Sunday, December 7, 2014

நம்பியவரைக் காப்பது என் கடமை'

நம்பியவரைக் காப்பது என் கடமை'

கண்ணனும், பலராமனும் மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ச்சலுக்குப் புறப்பட்டனர். 

கண்ணனின் நண்பன் ஸ்ரீதாமா உள்ளிட்ட சிறுவர்களும் உடன் சென்றனர். செல்லும் வழியில் ஸ்ரீதாமா கண்ணனிடம், "கண்ணா! இதோ தெரியும் பனந்தோப்பில் கிடைக்கும் பழத்தின் சுவை அபாரமாக இருக்கும்'' என்றான். 
கண்ணனும் ஆவலுடன் வேகமாக நடை போட்டான். 

""கண்ணா! ஜாக்கிரதை! இங்கே அவ்வளவு எளிதில் யாரும் நுழைந்து விட முடியாது! இதனுள், தேனுகாசுரன் என்னும் கொடியவன் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் மனிதர்களை அப்படியே விழுங்கி விடுவானாம். பார்த்துப் போ! அதேநேரம், நீ மனது வைத்தால் நண்பர்களாகிய எங்களின் ஆசை நிச்சயம் நிறைவேறும்,'' என்றான். 
கண்ணன் சிரித்தபடி தோப்புக்குள் நுழைந்தான்.

பலராமனும் கண்ணனைப் பின்தொடர்ந்தான். அண்ணன் தம்பி இருவரும் பழங்களைப் பறித்துப் போட்டனர். 

பனை மரங்களில் உண்டான சலசலப்பு ஒலி அசுரனின் காதில் விழுந்தது. கோபத்துடன் ஓடி வந்தான். சிறுவர்கள் அஞ்சி ஓடினர். ஆனால், எதிர்த்து நின்ற பலராமன், கண்ணனையும் அவன் தாக்க வந்தான். கழுதை வடிவில் தன்னை உருமாற்றிக் கொண்டான். 

கால்களால் அவர்களை உதைக்க வந்தான். ஆனால், கிருஷ்ண பலராமர், அதன் பின்னங்கால்களைச் சுழற்றி மரத்தில் மோதச் செய்து கொன்றனர். பின், அசுரனின் உறவினர்கள் அனைவரும் கழுதைகளாக உருவெடுத்து அவர்களைத் தாக்க வந்தனர். அத்தனை கழுதைகளையும் அவர்கள் கொன்று குவித்தனர். நண்பர்களோடு சேர்ந்து கண்ணனும், பலராமனும் பழங்களை சாப்பிட்டனர். 

" நம்பியவரைக் காப்பது என் கடமை' என்பதை கண்ணன் இதன் மூலம் நிரூபித்தான்.

No comments:

Post a Comment