Thursday, June 13, 2013

எண்ணம் ...செயல்

நமது செயல்கள் அனைத்தும் நம் எண்ணத்தின் பிரதிபலிப்பே ஆகும்.ஒருவரின் எண்ணம் நல்லவிதமாக இருந்தால் செயலும் நல்லவிதமாக இருக்கும்.கெடுதலான எண்ணங்கள் கெடுதலான செயல்களில் முடியும். 

எண்ணங்கள் செயல்களாகும்
செயல்கள் பழக்கவழக்கங்களாகும்
பழக்கவழக்கங்களே ஒருவருடைய நடத்தையை நிர்ணயம் செய்யும். 

THOUGHTS BECOME ACTIONS
ACTIONS CREATE HABITS
HABITS BUILD CHARACTER. 

எல்லா எண்ணங்களும் செயல்களாவதில்லை.ஆனால் எந்த ஒரு செயலுக்கும் முக்கிய காரணம் எண்ணமே ஆகும்.அத்தகைய எண்ணம் சிறப்பாக இருந்தால் அந்த செயலும் சிறப்பாகவே இருக்கும். 

நாம் ஒழுக்கமான நடத்தை உள்ளவர்கள் ஆக வேண்டுமானால் நம்முடைய எண்ணங்கள் நல்லவிதமாக இருத்தல் அவசியம்.அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு மனக்கட்டுபாடு அவசியமாகிறது.மனதை கட்டுபடுத்துவது என்பது கடினம்.ஏனென்றால் நம் எண்ணங்கள் காற்றைவிட வேகமானதாகும்.அப்படி வேகமான ஒன்றை கட்டுப்படுத்துதல் கடினம்தான். ஆனால் எண்ணங்கள் செயல்களாவதை நாம் கட்டுப்படுத்தலாம். 

நம் மனதில் தோன்றும் அனைத்து எண்ணங்களுக்கு வார்த்தை அல்லது செயல் வடிவம் கொடுக்கத்தொடங்கினால்,என்ன வேண்டுமானாலும் பேசலாம்,செய்யலாம் என்று ஆகிவிடும்.அது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு நம்மை கொண்டுவிட்டுவிடும்.நல்ல செயல்கள் நம்மை நல்லவராக அடையாளம் காட்டும். கெடுதலான வார்த்தைகளோ,செயலோ நம்மை வழிதவறியவர்களாக்கும். 

நாம் செய்யும் செயல்கள் மற்றவர்களுக்கும் வழிகாட்டுதலாய் அமைய வேண்டும்.அப்படி இல்லாமல் நான் இப்படித்தான் இருப்பேன்.என் எண்ணம் போல தவறு செய்வேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தால்,நாம் சார்ந்து வாழும் சமூகத்தினரால் துஷ்டன் என்று ஒதுக்கி வைக்கப்படுவோம்.
நல்லவர்களை மதிக்கும் சமூகமே தீயவர்களை நிந்திக்கவும் செய்யும்.

நம் வாழ்க்கையை சந்தோசமாக அமைத்துக்கொள்ள சிறப்பான எண்ணங்களை துணை கொள்வோம்.நம் எண்ணங்கள் உயர்வாக இருந்தால் நம் செயல்களும் உயர்வாக இருக்கும்.உயர்வான செயல்கள் வாழ்க்கையில் நம்மை உயர்வான இடத்திற்கு கொண்டு செல்லும். 

எனவே மகிழ்ச்சியான,உயர்வான வாழ்க்கைக்கு அடிப்படையான நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொள்வோம். 

No comments:

Post a Comment