Sunday, December 7, 2014

விடாமுயற்சியுடன் செயலாற்றினால் தான், தடைகளைத் தாண்டி உயர முடியும்

விடாமுயற்சியுடன் செயலாற்றினால் தான், தடைகளைத் தாண்டி உயர முடியும்

ஒரு குரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தார். சீடன் விளையாட்டாக மரத்தில் ஏறிக் கொண்டிருந்தான்.

அங்கே பட்டாம்பூச்சியின் வலைப்பின்னலைக் கண்டான்.

அந்த பூச்சி பின்னலை விட்டு வெளியே வர திணறிக் கொண்டிருந்தது.

குழப்பத்துடன் சீடன், ""ரொம்ப சிரமப்படுதே! அதற்கு உதவி செய்தாகணும்!'' என்ற எண்ணத்துடன் அதை நெருங்கினான்.

கண் விழித்த குரு சீடனைக் கண்டார்.

""சும்மாயிரு! அதன் போக்கிலேயே விட்டு விடு!'' என்று சொல்லிவிட்டு மீண்டும் உறங்கினார்.

சீடனுக்கு மனம் கேட்கவில்லை. 

குருவுக்கு தெரியாமல், தடுமாறும் அந்த பூச்சியை பின்னல் கூட்டில் இருந்து விடுவித்தான்.

ஆனால், அந்த பூச்சி பறக்க முடியாமல் தரையில் விழுந்தது.
கண் விழித்த குரு சீடனை நோக்கி,

""சொல்லியும் கேட்கவில்லையே! அதன் சிறகை சேதப்படுத்தி விட்டாயே! பட்டாம்பூச்சி பறக்க வேண்டுமானால், அது தானாகவே கூட்டை விட்டு வெளியே வந்திருக்க வேண்டும்'' என்று கடிந்து கொண்டார்.

பட்டாம்பூச்சி மட்டுமல்ல! மனிதனுக்கும் இது பொருந்தும். வாழ்வில் குறுக்கிடும் கஷ்ட நஷ்டங்களுக்காக பிறரது உதவியை நாடக்கூடாது. அவனாகவே சமாளிக்கும் ஆற்றலைப் பெற வேண்டும். விடாமுயற்சியுடன் செயலாற்றினால் தான், தடைகளைத் தாண்டி உயர முடியும்.

No comments:

Post a Comment