Monday, May 11, 2015

அடி சிறிது, ஏற்றம் பெரிது

அடி சிறிது, ஏற்றம் பெரிது

நீங்கள் உங்கள் அலுவலகத்தில் ஒரு பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி, ஒரு பொது அமைப்பில் பெரிய பொறுப்பில் உள்ளவராக இருந்தாலும் சரி, அல்லது சமூகத்தில் பெரிய மனிதராக மதிக்கப் பட்டாலும் சரி, சில அடிப்படை நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக அவசியம். இவைகள் உங்களுக்கு மிக “ஸில்லி”யாகத் தோன்றலாம். ஆனால் நாம் அற்பமாக எண்ணும் இத்தகைய அடிப்படை விஷயங்கள்தான் சில முக்கிய தருணங்களில் நம்மைக் கவிழ்த்து விடுகின்றன. ஆகையால் இவற்றின்பால் நாம் குறிப்பாகக் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நாம் ஒரு முழு நிறைவான நன்மதிப்பைப் பெறமுடியும். Trifles make perfection என்கிறது ஒரு பொன்மொழி.

சரி, இப்போது இவ்வகை “சின்னச் சின்ன செய்திகள்” என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

ஒரு இடத்தில் போய் “நான் இன்னார்” என்று சுய அறிமுகம் செய்து கொண்டு எதேனும் உதவியையோ, சிறப்புச் சலுகையையோ கேட்டுப் பெறுவதைவிட, உங்கள் உதவியாளரை விட்டு கேட்கச் சொல்வது சிறப்பானது. நீங்களே கேட்டால் ஒரு மாற்று கம்மிதான். அப்படி சில இடங்களில் நீங்களே போகவேண்டிய கட்டாயமாக இருந்தால், நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதை இன்னொருவரை விட்டு அறிவிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு செய்தால் உங்கள் செல்வாக்கு தன்னையறியாமல் கேட்பவர் மனதில் பதியும். காவல்துறை மற்றும் அரசு சார்ந்த முக்கிய அதிகாரிகள் இத்தகைய நடைமுறையைக் கையாள்வதை நீங்கள் காணலாம். “ஐயா வர்றார்” என்று கட்டியம் கூறப்படுவதை கண்டிருப்பீர்கள். இது நிச்சயமாக ஒரு effect ஏற்படுத்துகிறது.  இவ்வுலகம் பெரிய மனிதர்களை அதற்குள்ள பந்தாவுடன் இருந்தால்தான் மதிக்கிறது. என்பது மறுக்க முடியாத உண்மை.
அலுவலகத்திலோ அல்லது எந்தப் பொது இடத்திலோ, வராண்டாவில் நடந்துவரும்போதும், ஒப்பனை அறையிலும் யாருடனும் பேச்சுக் கொடுக்காதீர்கள் - முக்கியமாக உங்கள்கீழ் பணியாற்றுபவர்கள், வாடிக்கையாளர்கள், உக்களைக் காண வந்திருப்பவர்கள் போன்றவர்களுடன். அவர்களை உங்கள் அறைக்கு அழைத்துப் பேசுங்கள். இது உங்களைப் பற்றிய அவர்களின் கணிப்பை மேம்படுத்தும்.
உங்கள் அறையில் உங்கள்கீழ் பணியாற்றும் நபர்கள் குழுமியிருக்கும் நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. என்ன செய்வீர்கள்? அவர்கள் பாட்டுக்கு இருக்கட்டும். நாம் பாட்டுக்கு பேசுவோம் என்று உரையாடுவீர்களா? அதுபோல் ஒருபோதும் செய்யாதீர்கள். ஏதாவது மிக முக்கியமான செய்தியை பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். அது எல்லோருக்கும் தெரியவேண்டியதில்லை. ஆகையால் அவர்களை, “தயவுசெய்து கொஞ்சம் வெளியிலிருங்கள்’ என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை. இத்தகைய நடைமுறையை பலர் கையாண்டு நான் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் நீங்கள் இன்னொருவருடன் பேசுவது அலுவலக புல்லடினில் பிரசுரம் ஆகவேண்டுமா! விருந்தினர்களோ, நீங்கள் “வெளியே போ” என்று சொல்லமுடியாத ஆசாமிகளோ உள்ளிருந்தால், ஃபோனில் பேசுபவர்களை “அப்புறம் பேசலாம்” என்று சொல்லி சமாளித்துவிடுங்கள். கொசு அளவு மூளையிருந்தால்கூட அடுத்த முனையில் உள்ளவர் நிலைமையைப் புரிந்து கொள்வார்!
முக்கிய விஷயங்களை - குறிப்பாக அலுவலக அரசியல் சார்ந்த விஷயங்களை காரிலோ, வேனிலோ - இதுபோன்று பிரயாணம் செய்யும்போது யாருடனும் விவாதிக்காதீர்கள். Gossip mill-க்குத் தீனி போடுவது போல ஆகும். Sensitive விஷயங்கள் - மாறுதல், பதவி உயர்வு, உங்கள் வணிக சம்பந்தமான ரகசியங்கள் முதலியவை உங்களையறியாமல் இத்தகைய உரையாடல்களின் மூலம் வெளிப்பட்டால், உங்களுக்கு பெரிய இழப்பு வர வாய்ப்புள்ளது. Information is power.
ஒப்பனை அறை (Toilet) ஒன்றில் வெளியேறும் வாயிலின் மேல் “X Y Z” என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்ததை பார்த்தேன். அதற்கு என்ன பொருள் என்று விசாரித்தபோது “Examine Your Zip” என்றார்கள். நீங்களே சொல்லுங்கள், இது சின்ன விஷயமா? பாத்ரூமிலிருந்து வெளியே வரும் முன்னால் “அந்த இடத்தை” ஒரு முறை “செக்” செய்து கொள்வது மிக முக்கியம். இதில் கவனம் செலுத்தாமல் பல பொது நிகழ்ச்சிகளில் பெரிய மனிதர்கள் சிலர் வழிந்த்தை நான் பார்த்திருக்கிறேன்! மேலும் சட்டை, பேண்ட் - பெண்களானால் அவர்களின் மேலாடை முதலியவற்றின் மேல் தண்ணீர் சிந்தியிருந்தால் அதோடு பலர் முன்னால் போகாதீர்கள். அது காயும்வரை காத்திருந்து போங்கள். நம்மை பல கண்கள் கவனிக்கின்றன என்பதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.
எப்போதும் உங்கள் நடை, உடை பாவனைகளில் ஒரு “ஸ்டைலை”க் கடைப் பிடியுங்கள். இது நீங்கள் பல முறை ஒத்திகை பார்த்து செம்மைப் படுத்தப் படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.  உங்கள் இமேஜை அது மேம்படுத்தவல்லதாக அமைய வேண்டும். உலகம் அதை தலைவர்களிடம் எதிர்பார்க்கிறது.
உங்களை எளிதில் எனையோர் “கணக்குப் போட்டு” வைக்க அனுமதிக்காதீர்கள். திடீரென்று வேறு விதமான கேள்விகளைக் கேளுங்கள், சற்றே மறுபட்ட கோணங்களில் அணுகுங்கள்.  எதிர்வினைகளை மாற்றுங்கள். கொஞ்சம் uncertainty இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம்மை மேய்த்துவிடுவார்கள்.
எப்போதும் மலர்ச்சியுடனும், இலமையான தோற்றத்துடனும், தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்த முகத்தோற்றதுடனும் இருங்கள். “என்னையா, எனக்கோ வயசாயிடிச்சு, இளமைத் தோற்றத்துக்கு எங்கே போவது? யயாதி கதையெல்லாம் இப்போது எடுபடாது” என்கிறீர்களா? சொற்ப வயதுள்ள பலரே ஈரமான சாக்ஸ் போல முக மலர்ச்சி.யில்லாமல் வயோதிகத் தோற்றத்துடன் “போங்கு” போல இருப்பதைப் பார்க்கலாம். அதே நேரத்தில் வயதான பலர் “விண்’ணென்ற தோற்றத்துடன் இருப்பதையும் காணலாம்!
கூடியவரையில் உங்களுடைய சொந்த வாழ்க்கை பற்றிய உள்விவரங்கள், வங்கிக் கணக்கு மற்றும் சொத்து பற்றிய விவரங்கள் முதலியவை பொதுவில் அறியப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெரிய அதிகாரி வங்கிக்கு எந்த உதவியாளரையும் அனுப்ப மாட்டார். தானேதான் போவார். அதுபோல் இல்லாவிட்டாலும் முக்கிய விவரங்களை public domain-ஆக வைக்காமலிருப்பது நல்லது. நீங்கள் ஒரு enigma போன்று, “இன்னும் முழுதும் வாசிக்கப்படாத புத்தகமாக” தோற்றமளிக்க வேண்டும். அப்போதுதான் பிறர் மனத்தில் உயர்வான மதிப்பு இருக்கும். சலிப்புக்கு இடமில்லாமல் “இவரிடம் இன்னும் ஆசாமி ஒளிந்திருக்கிறார்” என்ற உணர்வு எப்போதும் கனன்று கொண்டிருக்க வேண்டும்.
உங்களிடம் ஒட்டுப்புல் போல் “பச்சக்”கென்று ஃபெவிகால் போடுபவர்களை “கறகற”வென்று வெட்டிவிடுங்கள். உங்களுக்கு கேடு வர வேண்டுமென்றால் இவர்களால்தான் வரும். நேர்மையானவர்களை உங்களிடம் அண்டவிடாமல் இவர்கள் விரட்டி விடுவார்கள். சரியான செய்திகள் உங்களை எட்டாமல் ஃபில்டர் செய்து விடுவார்கள். உங்களை “ராடார்” போல் கண்காணிப்பில் வைத்துக் கொள்வதால் அவர்களை நீங்கள் ஏதும் கேள்வி கேட்க இடம் கொடுக்காமல் இருப்பதுதான் அவர்களின் திட்டம். ஜாக்கிறதை!

No comments:

Post a Comment