Tuesday, May 5, 2015

உழைச்சாதான் நிம்மதி

உழைச்சாதான் நிம்மதி

மன்னர் வருவதைக் கேள்விப்பட்ட மக்கள், அவரைக் காண கிளம்பினர். அன்று யாரும் வேலைக்குச் செல்லவில்லை. தங்களுக்கு, மன்னர் ஏதாவது பணம் கொடுப்பார் என்பது அவர்களது எதிர்பார்ப்பு. உழைப்பில் நம்பிக்கை கொண்ட ஒரு மூதாட்டி மட்டும், நார்க்கூடை முடைந்து கொண்டிருந்தாள். அப்போது ஒருவன் அவள் வீட்டைக் கடந்து சென்றான்.

“”பாட்டி, ராஜா வாராருன்னு அடுத்த ஊரே கோலாகலமா கூடி நிக்குதே! நீ மட்டும் ஏன் போகலை?” என்றான்.

“”உழைச்சா தான் என் மனசுக்கு மகிழ்ச்சி. வேலையை பாரமா நினைக்கிற சோம்பேறிக தான், ராஜாவைப் பாத்தா ஏதாவது கிடைக்குமுனு போயிருப்பாங்க,” என்று சொல்லி படபடத்தாள்.

வாய் விட்டுச் சிரித்த அந்த வழிப்போக்கன் பாட்டியிடம், அரசு முத்திரையிட்ட தங்க மோதிரத்தை நீட்டினான். வந்திருப்பவர் நாடாளும் அரசன் என்பதை அறிந்த அவள் எழுந்து நின்று மரியாதை செய்தாள்.

“”அம்மா! என்னைப் பாக்கப் போனவர்கள் திரும்பி வந்ததும், உழைச்சுப் பிழைக்கிற என்னைத் தரிசிக்க ராஜாவே வீட்டுக்கு வந்தார் என்று சொல்லுங்கள். முத்திரை மோதிரத்தை ஊராரிடம் காட்டுங்கள்,” என்றார்.

ராஜா படாடோபத்துடன் வருவார் என்று காத்து நின்ற மக்கள், அவர் சாதாரண உடையில் வந்து சென்றதை அறிந்து ஏமாந்தனர். பாட்டிக்கு அவர் அளித்த சன்மானம் பற்றி அறிந்தனர்.

உழைப்பவரையே உயர்மக்கள் விரும்புவர் என்ற உண்மையை உணர்ந்தனர்.

No comments:

Post a Comment