Wednesday, November 6, 2013

எம் அகந்தையை அழித்தால் மட்டுமே மனிதமாண்பு உலகில் மதிக்கப்படும்

இன்று தீபாவளித்திருநாள். நரகாசூரனை வதம் செய்து தர்மம் நிலைநாட்டப்பட்டதான நாளும் இதுவே. அதர்மம் அழிந்து தர்மம் நிலைநிறுத்தப்பட்டதன் காரணமாக தீப ஒளி ஏற்றி அந் நாளை மக்கள் கொண்டாடிமகிழ்ந் தனர். அதுவே தீபாவளித் திருநாளாயிற்று. நரகாசூரனை வதம் செய்வதென்பது எங்கள் மனங்களில் இருக்கக் கூடிய அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் எனும் தீயவை அழிவதைக் குறிப்பதாகும். நரகாசூரன் என்ற கொடியவனை கிருஷ்ண பரமாத்மா அழிக்கின்றார். இங்கு அழிப்பு என்பது நரகாசூரன் எனும் அகந்தை வடிவத்தையாம்.

எங்களிடம் இருக்கின்ற அகந்தை அழியும் போது உள்ளத்தில் ஒளி பிரகாசிக்கும். அத்த கைய உள்ளொளி பிரகாசித்தால், அது இப் பிர பஞ்சம் முழுமைக்கும் பேரொளியாக அமையும்.
இத் தத்துவத்தைக் குறிப்பிடும் நாளே தீபா வளித்திருநாளாகும். எம்மிடம் இருக்கின்ற அகந்தை அழிய வேண்டுமாயின் எம் உள்ளத் தில் இறை வன் குடியிருக்க வேண்டும். உள்ளம் பெரும்கோயில் என்ற அடிப்படை யில், எங்கள் உள்ளக் கோயிலில் இறைவனை  குடியிருத்த வேண்டும். உள்ளக் கோயிலில் இறைவன் குடியிருந்து விட்டால், எங்கும் அன்பு மயமாகிவிடும். அன்பு தான் இன்ப ஊற்று. ஆகவே உலகம் எங்கும் ஒருகுறையும் இன்றி மக்கள் வாழ்வர். அந்த வாழ்வு தீப ஒளிப்பிரகாசம் போல அமையும் என்ற தத்துவத்தையே இன்று உலகுவாழ் இந்துக் கள் அனுஷ்டிக்கும் தீபாவளித் திருநாளின் உட் பொருள் பகர்ந்து நிற்கிறது. 

எனினும் எங்களிடமிருக்கின்ற ஆணவம் - அகந்தை - செருக்கு அழிந்ததா! என்றால் இல்லைவே இல்லை. இங்குதான் தீபாவளித் திருநாளின் தத்துவம் கெட்டுப்போகிறது. சமாதானம் என்று கை கூப்பி வாக்குக் கேட்டவர் கள், ஆட்சி அமைத்தபின் யுத்தத்தின் மூலமே சமாதானம் என்கிறார்கள். ஜனநாயகம் என்று மார்தட்டுவோர் அப்பாவி பொதுமக்களின் மார்புகளை துப்பாக்கி வேட்டுக் கள் பதம் பார்க்கும் போது அதற்கு நியாயம்  தெண்டுகிறார்கள். தமிழர்களின் உரிமை. அதற்காகவே எங் கள்பணி என்று வாக்குப் பெற்று வடக்கில் ஆட்சி அமைத்தவர்களில்  சிலர் பொதுமக்களைக் கண் டால் பாராமுகமாக இருக்கிறார்களாம். எப்படி இருக்கிறது நிலைமை?

மக்கள் பணி என்று கூறி தாங்களாகவே முன்வந்து தேர்தலில் போட்டியிட்டு, வாக்குப்பெற்று,  பதவி கிடைத்ததும் எல்லாவற்றையும் மறந்து  பதவித்தடிப்பில் இருக்கிறார்கள். இதுதான்  சொல்வது; சிலருக்குப் பதவியைக் கொடுத்துப் பார்க்க வேண்டும். சிலரிடம் பதவியைப் பறித்துப் பார்க்க வேண்டும் என்று.  எதுவாயினும் நரகாசூரர்கள் அழிக்கப்பட வேண்டும். தர்மம் நிலை நாட்டப்பட வேண்டும். எங்கும் எதிலும் எப்போதும் அன்புநிலைப்பட்ட மக்கள் சமூகம் உருவாக வேண்டும். அப்போதுதான் இன, மத, மொழி என்ற பேதங்கள் அழிந்து மனிதம் என்ற பொதுமை உயர்வு பெறும். ஆக, மனிதம் மாண்புபெற இன்றைய தீபாவளித் திருநாளில் நாம் அனைவரும்  அன்பெனும் இன்ப ஊற்றை மற்றவர்களை  நோக்கிப் பாய்ச்சுவோம்.  நிச்சயம் அது பயன் விளைவிக்கும்.  ’

No comments:

Post a Comment