Tuesday, April 26, 2016

அலுவலக மன அழுத்தங்களை எளிதாக சமாளிக்கலாம்

போட்டிகளும் சவால்களும் நிறைந்த இந்த உலகில் வாழ்வில் வெற்றி பெற எப்படியாவது முன்னேற வேண்டும் என்று இயங்குகின்ற இன்றைய இளைஞர்களுக்கு 24 மணி நேரம் போதவில்லை. படிப்பு முடிந்த கையோடு சம்பாதிக்க வேண்டும் என்று சகல வழிகளையும் தேர்ந்தெடுத்து களத்தில் இறங்கும் நமக்கு சம்பாதிக்கத் தொடங்கிவிட்டால் மட்டும் நிம்மதி தங்கிவிடுகிறதா என்ன?

அங்குதான் ஆரம்பிக்கிறது அடுத்தக் கட்டப் பிரச்சினைகள். அலுவலக வேலைணூ; சூழலில்  தங்களது வாழ்க்கையை சிக்கவைத்துக் கொண்டு அவதிப்படுபவர்கள் அதிகம். காரணம் அதிக வேலை தரும் பதற்றம், விளைவு ஒவ்வொரு முறையும் தன் மேலதிகாரி கூப்பிடும்போது நகத்தைக் கடித்துக் கொண்டு மன அழுத்தத்துக்கு ஆளாக நேரிடுகிறது.


கஷ்டமான அலுவலக வேலைகளையும் எளிதாக சந்தோஷமாக மாற்றிக் கொள்ளும் வித்தை உள்ளன.
 மன அழுத்தம் என்பது வாழ்வின் அன்றாடம் நடக்கக்கூடிய ஒரு விடயம். மன அழுத்தம் வந்தாலும் மூளை தன்னைத் தயார்படுத்திக் கொண்டு எதையும் எதிர்கொள்ளத் தயாராகிவிடும்.


குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை செய்து முடிக்க முடியாத நிலையில் தான் ஒருவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க நேர நிர்வாகம் மிக முக்கியம். ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கு முன்பு அதை எப்போது எப்படி முடிக்கப் போகிறோம் என்று திட்டமிடுங்கள். எதை முதலில் செய்ய வேண்டும். எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்து பணியைத் தொடங்குங்கள். பதற்றம் நெருங்கவே நெருங்காது.


மன அழுத்தம் ஏற்பட்டால் முன்பு இதேபோன்ற சூழ்நிலையை எப்படி வெற்றிகரமாகக் கையாண்டோம் என்பதை எண்ணிப்பாருங்கள். பயம், பதற்றம் விலகி தைரியம் பிறக்கும். அலுவலகத்துக்குச் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலோ வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்தாலோ பலருக்கு மன அழுத்தம் வரும். இதை முன்கூட்டியே எதிர்பார்த்து அதற்கேற்ப முன்கூட்டியே கிளம்புவதன் மூலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கலலாம்.

மன அழுத்தம் இருந்தால் அந்த விடயத்தைத் தீர்க்க முயற்சி செய்ய வேண்டும். அதையே யோசித்து  விளைவுகளை எண்ணி இன்னும் மன  அழுத்தத்தை அதிகரித்துக் கொள்ளக்கூடாது. தீர்வைக் கண்டுபிடிப்பதன் மூலம் நம்  குறிக்கோள்களைச் சென்று அடைவதற்கான வழி கிடைத்துவிடும்.


நாளைக்கு ஒப்படைக்க வேண்டும் என்பது மாதிரியான நெருக்கடி நேரங்களில் இரவில் வேலை செய்வது தவிர்க்க முடியாதது. அதற்காக தினமும் அலுவலக வேலையில் மட்டும் பழியாய் கிடப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது 
அல்ல. அலுவலக வேலைகளை வீட்டுக்குக் கொண்டு வருவதும் தவறு. இதனால் குடும்ப உறவில் பாதிப்பு ஏற்படலாம்.


நாம் இல்லாத  நேரத்தில் ஏதேனும் முக்கியமான விடயம் நடந்து அதை நாம் தவற விட்டுவிடுவோமோ என்ற பயத்திலேயே பலர் அலுவலகத்திலேயே ஆணி அடித்தாற்போல் இருப்பார்கள். இதுவும் தவறு. நீங்கள் இல்லை என்றாலும் உங்களின் பணி வேறு ஒருவரால் செய்யப்படும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
"உன்னால் விழுங்க முடியாததைக் கடிக்காதே' என்று ஒரு முதுமொழி 
உண்டு.

அதன்படி யார் எந்த உதவி கோரினாலும் கூடுதல் பணியைக் கொடுத்தாலும் அது நம் கடமையாக இல்லாதபோதும் மரியாதை நிமித்தமாக செய்து தருவதாக ஒப்புக்கொண்டு முடிக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்காதீர்கள். அந்த வேலையை உரிய நேரத்தில் செய்ய இயலாது என நிச்சயமாகத் தெரிந்தால் மன்னிக்கவும் இதை நான் ஏற்பதற்கு இல்லை என்று சொல்லுங்கள்.
பணியில் இருக்கும் போது கூடுமானவரை அடிக்கடி தேநீர், கோப்பி குடிப்பது, அரட்டை அடிப்பது என்று அலுவலக நேரத்தை வீணாக்காதீர்கள். இவையெல்லாம் உங்களை இன்னும் பதற்றப் பேர்வழியாக மாற்றுவதோடு உங்கள் உடல் நலத்துக்கும் வேட்டு வைத்துவிடும்.


ஐம்புலன்களையும் எப்போதும் விழிப்புணர்வுடன், கூர்மையாகவும் உற்சாகமாகவும்  வைத்திருந்தால் ஒருவித த்ரில் தம்மில் ஊடுருவுவதை உணர முடியும். அந்த த்ரில்லே ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உற்சாக மனநிலைக்கு நம்மை மாற்றும்.
சக மனிதர்களுடன் அன்புடன் பழகுங்கள். இதனால் மனதில் கோபம், பகை, பொறாமை, விரோதம் போன்ற அனைத்து தீய குணங்களும் அடித்துச் செல்லப்படும். வேலையிலும் ஆர்வம் அதிகரிக்கும்.


எந்த வேலையையும் ஒரு விளையாட்டாக பொழுது போக்காக செய்யுங்கள். நம் எண்ண ஓட்டத்தைப் பொருத்துக் கடினமான வேலைகள் கூட எளிதாக மாறும். வேலை செய்யும் சோர்வே இருக்காது.


 சிலர் இயல்பிலேயே சின்ன விடயத்துக்கும் அதிகமாகப் பதற்றப் படக்கூடியவர்களாக இருப்பார்கள். இவர்கள் தினமும் தியானம் மற்றும் யோகா பயிற்சிகள் செய்வதன் மூலம் பதற்றம் குறைந்து எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலைப் பெற முடியும்.
எதிலும் மீண்டும் வருவோம் என்று எவ்வளவுக்கு எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறோமோ அந்த அளவுக்கு மன அழுத்தம் குறையும்.


சக அலுவலரின் சாதனையை முறியடிக்க வேண்டுமெனப் போட்டியிடுவது நல்ல விடயம்தான். இதற்கு ஒரே வழி நாம் நம் தகுதியை வளர்த்துக் கொள்வதுதான். தகுதி உள்ளவர்களைப் பார்த்து பொறாமைப்படுவதும் அவர்களை மட்டம் தட்டும் விதத்திலும் செயல்படுவது உடல் மற்றும் மன நலன்களைப் பாதிக்கும்.


எந்தக் காரணத்துக்காகவும் வேலையைத் தள்ளிப் போடாதீர்கள். அந்த வேலையை பிடிக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக முடித்துக் கொடுங்கள். ஐயோ... இந்த வேலை செய்யவே எனக்குப் பிடிக்கலை... என்று நினைத்தாலே மனதில் சோர்வு வந்து புகுந்து கொள்ளும்.


மன அழுத்தத்தை குறைக்கிறேன் என்று புகை, குடி என்று பாதை மாறாதீர்கள். இதனால் நிலை தடுமாறுதல், தரம் தாழ்ந்து போதல், எல்லை மீறுதல், வரம்பு மீறுதல், கீழ்த்தரமாக நடந்து கொள்ளுதல் போன்றவை நிகழக்கூடும். வேலைக்கும் உலை வைக்கும்.


மாற்றங்கள் என்பது என்றும் மாறாது. அதற்கு நம்மை உட்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். நான் இப்படித்தான் இருப்பேன்... என்ற வறட்டுப் பிடிவாதம் முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டை போட்டுவிடும்.


குறுகிய வழிகளை யோசிக்கக்கூடாது. ஒருவர் அலுவலகத்தில் உயர் அதிகாரியிடம் பாராட்டுப் பெறுகிறார் என்றால் நம்மால் வாங்க முடியவில்லையே என்று வருத்தப்படலாம். ஆனால் வேறு ஒருவர் வாங்கிவிட்டார் அதனால் நம்மால் இனி வாங்கவே முடியாது என்கிற ரீதியில் யோசிக்கக்கூடாது. எதையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment