Monday, May 11, 2015

திறமையை வளர்த்துக் கொள்ள….

திறமையை வளர்த்துக் கொள்ள….

வளர்ச்சிக்கு அறிவு – பயிற்சி பாரம்பரியம் மூன்றும் அடிப்படைகளாக அமைகின்றன. சிறந்த சூழ்நிலை வளர்ச்சிக்குத் துணையாகிறது. அறிவும் பயிற்சியும் ஒவ்வொரு துறையிலும் தேவைப்படுகிறது. பாரம்பரியம் தந்தை தாய்வழியே வருவதாகும். சிறந்த பாரம்பரியம் – அறிவு – பயிற்சி ஒருவனை திறமை மிக்கவனாக உருவாக்கும். திறமை ஒன்றே வளர்ச்சியின் அளவு கோல்.

திறமையின்றி ஒருவன் வளர நினைப்பது, புகழைக் கௌவ நினைப்பது – ஒரு கனவு காண்பதைப் போன்றதாகும். கணித்தத்தில் திறமை பெற்றதால் இராமானஜம், கவிதையில் திறமை பெற்றதால் தான் பாரதியார், அரசியலில் திறமை பெற்றதால் இந்திரா – பேச்சில் திறமை பெற்றதால் அண்ணா. எழுத்தில் திறமை பெற்றதால் டாக்டர். மு.வ. இப்படி திறமை பெற்றவர்களின் பெயர் வரிசைப் பட்டியலை நீட்டிக் கொண்டே செல்லலாம்

அவன் வளர்ந்துள்ளான். “எப்படியோ” வளர்ந்துவிட்டான் என்று எண்ணுவதை விட அவன் வளர்வத்கு உறுதுணையாக நின்ற அவன் திறமை என்ன என்பதை மட்டும் கூர்ந்து கவனியுங்கள். வளர நினைப்பவர்கள், செழிக்க நினைப்பவர்கள் பிறரைக் காட்டிலும் ஏதேனும் ஒரு துறையிலாவது நல்ல அறிவும் பயிற்சியும் பெற்று திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவும் பயிற்சியும் பெற்று ஒன்றை ஒழுங்கு செய்யும் நன்மையை திறமையென்று கொள்ளலாம்.

உங்கள் திறைமையை எந்த துறையில் பெருக்கிக் கொள்ளலாம் என்பதை நீங்கள் அமைதியாக சிந்தித்து முழுமையாகத் தீர்மானியுங்கள். எந்தத் துறையைத் தேர்ந்து எடுக்கிறீர்கள். அந்தத் துறை நூல்களைப் படியுங்கள். குறிப்பெடுங்கள். கருத்துக்களை ஜீரணிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதைப்பற்றி கேள்விகளை எழுப்புங்கள். பதில்களைப் பல முறைகளிலும் பெற முயலுங்கள். செய்தித்தாள் , வானொலி, தொலைக்காட்சி இன்னபிற வழிகளில் அறிவைப் பெருக்குங்கள். பயணம் செய்யுங்கள். பார்த்து – கேட்டு அறிவைப் பெருக்குங்கள்.

பயிற்சி – ஒழுங்குற செய்வதாகும். பயிற்சி பெறப் பெற – அறிவு – பொலிவு பெறும். பயிற்சி படிப்பதிலும், எழுதுவதிலும், எண்ணுவதிலும், செய்வதிலும், ஒழுங்குற அமைய வேண்டும். பயிற்சியில் நேரமும் வேண்டும். நேரத்தை ஒழுங்குறப் பயன்படுத்தி பயிற்சியைத் தொடரும்பது அறிவு தெளிவு பெறும். திறமை பிறக்கும். திறமை வெறியைத் தேடித்தரும் திறமைக்குத் திறவுகோல் அறிவு – பயிற்சி, பாரம்பரியம் எனவே – திறமை பெற முயல்வீர்…

No comments:

Post a Comment