Tuesday, April 14, 2015

வெற்றி பெறுவதற்கான வழிகள்!!!

வெற்றி பெறுவதற்கான வழிகள்!!!

நாம் வெற்றி பெறுவதற்கான வழிகள்

நாம் எல்லோரும் ஒரு காரியத்தில் இறங்கினால் அதில் வெற்றி பெற வேண்டும் என்று தான் நினைக்கின்றோம். ஆனால், எல்லோருக்கும் வெற்றி கிடைக்கிறதா? இல்லையே. வெற்றியையும், தோல்வியையும் சமமாக மதிக்கும் பண்பும் வேண்டும். தோல்வி தான் வெற்றியின் முதல்படி. அப்படி இருக்கும் போது நாம் என்ன செய்தால், எப்பிடி செய்தால் வெற்றி பெறலாம் என்பதனை நாம் சிந்திக்கின்றோமா ?

நாம் வெற்றி பெற என்ன வழிகள் உண்டு? எப்பிடி நடந்தால் வெற்றி கிடைக்கும்? வெற்றி பெறுவதற்க்கு என்ன வழிகள் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை வெற்றிகரமாகச் செய்வது என்பதை நோக்கி நகர நகர சாதனை என்பதே சுலபமான வேலையாகி விடுகிறது. நாம் நமது  தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அதை திருத்திக் கொள்வதற்க்கான  பலனும் தான் வெற்றிக்கான வழிகள் ஆகும். நமக்கு வெற்றியைவிட தோல்விதான் அதிகப் படிப்பினைகளைச் சொல்லிக் கொடுக்கிறது.

காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது. காலத்தை வீணாக்காமல் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டும். வெற்றிக்கான வழிகளை கண்டறிய வேண்டும். வெற்றிக்கான வழிகளை விடாமுயற்சி, சோம்பலின்மை, தகவல் தொடர்புத்திறன்,அறிவுத்திறன் போன்ற தகுதிகள் பல்வேறு விகிதத்தில் ஒன்று கலந்து வெற்றிக்கான பாதையை அமைத்துக் கொடுக்கின்றன.

புதிய புதிய தகவல்களை தேடி கொண்டு இருக்க வேண்டும். நாம் வெற்றி பெற்று விட்டோம்என்று இருப்பது பெரிய விசயமல்ல. அதனை எவ்வாறு தக்க வைத்துக்கொள்வது என்பதுதான் முக்கியமான விசயம். அதாவது சிறந்த நடிகர் என்ற பட்டம் மட்டும் ஒரு நடிகருக்கு போதாது. அதனை அவர் காலா, காலமாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் .

வெற்றிபெற விரும்புகிறவர்களுக்கு  முக்கியமான இன்னொரு பண்பு, புதிய மனிதர்களையும்புதிய சூழல்களையும் தயக்கமில்லாமல் எதிர்கொள்வது. பக்கத்தில் யாராவதுபுதிதாகக்குடியேற வந்தால், அவர்களாக வந்து அறிமுகம் செய்துகொள்ளும்வரைகாத்திருக்காமல், நீங்களாகச் சென்று அறிமுகம் செய்து கொள்வதில் தொடங்கி, முற்றிலும் அந்நியமான சூழலில் ஏற்படும் வாய்ப்புகளைக் கூச்சமில்லாமல் எதிர்கொண்டு, அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதுவரை எத்தனையோ நிலைகளுக்கு இது பொருந்தும்.
பிறர் வருந்துமாறு செய்து பெற்றதெல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய் விடும்.நல்வழியில் வந்தவை தற்காலிகமாக இழக்கப்பட்டாலும் பின்னர் பயன் தரும். இந்த பிரபஞ்ச உண்மையை என்றுமே மறந்து விடாதீர்கள். வெற்றி என்பது எந்த வழியில் வருகிறது என்பது மிக முக்கியம். நேர்மையற்ற வழியில் மற்றவர் வயிறெரிந்து வருவதெல்லாம் நம்மை நிம்மதியாக இருக்க என்றுமே விடாது. இதனை மனதில் கொள்ள வேண்டும் .
வெற்றிக்கான வழிகளாக வள்ளுவர் கூறுகிறார். எண்ணத்தில் உறுதி, விடாமுயற்சி,வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தக்க காலம், மேற்கொண்ட செயலின் தன்மை, உரிய இடம் ஆகிய ஐந்தினையும் குழப்பம் இல்லாமல் சிந்தித்து செயல் புரிய வேண்டும். இந்த ஐந்தில் ஒன்றில் குழப்பம் இருந்தால் கூட அது வெற்றி வாய்ப்பை பாதிக்கும். காலம் நீடித்தல்,  மறதி,சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் இந்த நான்கும் கெடுகின்ற இயல்புடையவர்கள் விரும்பி ஏறும் மரக்கலம் என்று சொல்கின்றார்.

நீங்கள் வெற்றி பெற இதனையும் கவனத்தில் கொள்ளுங்கள் .
எல்லோரிடனும் அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள், இவர் இப்படித்தான் என்றுயாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள், நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம்,இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்,  ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள், ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள், ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்,  ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள், எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்,உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்,  இனியசொற்களை மற்றவர்களுடன் பேசும் போது பேசுங்கள்.

இவை தான் உங்களை வெற்றி பாதைக்கு இட்டு செல்லும் வழிகள் ஆகும். இவற்றைகடைப்பிடித்து வெற்றி பெறுங்கள். வாழ்வில் வெற்றி, வாழ்க்கைக்கு வெற்றி, புதிய வசந்தத்தின் வெற்றி என உங்கள் வாழ்வில் என்றுமே வெற்றி தான் இருக்க வேண்டும்.

வாழ்வில் வெற்றி பெறுவதற்கு அன்னை தெரேசா கூறிய வழிகள்

அன்னை தெரேசாவை எல்லோருக்கும் தெரியும். அன்னையின் வாழ்வில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது சேவை மனப்பான்மை மட்டுமல்ல, அவர்கூறிச் சென்றுள்ள மிகப்பெரிய வெற்றிக்கான 8 சூத்திரங்களையும் தான்.

1) எளிய கனவுகள் போதும். அவற்றை அழுத்தமாகச் சொல்லிப் பழகுங்கள்.
உங்களுடைய கனவுகளோ வாழ்க்கை இலட்சியங்களோ மிகவும் விரிவானவையாக சிக்கலானவையாக இருந்தால் அவற்றை எட்டிப்பிடிப்பது மிகவும் சிரமமாகிவிடும். ஆரம்பத்தில் மிக எளிமையான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அவற்றை அடைந்தபின்னர் அடுத்த கட்டக் கனவுகளைக் காணலாம்.

2) தேவைகளோடு வாழ்வதற்குத் தான் எல்லோருக்கும் விருப்பம். 
ஆனால் அதற்கு முன்னால் நீங்கள் சில சாத்தான்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
நீங்கள் ஒரு நல்ல இலட்சியத்தைநோக்கிச் செல்லும் வழியில் பல அசெளகரியங்கள், சங்கடங்கள், தடைகள் எதிர்ப்படலாம். அவை உங்களுடைய பயணத்தையே கெடுத்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லோரையும் அரவணைத்து அனுசரித்துச் செல்லுங்கள்.

3) பொறுமை அவசியம். எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் உண்டு.
ஜெயிக்க நினைப்பவர்களுக்கு அவசரம் ஆகாது. பொறுத்திருங்கள். சூழ்நிலை எப்படிப்பட்டது என்று கவனமாக யோசித்து உங்களுடைய நேரத்தையும் செயல்பாடுகளையும் திட்டமிடுங்கள்.

4) சந்தேகப்படுங்கள் சந்தேகம் என்றால் அடுத்தவர்கள் அல்ல. உங்களை நீங்களே! 
அன்னை தெரேசா தன்னுடைய எண்ணங்களின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவர். அதேசமயம் அவரிடம் அசட்டு நம்பிக்கை கிடையாது. எதிலும் இறங்குவதற்கு முன்னால் தன்னைத்தானே சந்தேகக் குணத்துடன் கேள்விகளை கேட்டுக்கொள்வார். பலவிதமான பரீட்சையில் ஜெயித்து பிறகுதான் முதல் காலடியே எடுத்து வைப்பார். அதன் பிறகு வெற்றி நிச்சயம்!

5) தனிப்படட ஒழுக்கம் முக்கியம்.
எந்த வேலையும் செய்வதற்கு இரண்டு வழிகள் உள்ளன. நம் இஷ்டப்படி செய்யலாம். அல்லது இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று நமக்கு நாமே வரையறுத்துக் கொண்டு அந்த வரம்புக்குள் ஒழுக்கமாகச் செயல்படலாம்.

அன்னை தெரேசா இதில் இரண்டாம் வகை. ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்கலாம். என்ன சாப்பிடலாம். எத்தனை மணிக்கு என்னவேலை செய்யலாம் என்பதில் தொடங்கி சகலதிலும் தனக்குத்தானே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு அவற்றை விடாமல் பின்பற்றியவர்.

ஒழுங்குமுறையோடு வாழ்வதில்தான் என்னுடைய சந்தோஷம் இருக்கிறது என்று சொல்லியபடி வாழ்ந்தவர்.

6) எல்லோருக்கும் புரியும் மொழியில் பேசுங்கள்.
அறிவுஜீவிகள் பலர் அடுத்தவர்களுக்கு புரியாதபடி சிக்கலாகப் பேசினால்தான் பெருமை என்று நினைக்கிறார்கள். உண்மை அதுவல்ல.

7) மெளனம் பழகுங்கள்
பல நேரங்களில் மொழிகள்கூட அநாவசியம். ஒரு சின்னப் புன்னகை, அன்பான முதுகுதட்டல், பாசம் பொங்கும் ஒரு முத்தம் என இடத்துக்கு ஏற்ப உங்களது உடல் மொழியால் மெளனமாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள். உடனடிப் பலன்கள் கிடைக்கும்.

8) யாரையும் அலட்சியப்படுத்தாதீர்கள்.
பொதுவாக நாம் ஒருவரை சந்தோஷப்படுத்த நினைத்தால் இன்னொருவரை அலட்சியப்படுத்தும்படி நேர்ந்துவிடுகிறது.

இந்த பிரச்சினையைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி நமது செயல்பாடுகள் யாரிடம் என்னவிதமான தாக்கங்கள் உருவாக்கக்கூடும் என்று பல கோணங்களில் இருந்து யோசிப்பதது தான் இதற்காகச் செலவிடும் சில நிமிடங்களை வீண் என்று நினைக்காதீர்கள். அவைதான் உங்களைப் பரவலாக எல்லோரிடமும் கொண்டு சேர்க்கும்.

No comments:

Post a Comment