Thursday, June 20, 2013

உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு

திறமைதான் நமது செல்வம்...

‘உழைப்பவனுக்கு ஒரு காசு, மேய்ப்பவனுக்கு ஒன்பது காசு’ என்பார்கள்.

செங்கல் அடுக்கி சிமெண்ட் பூசும் மேஸ்திரிக்கு சம்பளம் நானூறு; ஆனால் அவரை வேலை வாங்கும் பொறியாளர் பெறுவது நான்காயிரம். ஏன் இந்த வேறுபாடு?

முன்னவர் சொன்னதை மட்டும் செய்யக்கூடியர். அதற்கு மேல் ஒரு படிகூட சுயமாக செய்யத் தெரியாது. பின்னவர் எதையும் ஏன் செய்ய வேண்டும், எப்படி, எப்பொழுது செய்ய வேண்டும் என்றெல்லாம் முன் கூட்டியே நன்கு திட்டமிட்டு, அதனை பிறரைக் கொண்டு வெற்றிகரமாக செய்து முடிப்பவர். அதாவது பொறுப்பும், திறமையும் மிக்கவர்.

ஒரு பணக்காரருக்கு இரண்டு வேலைக்காரர்கள். அவர்களில் ஒருவனுக்கு மட்டும் அதிக சம்பளம் கொடுத்து வந்தது பற்றி மற்ற வேலைக்காரன் அவரிடம் பெரிதும் குறைபட்டுக் கொண்டான். பணக்காரர் அவனை அழைத்து வீட்டின் வெளியே சென்று தெருவில் எவராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு வா என்றார். அவனும் வேகமாக ஓடிச்சென்று பார்த்துவிட்டு, “ஆம் ஐயா, தெரு முனையில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார்” என்றான்.

இப்பொழுது அந்த பணக்காரர் அடுத்தவனை வெளியே அனுப்பினார். வந்தவன் தெரு முனையில் நின்று கொண்டிருப்பவர் ஒரு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் என்றும், அவர் பெயர் முருகன் என்றும், அவர் அடுத்த தெருவில் முதல் வீட்டில் குடியிருப்பவர் என்றும், அருகில் உள்ள பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும் தனது பேரனை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றும் விலாவாரியாக எடுத்துக் கூறினான்.

பணக்காரன் குறைபட்டுக் கொண்டவனைப் பார்த்து இப்பொழுது புரிகிறதா, அவன் அதிகச் சம்பளம் பெறும் காரணம் என்றார் சிரித்தபடி.
சொன்னதை மட்டும் செய்வது என்பது வேலை மட்டும்தான். ஆனால் அதற்கும் மேல் அதிகப்படி சிந்தித்து அழகாக செய்வது என்பது திறமையான வேலை.

ஊரில் எத்தனையோ மருத்துவர்கள்; வழக்கறிஞர்கள்; பொறியாளர்கள்; இருந்தாலும் ஒரு சிலரிடம் மட்டும் எல்லோரும் போய் மொய்த்துக் கொள்கிறார்களே, ஏன்? ஏனெனில் அவர்கள் மக்களின் எதிர்பார்ப்பினை திறம்பட செய்து முடிக்கிறார்கள். விரும்புகின்ற வெற்றியினை பெற்றுத் தருகிறார்கள்.

திறமைசாலிகளுக்கே இவ்வுலகம் வழிவிட்டு நிற்கிறது.

வெட்டி வா என்றால் கட்டிக்கொண்டு வருபவர்கள், எள் என்பதற்கு முன்பே எண்ணெய்யாக நிற்பவர்கள், கோடு ஒன்று போட்டாலே ரோட்டையே போடுபவர்கள் என்று இப்படிப்பட்டவர்களுக்குத் தான் என்றும் எங்கும் மவுசும் மரியாதையும் இருக்கும்.

வெறும் இச்சை மட்டும் இருந்தாலே அது திறமையாகி விடாது. மூச்சடக்கிக் கட்டினால்தான் ‘முனி’ என்று ஏற்றுக்கொள்வார்கள். திறமைசாலி ஒருபோதும் பொருட்களை வீணாக்கமாட்டான். எதையும் விரைந்து செய்து நிறைவாக்குவான்.

மனதை அலைபாயவிடாமல், செய்யும் செயல்களில் ஒருநிலைப்படுத்தி, தன்னைக் கட்டுப்படுத்தி, புறச்சூழல்களின் நெருக்கடிகளையும் மீறி, எதிர்பார்த்த முடிவுகளை தரக்கூடியவன் தான் திறமைசாலி. வெறுமனே ‘மாங்கு மாங்கென்று’, செக்கு மாடுபோல், அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

அதிக நேரம் எடுத்து உழைப்பது என்பது திறமையாகிவிடாது. நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்காமல், அடைய விரும்பும் முடிவுகளை எட்டிப்பிடிப்பதுதான் திறமையாகும். கடவுள் அருளால் அனைவருக்கும் அருளப்பட்டது தான் திறமை. அதை நாம் விரும்பினாலும் இழக்க முடியாது. அந்த அளவில் அது பணத்தைக் காட்டிலும் மதிப்பு கொண்டது.

இருக்கும் திறமையைச் சரிவர பயன்படுத்தாமல், ‘குடத்தில் இட்ட விளக்காக’ இருக்கின்றோம். நமது தலையெழுத்தையே மாற்றவல்ல ஏதேனும் ஒரு திறமையாவது எவரிடமும் நிச்சயம் இருக்கும். அதனைத் தேடிப்பிடித்து, சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில்தான் அனைவரின் வெற்றி என்பது ஒளிந்து கொண்டு இருக்கிறது.

சோதனைக் காலங்களில் தான் ஒருவரது திறமை வெளிப்படுகிறது. நமது எதிரிகளே நமது திறமைகளை கூர்மையாக்குகிறார்கள். எதிலும் முழுமையை எதிர்பார்ப்பது, எதையும் தள்ளிப்போட்டுக் கொண்டே போவது போன்றவைகள் திறமைக்கு முட்டுக்கட்டை போடுவன. அலை ஓய்ந்த பின் தலை மூழ்கலாம் என்று காத்திருந்தால் ஒரு போதும் காரியம் நடவாது. திறமையால் தகுதியும், தகுதியால் தக்கதொரு நிலைமையும், நம்மால் நிச்சயம் அடைய முடியும். நேரத்தை முறையாகத் திட்டமிட்டு பயனுள்ள வகையில் செலவழித்தால் நமது திறமை பத்து மடங்கு அதிகரிக்கும்.

ஆற்றல் என்பது செயலுக்குத் தேவைப்படும் ஒரு மூலப்பொருள்தான். அது நம் கையில் உள்ள அருமையான கைத்துப்பாக்கி போன்றது. திறமை என்பது அதை குறி பார்த்து கையாளும் திறன் போன்றது. திறமையற்றவன் கையில் அந்தத் துப்பாக்கி இருப்பதில் என்ன பயன்?

எனவே ஆற்றலை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டுமெனில், நமக்கு என்று ஒரு குறிக்கோள் இருக்க வேண்டும். சரியான திட்டமிடப் படவேண்டும். பொருத்தமான செயல்முறை வேண்டும். செய்யும் செயல் பற்றிய சிறப்பான அறிவும் அனுபவமும் அவசியம் வேண்டும். மேலும் பொறுமையும், இடையறாத பயிற்சியும், புதுமை நோக்கும், தன்னையும் சூழலையும் கட்டுப்படுத்தும் திறனும் இருப்பின் நம்மால் எத்தனையோ காரியங்களை எளிதாகவும், வெற்றிகரமாகவும் முடித்திட முடியும்

No comments:

Post a Comment