Thursday, March 7, 2013

வாழ்வின் உயர்ந்த இலட்சியம்


வாழ்வின் உயர்ந்த இலட்சியம் என்ன? என்று ஒருமுறை பேராசிரியர் ஒருவர் என்னிடம் கேட்டபொழுது, இலட்சியம் ஒன்றுதான். அதை இரண்டுவிதமாக அடையலாம்…

1. சிலர் நேரடியாக எளிய பாதையில் தியானத்தின் மூலமாகவே ஞானமடைவார்கள்.

2. சிலர் பணம், பேர், சுகம் என்று சுற்றுவழிப்பாதையில் சென்று, இதற்குமேல் அடைவதற்கு என்ன இருக்கின்றது என்று இறுதியில் ஞானமடைவார்கள்.

யார் எப்படித் தேடினாலும், யார் என்ன செய்தாலும், மனித வாழ்வின் இலட்சியம் ஞானமடைதல்தான் எனச் சொல்லி முடித்தேன்.

பணக்காரராவதன் மூலமாக உண்மையாகவே எதை அடைய முயற்சிக்கின்றீர்கள்?

உங்களுடைய சொத்துக்களின் எல்லையை அதிகரிப்பதன் மூலமாக உங்களின் எல்லையை அதிகரிக்கவே முயற்சிக்கின்றீர்கள்.

பெரும்பணத்தைச் சேர்ப்பதனாலேயே பெரும் மனிதராக மாறிவிட்டோம் என்று நம்பும் போது தான் வளர்ச்சியே நின்றுவிடுகின்றது.

அதேபோல் புகழ் பெறுவதன் மூலமாக நீங்கள் உங்களின் பெயருடைய எல்லையை அதிகரித்து உங்களின் எல்லையை அதிகரிக்கவே முயற்சிக்கின்றீர்கள். சுகங்களின் மூல மாகக் கூட உங்களின் உணர்வினுடைய எல்லையைத்தான் அதிகரிக்க முயற்சிக்கின்றீர்கள். உங்களின் எல்லா முயற்சியுமே உங்களின் எல்லையை வெவ்வேறு வழிகளில் பெருக்கும் முயற்சிகள்தான்.

நம் முடைய எல்லைகளை விரிவாக்கிக் கொள்வதற்காகத்தான் வெவ்வேறு வழிகளில் நம்முடைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டேயிருக்கின்றோம். வாழ்வில் எந்தவொரு உச்சியை ஒருவர் தொட்டாலும் அது வாழ்வின் ஒரேயொரு பரிமாணமாகத்தான் இருக்கின்றது. ஆனால் ஞானமடைதல் எனும் உன்னத நிகழ்வு உங்களை எல்லாப் பரிமாணங்களிலும் மலரச் செய்யும், அபூர்வ அனுபவமாகும்.

ஞானத்தை அடைவதற்காக உழைக்கும் ஒருவர் அவருடைய வாழ்வில் எதையுமே இழக்க மாட்டார். மாறாக, எல்லாவற்றையும் பெறுவார். ஞானத்தை இலக்காகக் கொண்டிருக்காமல் உழைப்பவர் எல்லாவற்றையும் அடைந்தபிறகு கூட எதையும் அடையாத அதிருப்தியைத்தான் பெற்றிருப்பார்.

ஞானமடைவதற்குத் தடையாயிருக்கும் அகங்காரம் பற்றிய இனிமையான சம்பவ மொன்று…

யுங்சூ தன்னுடைய குருவிடம் இப்படிக் கேட்டார். அடிக்கடி எங்களை அகங்காரம் பிடித்தவர் என்று திட்டுகின்றீர்கள். அகங்காரம்கூட அந்த இறைவனால் படைக்கப்பட்ட ஒன்றுதானே? இறைவனால் படைக்கப்பட்ட ஒன்று எப்படித் தவறாக இருக்க முடியும்? சரியான விளக்கம் சொல்லுங்கள் என்றார்.

ஜென் குரு அக்கேள்விக்குப் பதிலளித்த போது, உங்களின் அகங்காரத்தை பூர்த்தி செய்வதற்காக வாழ்ந்தால் கூட பரவாயில்லை.

ஆனால், உங்களின் மொத்த வாழ்வும் யாரோ ஒரு சிலரின் அகங்காரத்தைப் பூர்த்தி செய்வதற்காகவே ஓடுகின்றது. அடுத்தவரின் அகங்காரத்திற்காக உங்களையே அர்ப்பணிக்க வைத்து, உங்களின் வாழ்வைக் கேலிக்கூத்தாக்கும் அகங்காரத்தைத்தான் திட்டுகின்றேன்.

யுங்சூ. எங்களின் அகங்காரத்தை பூர்த்தி செய்தால் கூட பரவாயில்லை எனச் சொல்கின்றீர்களே. அழிக்கப்பட வேண்டிய அகங்காரத்தைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்தால் இந்த ஜென்மமே பாழாய்ப் போய் விடுமல்லவா?

ஜென் குரு, அகங்காரம் அழிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் நடைமுறைப்படுத்துவதற்கு இன்று தயாராயிருக்கும் புத்திசாலிகள் வெகு குறைவு.

பெரும்பாலான மனிதர்கள் தங்களின் விருப்பப்படி வாழ்வதாய் நம்பிக்கொண்டிருக்கின் றார்கள். அது பெரிய பொய். உங்களின் விருப்பம் என்பதே, சமுதாயத்தாலும், சுற்றத்தாராலும் நேரடி யாகவோ மறைமுகமாகவோ நிர்ணயிக்கப்பட்டவைதான். உங்களின் விருப்பப்படி முழுமையாக வாழ ஆரம்பித்து விட்டால் ஞானியாகி விடுவீர்கள். இதையெல்லாம் தாண்டி அவர் இப்படிச் சொல்லி விட்டால்? இவர் இப்படி நினைத்துவிட்டால் என்னாவது? என்று யார் யாருடைய அகங்காரத்திற்காகவெல்லாம் தன்னை வளைத்து, வாழ்வை அடகுவைத்து வாழ்வதால்தான் மனிதர்கள் வீழ்ந்து கொண்டேயிருக்கின்றார்கள். இதைத்தான் தவறு என்று சொல்கின்றேன்.

உங்களின் அகங்காரத்தைப் பூர்த்தி செய்வதற்காக உங்களின் எல்லைகளை அதிகரித்தால் கூட அழிய வேண்டியது அழிகின்றது என்று நிம்மதியாயிருக்கலாம்.

ஆனால், இதில் ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால், எது உங்களுடைய அகங்காரம்? எது மற்றவர்களுடையது என்று பிரித்துப் பார்ப்பது எளிதல்ல. தன்னுடைய அகங்காரத்தைக் கண்டுபிடித்து அதைப்பூர்த்தி செய்து அதிலிருந்து வெளிவருவதென்பது எல்லோருக்கும் சாத்தியமானதல்ல என்று சொல்லி முடித்தார்.

பலருடைய ஆசை இப்படித்தான் இருக்கின்றது. உலகை அனுபவிக்கவும் வேண்டும். ஆனால் அகங்காரம் அழியவும் வேண்டும்.

அதேபோல் தொடர்ந்து தன் எல்லையை விரித்துக் கொண்டே செல்ல வேண்டும். ஆனால் அகங்காரம் அழியவும் வேண்டும்! சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால், எந்தப் பெரிய இழப்பும் இல்லாமல், கஷ்டம் இல்லாமல் வாழ்வை அனுபவித்து ஆளவும் அகங்காரம் அழியவும் வேண்டும்! என்றுதான் நெஞ்சோரம் பலரும் ஆசைப்படு கின்றார்கள். இப்படிப்பட்டவர் களையும் ஞானம் நோக்கி அழைத்துச் செல்லும் தியானம்தான் உங்களுக்கான இந்த வாரத் தியானம். இத்தியானம் மிக எளியது, மிக வலியது.

No comments:

Post a Comment