Friday, October 7, 2016

இங்கிதம் வேண்டும்

மனித வாழ்க்கையில் நட்பு மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. உற்றார்உறவினரிடமும், உற்ற நண்பர்களிடமும்,உயர் அதிகாரிகளிடமும், நட்பை வளர்த்துக் கொள்ள மிக முக்கியமானது இங்கிதம்.


நமது பேச்சில், செயலில், பழக்க வழக்கங்களில் இங்கிதத்தைக் கடைப் பிடித்தால்,  நம்மீது பிறருக்குள்ள மதிப்பு உயரும். நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும்.கிடைத்த நட்பு நிலைத்து நிற்கும். உறவினர்களின் நெருக்கம் அதிகமாகும். உறவுகள் பலப்படும். உயர் அதிகாரிகளின் இதயத்தில் இடம் பிடித்துக் காரியங்களை எளிதில் சாதித்துக் கொள்ள முடியும். இவை யாவும் உருப்படாத 'ராசிபலன்'  வார்த்தைகள் அல்ல. உணர்ந்து அனுபவித்த உண்மைகள்  அலுவலகம் ஒன்றின் மேலாளர் அறையின் நுழைவாயிலில், உத்திரவின்றி உள்ளேவரக்கூடாது'என எழுதி வைக்கப் பட்டிருந்தது.அந்த அலுவலகத்திற்குப் புதிதாக மாற்றலாகி வந்த மேலாளர், தம் உதவியாளரை அழைத்து அந்த அறிவிப்புப் பலகையை அகற்றும் படியும், அதற்குப் பதிலாக 'உத்திரவு பெற்று உள்ளே வரவும்' என எழுதி வைக்கும் படியும்கே ட்டுக் கொண்டார்.இரு வாசகங்களின் கருத்தும் ஒன்று தான். முதல் வாசகத்தின் எதிர்மறை அணுகுமுறை சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.இரண்டாம் வாசகத்தின்நே ர்மறை அணுகுமுறை அனைவர் மனதிலும் அற்புதமான ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தும். இதுவும் ஓர் இங்கிதமே!

ஒருவரைச் சந்திக்க நாம் செல்வதாக இருந்தால், அதுவும் ஏதேனும் ஒரு வகையில்அவர் நம்மை விட உயர்ந்தவராக இருந்தால், நமக்கு வசதிப்பட்ட நேரத்தில நாம் செல்லக் கூடாது. 'எந்த நேரத்தில் வந்தால் தங்களைச் சந்திக்கலாம்? என்று அவரிடம் முன் கூட்டியே கேட்டறிந்து, நம்மால் அவருடைய வழக்கமான  அலுவல்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணமும், அவருக்கு வசதிப்பட்ட நேரத்திலும் சந்திப்பை வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நம் மீது அவருக்கு  ஓர் ஈர்ப்பு உண்டாகும்.நம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதும் சுலபமாகும். 

பொதுவாக உறவினர்கள் நண்பர்களின் வீடுகளுக்கு நாம் தனியாகவோ அல்லது  குடும்பத்துடனோ செல்ல நேர்ந்தால், நமது வருகையை முன் கூட்டியே  அவர்களுக்குத் தெரிவித்து விட்டுச் செல்ல வேண்டும். சர்வ சாதாரணமாகத்  தொலைபேசி உபயோகம் வந்து விட்ட இந்தக் காலகட்டத்தில் இது மிகவும் எளிது. தொலைபேசி வசதி இல்லாத இடங்களுக்கு கடிதம் மூலமாகவேனும் தெரிவித்து  விட்டுச் செல்லவேண்டும். முன் அறிவிப்பின்றி திடீரெனப் போய்ச் சேருவது  அவர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும்.ஒரு குறிப்பிட்ட நாளில் அல்லது நேரத்தில் அவர்கள் தம் சொந்த வேலையாக வெளியில் செல்லத் திட்டமிட்டிருக்கலாம்.

எதிர் பாரா விதமாக திடீரென நாம் போய் நிற்கும் போது அவர்களின் அவசியமான அலுவல்கள் திட்டங்கள் பாதிக்கப் படலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரிக்கும் நற்குணம் கொண்டவர்களைக் கூட இது போன்ற திடீர் வருகை சில சமயம் எரிச்சல் படவைக்கும்.

தம் வீட்டை எப்போதும் தூய்மையாகவும், பொருட்களை ஒழுங்கு முறையுடன் அழகு படுத்தியும் வைத்திருப்பதைச் சிலர் விரும்புவர். ஆனாலும் விளையாட்டுக் குழந்தைகள்உள்ள வீடுகளில் பொருட்கள் சிதறிக் கிடக்கும். சிறு குழந்தைகள் உள்ள வீடுகளில் இது தவிர்க்க முடியாதது. இது போன்ற சந்தர்ப்பங்களில் முன் அறிவிப்பின்றி விருந்தினர் வந்து விட்டால் வீட்டில் உள்ளவர்கள் அவமானப்பட்டதைப் போல் உணருவார்கள்.அப்படி ஒரு 
தர்ம சங்கடத்தை நாம் அவர்களுக்கு ஏற்படுத்தக் கூடாது. எனவே விருந்தினராக நாம் எந்த  வீட்டுக்குச் சென்றாலும் முதலில் அறிவித்து விட்டுச் செல்வது மிக முக்கியம். இதுவும் ஓர் இங்கிதம்.

எந்த வீட்டுக்குச் சென்றாலும் வீட்டாரின் அனுமதி கிடைத்த பின்னரே உள்ளே செல்ல வேண்டும். உள்ளே இருப்பவரோ அல்லது வெளியிலிருந்து நம்மை உள்ளே அழைத்துச் செல்பவரோ 'உள்ளே வாருங்கள்' என்று அழைக்கும் வரை நாமாக அவசரப்பட்டுச் செல்லக் கூடாது. நமது சொந்த வீட்டைத் தவிர வேறு எவர் வீட்டிலும் அவர் எவ்வளவு தான் நெருங்கிய உறவினராகவோ நண்பராகவோ இருப்பினும் அவர்கள் வீட்டில முழு உரிமை எடுத்துக் கொண்டு சமையலறை வரை சர்வ சாதாரணமாகச் செல்வதைத்தவிர்க்கவேண்டும். இது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். 

விருந்தினராக அடுத்தவர் வீட்டுக்குச் சென்றால் வீட்டுக் காரர்களே சலிப்படையும்அளவுக்குத் தங்குவது கூடாது. முதல் நாள் உபசரிப்பு தடபுடலாக இருக்கும். அடுத்தடுத்த நாட்களில் வித்தியாசத்தை நாமே உணரலாம்.எனவே பலமான உபசரிப்பு  முடிந்ததுமே கௌரவமாக விடை பெற்றுக் கொள்ள வேண்டும். 'விருந்தும்ம ருந்தும்மூன்று நாள் தான்' என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்? 

விருந்தினராக அடுத்தவர் வீடுகளுக்குச் செல்லும் போது அவ்வீட்டில் சிறு குழந்தைகள்இருப்பின் நம்மால் இயன்ற அன்பளிப்புப் பொருட்களை, குறிப்பாக இனிப்புப்பண்டங்களை வாங்கிச் செல்வது சிறந்தது. அது ஒன்றிரண்டு மிட்டாய்களாகக் கூட இருக்கலாம். அவ்வீட்டின் குழந்தைகள் நமது வருகையால் மகிழ்ச்சி அடைவார்கள். ஒன்றுமே வாங்கமல் வெறுங்கையுடன் எப்போதும் ஒரு வீட்டிற்குச் செல்லும் வழக்கமுடைய ஒருவர் ஒரு முறைச் சென்ற போது கதவைத் திறந்த அவ்வீட்டுக் குழந்தை தனது தாயிடம் ஓடிச் சென்டறு 'ஒன்றுமே வாங்காமல் சும்மா வருமே அந்த மாமா வந்திருக்கிறது' என்று சப்தம் போட்டுச் சொல்ல, வந்தவர் வெட்கத்தால்கூனிக் குறுகிப் போயிருப்பார் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 
  
இரண்டு நண்பர்கள் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவர்களுடன் நாமும் சேர்ந்துக் கொள்ள வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டால், நமது வருகையை அவ்விருவரும் அறிந்துக்கொள்ளும் விதத்தில் அறிவித்து விட்டு அவர்களுடன் இணைந்துக் கொள்ளவேண்டும். நமக்குத் தெரிவிக்க விரும்பாத இரகசியம் எதுவும் அவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம்.  அது வரை அவர்கள் பேசிக் கொண்டிருந்த தலைப்பை விட்டு வேறு தலைப்புக்கு அவர்கள் திடீரென மாறினால்,அதைக் கொண்டு நாம் புரிந்துக் கொள்ளலாம். பிறகு சந்திப்பதாகச் சொல்லி விட்டு நாம் நாகரிகமாக நகர்ந்துக் கொள்வது தான் இங்கிதம். 

No comments:

Post a Comment