Saturday, February 1, 2014

அதோ அந்தக் கடைசியில் இருப்பவர் யார்?

அதோ அந்தக் கடைசியில் இருப்பவர் யார்?

1.அதோ அந்தக் கூட்டத்தின் கடைசியில் தன்னைக் குறுக்கி உட்கார்ந்திருப்பது யார் என்று தெரிகின்றதா?அது நான் தான் நான் தான் என்று ஒரு கூட்டம் ரகசியமாகக் கூவிக் கொண்டிருக்கின்றது  .இதனைக் கூடத் தனியாக யாரையும்  அனுபவிக்க விடாத  அளவிற்கு அந்தக் கூட்டம்.அந்தத் தகுதியைக் கூட ஒவ்வொருவரும் விரும்பியும் மற்றவர்கள்  அதனை அடைந்து விடக்கூடாது என்று மருகியும் உள்ள மனிதர்களின்  கடைநிலை அது.அதோ அந்தக் கூட்டத்தின் கடைசியில் தன்னைக் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பது யார் என்று தெரிகின்றதா?

2.அதனை அடைந்து விட்டால் அதன் பிறகு வாழ்வின் ஒவ்வொரு நிலையும் முன்னேற்றம் தான்.அந்த நிலை தான் கடை நிலை ஆயிற்றே அதற்குக் கீழே  அடைய வேறு எந்த ஒரு நிலையும் இல்லையே.எனக்கு வாழ்வின் எந்த ஒரு கட்டத்திலும் மிகவும் பிடித்தமான வேசம் இது  தான் .அதோ அந்தக் கடைசியில் உட்கார்ந்திருப்பது யார் என்று தெரிகின்றதா?அது நாம் மறைத்து வைத்துள்ள நமது அடையாளங்களைநம்மைப் போன்று  மறைக்கத் தெரியாமல் வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருக்கும் அவரைத் தெரிகின்றதா?

3.தனது அடையாளத்தைத் தொலைத்துவிட்டு அடையாளமே இல்லாத நபராக அதோ அந்தக்கடைசியில் உட்கார்ந்திருக்கும் நபர் யார் என்று தெரிகின்றதா?அவரைப் பார்த்தவுடன் ஏன் உங்களுக்கு இவ்வளவு பாசம் அது தான் நீங்கள் இல்லையே?அதோ அவர் எனக்கான உள் முக அடையாளத்துடன் வேறு ஒரு நபரின் வெளிப்புறத்தை வேடமாகப்  போட்டுக் கொண்டு இருக்கின்றாரே என்று ஒவ்வொருவரும் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் ?அதோ அந்தக் கடைசியில் உட்கார்ந்திருக்கும் நபர் யார் என்று தெரிகின்றதா?

4.அட இந்த வேடத்திற்குக் கூடவா இவ்வளவு மவுசு?எல்லோரும் தாங்களாகவே அந்த நபர்  தாங்கள் தான் என்று பாவிக்கின்றனரே?அதோ அந்தக் கடைசியில் உட்கார்ந்திருக்கும் நபர் யார் என்று தெரிகின்றதா?அதோ அவர் எழுந்து விடப் பார்க்கின்றார் விடாதீர்கள் அவரை .அவர் பூண்டிருப்பது எனது அடையாளத்தை அவர் போய் விட்டால் நான் எங்கே போய் என்னைத் தேடுவது.அப்புறம் நானே காணாமல் போய் ,காணாமல் போன  என்னை நானே தேடுவது போன்று ஆகி விடும்.

5.அதோ அந்தக் கடைசியில் உட்கார்ந்திருக்கும் நபர் யார் என்று தெரிகின்றதா?விடாதீர்கள் அவரை வெளியே எங்கும் போய் விடாமல் அவரது முகத்தை யாராவது திருடித் தங்களது முகத்தில் அணியப் போகின்றார்கள் .அப்புறம் நான் எப்படி வாழ்வது மீதமுள்ள எனது வாழ்வை. வாழக் கூடிய எனது உருவத்தை அவர் தானே சுமந்து கொண்டிருக்கின்றார்.அதோ அந்தக் கடைசியில் உட்கார்ந்திருக்கும் நபரை யார் என்று தெரிகின்றதா?

6.என்னது அவர் உங்களது உருவத்தையும் சுமந்து கொண்டிருக்கின்றாரா?நீங்களும்தான் அவரைத் தேடிக் கொண்டிருக்கின்றீர்களா?நான் தான் உங்களது முகத்தைத் திருடி அணிந்து கொண்டிருக்கின்றேனா?அதோ அந்தக் கடைசியில் உட்கார்ந்திருக்கும் நபருக்கு அருகில் உட்கார்ந்திருக்கும் நபர் நீங்கள் தானா?நீங்களும் தான் உங்களைத் தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கின்றீர்களா?

7.சுய முன்னேற்றம்,சுய முன்னேற்றம்  என்று எவ்வளவு நாள் தான் எழுதுவது ,சுய பின்னேற்றம் என்ன என்று தெரிந்து கொள்ளாமல் சுய முன்னேற்றத்தைத் தெரிந்து கொள்ள முடியாது தானே?.நாம் யார் என்பதை அறியாமல் நாம் சமூகத்தில் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பதையும் தெரியாமல் நம்மை நாம் முன்னேற்ற முடியாதே?நம்மை நாமே உணர்ந்தால் தானே நம்மைப் பிறர் உணரமுடியும்.இந்த வகையில் அதோ அந்தக் கடைசியில் உட்கார்ந்திருக்கும் நபர் யார் என்பதை உணர்ந்தோம் என்றால் இந்த சுய பின்னேற்றமும் ஒரு மகத்தான சிந்தனைதான்.

No comments:

Post a Comment