Friday, October 21, 2016

திரியம்பக மந்திரம்

மஹாம்ரித்யுஞ்சாய மந்திரம் -ரிக்வேதம் 7.59.12

ஓம் த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டி வர்தனம்
உர்வாருகமிவ பந்தனான்
ம்ர்த்யோர் முக்ஷீய மாம்ர்தா”த்

இம்மந்திரம் மிகவும் சக்திவாய்ந்த மந்திரமாகும். இம்மந்திரம் த்ர்யம்பக மந்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. ‘மரணத்தை வெல்ல வல்ல மந்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

| மந்திரத்தின் அர்த்தம் |

| ஓம் | பிரணவ மந்திரம் ஆகும்.
| த்ர்யம்பகம் | த்ரி என்றால் மூன்று, அம்பகம் என்றால் கண். முக்கண் என்பதே இதன் பொருளாகும்.

| யஜாமஹே | என்றால் நாங்கள் அன்போடு வணங்குகிறோம் எனப் பொருள்படும்.

| ஸுகந்திம் | என்றால் நறுமணம் வீசுகின்ற எனப் பொருள்படும்.

| புஷ்டி வர்தனம் | என்றால் எக்குறையும் இல்லாத, நிறைவான, போதுமான வாழ்க்கையை எப்போதும் அளிப்பவர் சிவபெருமான் எனப் பொருள்படும். மேலும், நோயில்லாத ஆரோக்யமான வாழ்க்கையை தந்து மனவலிமையையும் உடல் பலத்தையும் அதிகரிக்க வல்லவர் சிவபெருமான். நம் வாழ்க்கையை முழுமைப்படுத்துவதே சிவபெருமான்.

| உர்வாருகமிவ | என்றால் உயிரைக் கொல்லக் கூடிய கொடிய நோய்களாக இருந்தாலும், உடலை வறுத்தக் கூடிய நோய்களாக இருந்தாலும், எவ்வகையான நோய்களாக இருந்தாலும் அவற்றை நீக்கி எங்களைக் காத்து அருள் புரியவேண்டும் இறைவா எனப் பொருள்படும்.

| பந்தனான் | என்றால் பந்தங்களிலிருந்து எனப் பொருள்படும். இதை நாம் அடுத்த வரியோடு சேர்த்துச் செப்பித்தால் அர்த்தமாகும்.

| ம்ர்த்யோர் முக்ஷீய | என்றால் மரணங்களிலிருந்து விடுதலை அடைய செய்யுங்கள் எனப் பொருள்படும். முதலில் நோய்களை நீக்க வேண்டினோம். இப்போது மரண பந்தங்களில் இருந்து நம்மைக் காத்து, மரணமே நேராமல் விடுதலை தாருங்கள் என வேண்டுகிறோம். இதற்கு மற்றொரு அர்த்தமும் உண்டு. ‘பந்தனான் ம்ர்த்யோர் முக்ஷீய’ என்றால் இறப்பு என்பது நிச்சயம். ஒருவேளை இறந்துவிட்டால், இனி நாங்கள் பிறக்கவேண்டாம். மீண்டும் பிறந்து துன்பப்பட்டு இறக்கவேண்டாம். எங்களுக்கு மோக்ஷம் அளியுங்கள் இறைவா எனப் பொருள்படும்.

| மாம்ர்தாத் | என்றால் எங்களை மரணத்தில் இருந்து காத்து, மரணமே இல்லாதவர்களாய் செய்யுங்கள் எனப் பொருள்படும்; இறந்தாலும் இறப்பே இல்லாதவர்களாக இருக்க அருள்புரியுங்கள் இறைவா எனவும் பொருள்படும். முன்னதாக, நாம் இனி பிறப்பே வேண்டாம், எங்களுக்கு மோக்ஷம் தாருங்கள் என வேண்டினோம். இப்போது, இறந்தாலும், மோக்ஷம் பெற்று என்றுமே அழியாதவர்களாக உங்களோடு (இறைவனோடு) இருக்க அருள்புரியுங்கள் என வேண்டுகிறோம்.

சுருக்கமான அர்த்தம் – ஓம். நாங்கள் முக்கண்ணுடைய இறைவனை அன்போடு வேண்டுகிறோம். உங்களின் திருவருளால் எங்களின் வாழ்வு என்றுமே எந்த குறைகளும் இல்லாமல் நறுமணம் வீசுகின்றது. எங்களை நோய்களில் இருந்து காத்து, மரணப்பிடியில் இருந்து மீட்டு அருள்புரியுங்கள், இறைவா. இறப்பு நிச்சயம் என்றால், எங்களுக்கு மோக்ஷம் தந்து என்றுமே உங்களோடு இணைந்திருக்க அருள்செய்யுங்கள்.

மந்திரம் செப்பும் ஒழுக்கநெறி

இம்மந்திரத்தை உடலில் திருநீறு இட்டுக்கொண்டு, ருத்ராட்சை மாலை அணிந்துகொண்டு செப்பிக்கலாம். (இம்மந்திரத்தை சரியாக உச்சரித்தால்) இம்மந்திரத்தால் எழும் சக்தி, நமக்கு புதிய தெம்பை அளித்து மனத்திற்கு தைரியத்தை அளிக்கும். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இம்மந்திரத்தைச் செப்புவது அவர்களின் மனதிற்கு ஒரு தெம்பை தரும். மேலும், சிவபெருமானின் அருளால் அவர்களுக்கு நல்பேறு கிட்டும். எப்படி காயத்ரி மந்திரம் மனத்தை தூய்மைப்படுத்தி ஆன்மீகத்தில் ஈடுபட நம்மை தயார்ப்படுத்துகிறதோ, அதுபோல மஹாம்ரித்யுஞ்சாய மந்திரம் நம் உள்ளத்திலும் உடலிலும் இருக்கும் பிணிகளை நீக்க துணைபுரியும்.

No comments:

Post a Comment