Thursday, June 20, 2013

தாழ்வு மனப்பான்மையை விட்டுவிடு வெற்றியின் சிகரத்தை தொட்டுவிடு!

வாழ்வில் தாழ்வுநிலை ஏற்பட்டாலும்கூட மனிதனுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடக் கூடாது. ஏனெனில் எந்த உயிர்க்கொல்லி நோயைவிடவும் மிகக் கொடியது தாழ்வு மனப்பான்மை. ஒருவனை ஒன்றுக்கும் உதவாதவனாய் ஆக்குவதும் இதுதான், பித்துப் பிடித்தவனைப் போல் அவனை உளற வைப்பதும் இதுதான்.

நாள் முழுக்க வஞ்சமின்றி உழைக்கிறான். கொஞ்ச வருமானம் தான், ஆனால் மனநிறைவு சாதாரண உணவு தான். ஆனால் ஆரோக்கியம் குடியிருப்பது குடிசைதான். ஆனால் மன்னனைப் போல் வாழ் கிறான். அவனுக்குத் தாழ்வு மனப்பான்மையே கிடையாது.

வெளிச்ச மனதுடனும் முகமலர்ச்சியுடனும் இருப்பவர்களைக் கவனியுங்கள், எப்போதும் ஆக்க பூர்வமாகச் சிந்திப்பார்கள். நல்ல விஷயங்களையே பேசுவார்கள். மற்றவர்களின் நற்பண்புகளை, திறமைகளைப் பாராட்டுவார்கள். உறவுகளை மதிப்பார்கள், அவர்களின் உள்ளம் உயர்ந்திருப்பதினால் அவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதே இல்லை.

வீணான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் முழுக் கவனத்தையும் தங்கள் பணியில் செலுத்துவார்கள். ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் புதிய இலக்கை நிர்ணயித்து அதற்கு நேராய் செயல்படுவார்கள். உடனிருப்போரை யெல்லாம் மகிழ்ச்சியடையச் செய்வார்கள். அப்படிப்பட்டவர்களின் சிந்தையும் செயலும் ஆரோக்கியமாக இருப்பதால் தாழ்வு மனப்பான்மை என்னும் நோய் அவர்களைத் தாக்குவதில்லை.

நல்லவர்கள் நல்லவர்களாகத்தான் இருக்கிறார்கள். நல்லவர்களே தைரியசாலிகளாகவும் இருக்க முடியும். நேர்மையற்றவர்கள் வீராதி வீரர்களைப் போல தங்களைக் காட்டிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் கோழைகள். அத்தகைய கோழைகளுக்குத்தான் தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது.

வேலையும் இருக்காது. வருமானமும் இருக்காது. சும்மா சுற்றிக் கொண் டிருப்பான், சம்பாதிக்கின்றவனைப் பார்த்தால் அவனுக்குப் பொறுக்காது. அர்த்தம் இல்லாமல் எதையாவது சொல்லி நோகடிப்பான், அதில் ஓர் அற்ப சந்தோஷம்.

வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் குட்டைபோல் தேங்கிக் கிடப்பான். முன்னேறிக் கொண்டிருப்பவனைப் பார்த்துவிட்டாலோ வயிறெரிவான், வசைபாடித் தீர்ப்பான், காரணம் அவனுக்குள் இருக்கின்ற தாழ்வு மனப்பான்மை.

பிரேசில் நாட்டில் ஈல் என்னும் மின் அதிர்ச்சி தரும் மீன்கள் ஆறடி நீளத்தில் காணப்படுகின்றனவாம். தலையிலிருந்து வால் வரை மின்சாரம். அந்த மீனை நாம் எங்கே தொட்டாலும் உடனே மின்சாரம் பாய்ந்து நம்மை நிலைகுலையச் செய்துவிடுமாம். ஒரு வகையில், தாழ்வு மனப்பான்மை உடையவர்களும் அப்படித்தான். அவர்களிடம் நீங்கள் நல்லபடியாக பேசினாலும் கூட தாறுமாறாக எகிறிக் குதிப்பார்கள். நாகரிகமற்ற வார்த்தைகளால் உங்கள் மனதைப் புண்படுத்தி விடுவார்கள். அவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக நாம் விலகியிருப்பது நல்லது.

தன்னுடைய குறைபாடுகளை அல்லது பலவீனங்களையே நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனச் சோர்வு உண்டாகிறது- அந்த மனச் சோர்விலிருந்துதான் தாழ்வு மனப்பான்மை பிறப்பெடுக்கிறது. தன்னிடம் இருப்பவைகளை மறந்துவிட்டு இல்லாததை எண்ணி வருத்தமடைகிறவன் தன் வாழ்வைத் தொலைத்து விடுகிறான்.

பலவீனனாக தன்னைக் கருதிக் கொள்ளும் ஒருவன் தலைநிமிர்ந்து நிற்க முடியாது. மகிழ்ச்சியுடன் வாழ முடியாது, பெரிதாக எதையோ செய்வது போல வெளியே காட்டிக் கொண்டாலும் உள்ளே பூஜ்ஜியம்தான்.

தாழ்வு மனப்பான்மை என்னும் நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் பேச்சும் செயலும் கோமாளித்தனமாக இருக்கும். மற்றவர்களுக்கு முன்னால் அவர்கள் எப்போதும் வெற்றுத் தம் பட்டத்துடன்தான் பேச ஆரம்பிப்பார்கள். அடுத்தவர்களை அநாவசியமாக மட்டம் தட்டுவார்கள். தங்கள் முட்டாள்தனம் மற்றவர்களுக்குத் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில், மேதைபோல் தங்களைக் காட்டிக் கொள்ள முயற்சிப்பார்கள்.

தாழ்வு மனப்பான்மை யாரிடம் இல்லையோ அவர்கள்தாம் பிறரின் சிறப்பை சிலாகித்துப் பேசி உற்சாகப் படுத்துவார்கள். துரியோதனன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும்கூட அவன் தாழ்வு மனப்பான்மை கொண்டவன் அல்ல. அதனால் தான் முதலில் பாண்டவர் சேவையின் தலைசிறந்த வீரர்களைப் பற்றி துரோணாச்சாரியரிடம் புகழ்ந்து பேசுகிறான்.

எவனுக்குத் தன்மீது நம்பிக்கை இருக்கிறதோ, எவன் தன்னுடைய ஆற்றலில் கடுகளவும் சந்தேகமின்றி இருக்கின்றானோ அவன்தான் தயக்கமின்றித் திறந்த மனதுடன் மற்றவர்களைப் புகழ முடியும். தன்மீது அவநம்பிக்கை உடையவன் தன்னைத்தானே சபித்துக் கொள்கிறான். அவனால் எப்படி மற்றவர்களை வாழ்த்த முடியும்!

பொய்யடா பேசும் புவியில் மடமாதரை விட்டு உய்யடா உய்யடா உய் என்றார் பட்டினத்தார். பாவம் அவருக்கு அப்படியொரு பாதிப்பு. ஆனால், தாழ்வு மனப்பான்னையை விட்டு உய்யடா உய்யடா என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் அந்தக் கொடிய நிலை யிலிருந்து மீள முடியாமல்தான் பலர் அழிவின் பள்ளத்தாக்கிற்குள் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனோநிலையில் உறுதியும் இருக்காது. உண்மையும் இருக்காது. இந்த இரண்டும் இல்லாத மனம் எவ்வளவு மோசமாக இருக்கும்!

உண்மையும் நேர்மையும் எங்கே காணப்படுகிறதோ அங்கே புத்திக்கூர்மையும் காணப்படும். புத்திக் கூர்மை துலங்கும் இடத்தில் நேர்மையைக் காணலாம். முதலில் ஒருவன் தனக் குத்தானே உண்மையாக நடந்துகொள்ள வேண்டும். அவன்தான் பல விஷயங்களை அறிந்துகொள்ள முடியும். பல விஷயங்களை அறியும் ஆற்றலுடையவன் தனக்குத்தானே நேர்மையாக நடந்து கொள்வான். அவன் தன்னையும் திதிப்பான்: மற்றவர்களையும் மதிப்பான், அவனிடத்தில் தாழ்வு மனப்பான்மை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

நாம் எந்தச் சூழ்நிலையிலும் உய ர்ந்த சிந்தனைகளுடன் வாழ முடியும். எத்தனை முறை விழுந்தாலும் எழுந்து நிற்க முடியும். தேவையெல்லாம் எழு ச்சிமிகு மனப்பான்மையே!

கனபூசியஸ் பிறந்து மூன்றாண்டுகளுக்குள் அவருடைய தந்தை காலமாகி விட்டார். எனவே வறுமையிலும், தாயின் கண்டிப்பிலும்தான் அவர் வளர வேண்டியதாயிற்று. ஆறு வயது சிறுவனாய் இருக்கும் போதே அக்கம்பக்கத்திலுள்ள சிறுவர்களை கூட்டி வைத்து ஞானிகள் விளையாட்டு விளையாடுவாராம்.

இளம் வயதிலேயே உழைத்துப் பிழைக்க வேண்டிய நிலை. எனினும் அவர் நாட்டமெல்லாம் கல்வியின் மீதுதான். தமது பதினைந்தாவது வயதுக்குள் ஞானியாகிவிட வேண்டும் என்று முடிவு கொண்டார். ஆனால் பதினைந்தாவது வயதிலிருந்துதான் முறையாகக் கல்வி பயிலத் தொடங்கிய தாக வரலாறு கூறுகிறது. எனினும் மிகக் குறுகிய காலத்திற்குள் பல துறை களில் அறிவு வளர்ச்சி பெற்றுவிட்டார்.

என்னுடைய இளம் பிராயத்தில் நான் மிகவும் தாழ்வான நிலையில் அடங்கியிருந்தேன். அதனால்தான் எதையும் அனுசரித்து பலதரப்பட்ட விடயங்களிலும் என்னால் திறமை பெற முடிந்தது என்று பிற்காலத்தில் தமது சீடர்களிடம் கன்பூசியஸ் சொல்லியிருக்கிறார்.

வாழ்வில் மிகவும் தாழ்வான நிலையிலிருந்த கன்பூசியஸ் சீனத்துப் பெருஞானியாக உயர்ந்தாரே எப்படி? தெளிந்த மனதின் உயர்ந்த சிந்தனைக ளால் அல்லவா!

நாம் எப்போதும் மேலானவைகளையே சிந்திக்க நம்மைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியானால்தான் தாழ்வான நிலையிலும் தளராத மனதுடன் முன்னேற்றத்தின் படிக்கட்டுகளைக் காண முடியும். எதையும் கோணலாகச் சிந்திக்கின்றவன் வாழ்க்கை கோணலாகத்தான் இருக்கும்.

குழப்பத்தை ஏற்படுத்துவதற்கென்றே இருக்கின்றவன் ஒருநாளும் உருப்படி யாக எதையும் செய்ய மாட்டான். எதைப் பேசினாலும் தலைகீழாகப் பேசுவான். தன்மை இல்லாமல் வாதிடுவான், தாழ்வு மனப்பான்மை அவனைத் தரைமட்டமாக்கிவிடும். நல்ல மனிதர்கள் அப்படி அல்ல. முதலில் அடிப்படையை சரியான விதத்தில் அமைத்துக் கொள்வதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அடிப்படை சிறந்த முறையில் அமைந்து விட்டால் பிற விடயங்கள் யாவும் தாமாகவே சிறந்த வகையில் இயங்கத் தொடங்கிவிடும்.

தங்கள் வாழ்வில் நிலையான முன்னேற்றத்தைக் காண விரும்புகிறவர்கள், செல்கின்ற இடமெல்லாம் சிறப்பைப்பெற எண்ணுபவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண ஆசைப்படுபவர்கள், முதலில் தங்களுக்குள்ளிருக்கும் தாழ்வு மனப்பான்மையை அடியோடு நீக்கி விட வேண்டும். நல்வாழ்விற்குத் துணைபுரியக் கூடிய எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தாழ்வுநிலை ஏற்படக் கூடும்: சோர்ந்துவிடக் கூடாது. வழியில் பிரச்சினைகள் நேரிடும்: மனம் கலங்கிவிடக் கூடாது. இடியும் மின்னலும் வரத்தான் செய் யும்: வானம் சேதாரமடைவதில்லை.

தங்கத்தின் தூய்மையைத்தான் கரட் என்கிறோம். மிகவும் தூய்மையான தங்கம் 24 கரட் அது வளையும், எனவே அதில் நகைகள் செய்ய முடியாது. அதனுடன் கொஞ்சம் செம்பு சேர்த்தால்தான் விதவிதமாய் நகைகளைச் செய்ய முடியும். அதுபோல்தான் வாழ்க்கை அவ்வப்போது துன்பங்கள் சேரும்; தோல்விகள் நேரும். ஆனால் அவைதான் வாழ்வை உறுதிப்படுத்தும்.

தர்மம் என்கிறோமே அந்த சமஸ்கிருதச் சொல்லின் பொருளென்ன? எப்போதும் மாறாமல் நிலைத்து நிற்பதே தர்மம். மக்களின் உன்னத வாழ்விற்காக வகுக்கப்பட்ட விதி முறைகளை தர்மம் என்கிறோம். உண்மைக்குத் தர்மம் என்று பொருள், தெய்வீக நெறியை தர்மம் என்பர்.

விஞ்ஞான விதிகளும் மெய்ஞான விளக்கங்களும்கூட தர்மம் என்பதற்குப் பொருந்தும். விரும்பும் பொருளை நேர்மையான வழியில் அடையும் வழிமுறைக்கும் தர்மம் என்று பெயர். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுதலை பெற்று வாழ்வின் மேன்மை களை எய்துவதற்கான முயற்சிக்களுக்கும் தர்மம் என்றுதான் பெயர். தர்மத்தை கைக்கொண்டால் வாழ்க்கை நிலை நிறுத்தப்படும்.

இராமனுடைய குருவும் அத்வைத வேதாந்த விளக்க நூலின் ஆசிரியருமான மகரிஷி வசிஷ்டர் நாட்டியக் காரியான ஊர்வசியின் வயிற்றில்தானே பிறந்தார். தேவரிஷியான நாரதரை ஒரு தாசிதானே பெற்றெடுத்தாள். இராமாயணத்தை எழுதிய வால்மீகி வழிப்பறிக் கொள்ளைக்காரனாகத்தானே தன் வாழ்வைத் தொடங்கினார். இவர்கள் அனைவருமே பிரம்ம ரிஷிகள். எல்லோராலும் உயரிய இடமளித்து போற்றப்படுபவர்கள்.

இந்த வாழ்க்கை அற்புதமானது: மிக மிக அழகானது. தாழ்வு மனப்பான்மைக்கு இடமளித்து விடாதீர்கள். உயர்ந்து பறக்க ஆசை கொள்ளுங்கள். எப்போதும் தலைநிமிர்ந்து நில்லுங்கள்.

No comments:

Post a Comment