Friday, April 17, 2015

நான்கு விஷயங்களை கவனிக்க வேண்டும்

நான்கு விஷயங்களை கவனிக்க வேண்டும்    

1.பிரியமான வாக்குடன் தானம்: எதையும் யாருக்கும் தானமளிக்கும்போது நம் மனம் மலர்ந்திருக்கவேண்டும். இன்னாருக்கு இன்னதைக் கொடுப்பது என்று தீர்மானித்தாகிவிட்டது; பிறகு கொடுக்கும்போது மட்டும் மனம் சுருங்குவானேன்? மகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும்; இப்படி தருவதால் தனக்குப் பின்னால் இன்னாரிடமிருந்து என்ன கிடைக்கும் என்ற எதிர்பார்த்தல் இல்லாமல் கொடுக்க வேண்டும். கொடுக்கும்போதே ‘இதனால் உன் சிறப்புகள் மேலோங்குக’ என்று உளமாற, ஏன் வாயாரவும் வாழ்த்திச் சொல்ல வேண்டும்.

2.கர்வமில்லா ஞானம்: மெத்தப் படித்ததால் மூளையில் அதிக விஷயங்கள் பதிவாகலாமே தவிர, தலையில் கனம் மட்டும் ஏறக்கூடாது.  இன்னும் கற்க வேண்டிவை எத்தனையோ கோடி என்ற மனப் பக்குவம் வந்துவிட்டால் தலை லேசாகிவிடும். இது நம் கர்வத்தை அடக்கும். எந்த சபையிலும் நம் கைகளைக் கட்டிப்போடும்; பேச்சில் மென்மையும், இனிமையும் கூடும்.

3. பொறுமையுடன் கூடிய வீரம்: விளையாட்டிலும் சரி, வேறெந்த போட்டியிலும் சரி, நம் திறமையை வெளிக்காட்டும் சந்தர்ப்பத்திலும், எந்த அரங்கிலும், பொறுமையையும் வெளிப்படுத்தினால், எதிராளி மட்டுமல்லாமல், பார்வையாளர்களும் நம்மை கண்ணியமாகப் பார்ப்பார்கள். இதனால் போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும், நம்மால் நிலைதடுமாறாமல் இருக்க முடியும்; வெற்றி பெற்றாலும் குதித்து ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருக்க முடியும். 

4.தியாகத்துடன் கூடிய செல்வம்: இறைவன் நம்மிடம் சிலசமயம் நம் தேவைக்கும் மேல் செல்வம் அளிப்பதன் தத்துவமே, இல்லாத சிலருக்கு அந்த மிகையை அளித்து அவர்களை மகிழ்வுறச் செய்யத்தான். நம்மிட மிருந்து இவ்வாறு விடை பெறும் செல்வம் வேறு ரூபத்தில் நம்மிடமே வேறு முகாமிலிருந்துகூட வந்து சேரலாம்; அல்லது வராமலேயேகூடப் போய்விடலாம். தியாகம் என்பது கொடுத்த பிறகு அது குறித்து கொஞ்சமும் யோசிக்காமலிருப்பது; 

நம்மால் உதவி பெற்றவரை சந்திக்க நேர்ந்தால், செய்த உதவியை நாமும் சொல்லாமலிருப்பது; அல்லது அவர் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்காமலிருப்பது. இந்த உபதேசங்களை ஆதிசங்கரர் சொல்லியிருக்கிறார், தன்னுடைய ‘ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா’ என்ற நூலில். மேலே சொன்ன நான்கு குணங்களையும் அவர் சதுர் பத்ரம் என்று குறிப்பிடுகிறார். ஒரு மனிதருக்குக் கிடைத்தற்கரிய பொக்கிஷமாம் சதுர் பத்ரம்!

No comments:

Post a Comment