Tuesday, April 26, 2016

நீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா? அதிலிருந்து மீண்டு வர‌ இதோ சில குறிப்புகள்

உங்களைப்பற்றிய உங்கள் எண்ணங்கள், அபிலாசைகளைக் காட்சிப்படுத்துங்கள். நீங்கள் கூச்சப்படும், அல்லது பதட்டப் படும் ஒரு சூழ்நிலையைக் கற்பனை செய்யுங்கள்.

அந்த இடத்தில் நீங்கள் ஒரு தன்னம் பிக்கையோடும் மகிழ்ச்சி யோடும் இருப்பவராகக் கற்பனை செய்து அக்காட்சியை உங்கள் மூடிய கண்களுக்குள் கொண்டு வாருங்கள். இதைசெய்யும்போது வசதியாக சாய்ந்து அமர்ந்தவாறு கண்களை மூடிக்கொண்டு அந்தக் காட்சியைக் காணுங்கள்.

அந்தக் காட்சியின் போது நீங்கள் அடையும் உணர்வுகள், காட்சிக்கேற்ற ஒலிகள், நறுமணம், உங்கள் நகர்வு என எல்லா வகையான உணர்வுகளையும் கற்பனையில் கொண்டு வந்து, அந்தக் காட்சியை உண்மையான காட்சியாக உணருங்கள். இதையும் அடிக்கடி செய்யுங்கள். இது கொஞ்சம் முட்டாள் தனம் போலத் தோன்றினாலும் இது ஒரு மிகவும் வலிமையான பயிற்சி மனதின் எண்ணங்களே எம்மை வலுப்படுத்துகின்றன.

மேற்கூறிய பயிற்சி போலவே இதுவும், உங்களுக்குள் நீங்களே தட்டிக் கொடுத்துப் பேசிக் கொள்வது. அல்லது ஒரு கூச்சமான, மற்றும் பதட்ட மான மன நிலையை மறுத்து அதற்கு எதிரான வார்த்தையைத் திரும்பத் திரும்பக் கூறுதல். உதாரணமாக, நாளைக் காலையில் பாடசாலைக்குச் செல்லும்போது “இன்றைக்கு நான் யாருக்கும் பயப்படப்போவதில்லை. யார் என்னைப் பார்த்து சிரித்தாலும் கவலைப்படப் போவதில்லை. நான் கற்பதற்காகவே செல்கிறேன்.

அதனால் பிழை விட்டு படிப்பதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை” போன்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருங்கள். இப்படிச் சொல்வதன் மூலம் உங்கள் ஆழ் மனதை மாற்றிவிடமுடியும் என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். முரண்டுபிடிக்கும் உங்கள் மனத்தையே நீங்கள் ஏமாற்றிவிடலாம். எனவே இந்தப் பயிற்சியை எல்லா சூழலுக்கும் ஏற்ப நீங்கள் பயிற்சி செய்யலாம்.

அசௌகரியமான சூழ்நிலையில் நீங்கள் மாட்டிக் கொள்ளும் போது அந்த இடத்தைவிட்டு வெளியே போய்விடத் தோன்றும். ஆனால், போகாதீர்கள். சூழ்நிலையை எதிர்கொள்ளுங்கள். அப்பொழுது தான் அந்தச் சூழ்நிலைகளை நீங்கள் பழக்கப்படுத்திக் கொள்ள முடியும். இத்தகைய சூழ்நிலையை உங்கள் ஆராய்ச்சிக் கேற்ற இடமாக மாற்றிவிடுங்கள்.

உங்களை நீங்கள் நிதானித்து ஆராயுங்கள். இப் பொழுது எனக்கு இந்த சூழ்நிலை ஏன் அசௌகரியமாக இருக்கிறது? எது என்னை வெளியே போகச் சொல்கிறது? நான் ஏன் வெளியே செல்ல வேண்டும்? என உங்களுக்குள் ஆராய்ந்து கொள்ளுங்கள். இதனால், உங்களை ஆராய்வது மட்டுமன்றி சூழ்நிலை அவதானியாகவும் செயற்படுகிறீர்கள்.

மறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு கற்றலின் போது தவறுகள் ஏற்படுவது இயல்பு. எனவே சுட்டிக் காட்ட பட்ட தவறு தனிப்பட்ட உங்களைத் தாக்குவதற்காக அல்ல. மறுப்புக்கள் வருவது வாழ்க்கையில் / கல்வியில் ஒரு பகுதி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இத்தகைய சூழ்நிலையில் உங்களுக்கு சுயபச் சாத்தாபம் (சுயபரிதாபம்) ஏற்பட்டால் அதனை உடனேயே இனம் கண்டு கொண்டு அதனை நீக்கி விடுங்கள். சுயபரிதாபம் உடையவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

எப்போதும் நாம் எம்மை மற்றவர்களோடு ஒப்பிட்டு நோக்கக் கூடாது. நாம் இயல்பாக காரணமேயின்றி பிரபலமானவர்களை எம்முடன் ஒப்பிட்டுநோக் குவதுண்டு. ஆனால் நாம் அவர் களைப்போல் இருக்க முடியாது. நமக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தனித்தனி அச்சுக்களில் வார்க்கப்பட்ட பொம்மைகளைப் பாருங்கள். ஒரு பொம்மைக்குரிய அச்சில் வேறு அச்சில் வார்க்கப்பட்ட பொம்மையைப் பொருத்த முடியாது.

அப்படித் தான் நாமும். எனக்கு உங்களைப்போல் பேசத் தெரியாது, எனக்கு அவனைப்போல் பாடவராது , எனக்கு அவர்களைப்போல் சிரிக்கத் தெரியாது என்றெல்லாம் மற்றவர்களோடு ஒப்பிடுவதை விடுத்து, நான் மற்றவர்களைவிட வித்தியாசமானவன். என்னிடம் இருக்கும் பல விடயங்கள் மற்றவர்களிடம் இல்லை. அதனால் நான் தனித்துவமானவன் என்ற எண்ணத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த எண்ணம் வலுப்படும் போது நீங்கள் மற்றவர்கள் முன்னி லையில் அடையும் கூச்சமும் பதட்டமும் இல்லாமல் போயிருக்கும்.

இதுவும் மேலே குறிப்பிட்டது போல் தான். உங்களை நீங்களே எதிர்மறையாக முத்திரை குத்திக் கொள்ளாதீர்கள். நான் கூச்ச சுபாவமுடையவன், எனக்குப்பயம், நான் பேச மாட்டேன், நான் சிரிக்க மாட்டேன், நான் எழுதமாட்டேன் என்று நீங்களே உங்களைச் சொல்லிக் கொள்வதால் அது ஆழ்மனதில் பதிந்து விடுகி றது. நீங்கள் நீங்கள்தான். ‘ உங்களுக்கென்று சில இயல் புகள் உண்டு’ என்ற சிந்த னையோடு நிறுத்தி விடலாம் அல்லவா? மேலதிக சிந்தனை எல்லாம் எதற்கு? பதட்டம் ஏற்படும் சூழ்நிலைகளில் உங்களுக்குள் மந்திரம் போல மூன்று கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருங்கள். இப்படிக் கேட்டுக் கொண்டிருப்பது, அந்த சூழ்நிலையில் இருந்து உங்கள் கவனத்தை திசை திருப்பும்.

நான் சீராக மூச்சுவிடுகிறேனா?

நான் இயல்பாக இருக்கிறேனா?

இன்னமும் இயல்பாகச் செயற்படுகிறேனா?

நம்மால் முடியாது அல்லது தோல்வியடைந்து விடுவோம் என நினைக்கும் விடயங்களில் தலையிடுங்கள். இது உங்கள் கூச்சத்தை அல்லது பயத்தை நீங்கள் போக்க உதவும். இந்தக் காரியத்தில் நீங்கள் வெற்றியடையா வி ட்டாலும், நீங்கள் நினைத்த அளவுக்கு அது ஒன்றும் பூதாகாரமான பிரச்சனை இல்லை என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ஒரு வேளை முதலில் உங்கள் ஈகோ இதற்கு இடம் கொடுக்காது. ஆனால் பின்னர் அதை வெகு விரைவிலேயே விளையாட்டாய் எடுத்துக் கொண்டு சந்தோசமாய் இருக்க முடியும்.

எந்த நேரமும் நல்ல இருக்கை நிலையைத் தெரிவு செய்யுங்கள். பலர் இருக்கும் இடத்தில் நிமிர்ந்து இருத்தல், கைகளை விரித்து வைத்திருத்தல் போன்ற இருக்கை நிலைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். நிற்கும்போதும் வளைந்து நிற்காமல் நிமிர்ந்து நில்லுங்கள். யாருடனாவது பேசும்போது கையில் எதையும் வைத்து நோண்டிக் கொண்டிருக்காதீர்கள்.

கூச்ச சுபாவம் என்று முத்திரை குத்தப்பட்ட நிலையில் இருந்து நீங்கள் வெளியில் வரும்போது பல வெற்றிகளை அடைந்திருப்பீர்கள். நீங்கள் எங்கெல்லாம் வெற்றியடைந்தீர்கள் என்பதைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். வெற்றிகளை மீண்டும் படிக்கும் பொழுது உங்கள் தன்னம்பிக்கை வளர்வது மட்டுமன்றி, உங்களுக்கு பயன் கிடைக்கக் கூடிய விடயங்களை நோக்கி உங்கள் கவனத்தை நகர்த்தும்.

No comments:

Post a Comment