Tuesday, March 26, 2013

நட்பு முறியப் போவதற்கான சில அறிகுறிகள்!!!

உறவுகளிலேயே மிகவும் புனிதமானது நட்பு தான். அத்தகைய நட்பு இல்லாமல் எவராலும், இந்த உலகில் நிம்மதியாக வாழ முடியாது. நட்பு இல்லாவிட்டால், உலகமே வெறிச்சோடி காணப்படும். ஏனெனில் ஒருவரது தனது உணர்ச்சியை, கஷ்டத்தை யாரிடம் பகிராமல் இருந்தாலும், நிச்சயம் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. "தோள் கொடுப்பான் நண்பன்" என்று சும்மாவா சொன்னாங்க... 

ஏனெனில் எந்த ஒரு கஷ்டமான நிலையிலும், யார் விட்டு சென்றாலும், நண்பர்கள் மட்டும் பிரிந்து செல்லமாட்டார்கள். அந்த கஷ்ட காலத்தில், அதனை போக்குவதற்கு முயல்வதோடு, சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வார்கள். இந்த உலகில் அனைவருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் என்ற ஒருவர் இருப்பார்கள். அத்தகையவர்களின் மீது நிச்சயம் 'தனக்கு மட்டுமே சொந்தம்' என்ற எண்ணம் இருக்கும். அத்தகைய எண்ணத்தால், யாரிடமும் அவர்களை விட்டுத் தர மாட்டோம். 

உறவுகளில் பிரிவு இருப்பது என்பது சாதாரணமான விஷயம். ஆனால் எந்த ஒரு உறவிற்கும் இவ்வுலகில் பிரிவு இருந்தாலும், நட்புக்கு பிரிவு இருக்காது என்று நினைக்கிறோம். உண்மையில் அத்தகைய உறவிலும் பிரிவு என்ற ஒன்று இருக்கிறது. அத்தகைய பிரிவு வெளிப்படையாக தெரியாது. ஒருசில அறிகுறிகள் மூலமே தெரியும். மேலும் நண்பர்கள் வேண்டுமென்றே பிரிய நினைப்பதில்லை. இதற்கு பின்னால் நிச்சயம் ஏதேனும் ஒரு காரணம் இருக்க வேண்டும். அவ்வாறு நெருங்கிய நண்பர்கள் நம்மை விட்டு விலக நினைக்கிறார்கள் என்பதை அறிய சில அறிகுறிகள் உள்ளன. அது என்ன அறிகுறிகள் என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள். 

* எந்த நேரத்திலும் தம்முடன் இருந்து, சந்தோஷமாக பேசிக் கொண்டு இருப்பதை விரும்பிய நண்பன், திடீரென்று வேலை இருக்கிறது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டு சென்றால், அவர் தம்மை விட்டு பிரிய நினைக்கிறார் என்று புரிந்து கொள்ளலாம். சில நேரங்களில் உண்மையில் வேலை இருக்கலாம். ஆனால் சில நேரங்களில் அவ்வாறு சொல்வதை எளிதில் புரிந்து கொள்ளலாம். 

* இதுவரை நண்பனாக இருந்து, எப்போதும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தனக்கே முக்கியத்துவம் கொடுத்து பேசியவர்கள், திடீரென்று அதனை தவிர்த்து, வேறு ஏதாவதொன்றிற்கு சம்பந்தமே இல்லாமல், தம்மை தவிர்த்து முக்கியத்துவம் கொடுத்தால், அதனைக் கொண்டும் அவர்கள் பிரிய நினைக்கிறார்கள் என்ற எண்ணத்தை புரிந்து கொள்ளலாம். 

* ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் தினம் தினம் ஒரு நண்பர்கள் கிடைப்பார்கள். அவ்வாறு கிடைத்துவிட்டால், இதுவரை எங்கு சென்றாலும், அழைக்காமல் செல்லாத நண்பன், சிறிதும் அழைக்க வேண்டும் என்று எண்ணாமல்,  அடிக்கடி புது நண்பர்களுடன் தனியாக செல்வதைக் கொண்டும், பிரிய நினைக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம். இந்த நேரத்தில் அவசரப் பட்டு நண்பர்களை தவறாக நினைத்து பிரியாமல், அவர்களுடன் மனம் விட்டு பேசி கலந்து ஆலோசித்து, அதற்கான காரணத்தைத் தெரிந்துக் கொண்டு, பின் எந்த முடியும் எடுக்க வேண்டும். 

* உறவுகளுக்குள் பெரும்பாலும் பிரச்சனை ஏற்படுவதற்கு பொறாமையும் ஒரு காரணம். அத்தகைய பொறாமையானது புனிதமான நட்புறவைக் கூட பிரித்துவிடும். அதிலும் பொறாமை, ஒரு பெண்ணால் கூட பிரிந்து விடும். ஆம், தாம் காதலிக்கும் பெண்ணையே, தனது நண்பனும் காதலித்து,  அது அந்த  பெண்ணிற்கு பிடிக்க, இதுவரை நெருக்கிய நண்பர்களாக இருந்தவர்கள், ஒரு பெண் மீது கொண்ட அன்பால் ஒருவரை ஒருவர் வெறுத்து, பிரிந்து விடுகின்றனர்.  அடுமட்டுமின்றி வேறு ஏதாவது புதிய நண்பர்கள் கிடைத்துவிட்டாலும் பொறாமையானது ஏற்படும். இத்தகைய பொறாமை வெளிப்படையாக தெரியாது. ஆனால் அவர்களது நடவடிக்கைகள் மற்றும் செயல்களில் நன்கு புலப்படும். இதை வைத்தும் நட்புறவு முறியப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம். 

இவையே சில நட்பு பிரிவதற்கு காரணங்கள் மற்றும் அறிகுறிகள். வேறு ஏதாவது நட்பை முறிக்கும் காரணங்கள் உங்களுக்கு தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment