Tuesday, April 26, 2016

துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!


“கடமையை செய்யத் துணிவுள்ளவனாக இரு; அதுவே உண்மை வீரத்தின் சிகரம்” என்பார் சிம்மன்ஸ். எடுத்துக்கொண்ட கடமையை திறம்படச் செய்து நிரம்பப் பாராட்டுகளை பெற்றவர் திரு. சி. சைலேந்திரபாபு அவர்கள்.


முதலமைச்சரின் வீரப்பதக்கம், பாரதப் பிரதமரின் உயிர்காக்கும் சேவைக்கான பதக்கம், STF-ல் பங்கேற்பு பதக்கம் மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் விருது என பல பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றவர்.

1987-ம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு – தமிழகத்தில் கோபிசெட்டிப்பாளையம், தர்மபுரி, சேலம் ஆகிய இடங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும் திண்டுக்கல், கடலூர், சிவகங்கை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மாவட்டங்களில் மாவட்ட காவல் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

அந்த அந்த நாளின் நெறியுடன் கூடிய செயல்கள்
அந்த அந்த நாளின் நெறியுடன் கூடிய நிகழ்ச்சிகள்
அந்த அந்த நாளின் பெருந்தன்மை மிக்க சொற்கள்
அந்த அந்த நாளின் உயர்ந்த சொற்கள் என்னும்
இவை தவிர மனிதனின் முன்னேற்றத்திற்கு வேறு தீர்வு இல்லை”

STRATEGY (போர் யுக்தி முறை) என்கிற வார்த்தையை அதிகம் நீங்கள் பயன்படுத்துகிறீர்களே?

போர் யுக்தி முறை என்று குறிப்பிடுவதன் நோக்கம், ஏதோ போருக்கு தயார் செய்வது என்பது அல்ல.

நாம் எடுத்துக் கொண்ட செயல்களில், எப்படி செயல்பட்டால் வெற்றியின் இலக்கை அடைய முடியும். என்பதுதான் இங்கு “Strategy” என்பதாகும்.

Strategy என்பது பின்னால் செயல்படுத்த வேண்டியதை முன்னால் திட்டமிட்டு, அப்படியே செயல்படுத்துவதாகும். அப்படி செயல்படுத்துபவர்களால் தான் உண்மையிலேயே அதன் தாக்கத்தை அடைய முடியும்.

அது குடும்ப வாழ்க்கையானாலும் சரி மாணவர்களின் பொதுத்தேர்வு முறையானாலும் சரி, ஒரு நாட்டின் குறிப்பிட்ட செயல்திட்டம் என்றாலும் சரி “Strategy” என்பது மிக முக்கியம் ஆகும்.

Strategy யின் உள்ளடக்கம்,

திட்டமிடுதல் +செயல்படுத்துதல் = வெற்றி
Planning +Implement = Success

எந்தப் பணியை மேற்கொண்டாலும் மேற்கண்ட வழிமுறையை முக்கியமாகக் கருத வேண்டும்.

ஒரு ஆற்றைக் கடக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆற்றில் குதித்து நீந்திச் செல்ல வேண்டும். நீந்தினால் தான் கரையை அடைய முடியும். நீந்தாமல் தான் கரையை வெறுமனே கரையில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அந்தக் காரியத்தை செயல்படுத்த முடியாது.

அதேபோல் ஒரு செயலை செய்கின்றபோது அதில் தோல்வி ஏற்பட்டாலோ (அ) அந்த செயலை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றாலோ உடனடியாக மாற்று வழியைக் காண வேண்டும்.

உதாரணமாக மகாத்மா காந்தி இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். பெரிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தையே எதிர்த்தார். அவரிடம் என்ன இருந்தது?

போர் படை இருந்ததா? ஆயுதங்கள் இருந்ததா? எதுவும் இல்லாமல் வெறுமனே அஹிம்சை வழியில் நின்று போராடி வெற்றி பெற்றார்.

அந்த போராட்டத்திற்கு பின்னால் அவரிடம் சுதந்திரம் பெறவேண்டும் என்ற செயல் முனைப்பு” இருந்தது (Implement) அதுதான் அவரை வெற்றியாளர் ஆக்கியது.

அதுபோல் செயல்பாடு 2 செயலாற்றல் என்பது மிகவும் முக்கியம்.

அதுதான் நான் சொல்கின்ற பிரதான சொல் “Strategy”.

தங்களைப் பற்றி, தங்கள் குடும்பப் பின்னணியைப் பற்றி சொல்லுங்களேன்?

என்னுடைய ஊர் கன்னியாகுமரி மாவட்டம். நாகர்கோவில் அருகே குளித்துறை ஆகும்.

அப்பா, அம்மாவுக்கு, என்னையும் சேர்த்து 8 பேர், அதில் 5 ஆண்கள், 3 பெண்கள், 8 பேரில் எல்லோரும் முதுநிலைக் கல்வி பயின்று முடித்தவர்கள். 2 பேர் முனைவர் பட்டத்தையும் பெற்று உள்ளோம். அப்பாவுக்கு விவசாயம். அவர் முன்னால் கடற்படை அலுவலராக இருந்தவர். எங்கள் வீட்டில் என் அம்மா தான் மிகவும் கண்டிப்பு.

நாங்கள் எப்போதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும், எங்களுக்கு பாடங்களில் எழுகின்ற சந்தேகங்களுக்கு என் அம்மா தான் விளக்கம் கொடுத்து படிக்க வைப்பார்.

நாகர் கோவிலில் பள்ளிப்படிப்பை படித்து முடித்தேன். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து B.Sc. Agri, M.Sc Agri Extension (வேளாண் விரிவாக்கத்துறை பயின்றேன்.

எனது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் என் தாய். நல்ல எதிர்காலப் பின்னணியில் நான் வளர வேண்டும் என்ற பேராவல் கொண்டவராக,

நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்கிற அக்கறையுடன் அதே சமயம் ரொம்பவும் கண்டிப்புடன் இருந்தார்.

விவசாயக்குடும்பம் என்பதால் ஆடு, மாடு, கோழி என அதுகளையும் கவனித்துக்கொண்டு, தோட்டத்துக்கும் சென்று விவசாய வேலைகளையும் கவனித்தபடி, நன்றாகவும் படிக்க வேண்டும் என்கிற கண்டிப்பு என் தாயிடம் அதிகம் இருந்தது.

நீங்கள் படித்த காலங்களில், மறக்க முடியாத நினைவுகள் பற்றி?

படிக்கும் காலத்தில் ஏழாவது வகுப்பு வரை ரொம்பவும் குறும்பு செய்வேன். உடன் படிக்கிற மாணவர்களுடன் எப்பவும் சண்டை போடுவேன்.

என் அம்மாவிடம் தினமும் ரிப்போர்ட் வரும். உங்க மகன் அவனை அடித்துவிட்டான். இவனை அடித்துவிட்டான் என்று தினமும், எம்மேல் புகார் வரும். ரொம்பவும் குறும்பு செய்வேன். எட்டாம் வகுப்பு சென்ற பிறகு நன்றாகப் படிக்க ஆரம்பித்தேன்.

நான் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது கோவை PSG கல்லூரிகள் பங்கேற்ற நடனப்போட்டி நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்டேன்.

இறுதியாக, நடனப் போட்டியில் எனக்கும், டான்ஸ் நடிகர் (நாகேஷ் மகன்) ஆனந்த பாபுவுக்கும் போட்டி, இறுதியில் நான்தான் டான்ஸ் போட்டியில் வெற்றி பெற்றேன். இப்படி, கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள் – பல உண்டு.

உங்கள் வாழ்க்கைப் பின்னணியில் உங்களுக்கு முன் மாதிரியாகவும் (Roll Model) திருப்பு முனையையும் ஏற்படுத்தியவர்கள்?

சதானந்த வல்லி ஆசிரியை.

அதன்பிறகு, என் மனதில் யூனிபார்ம் போட வேண்டும் என்று குறிக்கோளை உண்டாக்கியவர் எங்கள் பள்ளி NCC ஆசிரியர் “இராமசாமி ஐயா”. இவர்தான் என் மனதில், பள்ளியில் படிக்கும்போது போலீஸ் யூனிபார்ம் பற்றி ஓர் ஆர்வத்தை உண்டாக்கியவர்.

நான் M.Sc. (Agri) முடித்து, வங்கிப் பணியாளர் தேர்வு எழுதி அதன் பிறகு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிக்கு சேர்ந்தேன். Agri யிலேயே தொடர்ந்து Ph.D படிக்க ஆசை என்பதால், குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வங்கிப் பணியில் சேர்ந்தேன். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்து கொண்டே IPS தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தேன்.

IPS தேர்வில் எனக்கு “IPS Cadre” கிடைத்திருக்கிறது என்பது தெரிந்தது. அன்றைய தினம் வங்கிப் பணி முடிந்தவுடன், சைக்கிள் எடுத்துக்கொண்டு நேராக முதலில் இந்த விஷயத்தை திரு. இராமசாமி ஐயா அவர்களிடத்தில் சொல்ல வேண்டும் என்பதற்காக,

எங்கள் வீட்டுக்குக் கூட போகாமல், நேராக அவர்களிடம் சொல்ல அவர் வீட்டுக்கு சென்றேன்.

அவர் வீட்டுக்கு சென்று “ஐயா” அவர்களை விசாரித்தால், “அவர் மூன்று மாதத்திற்கு முன்பே இறந்துவிட்டார்” என்று கூறினார்கள்.

எனக்குள் பேரதிர்ச்சி. இப்படியாகிவிட்டதே என்று மிகவும் வேதனைப்பட்டேன்.

நான் வங்கியில் பணிபுரிந்து கொண்டு IPS தேர்வுக்கு முயற்சிக்கிறேன் என்பதைப் பற்றி அவரிடம் சொல்லவேயில்லை.

IPSல் தேர்வான பிறகு சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால் கடைசி வரை இந்த விஷயத்தை அவரிடம் என்னால் சொல்ல முடியவேயில்லை என்பது எனக்கு வேதனைக்குரிய விஷயமாகிவிட்டது.

ஒரு காவல்துறை அலுவலராக இருக்கிறேன் என்பதை என் NCC ஆசிரியர் இராமசாமி ஐயா அவர்கள் அறியவில்லையே என்று என் மனதில் ஒரு ஏக்கம் இன்னும் இருந்து கொண்டு தான் உள்ளது.

உங்களின் பேச்சு, செயல்பாடு எல்லாவற்றிலும் ஒரு வேகம், துடிப்பு உள்ளது. சிறு வயதிலிருந்தே காவல்துறைக்கு வரவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததா..எப்படி?

பொதுவாகவே சிறு வயதில் நம்முடைய எண்ணங்கள் அதாவது, ஒரு மருத்துவரைப் பார்த்தால் மருத்துவராகவும் ஒரு இன்ஜினியரை பார்த்தால் இன்ஜினியராகவும் ஒரு விஞ்ஞானியைப் பார்த்தால் விஞ்ஞானியாகவும் ஆசை ஏற்படும்.

என்னுடைய மாமன் மகன் BHEL நிறுவனத்தில் இன்ஜினியராக (M.Tech) இருந்தார். அவரைப் போல நல்ல திறமையாளராக வர வேண்டும் என்பது எனக்குள் ஆசையானது.

அடிப்படையாக ஒரு மருத்துவர் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஏனென்றால் மருத்துவப்பணி என்பது ஒரு சமூக மனம்பான்மை உள்ள ஒரு பணி. ஆகவே மருத்துவராக ஆக ஆசைப்பட்டேன். பிறகு மருத்துவம் படிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்தவுடன் IPSதான் செல்ல வேண்டும் என்பது என் முடிவான முடிவு.

ஏனென்றால் IPS பணி என்பது மருத்துவப் பணியைப் போலவே நல்ல சமூக ஈடுபாடான பணியாக நான் கருதுகிறேன். சமூக அக்கறை உள்ளவர்கள் சேருகின்ற பணியாக கருதுகிறேன். தவறு செய்பவர்களை தட்டி கேட்கும் உரிமை போலீஸ் அதிகாரிகளுக்கு உண்டு.

அதேபோல, சமூக விரோத செயல்பாடுகளை அடக்கவும், போலீஸ் துறையாளர்களால் தான் முடியும். ஆகவே போலீஸ் துறைக்கு மேலே எனக்கு ஈடுபாடு, போலீஸ்னா. எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

மருத்துவர் பணியும், போலீஸ் அலுவலர் பணியும் ஒன்று போலத்தான் என்று சொல்கின்றீர்கள். பொதுவாக ஒரு மருத்துவரின் மனநிலையும் (Mental setup) , ஒரு காவல்துறை அலுவலரின் மனநிலையும் (Mental setup) வேறுபடும்.. எப்படி.. இருவரின் மனநிலை ஒன்றுதான் என்று சொல்கின்றீர்கள்?

பொதுவாகப் பார்த்தீர்களேயானால்,

ஒரு காவல்துறை அலுவலர் எப்படி தன் பணியில் நேரம் காலம், பாராமல் பணியாற்ற வேண்டும் என்ற நியதியோடு இருக்கின்றாரோ,

அதே நியதி தான் ஒரு மருத்துவருக்கும் உண்டு என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்.

எப்படியெனில்,

ஒரு உயர் காவல்துறை அலுவலர் தன் பணி சம்பந்தமாக எதுவாக இருந்தாலும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும்.

அதேபோல, ஒரு மருத்துவர் என்பவர் காவல்துறையினரைப் போன்று நேரம், காலம் பாராமல் பணியாற்ற வேண்டும் .

பணியாற்றுகின்ற பணி வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். அதாவது, மருத்துவரின் பழக்கவழக்கங்கள் வேறுபட்டிருக்கலாம். அதேபோல் காவல்துறை (Police) பழக்க வழக்கங்கள் வேறுபட்டு இருக்கலாம்.

ஆனால் இருவரின் பணியானது மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட பணியாகத்தான் இருக்க முடியும். இந்த இருவரின் பணியிலேயேயும் அர்ப்பணிப்பு (Dedication) என்பது மிகவும் அவசியம்.

உதாரணமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன்….

ஒரு மருத்துவர் என்பவரும், ஒரு போலீஸ் அதிகாரி என்பவரும் சமூக நலன் கொண்ட பொறுப்பானவர்கள் ஆவர்.

எப்படியென்றால்,

ஒரு மருத்துவர் தன் பணிக்காலத்தில் கால நேரம் பாராமல் தன் பணியைச் செய்ய வேண்டும்.

ஒரு ஆபத்து என்றால் உடனே அங்கு நோயாளியைப் பார்த்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

அதேபோல் ஒரு காவல்துறை அலுவலரும் அப்படித்தான் உடனடியாக துடிப்புடன் செயல்படுபவராக இருக்க வேண்டும்.

உதாரணமாக, ஒரு வீட்டில் தீப்பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது என்றால், அந்த கண நேரத்தில் அங்கு சென்று செய்ய வேண்டிய பணிகளை உடனே செய்ய வேண்டும்.

உரிய நேரத்தில் சென்றால், ஆபத்திலிருந்து கொஞ்சமாவது காப்பாற்றலாம் அல்லவா? அதை நாம் செய்ய வேண்டும்.

கடமையில் அர்ப்பணிப்பு என்பது ஒரு காவல்துறை அலுவல் சார்ந்தவருக்கும் மருத்துவம் சார்ந்தவருக்கும் தேவை.

Protect Property அதாவது இனிமேல் எதுவும் நடைபெறாமல் தடுப்பவர்கள் தான் உன்னதமானவர்கள்.

மருத்துவமனைகளில், நோயாளிகள் நெஞ்சு வலியில் துடித்துக் கொண்டு இருப்பார்கள். அப்படியே விட்டு விட்டுப் போகாமல் ,

இன்னும், Poisson (பாய்சன்) கேஸாக இருந்தால், கதவைக் கூட திறக்காதவர்களாக இல்லாமல், “Protect Property” என்ற சேவை நோக்கோடு மருத்துவர்கள் இருக்க வேண்டும்.

ஆகவேதான் மருத்துவப் பணியும் காவல்துறைபணியும் ஒரேமாதிரியான பணி என்று சொல்கிறேன்.

உங்களுடைய பணியில் “Strategy” என்று குறிப்பிடும்படியாக…

நீண்ட சிந்தனைக்குப் பிறகு…

என்னுடைய Service -ல் “Strategy” என்று பார்த்தால் நிறையவே இருக்கிறது.

சென்னை மாநகரத்தில் இருந்தபோது-

பொது மக்கள் காவல்துறையிடம் தங்கள் குறைகளை வந்து தயங்காமல் சொல்ல வேண்டும் என்பதற்காகவும், மேலும் பொது மக்கள்,காவல் நிலையத்திற்கு பயம், பொறுப்பு, எதுவுமில்லாமல் சகஜமாக வந்து தங்களது குறைகளைக் கூற வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு காவல்துறை மூலமாக, சென்னையில் உள்ள 126 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் உள்ள பெண் காவலர்களை (பட்டம் பயின்ற) தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பொது மக்களிடமும் காவல்நிலையத்திற்கு வரும் நபர்களிடம் எப்படி நல்ல இனிமையான அணுகுமுறையுடன் பேசுவது என்பது பற்றியும் (அதாவது, Public Relationship Officer ஆக) புகார் கொடுக்க வருபவர்களிடம் எவ்வாறே பேசுவது எப்படி நடந்து கொள்வது போன்ற பயிற்சிகள் காவல் நிலையங்களின் அலுவலர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக.

கணிப்பொறி நிறுவனத்தின் மூலம், நல்ல தலை சிறந்த மனித வள மேம்பாட்டு வல்லுநராக இருப்பவரை தேர்ந்தெடுத்து, பட்டம் பயின்ற மகளிர் காவலர்களுக்கு மனிதவள மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment