல்வதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது? உனக்கு வேண்டுமானால் அது தவறாக இருக்கலாம். அதாவது, நீ அந்த வழியைப் பின்பற்றினால் அதனால் உனக்குக் கேடு விளையக்கூடும். ஆனால் அதற்காக அந்த வழியால் அவன் கீழ்நிலையை அடைந்து விடுவான் என்பது அதன் பொருளல்ல.

எனவே, உன்னிடம் அறிவு இருந்து மற்றொருவன் பலவீனனாக இருப்பதை பார்த்தால், அதற்காக அவனை நீ கண்டிக்காதே. உனக்கு இயலுமானால் அவனுடைய நிலைக்கு இறங்கிச் சென்று அவனுக்கு நீ உதவி செய். தானாகவே அவன். வளர்ச்சி பெற வேண்டும். நான் அவனுடைய தலைக்குள் ஐந்து மணி நேரத்தில் ஐந்து கூடை அறிவைத் திணித்துவிடுவேன். ஆனால் அதனால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது ? அவன் முன்பு இருந்ததைவிட மேலும் சற்று அதிகம் மோசமானவனாகத்தான் இருப்பான்.

எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது. இதை நம்புங்கள். அப்போது அந்தப் பெரிய சக்தி உங்களிடமிருந்து வெளிப்படும் என்ற இந்த உண்மையை அனைவருக்கும் சென்று போதிப்பாயாக…. எல்லையற்ற வலிமையும், எல்லையற்ற ஞானமும், வெல்ல முடியாத ஆற்றலும் உனக்குள்ளேயே குடிகொண்டிருப்பதை நீ உணரமுடிந்தால், நீ அந்த ஆற்றலை வெளியே கொண்டுவர முடியுமானால், நீயும் என்னைப் போல் ஆக முடியும்.

No comments:

Post a Comment